முள்பாதை 41

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்


email id tkgowri@gmail.com

மாலையாகிவிட்டது. வீட்டிற்கு முன்னால் இருந்த இடத்தை சுத்தமாக பெருக்கி புதிய பாய்களை விரித்தார்கள். ஐந்து மணியாகும் போது ஊரில் இருக்கும் பெண்டுகள் எல்லோரும் கும்பல் கும்பலாக வரத் தொடங்கினாகள். விதவிதமான வண்ணங்களில் பட்டுப் புடவைகள் சலசலக்க, தலை நிறைய பூவும், கழுத்தில் தினுசு தினுசான நகைகளை அணிந்து கொண்டு, நெற்றியில் பளிச்சென்று குங்குமப் பொட்டுடன் வந்த பெண்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. கேமரா கையில் இருந்தால் போட்டோ எடுத்திருக்கலாம். நான் எவ்வளவு சொன்ன போதும் அப்பா கேமராவைக் கொடுக்கவில்லை. தேவையில்லை என்று எடுத்து வைத்துவிடார்.
வளையல் பெட்டியை எடுத்தக் கொண்டு வளையல்காரன் மாலையில் வந்தான். முதலில் ராஜிக்கு இரண்டு கைகளிலும் வளையல்களை அடுக்கினான். பிறகு சுந்தரி தனக்குப் பிடித்த வளையல்களை எடுத்துக் கொண்டாள். வந்திருந்த பெண்கள் எல்லோரும் வளையல்களை போட்டுக் கொண்டார்கள்.
“உனக்குப் பிடித்த வளையலை நீயும் எடுத்துக்கொள்” என்றாள் அத்தை.
எனக்குக் கண்ணாடி வளையல்கள் பிடிக்காவிட்டாலும் அத்தையின் மனதை நோகடிக்க வேண்டாம் என்று சிவப்பு நிறத்தில் தலா ஆறு வளையல்கள் வீதம் இரு கைகளிலும் போட்டுக் கொண்டேன்.
வந்த பெண்களுக்கு மணி, காமேஸ்வரி சந்தனம் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சுந்தரி நலங்கு மஞ்சளை கொடுத்துக் கொண்டிருந்தாள். ஒரே சந்தடியாக இருந்தது. மணப்பெண்ணை வாழ்த்தியபடி இரண்டு பெண்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தேன்.
அதற்குள் மது அத்தையிடம் “அம்மா! அண்ணாவுக்கு சாவிக்கொத்து வேண்டுமாம்” என்றான். அத்தை இடுப்பில் சொருகியிருந்த சாவிக்கொத்தை எடுத்துக் கொடுத்தாள். மது எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினான்.
நான் ஹால் பக்கம் எட்டிப் பார்த்துன். கிருஷ்ணன் சாவிக்கொத்தை எடுத்துக் கொண்டு அறைபக்கம் போவது தென்பட்டது. எனக்குத் தனிமையில் அவனிடம் அரைமணி நேரம் பேச வேண்டும். எங்கே, எப்போ தோதுபடும் என்று அவனே சொல்லட்டும். இன்று முடியவில்லை என்றால் நாளைக்கு அசலுக்கே முடியாது. நாளை இரவு மாப்பிள்ளை வீட்டார் வந்து விடுவார்கள். ஏற்கனவே அவன் மூச்சுவிடவும் நேரமில்லாத வகையில் பிசியாக இருக்கிறான். எது எப்படி இருந்தாலும் இன்று சொல்லிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
சுற்றிலும் பார்வையிட்டேன். சுந்தரி நலங்கு மஞ்சள் கொடுப்பதில் மும்முரமாக இருந்தாள். என்னைக் கவனிக்க மாட்டாள் என்று தோன்றியது. நான் மெதுவாக உள்ளே போனேன். பெண்கள் சம்பந்தப்பட்ட விழா என்பதால் ஆண்கள் எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். கூடியிருந்த பெண்கள் ஊர்வம்பு பேசுவதில் மூழ்கியிருந்தார்கள்.
நான் கிருஷ்ணன் இருந்த அறைக்குள் நுழைந்தேன். அவன் பெட்டியைத் திறந்து வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டிருந்தான். என் காலடிச் சத்தமோ, புடவையின் சலசலப்போ கேட்டது போலும், திரும்பிப் பார்த்தான். பணத்தை ஜேபியில் வைத்துக் கொண்டு பெட்டியைப் பூட்டிவிட்டுத் திரும்பினான்.
“என்ன வேண்டும்?” என்றான் என்னைப் பார்த்துக் கொண்டே.
“உன்னிடம் பேசணும்” என்றேன்.
“சீக்கிரமாக சொல்லு.” அவசரமாக வெளியே போக வேண்டும் என்பது போல் வேகமாக கதவை நோக்கி நடந்தான்.
நான் கைகளை பின் பக்கமாக செலுத்தி கதவைச் சாத்தி விட்டேன்.
“என்ன இது?” வியப்புடன் அவன் புருவங்கள் உயர்ந்தன.
“உன்னிடம் பேசணும் என்று சொன்னேனே?”
“பேசு. ஆனால் கதவைச் சாத்துவானேன்?”
“நடுவில் உன் பாரியாள் வந்து விடுவாளோ என்ற பயம். அவளைப் பார்த்ததுமே நீ ஓடிப் போய் விடுவாய்.”
புதுவிஷயம் கேட்பது போல் கிருஷ்ணன் பார்த்தான். “சொல்லு. என்ன விஷயம்?” என்றான்.
“இங்கே வேண்டாம். நீ தோட்டத்திற்குப் போய் எனக்காகக் காத்திரு. நான் அங்கே வருகிறேன்.”
முடியாது என்பது போல் பார்த்தான். “இங்கே இத்தனை பேரை விட்டுவிட்டு தோட்டத்திற்குப் போவதாவது? எனக்கு அங்கே வேலையே இல்லை.” கதவைத் திறக்கப் போனான்.
நான் சட்டென்று கையை நீட்டி தடுத்தேன்.
கிருஷ்ணன் நின்றுவிட்டான். ஒரு நிமிடம் என்னுடைய புடவையை, காதில் அணிந்திருந்த முத்து ஜிமிக்கியை, கழுத்தில் அணிந்திருந்த நெக்லெஸை பரிசீலிப்பது போல் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
“என்ன அப்படி பார்க்கிறாய்?” அதட்டுவது போல் §க்டேன்.
“பார்க்கிறேனா? நீ சொல்லப் போவதைக் கேட்பதற்காக காத்திருக்கிறேன்.”
“இங்கே சொல்லுவது சாத்தியப்படாது. உண்மையாகத்தான் சொல்கிறேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். நான் இந்தக் கல்யாணத்திற்கு வந்ததே அதற்காகத்தான். அந்த விஷயத்தை தோட்டத்தில்தான் பேசணும். சரிதானா?”
கிருஷ்ணன் ஒரு நிமிடம் யோசித்தான். பிறகு “சரி” என்றான்.
“வாக்குக் கொடுத்தாற்போல் தானே?”
“கொடுத்தாற்போல் தான். இல்லாவிட்டால் கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாயே?” குறும்பாகச் சிரித்தான்.
“வாக்கு தவற மாட்டாயே?”
“மாட்டேன். நான் வெளியே போகணும். வேலை இருக்கிறது. என் செல்லம் இல்லையா? கதவைத் திறந்து விடும்மா.” வேண்டுவது போல் சொன்னான்.
“அப்படி என்றால் இன்று தொட்டத்திற்குப் போக முடியாதா?”
“ஊஹ¤ம். இப்போ நான் பாபநாசம் போகிறேன். நாளை காலையில்தான் வர முடியும்.”
“சரி. நாளை மதியம். மறக்க மாட்டாயே?”
“மறக்க மாட்டேன்.”
அதற்குள் கதவைத் தட்டிய சத்தம் கேட்டது. கதவைத் திறக்கப் போனவள் அப்படியே ஒரு வினாடி நின்று விட்டேன். “கதவைத் திற” என்றான் கிருஷ்ணன் பதற்றத்துடன்.
“ஊஹ¤ம்.” தலையை குறுக்காக அ¡சத்தேன்.
“உனக்கு மூளை கலங்கிவிட்டது.” கிருஷ்ணன் என் தோளைப் பற்றி பக்கத்தில் நகர்த்தி நாதாங்கியை நீக்கி கதவைத் திறந்தான்.
நான் ஊகித்தது அப்படியே நடந்து விட்டது. எதிரே சுந்தரி நின்று கொண்டிருந்தாள். கையில் மஞ்சள் கிண்ணம் இருந்தது. கிருஷ்ணனும் அவளும் ஒருவரை ஒருவர் நேராக பார்த்துக் கொண்டார்கள். கிருஷ்ணன் ஏதோ சொல்லப் போனவன் நிறுத்திக் கொண்டான். சுந்தரி அவனுக்கு வழி விடுவதுபோல் நகர்ந்து கொண்டாள். அவன் போய்விட்டான்.
உள்ளே அடியெடுத்து வைத்த சுந்தரி என்னை தீட்சண்யமாக பார்த்தாள். இந்த முறை அவள் முகத்தில் நடிப்பு இல்லை. பொறாமைத் தீயானது தகதகவென்று கொழுந்து விட்டெரிவது போல் தென்பட்டது.
“என்ன வேண்டும்?” ரொம்ப அக்கறையுடன் கேட்டேன்.
“மஞ்சள்!” சுட்டெரிப்பது போல் பார்த்துக் கொண்டே சொன்னாள்.
நான் வெளியே வந்து விட்டேன். சுந்தரி என்னை ஒரு நிமிடம் கூட விடாமல் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள் போலும். அந்த எண்ணமே என் மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணன் பாபநாசத்திற்குக் கிளம்பிப் போனான். சந்தரி அன்று இரவு சாப்பிடவில்லை. அத்தையும், ராஜியும் எத்தனையோ சொல்லிப் பார்த்தார்கள். கெஞ்சியும் பார்த்தார்கள். சுந்தரி கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டே உடல்நலம் சரியாக இல்லை என்று சாக்கு சொன்னாள். சுந்தரிக்குக் கோபம் வந்திருப்பதை அத்தையும், ராஜியும் உணர்ந்து கொண்டார்களே தவிர காரணம் என்னவென்று யாருக்குமே புரியவில்லை.
அந்தப் பெண்ணின் அதிருப்திக்கும், அந்தக் கண்ணீருக்கு காரணம் என்னவென்று ஓரளவுக்கு என்னால் ஊகிக்க முடிந்தது. அனாவசியமாக சுந்தரிக்கு வேதனை ஏற்படுத்தியதற்கு வருத்தமாக இருந்தது.
“அண்ணி ஏனோ கோபமாக இருக்கிறாள்.” ராஜேஸ்வரி என் பக்கத்தில் அமர்ந்து கொண்டே சொன்னாள்.
தவறு செய்து விட்டவள் போல் தலையைக் குனிந்து கொண்டேன். என் காரணமாக யாருக்காவது வேதனை ஏற்பட்டால் அதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது.

Series Navigation

கௌரிகிருபானந்தன்

கௌரிகிருபானந்தன்