இரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

அரவிந்தன் நீல்கண்டன்


சேவியர் மஞ்சூரானின் பேட்டி மிகவும் சிறந்த கண் திறக்கும் ஒன்றாக அமைந்தது. கிறிஸ்தவ மிஷின(ந)ரிகள் எவ்விதம் இனவாதத்தை சமூகத்தில் வெறுப்பியல் பிளவினை ஏற்படுத்தவும், பிளவுண்ட சமுதாயத்தில் மதமாற்றம் ஏற்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தியது. வனவாசிகளை பாதிரியார்கள் சேவியர் மஞ்சூரானின் வார்த்தைகளில், ‘அவர்களை கிறுஸ்துவர்கள் ஆக நிர்ப்பந்தம் செய்வதில்லை. மாறாக நல்ல மனிதர்களாய் ஆகுமாறு தான் சொல்கிறோம. ‘ ஆக வனவாசிகள் எவரும் நல்ல மனிதர்கள் அல்ல போலும், போப்பாண்டவரின் கையாட்கள் வந்துதான் அவர்களை ‘நல்ல மனிதர்களாய் ஆகுமாறு ‘ சொல்ல வேண்டும் போலும். ‘ஊடுருவல் செய்த ஆரியர்கள் எப்படி அவர்களை அடிமைப் படுத்தினார்கள் என்று சொல்கிறோம். இப்போது முன்போலவே புதிய ஊடுருவல்காரர்கள் வந்து காட்டைக் கொள்ளை அடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ‘ மேற்கத்திய அறிவுலகில் செல்லாகாசாகிப் போன கிறிஸ்தவத்தின் மானுட வெறுப்பு இறையியலை, இனவாத வெறுப்பியலின் வியாபாரிகளான கிறிஸ்தவ பாதிரிகள் அதே வெறுப்பியலின் மூலம்தான் விற்க வேண்டியுள்ளது.ஷெல்லி பாடினான், ‘ஏசுவே (மூன்றாம் நாள் உயிர்த்தெழும் நிச்சயத்தில்) சிலுவையில் நீ படும் போலி வேதனையை காண்கையில் உன்பெயரால் என் தேசத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை நினைவு கூர்கிறேன்,சீக்கிரமே இறந்து போ! ‘ உலகின் மிக நீளமான புனித கொடுமைகளை கோவாவில் இனவாத அடிப்படையில் நிறைவேற்றிய கத்தோலிக்கம் ( ‘ஒரு இனமாகவே அவர்கள் ஏமாற்றுகாரர்கள் ‘ என்று புனித விசாரணையை கோவாவில் தொடங்க கோரி கடிதம் எழுதினார் ‘புனித ‘ சேவியர் அன்று.) இன்று அதே இனவாத புரட்டுகளுடனும் மதமேன்மைவாத வெறியுடனும் (உம். ‘ஆதிவாசிகள் இந்துக்களாய் மாறும்போது இவர்களின் பல மனிதாபிமான உணர்வுகள் போய் விடுகின்றன. ‘ இன்றைய சேவியர்), புரட்டுத்தனத்துடனும் (உம். ‘ஆதிவாசிகள் இந்துக்களே அல்ல. ‘) கிறிஸ்தவ மிஷினரிகள் செயல்படுவதற்கு வாக்குமூலம் கொடுத்துவிட்டு, பின்னர் அவர் கூறுகிறாரே ‘பழைய மதமாற்ற மிஷனரி பாதையிலிருந்து கிருஸ்துவக் குழுக்கள் வெகு தூரம் வந்துவிட்டன ‘ என்று, பலநூறு வருடங்கள் ஏசுவை சிரித்த முகத்துடன் சித்தரிப்பதை பாவம் (ஏனென்றால் கடவுளின் ஒரே குமாரன் நம் பாவச்சுமைக்காக மரிக்க வந்திருந்தாராம்.)எனக் கூறி தடை செய்து வைத்திருந்த கூட்டத்திற்கு கூட இந்த அளவு நகைச்சுவை இருக்கிறதே! கடைசியாக ஒரு விஷயம், சிறுகுழந்தைகள் ‘ஞானஸ்நானம் ‘ பெறாமல் இறந்தால் கூட சுவர்க்கம் கிடையாது என்று போதிக்கிற ஒரு மதத்தை சார்ந்த மனிதர் ‘ஆதிவாசிகள் இந்துக்களாய் மாறும்போது இவர்களின் பல மனிதாபிமான உணர்வுகள் போய் விடுகின்றன. ‘ எனக் கூறும் போதும் அதே நகைச்சுவை உணர்வு வெளிப்படுகிறது.

அடுத்ததாக மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியான திரு.சுந்தர.ராமசாமியின் பேட்டி குறித்து: மார்க்சியம், பைபிள், எமர்சன் என அடுக்கும் இந்த முதுபெரும் தமிழ் எழுத்தாளரின் மெய்யியலை பாரத பண்பாடு சார்ந்த ஒரு நூல் கூட தாக்கம் அளிக்கவில்லை என்பது முக்கியமான தகவலாக விளங்குகிறது. அதனைச் சார்ந்து பின்னால் அவரது சில விளக்கங்களை புரிந்து முடிகிறது. ழிமலும் தீராநதியில் அவரது எழுத்துகள் சிலவற்றையும் அறிந்து கொள்ள முடிகிறது.மண்சார்ந்த மரபினை சுமையாக காணும் ஆபிரகாமிய தன்மை ஜீவா என்கிற ஸ்டாலினிஸ்ட்டிடமிருந்து அவருக்கு தொற்றியதாக இருக்கலாம். ‘ஓம் என்று ஒரு எழுத்தை போட்டு அதற்குள்ளே எல்லாம் அடங்கி விட்டதென்று மண்ணாந்தையாகி விட்டோம் ‘ என்று ஜீவா சிறுபையனாக இருந்த சுந்தர.ராமசாமியின் முன் தன் மார்பில் அறைந்து கொண்டு அழுத அதே கால கட்டத்தில்தான் அக்கட்சி அறிவியலாளர்களை ஸ்டாலின் களையெடுத்ததை நியாயப்படுத்திக் கொண்டிருந்தது. ஜீவாவின் மாரடிப்பை பின்னர் மிகுந்த உருக்கத்துடன் பதிவு செய்யும் சுரா அச்சமயத்தில் கூட ஸ்டாலினிய களையெடுப்பை ஜீவா கண்டு கொள்ளாததை, அவரும் கண்டு கொள்ளவில்லை. கியூபாவுக்கு இந்தியாவில் அரிசி சேகரிக்கும் செவ்வியக்கத்திலிருந்து ஹங்கேரியில் நடந்த சோவியத் அத்துமீறலுக்காக, வெளியேறிய சுராவிடம் திபெத்தில் செஞ்சீனம் நடத்தும் (பங்களாதேஷ் பாகிஸ்தான் ஹிந்து இன ஒழிப்புக்கு அடுத்தபடியான) இந்த நூற்றாண்டின் மிகக் கொடூரமான கலாச்சார, இன துடைத்தெடுப்பு எவ்வித அற உணர்வு எழுப்புதலையோ அல்லது பதிவையோ உருவாக்கவில்லை. அதாவது அவரது மனசாட்சியை தூண்டும் எதுவும் அ) பாரத மரபு (அவரது மனமண்டலத்தில் ‘சுமை ‘) சார்ந்திருக்க கூடாது. ஆ) மேற்கத்திய ஊடகம் அல்லது அறிதல் சார்ந்து எழ வேண்டும். எனவேதான் கடந்த எழுபது வருடங்களாக குமரி மாவட்டமெங்கும் மிகப்பெரிய ஒலி மாசினை நீள் நள்ளிரவுகள் தொடர்ந்து எழுப்பும் நற்செய்தி கூட்டங்கள் மற்றும் கன்வென்ஷன்கள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத சுராவிற்கு ‘ஐயப்ப சாமிகளின் அட்டகாசம் சகிக்க முடியாத படி போவதாக ‘ தோன்றுகிறது. பேட்டிக்கு வரலாம்

பேட்டியாளரின் கேள்வி தெளிவானது, ‘இது எளிய வாசர்களுக்கு ஏற்படும் ஒரு சந்தேகம். இன்று படைப்புகளை பல வடிவங்களில் நிகழ்த்துகிறோம். சிறுகதை, நாவல், புதுக்கவிதை, யாப்புக் கவிதை எனப்பல. ஒரு ஐம்பது அல்லது நூறு வருடங்களுக்கு முன்னர்கூட படைப்புக்கு நமக்கேயான ஒரு வடிவம் இருந்தது; இரவல் வாங்கப்படாத ஒரு வடிவம். அந்த வடிவத்திற்கு இன்றைய இலக்கியச் சங்கப்பலகையின் ஒரு மூலையில்கூட இடமில்லை. நமக்கேயான வடிவங்களை இழந்து படைப்பும் துய்ப்பும் ஒருவித தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன என நினைக்கிறேன். ‘ கேள்வி மாற்றங்கள் பற்றியதல்ல. நம்மிடம் மாற்றங்கள் பரிணமிக்காமல் பிறரது மாற்றங்களை இரவல் வாங்கி, அந்த இரவல் அமைப்புகளே நம் இன்றைய இலக்கிய தளத்தினை ஆக்கிரமிப்பது பற்றியது. சுராவின் பதிலோ மாற்றத்தை கண்டு அஞ்சுகிற மரபு பற்றாளரின் கேள்விக்கான பதிலாக அமைகிறது. ‘புதிய வடிவங்கள் தோன்றியது நம் மொழியில் மட்டுமல்ல, உலக மொழிகள் எல்லாவற்றிலுமே நிகழ்ந்த ஒரு மாற்றமாகும். அவ்வாறு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், சற்று முன்போ பின்போ மிகப் பெரிய மாற்றம் ஒன்று நிகழும்போது அந்த மாற்றத்தைத் தூண்டிய காரணிகள் என்ன என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். ‘ கேள்வி புதிய வடிவங்கள் தோன்றியது பற்றியது அல்ல. மாறாக புதிய வடிவங்களை நாம் தோற்றுவிக்காமல் இரவல் வாங்கியது பற்றியதாகும். ‘பழமை உருவம் பின்னகர்ந்ததே ஒழிய கவித்துவம் பின்னகர்ந்துவிட வில்லை….ஏதோ ஒரு புள்ளியில் அவை விலகிச் சென்றாலும் மீண்டும் மற்றொரு புள்ளியில் அவை சந்தித்துக் கொள்ளவும் செய்கின்றன. அப்படிப் பார்க்கும்போது எல்லா இலக்கிய வடிவங்களுக்கும் ஆதாரமாக நிற்பது இன்றும் கவித்துவ ஆற்றல்தான். ‘ என்று வடிவங்களுக்கு அப்பால் அதனூடே வெளிப்படும் கவித்துவம் குறித்து பேசும் சுராவின் வார்த்தைகளுடன் மின்னஞ்சல் குறித்து அவர் கூறுவதை ஒப்பிடலாம், ‘கையால் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக ஈமெயில் கடிதங்கள் உருவாகியிருப்பது மனித உறவு சார்ந்த நெருக்கத்தைப் பலவீனப்படுத்தும் என்றே நினைக்கிறேன். ‘ கை கடிதம், மின்னஞ்சல் இரண்டுமே மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் வடிவங்கள். இவ்வடிவத் தேர்வால் மனித உறவு பலப்படும் அல்லது பலவீனப்படும் என்றால் அதுவே கவித்துவத்துக்கும் பொருந்துமே. (இந்த மண்ணாந்தையின் ஐந்து பைசா பெறுமான அல்லது பெறாத எண்ணத்தில் தோன்றுகிறது திரு.சுரா கவித்துவத்துக்கு கூறியதே தகவல் தொடர்பு சாதனங்களில் வெளியாகும் மானுட உறவுக்கும் பொருந்தும் என்று. வடிவம் அல்லது தொழில்நுட்பத் தேர்வு தன்னளவில் மானுட உறவையோ கவித்துவத்தையோ பலப்படுத்தவோ அல்லது பலவீனப்படுத்தவோ செய்யாது.)

சமயம் சார்ந்த சுராவின் கருத்துகள் அறிவியலடிப்படையில் பொய்ப்பிக்கப்பட்டவை.( ‘இந்து மதம், கிறிஸ்துவ மதம், இஸ்லாமிய மதம்,பெளத்த மதம் எல்லாமே கீழிருந்து மேலே சென்றவை என்றுதான் கருதுகிறேன். ‘) ஆபிரகாமிய சமயங்களின் தீர்க்கதரிசித்துவமுடைய இறையியல், பாரதிய மற்றும் சீன தர்மங்களின் இறையியலிலிருந்து கடுமையாக மாறுபடுபவை. வைகுண்டர் ஐயாவழி சுவாமித்தோப்பு பிரஜாதிபதி சான்றோர் சமுதாயத்திலிருந்தும், காஞ்சி சங்கராச்சாரியார் அந்தண குலத்திலிருந்தும் வருவது அவ்வவ்விடத்தின் மண் சார்ந்த மரபு அடிப்படையிலானவையாகும். அவை எந்த இறையியல் அடிப்படையும் அற்றவை. அவை நெகிழலாம்; இறுகலாம்; உடைபடலாம்; மாறலாம், காலத்தின், மற்றும் இயங்கும் சமுதாயத்தின் தேவைகள் அடிப்படையில். ஆனால் இயேசு தாவீது அரச வம்சத்தில் உதிப்பதோ கிறிஸ்தவ இறையியலின் அடிப்படை தேவையாகும். எனவேதான் மாலயன் அறியொணாத, வேதங்கள் ஏத்தும் பாதனாகிய மகாதேவன் புலையனாகவும் வேடனாகவும் வருவதை வைதீகம் ஏற்கும். ஆனால் ‘நல்ல சமாரியன் ‘ கதையெல்லாம் இருந்தாலும் கூட,(நல்ல சமாரியன் எனும் பதப்பிரயோகம் விவிலியத்தில் இல்லை.அது பேச்சு வழக்கில் உருவானது), இயேசு சமாரிய வழித்தோன்றல் என ஒரு நாடகத்தினை ‘நம்மை விட விழிப்புணர்வு கூடிய ‘ மேற்கத்திய சமுதாயத்தில் நடத்தி பாருங்கள். நீங்கள் பின்னர் நேப்பிள்ஸ் நகரத்திலோ அல்லது ரோமிலோ பாதுகாப்பின்றி நுழைய கூட முடியாது. ‘இந்து மதத்தில் உயர்வாகப் போற்றக்கூடிய ஒரு ஒற்றை நூலோ கடவுளாகவோ தீர்க்கதரிசியாகவோ கருதக்கூடிய ஒற்றைக் குரலோ இல்லை என்பதால் அம்மதத்தை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் விமர்சிக்கப்படுபவர்களுக்கும் நிராகரிக்கிறவர்களுக்கும் சுதந்திரத்தின் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ வெளி ஒன்று கிடைக்கிறது. ‘என எளிதாக விளக்குகிறார் சுரா. ஆனால் உண்மை என்ன ? ‘ஏகம் சத் விப்ரா பகுதா வதந்தி ‘ எனும் வேதத்தின் ஒற்றைக்குரலின் உட்சக்தி பாரதம் முழுவதும் ஆன்ம உண்மையாக உணரப்பட்டிருப்பதன் விளைவு இது. ‘என்னைத்தவிர வேறெவரையும் வணங்கக்கூடாது; நான் பொறாமை மிக்க தேவன் ‘ என்பதே ஆபிரகாமிய இறை குரல். அதுவே பின்னர் ஏசுவில் ‘என்னைச் சாராதவன் எனக்கெதிரானவன் ‘ என்றும், மார்க்சியத்தில் ‘நீ தீர்வில் ஒரு பகுதியாக இல்லையெனில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையில் ஒரு பகுதி ‘ என்றும் வெளிப்படுகிறது. எனவேதான் ‘வேறெந்த பாவமும் மன்னிக்கப்படும் பரிசுத்த ஆவிக்கெதிராக பேசிய பாவத்தை தவிர ‘ என மாற்றப்பட முடியாத இறை வாக்கு ஆபிரகாமியத்தில் கூறும் போது இந்த மண்ணின் தெய்வங்களோ ‘செந்தமிழால் வைதாரையும் இங்கு வாழ ‘ வைப்பவையாக உள்ளன.

அடுத்ததாக அறிவியல் மற்றும் அறிவியல் புனைவுகள் குறித்து.ீபொதுவாகச் சொன்னால் அறிவியலை பெரிய அளவில் நாம் படைப்பவர்களே அல்ல; அதன் அனுகூலங்களை பெரிய அளவில் நுகர்பவர்கள் மட்டுமே. ஆகவே அறிவியல் புனைகதைகள் என்பது இன்று நம் சமூகத்தில் ஒரு செயற்கையான உருவமே. அதுபற்றி நமக்கு நம் மண்ணைச் சார்ந்து சொல்ல எதுவுமில்லை.ு(சுரா). மேற்கில் அறிவியல் புனைகதைகள் ஒரு மிக வளர்ந்த புலம்தான். அது வளர்ந்த கால கட்டத்தை சிறிதே காணுவோமாயின், அதன் பொற்காலம் என கருதப்பட்ட காலம் பெரும் பொருளாதார சரிவுக்கு சிறிது பின்னரே. அச்சமயத்தில் அறிவியல் பங்களிப்பு என கொண்டால் ஐரோப்பாவிலிருந்து அகதிகளாக ஓடி வந்த அறிவியலாளர்களை கொண்டே அமெரிக்க மண்ணின் அறிவியல் வளர்ந்தது. அறிவியல் படைப்பு ஐரோப்பாவினையே மையம் கொண்டிருந்தது. ஆனால் அறிவியல் புனைவுகள் மிக அதிகமாக உருவாக்கப்பட்டது (தரமான என நான் சொல்லவில்லை அதிகமான அளவிலே) அமெரிக்காவில்தான். அதாவது அறிவியல் புனை கதைகளுக்கான சந்தை அமெரிக்காவில் ஏற்பட்ட போது அமெரிக்கா ிஒன்றும் பெரிய அளவில் படைப்பவர்களே அல்ல; அதன் அனுகூலங்களை பெரிய அளவில் நுகர்பவர்கள் மட்டுமே.ி(அதற்கு சிறிது முந்தைய காலகட்டத்தில் பல முக்கிய கண்டிபிடிப்புகள் அமெரிக்காவில் நேர்ந்திருந்தாலும் கூட). இதை பாரதத்திற்கும் ஒப்பிட முடியும். ‘அதுபற்றி நமக்கு நம் மண்ணைச் சார்ந்து சொல்ல எதுவுமில்லை. ‘ என்கிறார் சுரா. அவ்வாறில்லை என்பதே உண்மை. (குறிப்பாக வங்க கிளர்ச்சியின் போது அறிவியல் மண் சார்ந்த அலையாகவே பரவியது. ஸ்வாமி விவேகானந்தரின் ஆளுமையால் உருவாகிய இந்திய அறிவியல் அமைப்பு (பெங்களூர், டாடாவால் தொடங்கப்பட்ட இவ்வமைப்புக்கான உத்வேகம் ஸ்வாமி விவேகானந்தரே ஆவார்.) பல உலக தரம் வாய்ந்த அறிவியலாளர்களை ஈர்த்த அவ்வமைப்பு காலனிய அரசின் கீழ் நசுக்கப்பட்டே வளர்ந்தது. பின்னர் வங்கத்தில் சகோதரி நிவேதிதையின் உழைப்பும் ஆச்சார்ய ஜகதீஷ் சந்திர போஸின் மேதமையும் இணைந்து உருவான போஸ் அறிவியல் அமைப்பு ஆகியவை மண் சார்ந்து அறிவியலுடன் இசைவுற்றன. அறிவியல் வாழ்வின் ஓர் அங்கமாகுதலை தடைபடுத்தியது மெக்காலேயிஸ்ட் மற்றும் நேருவிய அமைப்புகளே. இந்திய மரபினை அறிவியலுக்கு எதிரானதாக உருவகித்து உருவாக்கிய கடும் பிரச்சார மாயையின் விளைவாகவே பாரத ஜன சமுதாயம் அறிவியலிலிருந்து விலக நேர்ந்தது.இந்த மனப்பான்மையின் உச்சகட்ட வக்கிர வெளிப்பாடு ஈவெராவின் இனவெறிக்கும்பலின் ‘விஞ்ஞானி கண்டது ராக்கெட் மெய்ஞானி கண்டது விபூதி பாக்கெட் ‘ என்பது போன்ற கும்பல் கோஷங்களில் வெளிப்பட்டது. இத்தகைய கும்பலுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு இலக்கிய மேதையின் மனவோட்டத்தில் இந்த பாரத வெறுப்பியல் மீம் தொற்றிக் கொண்டதன் விளைவுதான் ‘விஞ்ஞானி கண்டது ராக்கெட் மெய்ஞானி கண்டது விபூதி பாக்கெட் ‘ என்கிற கோஷத்தின் ‘டாலக்ஸ் ‘ பதிப்பான, ாஅதுபற்றி நமக்கு நம் மண்ணைச் சார்ந்து சொல்ல எதுவுமில்லைிஎனும் சுராவின் வார்த்தைகள். இது ஒருபுறமிருக்க,) நாம் ஒரு தேசமெனும் முறையில் அறிவியலில் அடைய வேண்டிய தூரங்கள் பல உள்ளன. ஆனால் அதற்காக ‘நம் மண்சார்ந்து சொல்ல எதுவுமே இல்லை ‘ என்பதனை அறிவியல் புனைகதைகளுக்கு நம்மிடம் அமெரிக்க அளவிலான சந்தை இல்லாதிருப்பதற்கு காரணமாக கூறுவது ஒருவித தாழ்வு மனப்பான்மையே. அதன் ஊற்றுக்கண் நம் மரபினை பாரமாக கருதும் சுராவின் மனப்பாங்காக இருக்கலாம். அந்த ஊற்றுக்கண்ணின் மூலம், ஜீவாவின் மாரடிப்பாக இருக்கலாம். எனது 19வது வயதில் அஸிமாவின் ‘ஐ ரோபாட் ‘ சிறுகதை தொகுப்பினை படித்தேன். பின் அவரது நூல்கள் கிடைக்கும் போதெல்லாம் படித்திருக்கிறேன் (டெட்ராய்ட் வரை போக முடியாதவர்களுக்கு: காரைகால் அரசு நூலகத்தில் சிறந்த அஸிமாவ் தொகுப்பு உள்ளது. எத்தனையாவது அடுக்கில் உள்ளது என் றெல்லாம் துல்லியமாக அந்த நூலக அதிகாரி கூறமாட்டார் என்றாலும் சிறிது நாட்களில் நீங்கள் ஒரு தீவிர நூல் பிரியர் என்று அவர் அறிந்து கொண்டால் மிகவும் நட்பாக உதவி செய்வார். உங்கள் மதிய வேளைகளை அமைதியாக கழிக்க சிறந்த சிறிய அழகிய நூலகம். இது நான் அங்கிருந்த 1980களின் இறுதியில்.) பவுண்டேஷன் பிரபஞ்சம், பாஸிட்ரானிய மூளைகள் கொண்ட ரோபோக்கள், ரோபோ உளவியலாளர் சூஸன் கால்வின், தவிர அஸிமோவின் அதீத கற்பனை கதை தொகுப்புகள், (அஸிமோவின் டிராகன்கள் கூட தெர்மோ டைனமிக்ஸ் விதிகளை பின்பற்றுவதாக ஒரு இலக்கிய விமர்சகர் கூறினார். நாசரேத்தூரான் கூறிய சமாரியன் கதைக்கு அஸிமாவ் இந்நூலில் கொடுத்திருக்கும் விளக்க கட்டுரை அக்கதையினை மானுடத்தின் மிகச்சிறந்த உச்சங்களில் ஒன்றாக நம்மை உணரவைப்பது. ஒரு அறிவியலாளர்தான் தம் மரபினை எத்தனை ஆழமாக சுவைத்திருக்கிறார்.இத்தனைக்கும் அஸிமாவ் ஒரு ரஷிய யூத குடும்பத்தில் பிறந்த நாஸ்திகர்.) அவரது கட்டுரை தொகுப்புகள் (விவிலியத்திற்கான அஸிமாவின் கையேடு போன்றவை) ஆகியவற்றை மட்டும்தான் ரசித்திருக்கிறேன். அவரது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களையும் ஒரு சேர தரிசிக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. நான் அறிந்த அளவில் அவர் தன் இருபதாம் வயதிற்கு முன்னரே தன் அறிவியல் புனைவுகளை விற்பனை செய்ய தொடங்கிவிட்டார். அவரது முதல் காதல் அறிவியல் புனைவு கதைகளே. ஆனால் வரலாறு, உயிர் பரிணாமம் தவிர தொழில்நுட்ப பரிணாமத்தில் அவரது கணிப்புகள் மேற்கத்திய சார்புடையவை. அஸிமோவ் எந்த அளவு வளரும் நாடுகளின் அறிவியல் தொழில்நுட்பத் தேவைகளை புரிந்து கொண்டவர் என்பது கேள்விக்குறி. மேலும் அவர் எழுதிய உயிர் வேதியியல் பாடநூல் வெற்றியாகவில்லை. அறிவியல் நம் இலக்கிய படைப்பாக்கத்தில் ஒன்றாட அது நம் வியத்தலில், நம் மெய்யியல் தேடலில் ஒன்றாக வேண்டும். சாமுவேல்சனின் ‘பொருளாதாரம் ‘, மோரிஸன் & பாய்ட்டின் ‘கரிம வேதியியல் ‘, தொப்ஸா(ழா ?)ன்ஸ்கியின் (நான்கு ஆசிரியர்கள்) ‘பரிணாமம் ‘ ஆகிய பாடநூல்களை பாருங்கள். பின்னர் அதே தரத்திற்கான இந்திய பாடநூல்களை தேடுங்கள். இரத்தக் கண்ணீர் வரும். நமக்கு தேவை நம் மாணவர்களுக்கு ஆற்றலூட்டும் அவர்கள் மனங்களில் அக்கினி குஞ்சுகளை ஏற்றும் பாட நூல்கள். அது செய்யப்பட்டால் போதும். மற்றவை தன்னாலே. ஆனால் உதவாத தோல்விக்குரல் ‘அதுபற்றி நமக்கு நம் மண்ணைச் சார்ந்து சொல்ல எதுவுமில்லை. ‘ மிகவும் இருக்கிறது. வேண்டுமென்றால் ஜியார்ஜ் சுதர்ஷனைக் கேட்டுப்பாருங்கள், நவீன இயற்பியலுக்கும் பாரத மண் சார்ந்த இலக்கிய மற்றும் மெய்யியல் பார்வைகட்க்கும், சார்ந்து சொல்ல எதுவுமுண்டா என்று. (ஆனால் அத்தகைய ஒரு மாமேதையை நம் பல்கலைகழகங்கள் தன் ஆசிரியராக்கி கொள்ளாமல் இழந்ததற்கும் நம் நேருவிய மெக்காலேயிஸ்ட் அமைப்பு மற்றும் கருத்தியலுக்கும் தொடர்பிருக்குமா என்கிற கேள்வி நமக்கு.)

infidel_hindu@rediffmail.com

Series Navigation

அரவிந்தன் நீல்கண்டன்

அரவிந்தன் நீல்கண்டன்