மதமோசடிக் காரர்களும், பண மோசடிக் காரர்களும் : கூட்டுக் கொள்ளை

This entry is part [part not set] of 29 in the series 20020722_Issue

மைக்கல் ரயான்


செய்தி என்ற பெயரில் வெளிவருபவற்றில், முதல்பக்கத்தில் எல்லோருடைய கவனத்தையும் கவருகிற செய்தி வேறு. முதல் பக்கத்தில் வந்திருக்க வேண்டிய செய்தி வேறு. பெரும்பாலும் பெரிய பத்திரிகைகள் தராத இந்தச் செய்தியை ஒரு பிராந்திய ஏடு அளித்தது. சென்றவாரம் நான் செயிண்ட் ஜான் என்ற ஊருக்கு – கனடாவின் நியூஃபவுண்ட்லாந்தில் இருக்கும் ஊர் இது — சென்றிருந்தேன். இங்கு ஆர்தர் ஆண்டர்ஸனின் திவாலான ஒழுக்கம் (அர்தர் ஆண்டரசன் என்ற பெரிய நிறுவனம் என்ரான் போன்ற மோசடிக் கம்பெனிகளின் கணக்கு வழக்கைப் பிசைந்து , திரித்து, மோச்சடிக்குத் துணை போனதாய்க் குற்றம் சாட்டப்பட்டு திவாலான நிறுவனம் – மொ பெ), கத்தோலிக்க திருச்சபையின் ஊழல் இரண்டும் சேர்ந்து ஒரே பத்தியில் கிடைத்தன.

ந்த விஷயம் எனக்குத் தெரியவந்ததில் பெருமை சேரவேண்டியது, செயிண்ட் ஜானில் இருக்கும் பிராந்திய பத்திரிக்கையான தி டெலகிராம்-கும், அதன் பத்திரிக்கையாளரான டெர்ரி ராபர்ட்ஸ் அவர்களுக்கும். அமெரிக்காவில் சில வருடங்களுக்கு முன்னர் பேசப்படாத ஒரு செய்தியைப் பற்றி பேசுகிறார் இந்த கட்டுரையில். ‘கிரிஸ்டியன் பிரதர்ஸ் ஆஃப் அயர்லாந்து ‘ என்ற கத்தோலிக்க நிறுவனம் கனடாவில் இருக்கும் தனது அனாதைகள் பராமரிப்பு நிறுவனங்களில் இருந்த சிறுவர்களையும் சிறுமிகளையும் பாலுறவு ரீதியிலும், உடல் ரீதியிலும், மன ரீதியிலும் அமைப்பு ரீதியாக துன்புறுத்தி வந்திருந்தார்கள் என்பது பழைய செய்தி. அமெரிக்க ஏடுகள் போகிற போக்கில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட செய்தி இது.

இந்த வழக்கு மிகவும் அசிங்கப்பட்டு, 1996இல், ஆண்டோரியோ நீதிமன்றம், இந்த கத்தோலிக்க நிறுவனத்தை இழுத்து மூடி, இதன் சொத்துக்களைப் பறிமுதல் செய்து, இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நஷ்ட ஈடாக கொடுக்கும் படி உத்தரவிட்டது. இந்த நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக, அவர்களுக்குச் சேரவேண்டிய ஒவ்வொரு கடைசிக்காசும் கொடுக்கப்படவேண்டும் என்பதற்காக, இந்த கனடா நீதிமன்றம், தெற்கத்திய எல்லைக்கப்புறம் இருந்த அமெரிக்காவில் பிரபலமான ஒரு சிகாகோ நிறுவனத்தை நேர்மையான நடுவராக இருந்து , வசூல் செய்த பணம் துன்புறுத்தப் பட்ட சிறுவர சிறுமியருக்குச் சென்றடைய மேற்பார்வை செய்ய வேண்டுமென்று நியமித்தது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த நிறுவனத்தின் பெயர் ஆர்தர் ஆண்டர்ஸன்

அப்புறம் நடந்ததை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். டெலிகிராம் பத்திரிக்கையின் படி, அந்த கத்தோலிக்க நிறுவனத்தின் சொத்துக்களை விற்றுக்கிடைத்த 7 மில்லியன் கனேடிய டாலர்களையும், ஆண்டர்ஸன் நிறுவனம், தனது கூலியாகவும், தான் நியமித்த வழக்குைரைஞர்களுக்கு சம்பளமாகவும் கொடுத்துத் தீர்த்துவிட்டது. கடவுள் சேவை என்ற பெயரில் சிறுவர்களை பலாத்காரம் செய்த மோசடிக் காரர்களும், பணம் ஒன்றே குறியாக , கம்பெனி கணக்கு வழக்கைத் திரித்த மோசடிக் காரர்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.

‘தங்களது பாக்கெட்டுக்களை நிரப்பிக்கொள்வதில்தான் அவர்கள் மும்முரமாக இருந்தார்கள் ‘ என்று அந்த அனாதைகளில் சுமார் 10பேருக்கு பிரதிநிதியாக இருந்த, பாப் பக்கிங்ஹாம் என்ற செயிண்ட் ஜான் வழக்குரைஞர் பத்திரிக்கையிடம் கூறினார். கனடா முழுமைக்கும் சுமார், 70 மில்லியன் கனேடிய டாலர்கள் இந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பது நீதிபதியின் உத்தரவு. ஆனால், பணமில்லை. கிரிஸ்டியன் பிரதர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமாக 2 பள்ளிகள் இன்னும் விற்கப்படாமல் இருக்கின்றன. இவை 43 மில்லியன் பெறும். ஆனால், ஆர்தர் ஆண்டர்ஸன் தனக்குக் கொடுக்கப்பட வேண்டிய பணம் ஏராளமாக இருக்கிறது என்று கூறிவருகிறது. இதில் பெரும்பான்மை வழக்குரைஞரின் பாக்கெட்டுகளுக்குச் சென்றுவிடலாம். பலாத்காரத்திற்கு ஆட்பட்டவர்களுக்கு இந்தப் பணத்தில் மிச்ச சொச்சம் தான் கிடைக்கும். என்ரான், வோர்ல்ட் காம் கம்பெனிகளில் நடந்த மோசடிக்குத் துணை போனதன் பின்னால் இந்த வெட்கக்கேடு. ‘வெட்கமே இல்லையா ? ‘ என்று கேட்கத்தோன்றுகிறது.

***

டாம்பெயின்.காம்

Series Navigation

மைக்கல் ரயான்

மைக்கல் ரயான்