வலுக்கும் எதிர்ப்பு

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

PS நரேந்திரன்


CNN-இல் Lou Dobbs என்பவர் நடத்தும் Money Line என்ற ஒரு மணி நேரச் செய்தி நிகழ்ச்சி அமெரிக்காவில் மிகவும் பிரபலமானது. எல்லாச் செய்தி வழங்கும் நிகழ்ச்சிகளைப் போலத் தோற்றமளித்தாலும், அமெரிக்க மக்களிடம் அதன் தாக்கம் மிகவும் அதிகம். அந் நிகழ்ச்சியில் மிகவும் முக்கியமாகக் கவனிக்கப்படுபவை, Exporting America மற்றும் Broken Borders என்ற இரண்டு segmentகள். ஒவ்வொன்றும் சுமார் பதினைந்து நிமிட நேரத்திற்கு.

இதில், Exporting America என்பது அமெரிக்க வேலை வாய்ப்பு எப்படி மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது, அதனால் அமெரிக்கத் தொழிலாளர்கள் எப்படி பாதிக்கப் படுகிறார்கள், வேலைகளை இழக்கிறார்கள் என்பதைப் பற்றியது. ஏறக்குறைய இந்தியர்களுக்கு, இந்தியாவிற்கு எதிரான முழக்கம் என்று கூடச் சொல்லலாம் அதனை. முக்கியமாக, high-tech work எனப்படும் கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேலைகள் எப்படி இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதைப் பற்றி மிகவும் விளக்கமாக, விஸ்தாரமாக பல analystகளுடன் விவாதிப்பார் Lou. இவர்களில் பல பிரபல அமெரிக்க கம்பெனிகளின் CIOக்களும், CEOக்களும் அடக்கம்.

கணிப்பொறி சம்பந்தப்பட்ட வேலைகள் இந்தியாவிற்குக் கொண்டு செல்வதால் விளையும் நன்மைகள் பற்றி எடுத்துச் சொல்லும் பல பிரபல கம்பெனி CIO, CEO-க்கள் மிகவும் கீழ்த்தரமான முறையில் Lou Dobbs-ஆல் சிறுமைப் படுத்தப்படுவார்கள் (சமீபத்தில் IBM நிறுவனம் 2000 வேலைகளை இந்தியாவிற்கு கொண்டு செல்வதாக அறிவித்த முடிவு மிக வன்மையாகக் கண்டிக்கப்பட்டது).

Lou ஒரு கன்சர்வேட்டிவ் ரிபப்ளிகன். இந்திய எதிர்ப்பாளர்கள் பலர் அந்நிகழ்ச்சியில் பேட்டி காணப்படுவார்கள். அவர்களின் குரலே ஓங்கி ஒலிக்க அனுமதிக்கப்படும். அபூர்வமாக இந்தியர்களும் அந்நிகழ்ச்சியில் தென்படுவார்கள். சென்ற மாதத்தில் ஒருநாள் கேசவன் என்ற இந்தியரை Lou பேட்டி கண்டார். மிக அழகாகத் தனது வாதங்களை எடுத்து வைத்தார் திரு. கேசவன் (I ‘m impressed என்றார் Lou). அந்தப் பேட்டி முடிந்த அரைமணி நேரத்திற்குப் பிறகு திரு. கேசவன் மாரடைப்பில் இறந்து போனதுதான் வருத்தத்திற்குரிய செய்தி. Talk about an evil eye…!!!

இன்னொரு segmentஆன Broken Borders, உலகெங்கிலும் இருந்து கள்ளத்தனமாக அமெரிக்காவில் குடியேறுபவர்களைப் பற்றியது. அதிலும் குறிப்பாக, தெற்கே மெக்ஸிகோ நாட்டிலிருந்து தினமும் மந்தை மந்தையாக எல்லை கடந்து வரும் ஸ்பானிஷ் இன மக்களைக் குறித்தது. இப்படிக் கள்ளத்தனமாகக் குடியேறுபவர்களால், அமெரிக்க பொருளாதாரம் கொள்ளை போய்க் கொண்டிருக்கிறது, இவர்களால் அமெரிக்காவிற்கு எந்த பயனும் இல்லை என்பார் Lou. இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது என்றாலும், அமெரிக்க பொருளாதரத்திற்கு ஸ்பானியர்களால் எந்த நன்மையும் இல்லை என்று ஒரேயடியாக அடித்துச் சொல்வது வடிகட்டின பொய்யே.

சாதாரண வெள்ளை இன அமெரிக்க மக்கள் செய்ய மறுக்கும் விவசாய வேலைகளும், இறைச்சிக் கூட வேலைகளும், குப்பை அள்ளுதல், வீட்டு வேலை செய்தல் போன்ற உடலை வருத்திச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்பவர்கள் ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களே. அதற்காக அவர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், அமெரிக்க அரசாங்கத்தால் நிர்ணயம் செய்யப்பட்ட குறைந்த பட்ச சம்பளத்தை விடவும் மிக மிகக் குறைவானது. அமெரிக்க அரசாங்கம் திடாரென ஏதேனும் முடிவெடுத்து, அத்தனை illegal residentகளையும் அமெரிக்காவை விட்டு அனுப்பி வைத்துவிட்டால், நாறிப் போவார்கள் நாறி. அந்த அளவிற்கு அமெரிக்கா அவர்களைச் சார்ந்து இருக்கிறது.

Lou Dobbs-இன் நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்துவிட்டு மற்ற சேனல்கள் சும்மா இருக்குமா ? ஏறக்குறைய எல்லா அமெரிக்க செய்திச் சேனல்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகளை, அதே நேரத்தில் தொடர்ந்து ஒளி பரப்புகின்றார்கள். ABC, CBS, NBC, PBS என்று ஒன்று விடாமல் எல்லா சேனல்களும். இதன் மூலம் பெரும்பகுதி அமெரிக்கர்களுக்கு இம்மாதிரியான செய்திகள் சென்று சேர்கின்றன. எதிர்ப்பும் வலுக்கின்றது.

******

Out sourcing என்பது ஒரு கெட்ட வார்த்தையாக திரிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க மக்களின் எதிர்ப்புக்கு அஞ்சி பல அமெரிக்க மாநிலங்கள் out sourcingகிற்கு எதிரான சட்டங்களை இயற்றி வருகிறன்றன. Tata America International போன்ற இந்திய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட காண்ட்ராக்ட்கள் பல ரத்து செய்யப்பட்டிருக்கின்றன. சமீபத்தில் T.A.I நிறுவனத்திற்கு அளிக்கப் பட்ட 15.2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான இந்தியானா மாநில அரசாங்க காண்ட்ராக்ட் ஒன்று பலத்த எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது (Computer World, Nov 17). அடுத்த வருடம் நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் இதன் எதிரொலி இருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்பும் John Kerry(D) போன்ற அமெரிக்க செனட்டர்கள் வெளிநாடுகளுக்கு அமெரிக்க வேலைவாய்ப்பு செல்வதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்ற முனைப்பு காண்பித்துக் கொண்டிருக்கிறார்கள். Call Center பணியாளர்கள், தாங்கள் எந்த நாட்டிலிருந்து பேசுகிறோம் என்பதை அறிவிக்க வேண்டும் என்ற புதிய legislation ஒன்று செனட்டர் John Kerry-யால் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. இதுபோன்ற, குறைந்தது ஒன்பது சட்டங்கள் அமெரிக்க செனட்டில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. New Jersey, Indiana, North Carolina, Michigan போன்ற மாநிலங்களும் மேற்கூறியவற்றை ஒட்டிய சட்டங்களை இயற்றப் பெரிதும் ஆர்வமாக இருக்கின்றன. அவையெல்லாம் நடைமுறைக்கு வரும்போது இந்தியாவிற்கு high-tech வேலைகள் செல்வது சிரமமாகக் கூடும். (ஆதாரம்: Computer World, October thru ‘ December ’03 issues).

அமெரிக்கா அஞ்சுவதற்குக் காரணங்களும் உண்டு. Manufacturing jobs எனப்படும் பொருள் உற்பத்தியின் பெரும்பகுதி China-விற்குச் சென்று விட்டது. இன்று குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளிலிருந்து, பர்சனல் கம்ப்யூட்டர் வரை அனைத்து பொருள்களும் Chinaவில் தயாரிக்கப்பட்டுக் கப்பல் கப்பலாக அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த வகையில் அமெரிக்கர்கள் இழந்த வேலைவாய்ப்பு, மொத்த அமெரிக்க வேலைவாய்ப்பில் 11% . 2002-ஆம் ஆண்டுத் தகவலின்படி China 266 பில்லியன் டாலர் பெருமானமுள்ள பொருள்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்திருக்கிறது. இது இந்தியாவின் மொத்த ஏற்றுமதியை விட நான்கு மடங்கு அதிகம். (ஆதாரம்: Business Week, Dec 8, 2003).

அதே சமயம் ஏறக்குறைய 60% அமெரிக்கர்கள் service sector எனப்படும் மற்ற துறைகளில் வேலை செய்து வருகிறார்கள். அந்த வேலைகள்தான் சிறிது சிறிதாக இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அமெரிக்கர்களின் அச்சத்திற்கு மிகவும் அடிப்படையான காரணமே அதுதான். இந்தியாவில் கிடைக்கும் உயர்கல்வி கற்ற, குறைந்த சம்பளத்தில் வேலை செய்யத் தயாராக உள்ள இந்தியர்களைக் கண்டு சாதாரண அமெரிக்கர்கள் அஞ்சுகிறார்கள். மாதம் 4000 டாலர்கள் கொடுக்கவேண்டிய ஒரு Call Center வேலையை, இந்தியாவில் வெறும் 500 டாலருக்கு செய்யலாம். சாதாரண அமெரிக்கர்களை விடவும் பல மடங்கு கல்வித்தகுதி பெற்றவர்களை இந்த வேலைக்கு அமர்த்த முடியும். அமெரிக்க கம்பெனிகளின் out sourcing ஆர்வத்திற்குக் காரணம் இம்மாதிரியான Cheap மற்றும் quality labour-தான் என்பது ஒரு open secret.

அமெரிக்காவின் மிகப் பெரும் கம்பெனிகளில் ஒன்றான GE Capital Services சென்ற ஆண்டில் மட்டும் 340 மில்லியன் டாலர்கள் மிச்சப்படுத்தி இருக்கிறது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க medicare, medicaid திட்டங்களின் வேலைகளை இந்தியாவில் செய்து முடிப்பதனால் ஏறக்குறைய 10%-இல் இருந்து 40% வரை சேமிக்க இயல்வதாகக் கூறப்படுகிறது. முதியோர்கள் மற்றும் உடல் ஊனமுற்றோர்களுக்கான திட்டம் அது. இம்மாதிரியான positive செய்திகளை அமெரிக்கச் செய்தி நிறுவனங்கள் இருட்டடிப்பு செய்வதுதான் வேதனையான செய்தி.

அமெரிக்கா உறங்குகையில் இந்தியா வேலை செய்கிறது. அமெரிக்கப் பொருளாதார உயிர்நாடியான Wall Sreet-க்குத் தேவையான financial report-கள் திறமையுள்ள இந்திய analyst-களால் துல்லியமாகத் தயாரிக்கப்பட்டு, அமெரிக்காவின் பிரபலமான சில stock brokerage நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்த reportகளின் அடிப்படையில்தான் அந்த நிறுவனம் அன்றைய தினத்தில் இயங்குகிறது என்பது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம்.

******

யார் என்ன சொன்னாலும், செய்தாலும், அமெரிக்கா வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறும் immigrantகளைத் தடுக்கவே முடியாது என்பது என் உறுதியான எண்ணம். அமெரிக்கா ஒரு open society. புதிய எண்ணங்களும், புதுமைக் கருத்துக்களும் அமெரிக்காவில் திறந்த மனதுடன் பெரும்பாலோரால் வரவேற்கப்படுகிறது. இனியும் வரவேற்கவே படும். உலகம் வியக்கும் அமெரிக்க அறிவியல் முன்னேற்றத்திற்கு Albert Einstein-இல் இருந்து நேற்றைய கல்பனா சாவ்லா வரையிலான imigrant-கள் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள்.

அமெரிக்கப் பொருளாதாரத்திற்குப் புதிதாக 1990-களில் வந்து குடியேறிய இந்தியர்கள் அளித்த பங்களிப்பை யாராலும் மறுக்க இயலாது. பில்லியன் கணக்கில் இந்தியர்கள் அமெரிக்க அரசாங்கத்திற்கு வரி கட்டியிருக்கிறார்கள். பில்லியன் கணக்கில் அமெரிக்க Social Security System-க்கும், Medicare, Medicaidக்கும் இந்தியர்களின் சம்பளப் பணம் போயிருக்கிறது. கார் மார்க்கெட்டையும், ஷேர் மார்க்கெட்டையும் உச்சத்தில் கொண்டு போனதில் இந்தியர்களின் பங்கு மிக அதிகம். 1990-களில்.

இதை இன்னும் எளிமையாக விளக்குகிறேன். ஒரு computer software engineer இந்தியாவிலிருந்து H1-B எனப்படும் work visa-வில் அமெரிக்கா வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு மாதச் சம்பளம் $5000 டாலர் என்றும் வைத்துக் கொள்ளலாம். இதில் ஏறக்குறைய 32% சதவீதம் அமெரிக்க அரசாங்கத்தினால் (Federal, State, City, Social Security, Medicare…blah…blah…) வரியாகப் பிடித்தம் செய்து கொள்ளப்படும். வந்த சில நாட்களில் உடனடியாக ஒரு கார் வாங்கியாக வேண்டும். இந்தியாவைப் போல பஸ்சில் போவதெல்லாம் சரிப்படாது (ஒரு சில பெரிய நகரங்களைத் தவிர). அப்புறம் இருக்க ஒரு apartment வேண்டும். TV வேண்டும். Music System வேண்டும். உயிர் வாழ grocery வேண்டும். உடை வேண்டும்…டும்…டும் என்று கொஞ்ச கொஞ்சமாக அமெரிக்க consumerism-க்கு அடிமையாகிப் போவார்கள்.

இப்படியாக, highly paid இந்தியர்கள் செய்யும் செலவு மறைமுகமாக மற்ற தொழில்களுக்கும் போய்ச் சேர்ந்து, வேலை வாய்ப்பு உச்சத்திற்குப் போனது. ஏறத்தாழ ஒரு மில்லியன் இந்தியர்கள் அந்த boom period-இல் அமெரிக்காவிற்கு வந்தார்கள். அவர்களில் Green Card எனப்படும் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களைத் தவிர பெரும்பாலோர் இந்தியாவிற்கே திரும்பிப் போய்விட்டார்கள். அவர்கள் கட்டிய வரியோ அல்லது Social Securityயின் பலனோ அவர்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. எல்லாப் பணமும் ரிடையரான அமெரிக்கர்களுக்கே போய்ச் சேர்ந்தது. உழுதவன் போய் விட்டான். உள்ளவன் தின்று தீர்த்தான் என்கிற கதைதான் அது.

வெளி நாட்டினர் அமெரிக்காவில் குடியேறுவைத் தடுக்க முடியாததற்கு இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. இன்றைக்கு வேலையில் இருக்கும் அமெரிக்க work force-இல் பெரும்பகுதியினர் baby boomers எனப்படும், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால் பிறந்தவர்கள். இரண்டாம் உலகப் போருக்குப் போய்விட்டுத் திரும்பிய அமெரிக்க ராணுவத்தினர் கல்யாணம் பண்ணிக் கொண்டு, கன்னா பின்னாவென்று பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளினார்கள். அந்தப் பிள்ளைகள் இப்போது வயதாகி கொஞ்சம் கொஞ்சமாக ரிடையராகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ரிடையராகுபவர்களின் இடத்தை இட்டு நிரப்ப ஆட்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. அமெரிக்க ஜனத்தொகையின் மெதுவான வளர்ச்சியே இதற்குக் காரணம்.

பின் எங்கிருந்து ஆட்கள் கிடைப்பார்கள் ? Lou Dobbs போன்றவர்கள் தடுக்கத் துடிக்கும் வெளிநாட்டிலிருந்துதான். உலகப் பொருளாதாரத்தில் அமெரிக்காவின் domination-ஐ தொடர்ந்து maintain செய்ய வெளிநாட்டினரை அனுமதித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அமெரிக்கா. அவ்வாறு அனுமதிக்காத பட்சத்தில், இங்குள்ள வேலைகள் முடங்கி விடாமல் தொடர்ந்து நடக்க, இந்தியா போன்ற நாடுகளுக்கு அந்த வேலையை அனுப்பியே ஆக வேண்டும். இதுதான் நிதர்சனம்.

Lou Dobbs-கள் அதை உணர்ந்து கொள்ளும் நாள் அதிக தூரத்தில் இல்லை.

******

இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்குச் சாதகமான பல காரணங்கள் இருந்தாலும், அதற்கு நேரெதிரான காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியமாக, அடிப்படைக் கட்டுமானம். நல்ல தரமான சாலைகள் இல்லாததும், மின்சாரப் பற்றாக்குறையும், தகவல் தொடர்பு சாதனங்களின் தரமின்மையும், நிர்வாகத் திறமையின்மையும், லஞ்ச ஊழலும் நமது முன்னேற்றத்தின் தடைக் கற்கள். அதற்கும் மேலாக அரசியல் ஸ்திரமின்மையும், எந்த நேரமும் வெடிக்கத் தயாராக இருக்கும் மதக் கலவரங்களும், இந்திய-பாகிஸ்தான் முறைப்புகளும், நரேந்திர மோடி, கருணாநிதி, பால்தாக்ரே, லல்லு பிரசாத் யாதவ், ஜெயலலிதாக்களும் நமது சாபக் கேடுகள்.

தற்போது வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் Infosys, Wipro போன்ற நிறுவனங்களும் தரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. சமீபத்தில் Dell நிறுவனம் தரக்குறைவைக் காரணம் காட்டித் தனது support center-ஐ அமெரிக்காவிற்கே கொண்டு சென்று விட்டது இதற்கு உதாரணம். வேறு சில சிறிய நிறுவனங்களும் பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவை விட்டுப் போனதுவும் ஒரு எச்சரிக்கையே. இந்தியாவிற்குப் போட்டியாக சீனா, ரஷ்யா, பிரேசில் போன்ற நாடுகள் தயாராகிக் கொண்டிருக்கும் இந்நேரத்தில் இம்மாதிரியான தவறான image சரிவை ஏற்படுத்தி விடக்கூடும்.

ஒவ்வொரு வருடமும் ஏறக்குறைய 50 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சீனாவில் வெளிநாட்டு முதலீடு செய்யப்படுகிறது. இந்தியாவில் செய்யப்படும் முதலீடு வெறும் 4 பில்லியன் டாலர்கள் மட்டுமே. தரமான அடிப்படைக் கட்டுமானமும், நல்ல நிர்வாகமும் இருந்தால் இந்தியாவும், சீனா அளவிற்கு முதலீடுகளை ஈர்க்க முடியும். தற்போதைய நிலைமையில் அது எட்டாக் கனி போலவே தோன்றுகிறது.

கணிப்பொறித் தொழிலில் இந்தியாவின் தென் மாநிலங்களில், தமிழ்நாட்டின் பங்கு குறைவானதாகவே இருப்பதாக எனது எண்ணம். மிகக் குறுகிய காலத்தில் கர்நாடகாவும், ஆந்திராவும் போட்டி போட்டுக் கொண்டு முதலீடுகளை ஈர்த்து, பொருளாதார ரீதியில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் கணிப்பொறித் துறையில் தமிழர்களின் பங்கு மிகவும் அபரிமிதமானது. சரியான நேரத்தில் தவறானவர்களிடம் தமிழ்நாட்டை ஒப்படைத்துக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். இல்லாவிட்டால் தமிழ்நாடுதான் இன்றைய நிலமையில் முதல் மாநிலமாக இருந்திருக்கக் கூடும். காலத்தின் கோலம் இது என்பதைத் தவிர வேறென்ன சொல்வது ?

சமீபத்தில், தினமலர் நாளிதழில் ஒரு புகைப்படம் பார்த்தேன். அரசாங்க மதுக் கடைகளில், மது விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை வாய்ப்பு பெறுவதற்காக, பட்டதாரி இளைஞர்கள் ஏதோ ஒரு கலெக்டர் அலுவலகத்தின் முன்னால் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள், சுவற்றைப் பிடித்தபடி. என்னை மிகவும் பாதித்த புகைப்படம் அது.

அரசாங்க மது விற்கப் பட்டதாரிகளா ? அதற்கு போட்டியா ? என்ன கேவலமய்யா அது ? வறுமையில் வாடும் பட்டதாரிக்கு வேலை வாய்ப்பு என்பது ஒரு புறம் இருக்கட்டும். அந்த இளைஞர்கள் கல்லூரியில் படிக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள் ? அவர்களைப் படிக்க வைத்த அவர்களின் பெற்றோர் மனது என்ன வேதனைப்படும் ? இதைவிடக் கல்வியை யாரும் கேவலப்படுத்தி இருக்க முடியாது. இதில் ஆயிரம் ரூபாய் சம்பளம் ஏற்றிக் கொடுக்கப்படும் என்ற எக்காளம் வேறே!

எதிர்காலத்தில் அரசாங்க பிக்பாக்கெட், அரசாங்க escort service (அது என்னவென்று விளக்கினால் என்னைக் கடித்துக் குதறி விடுவார்கள்), அரசாங்கத் திருடன், அரசாங்க கொலைகாரன் போன்ற வேலை வாய்ப்புகளும் தமிழ்நாட்டுப் பட்டதாரிகளுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம். யாருக்குத் தெரியும் ?

தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்தி போன்ற மொழிகளைப் படிக்காமல் முடங்கி விட்டதனால் வந்த வினை இது. அதை உணரும் வரை அவர்களுக்கு விமோசனம் இல்லை.

Go North Young Man. Get out of Tamil Nadu!

————————————————————————————————

narenthiranps@yahoo.com

Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்