சேவை

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

தமிழ்மகன்


இரண்டு பின்னங்கால் மட்டும் வெளியே தெரிவதை நான்தான் முதலில் பார்த்தேன். பசு கன்று போடப் போவதை ஓடிப்போய் தங்கச்சி வீட்டுக்காரரõடம் சொன்னேன்.

கொஞ்ச நேரத்தில் விஷயம் வீடு முழுவதும் பரவி, ஓடி வந்து பசு கன்று போடப் போவதை வேடிக்கைப் பார்த்தார்கள். தங்கையின் மாமியார், “தலைச்சன் கன்னுனா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்’ என்று ஆசுவாசமாகப் புறப்பட்டு வந்தாள்.

அதற்குள் அக்கம்பக்கத்துப் பசங்களெல்லாம் வந்து வேடிக்கை பார்க்கத் துவங்கியிருந்தார்கள். மாமியார்க்காரி முந்தானையை இழுத்துச் சொருகிக் கொண்டு பசங்களை விரட்டினாள். பசங்கள் சற்று தூரம் ஓடிப்போய் நின்று கொண்டு மறுபடியும் பார்த்தார்கள்.

“ஆம்பளைங்க கூடத்தான் ஏன் இங்க நிக்கிறீங்க? வீட்டுக்குள்ள போங்க” என்றாள்.

“சரி, சுந்தரம் நீங்க வீட்டுக்குள்ள போங்க. நானும் சேரóமனும் இன்னைக்கு வேலூர் வரைக்கும் போறோம். நம்ம ஊருக்கு பஸ் வர்றதுக்காக ஏற்பாடு பண்றதுக்குத்தான்… நா வர்றவரைக்கும் இரு. போயிடாதே” என்றார்.
சுந்தரத்தோட தங்கை கல்யாணியைத்தான் முருகேசன் ஆறு மாதத்துக்கு முன்பு கல்யாணம் பண்ணினார். ஊர் பிரசிடண்ட் எலக்ஷனில் சுடச்சுட ஜெயித்திருக்கிறார். முருகேசன் கும்பிடுகிற மாதிரி படங்கள் இன்னும் சுவர்களில் வெளுத்துப் போய் இருக்கின்றன.

“ஊருக்கு பஸ் வருமா? எப்போ?” இவ்வளவு மகிழச்சியாகச் சுந்தரம் கேட்டதற்குக் காரணம், இப்போது கூட பத்து கிலோ மீட்டர் நடந்தேதான் வந்திருந்தார்.

“எல்லாம் உங்க தங்கிச்சி வந்த ராசிதான்.” முருகேசன் புன்சிரித்தார்.

“நீங்க பிரசிடென்டா ஆனதாலே இதெல்லாம் நடக்குது” என்றார் சுந்தரம். தம்மை இன்னும் கொஞ்சம் புகழ்வார் என்று முருகேசன் எதிர்பார்த்தார்.

சுந்தரம் அதற்குமேல் பாராட்டுவதாக இல்லை.

“சரி. எனக்கு டயம் ஆவுது. நா போயிட்டு வந்துட்றேன்” என்று முருகேசன் கிளம்பினார்.

கல்யாணி வந்து, “வாண்ணா சாப்பிடு” என்று அழைத்தாள்.

சுந்தரம் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால், பசுவைப் பார்த்தார். உட்கார்ந்து கொண்டிருந்த பசு எழுந்து நின்றது.

“அகைன்ஸ்ட்டா நின்னது யாரு?” இட்லி சாப்பிட்டுக்கொண்டே கேட்டார் சுந்தரம்.

“நம்ம முருகேஷுதான் ஜெயிச்சிது” என்றாள் ஆதிலக்ஷ்மி.

சுந்தரத்துக்குச் சங்கடமாகப் போய்விட்டது.

“அப்படியா…? ஆமா, எதிர்த்து நின்னது யாரு?” என்றார்.

அவ்வளவுதான். எப்படித்தான் அந்த அம்மாளின் முகத்தில் திடீரென்று அப்படி ஒரு விகாரம் ஏற்பட்டதோ தெரியவில்லை.

“அவன்தான்… சிங்காரம்” என்றாள்.

“நம்ம சிங்காரமா?”

“நம்ம சிங்காரம்… கழுதை ஜாதி புத்திய காமிச்சிடுச்சி பாத்தியா?” என்றாள்.

சிங்காரம் சேரியைச் சேர்óந்தவன். ஒன்றாவது முதல் பி.யு.சி வரை முருகேசனும், சிங்காரமும் ஒன்றாகவே படித்தார்கள். முருகேசனுடய படிப்பு சம்பந்தமான அத்தனை சந்தேகங்களையும் சிங்காரத்திடம் தீர்த்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதற்குப் பிராய்ச்சித்தமாக அவ்வப்போது பீஸ்கட்டும் போதெல்லாம் சிங்காரத்துக்குக் கடனுதவி செய்ய வேண்டியிருந்தது.

படிப்பு முடிந்ததும் நட்பெல்லாம் முருகேசனுக்கு அவ்வளவாக அவசியம் இல்லாமல் போனது. அப்படியே பழக வேண்டும் என்று நினைத்தாலும் ஊர்க் கட்டுமானங்களை மீற வேண்டியிருந்தது.

ஊரைப் பகைத்துக் கொண்டு சிங்காரத்திடம் பேசி சாதிக்கப்போவது ஒன்றுமில்லை என்றும் முருகேசன் நினைத்தான். இவர்கள் பேசுவதைப் பார்த்துவிட்டு.

“என்னடா வேலை உனக்கு, அவன்கிட்ட?” என்று ஊர்ப் பெரியவர்கள் யாராவது கேட்டால், சிங்காரம் என்னோட ஃப்ரண்ட் என்று சொல்வதற்குக் கூச்சமாக இருந்தது. “சும்மாதான்… படிச்சிக்குனு இருந்தோம்’ என்று எதையாவது சொல்லிச் சமாளித்து வந்தான்.

இந்த மாதிரி சமயத்தில்தான் ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தல் வந்தது.

பத்து மணிக்கு ஒருமுறை பசுவைப் போய்ப் பார்த்தார். இன்னமும் அப்படியேதான் இருந்தது. வெளியே தெரிந்த முன்னங்கால் குளம்புகள் லேசாக ஆடின.

செய்திகல் முந்தித் தருகிற ஒரே நாளிதழான அதுஇந்த ஊருக்குப் பதினொரு மணிக்கு வந்து சேர்ந்தது. சுந்தரம் செய்திகளைப் புரட்டினார். தமிழ்ச்சினிமா மாதிரி நான்கு கொலை, இரண்டு கற்பழிப்பு , ஒரு எம்.எல்.ஏ. ஊழல்…. அதற்குள் மதியச் சாப்பாடு, சாப்பிட்டுவிட்டு தனõயாக மாடியில் போய்ப் படுத்தபோது, கல்யாணி ஒரு தம்ளர் மோர் கொண்டு வந்து கொடுத்துவிட்டு மிகவும் ரகசியமாக அவளுடைய நாத்தனார் எப்படிக் கொடுமைப்படுத்துகிறாள் என்று விளக்கினாள்.

கொஞ்ச நாளானால் சரியாகிவிடுவாள். நாமொன்றும் செய்வதற்கில்லை என்று நினைத்துக்கொண்டே உறங்கிப் போனார்.

நான்கு மணிக்கு எழுப்பி காபி கொடுத்தார்கள். (மண்ணெண்ணெய் வாசனை) முருகேசன் வரவில்லை என்று தெரிந்தது. இனி பொறுப்பதிóல்லை என்று ஊருக்குக் கிளம்ப ஆரம்பித்தார்.

கல்யாணி தனியாக வந்து அம்மாவை ஒருமுறை வரச் சொன்னாள். நாத்தனார் கொடுமைகளை அம்மாவிடம் சொன்னால் நல்ல விளைவுகள் ஏற்படும் என்று நம்பினாள்.

“முருகேசன் வர்ற வரைக்கும் இரேம்பா” என்றாள் ஆதிலக்ஷ்மி.

“அவசரமா வேலை… இன்னொருமுறை வந்து…” என்று சொல்லிக்கொண்டே வந்துபோது… அந்தப் பசு.
காலையில் பார்த்த அதே மாதிரியை அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தது.

“இன்னுமா போடலை?”

பசங்கள் யாரும் காணவில்லை. வெறுப்படைந்து போய்விட்டிருக்கிறார்கள்.

“இது கிடேரி பசு… அதான் கஷ்டபடுது” என்றாள் ஆதிலக்ஷ்மி.

“கிடேரின்னா?”

“அப்படின்னா இதான் பர்ஸ்ட்டு கன்னு போடுதுன்னு அர்த்தம்.”

தூண் மறைவிலிருந்து கல்யாணியின் நாத்தி சொன்னாள். அவளுக்கும் சுந்தரத்துக்கும் திருமணம் செய்துவிட வேண்டும் என்றும் ஒரு பேச்சுவார்த்தை நடந்தது. என்ன ஆயிற்றோ தெரியவில்லை.

“இப்ப என்னா பணóறது?” என்றார் சுந்தரம்.

“டேன்ஜர்}தான்” என்றாள் மறுபடியும் அவள். எது எடுத்தாலும் ஒரு ரூபா” மாதிரி கட்டையான குரல். எதற்காகவோ அவளுக்கு மணிமொழி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பக்கத்தில் எங்காவது வெர்ட்டினரி ஹாஸ்பிடல் இருக்கிறதா என்று தெரியவில்லை.

“கன்னு உள்ளயே செத்துடுச்சி போல இருக்குது” என்றாள் ஆதி.

யோசிக்க யோசிக்கப் பசுவுக்குக் கஷ்டம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்று உணர்ந்தார் சுந்தரம்.

“மாட்டாஸ்பித்திரி பக்கத்தில் எங்கயாவது இருக்குமா?”

மறுபடியும் மணிமொழிதான் “ம்” என்றாள்.

“எங்கே?” என்ற சுந்தரம் பதட்டத்துடன் கேட்கவும், அவள் வெட்கப்பட்டுக் கொண்டு உள்ள ஓடினாள். அவள் அம்மா உள்ளே போய் விசாரித்துக் கொண்டு வந்து,

“சோழவரத்தில் இருக்குதாம்பா… இப்ப டயமாயிடுச்சே, போறதுக்குள்ள மூடிடுவான்” என்றாள்.

“பின்னே எப்படி?”}இவ்வளவு நேரம் என்ன செய்தீர்கள் முண்டங்களே? என்று கேட்பதற்குப் பதில் இப்படிக் கேட்டார்.

“….மாட்டு வைத்தியமெல்லாம் அவன்தான் செய்வான்” என்று மெதுவாக முனகினாள்.

“யாரு?”

“யாரு…. அந்த நாகன்தான்”

“எங்க இருக்கு அவர் வீடு”

“அட வேணாம்ப்பா அவன் வரமாட்டான்.”

“பரவால்ல சொல்லுங்க.”

“இனிமே என் வீட்டுப் பக்கமே வராதடான்னு நாக்க பிடுங்கிக்கினு சாகற மாதிரி கேட்டுட்டேன். அவன் வர மாட்டான்.”

“எதுக்கும் நா கூப்பிட்டுப் பாக்கறேன்.”

“நம்ம சிங்காரத்தோட அப்பன்தான்.”என்றாள்.

சிங்காரத்தின் வீட்டுக்கு நான் போயிருக்கிறேன். சேரியில் நுழைந்ததும் ஐந்தாவது வீடோ? ஆறோ?
ஆறுதான். நல்லவேளை நாகன் வீட்டில் இருந்தார்.

“வாப்பா, வாப்பா” எனóறு திண்ணையைத் துடைத்து உட்கார வைத்தார்.

“நாங்க இன்னாப்பா பாவம் பண்ணோம்? எங்களை இந்தப் பேச்சு பேசிபுட்டாங்களே” என்றார்.

“சிங்காரம் இóல்லையா?”

“இப்போ அம்பத்தூர்ல வேலை செய்றான்” என்றார் மெதுவாக.

“óமாடு ஒண்ணு கன்னு போட முடியாம அவஸ்தை படுது… நீங்க கொஞ்சம் வந்து பாருங்க” என்றார் சுந்தரம்.

“பாத்தாப் போச்சு… நம்மகிட்ட இன்னா இருக்குது? நம்ம முருகேஸý எல்கஷ்ன்ல நிக்குதுனு தெரிஞ்சிருந்தா நாங்க ஏம்பா நிக்கப் போறோம்? பர்ஸ்ட்டு சாமிப்பிள்ளைதான் நிக்கறதா சொன்னாங்க. உனக்குத் தெரியாதா அவரப்பத்தி? ஆளு பணம்னா கொலைகூடப் பண்ணுவாரு”

“முருகேஸýம் நா நிக்க மாட்டேன்னு சொல்லிடுச்சி. சரிதான்னு சேரில இருக்கவங்கெல்லாம் ஒண்ணா சேந்து சிங்காரத்தை நிக்கச் சொன்னாங்க… அப்புறம் பாத்தா முருகேஸý எதிர்த்து நிக்குது… இன்னா… பண்றது? போஸ்டர்லாம் அடிச்சாச்சி. போனா போது… வாபஸ் பண்ணிலாம்னு பாத்தா சேரி ஆளுங்கவுடலை…. ஊரை விட்ட சேரிலதான் ஜனம் தாஸ்தி அந்தத் தைரியம்….”

“அந்தக் கதையெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். சீக்கிரம் வாங்க காலைல இருந்து…”

“சரி சரி” என்று எழுந்து வெளியே வந்தார்.

“நாங்க உங்க உப்பத் தின்னு வளர்ந்தவங்க… உங்களுக்குக் கேடு நினைப்பமா? யாரோ முருகேûஸக் கெடுத்துட்டாங்கப்பா. அதுவே வூட்டுக்கு வந்து ஜாதி, கீதில்லாம் பாக்காம மோர் இருந்தா எடுத்தான்னு கேட்குமே…” என்று நொந்து கொண்டே நடந்தார்.

“யாரும் கெடுக்கலை முருகேசன் சரியாயிடுவான்” என்றார் சுந்தரம்.

“எலக்ஷன் நெருங்க, நெருங்க சேரி ஆளுங்களுக்கெல்லாம் சாராயம் வாங்கியாந்து ஊத்திக்கினு பொம்பளைங்களுக்கு ஜாக்கெட் துண்டு வாங்கியாந்து குடுத்து…ம்…வாபஸ் பண்றதுக்கும் முடியாம போச்சி. நேரா முருகேஸýகிட்ட போய், நாங்களும் உனக்கே பிரச்சாரம் பண்றோம். ஏன் “டேய்… தோத்தறப் போறோம்னு பயந்துட்டியா?’னு கேட்குதுப்பா” கண்களைத் துடைத்துக் கொண்டார்.

வீடு நெருங்கியதும்.
“ஒரு நாலணாவுக்கு விளக்கெண்ணெய் வாங்கியாறச் சொல்லு. ஒரு தாம்புக்கயிறு இருந்தா எடுத்துக்குனு வா…” துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு துரிதகதியில் இயங்கினார்.

பசுவின் பின்கால், முன் கால் இரண்டையும் கயிற்றில் இறுக்கிக் கட்டி மெதுவாகப் பசுவைக் கீழே தள்ளினார். விளக்கெணóணெய்யை எடுத்து கன்று சுலபமாக வெளியே வருவதற்காகக் துவாரத்தில் நன்றாகப் பூசினார்.

“பொன்னியம்மா நல்லபடியா ஆயிட்டா கற்பூரம் கொளுத்தரண்டி” என்று வேண்டிக்கொண்டார். கையை உள்ளே நுழைத்து… ப்பா… சுந்தரத்துக்கு உடம்பெல்லாம் தகித்து வியர்வை கொட்டியது. பசுவின் கழுத்தைப் பலமாகப் பற்றிக் கொண்டிருப்பது சுந்தரத்தின் வேலை.

கன்றின் தலையை வெளியே இழுத்தாகிவிட்டது. கன்று சப்புக்கொட்டியது.

“கன்னுக்கு உயிரு இருக்குதுப்பா. நல்லபடியா முடிஞ்சுது…” வெளியே இழுத்து அதன் நாக்கை நீரால் நனைத்தார். ஆண் மகவு.

பசுவை அவிழ்த்து விட்டதும் துள்ளியெழுந்து கன்றை நக்க ஆரம்பித்தது. நாகனிடம் யாரும் பேசவில்லை.
“”ஏம்மா, மூத்திரப்பை விழுந்ததும் பின்னால கொஞ்சம் சுடு தண்ணி ஊத்துங்கோ” என்றார்.

பதóது ரூபாய் எடுத்துக் கொடுத்தார் சுந்தரம்.

“என்னங்கோ இது…ச்சும்” என்று மறுத்தார். “ஊருக்கு வரும்போது வந்து பாருப்பா” என்றார்.
போய்விட்டார்.

சுந்தரத்துக்கும் நேரமாகிவிட்டது. அவசர அவசரமாகக் கிளம்பி தெருப்பக்கம் வந்து வேகமாக நடந்தபோது சண்முக நாடார் கடையில்,

“நாலணாவுக்குக் கற்பூரம் குடு நாட்டாரே” எனறு நாகன் சந்தோஷமாகக் கேட்டது சுந்தரத்தின காதில் விழுந்தது.


அமரர் கல்கி நினைவுப் போட்டி 1985
tamilmagan2000@gmail.com

Series Navigation

தமிழ்மகன்

தமிழ்மகன்

சேவை

This entry is part [part not set] of 27 in the series 20050930_Issue

ஜெயந்தி சங்கர்


எம்ஆர்டாயில் ஏறியதுமே போன் சிணுங்கியது. ராஜனின் போன். நான் சரியான நேரத்திற்கு சாங்கி விமான நிலையத்தை அடைந்துவிடுவேனா என்ற சந்தேகம் ஒரே மணிநேரத்தில் அவருக்கு இரண்டாவது முறையாக வந்திருந்தது. என்னை செல்பேசி மூலமே மேற்பார்வையிட்டார். ‘ஹலோ,..பெடோக் தாண்டிட்டேன் சர், அரை மணிநேரம் முன்னாடியே போயிடுவேன். கவலையே வேண்டாம். ம்,.ஆமா, ‘திருமதி. லீலா ‘ னு கொட்டகொட்டயா அட்டையில எழுதி எடுத்துகிட்டேன். நோ ப்ராப்ளம்,பை, ‘ என்றதுமே துண்டித்துவிட்டார். ராஜனின் செயல் எனக்குச் சற்று விநோதமாகத்தான் இருந்தது.

மூச்சுவிடவும் நேரமில்லாமல் ஓடிக்கொண்டேயிருக்கும் சிங்கப்பூரர்களுக்குக் குழந்தை குடும்பம் ஆகியவற்றைவிடவும் அந்த ஓட்டமே பிரதானமாகியிருந்தது. பணத்தை விட்டெறிந்து நேரத்தை வாங்கத் தலைப்பட்டுவிட்டனர். அதனால்தான் ‘எனி சர்விஸ் ‘ ஒரே வருடத்தில் பதினோரு ஊழியர்களுக்கும் கணிசமான போனஸ்கொடுக்கும் அளவிற்கு வளர்ந்திருந்தது. ஒருநாள் மளமளவென்று ஆபீஸிற்குள் நுழைந்தார் ஓர் ஆண். தன் மனைவி மிகவும் ‘பிஸி ‘, ஆகவே ஒரு வாடகைத்தாய் தேவையென்றார். தன் தொலைபேசி எண்ணைக் கொடுத்துவிட்டுப் போய் விட்டார். பாஸ் ஒரு மாதமாய் அந்தத்தம்பதியருக்குப் பிள்ளை பெற்றுக்கொடுக்கவென்று வாடகைத்தாயைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

நாயை ‘வாக்கிங் ‘ அழைத்துச்செல்லக் கூட பலருக்குக் காலைநேரத்தில் ஆள் தேவையாக இருந்தது. கையில் பழைய ந்யூஸ் பேப்பரை எடுத்துக்கொண்டு உடன் நடந்துகொண்டே போகவேண்டும். அதன் காலைக்கடனையெல்லாம் பேப்பரில் எடுத்து குப்பைத்தொட்டியில் போடவேண்டும். இல்லையென்றால் அபராதமுண்டு. நாயைக் குளிப்பாட்டி பிரஷ் செய்துவிட, வீட்டு மளிகை வாங்க, வீட்டிலுள்ள திரைச்சீலைகளையெல்லாம் அகற்றித் துவைத்து மறுபடியும் மாட்டிவிட என்று எதற்கும் எல்லாவற்றிற்கும் மக்களுக்கு நேரப்பற்றாக்குறையிருந்தது. பணம் அள்ள அள்ளக் குறைவேயில்லாமல் இருக்கும் இவர்கள் இவ்வேலைகளுக்காக எங்களிடம் வந்தனர். சொல்லியழத்தோள் கொடு, காதுகொடு என்றெல்லாம் கூட தொலைபேசியிலழைத்து நேரம் சொல்லிக் கூப்பிடுவார்கள். வேலையைப்பொருத்தும் சேவையைப்பொருத்தும் கட்டணங்களை பாஸ்தீர்மானிப்பார்.

போன வாரம் ஒரு தொலைபேசியழைப்பு வந்தது. பாஸ் தான் எடுத்தார். அழைத்தது ஒரு தந்தை. அவருக்கும் அவரது துணைவியாருக்கும் தங்களின் வர்த்தகத்தைக் கவனிக்கவே நேரமில்லை. ஆகவே, அவர்களது பதிமவயதுப் பெண்ணின் பிரச்சனைகளையெல்லாம் காதுகொடுத்துக் கேட்கவேண்டும். ஒரு ஜோடிக் காது கிடைக்குமாவென்று கேட்டார். ரவியின் இருகாதுகளையும் அனுப்பிவைக்கிறேன் என்று கூறிவிட்டு பாஸ் போனை வைத்தார்.

மஞ்சள் முகத்தில் ஒரு மகிழ்ச்சியின்மை. கேட்க ஆள் கிடைத்ததும் அந்தப்பெண் ஒரேயொரு நிமிஷம் தயங்கிவிட்டுப் பிறகுக் கொட்டித்தீர்த்துவிட்டாள். பதினைந்து வயதில் ஒரு பெண்ணுக்கு இவ்வளவு கவலைகளா என்று வியக்கும்படியிருந்தது எனக்கு. குறைந்தது இரண்டு வருடங்களாகப் பெற்றோரிடம் பேச நினைத்துப் பேசாமலேயே மனதிற்குள் உறங்கிக்கொண்டிருந்த அத்தனையும் வெளியேறின. முதலில் பெற்றோரிடம் பேச நினைத்தவையும், பிறகு ஒரு நண்பனிடம் பகிர்ந்துகொள்ளும் சில்லறை விஷயங்களும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து விழுந்தது. விவரமாகக் கேட்டுவிட்டுச் சுருக்கமாக எழுதியனுப்ப எனக்கு இரண்டு மணிநேரச் சம்பளமாக நாற்பது டாலர்கள். இறுதியில் அப்பெண்ணின் முகம் பிரகாசமாகியிருந்தது.

‘பெடோக் ‘ ரயில் நிலையத்தைக் கடந்ததுமே மறுபடியும் போன். டாரதி! படித்துக்கொண்டே ‘பிராண்டட் ‘ உடைகள் மற்றும் காலணிகள் போன்ற தன் ஆடம்பரச்செலவுகளைச் சமாளிக்க உபரிவருமானம் ஈட்டவென்று சிலமாதங்களுக்கு முன் வேலைக்குச் சேர்ந்த ஓர் இரண்டுங்கெட்டான். ‘ஹலோ ‘, என்றதுமே, ‘ ரவி, நீ எங்க இருக்க பெரியவரு வீட்டு நாய்க்கு இன்னிக்கு ‘செக்கப் ‘, மறந்திட்டியா ? நீ போறியா, இல்ல நான் போகட்டா ? ‘

‘டாரதி, தாத்தாவும் நாயும் வேற ஆளப்பாத்தாலே டென்ஷனாயிடுவாங்க. ஆனா, வேற வழியுமில்ல, இன்னிக்கு நான் போகமுடியாது. நான் வேற ‘அசைன்மெண்ட் ‘ல இருக்கேன். நீயே சமாளி. ‘

சனிக்கிழமை என்பதால் ரயிலில் காலைநேர நெருக்கடி அதிகமில்லை. சில பள்ளி மாணவர்கள் அவர்களின் தனியுலகத்தில் சஞ்சரித்தபடி பயணித்தனர். இரண்டு முதியவர்கள் காலைநேர ஓட்டத்தை முடித்துவிட்டு வியர்வை பளபளக்க நாளிதழில் ஆழ்ந்திருந்தனர்.

ஜன்னல் வழியே வெளியே நோட்டமிட்டேன். நேற்றைய மழையின் நினைவை மறந்த வானம் ஒன்பது மணிக்கே வெயிலால் வெளிறிக்கிடந்தது.

ஒருவாரம் முன்பே ராஜன் ‘எனி சர்விஸ் ‘ கதவைத்தட்டித் தன் விசித்திரமான கோரிக்கையை வைத்திருந்தார். மெர்ஸிடிஸ் பென்ஸ் காரில் வந்திறங்கினார். உடையும் மிடுக்குமே ‘பெரிய ‘ பணக்காரர் என்று பறைசாற்றியன. நேர்த்தியான ஆங்கிலம் நாவில் விளையாடியது. எல்லா விரல்களிலும் வைரம் மிளிரியது. ‘ நானும் என் வொய்ஃபும் ரொம்ப பிஸி. ஒருத்தர் இந்தியாவிலிருந்து ‘டிரான்சிட் ‘ல வராங்க. அவங்கள ‘ரிஸீவ் ‘ பண்ணி, ஐஞ்சு மணிநேரம் அவங்க கூட இருக்கணும். மறுபடியும் ‘ஏர் இந்தியா ‘ விமானத்துல கலிபோஃர்னியாவுக்கு அவங்க கிளம்பறவரைக்கும் கூட இருந்தாபோதும். ‘ ‘ சரி, இவங்க யாரு ? என்ன பேரு ? என்ன வயசு ? எந்த ஃப்ளைட்ல வராங்க ? எத்தனை மணி வரைக்கும் கம்பெனி குடுக்கணும். எந்தமாதிரி உதவியெல்லாம் தேவையாயிருக்கும் ? இந்தமாதிரி விவரங்கள்ளாம் தேவை, இந்த ஃபார்ம்ல ஃபில் பண்ணுங்க ‘, என்று சொல்லி என்னைப்பார்த்துக் கொள்ளச்சொல்லிவிட்டு பாஸ் அடுத்துவந்த தொலைபேசியழைப்பைக்கவனிக்கச் சென்றுவிட்டார்.

மூதாட்டிக்கு ஆங்கிலம் தெரியுமென்றாலும் கூட ஓர் இந்திய ஊழியரையே அனுப்ப விண்ணப்பித்திருந்தார். ராஜனின் முக்கிய எச்சரிக்கை விமான நிலையத்தில் திருமதி. லீலாவைத் தவறவிடக்கூடாது. அப்படி நான் அவரைக்காணத்தவறினால், கையிலிருக்கும் ராஜனின் முகவரியை டாக்ஸி ஓட்டுனரிடம் காட்டி நேராகச்சென்று அவர் வீட்டுக்கதவைத் தட்டிவிடுவார். அவர் தங்களின் வீட்டுக்கதவைத் தட்டிவிடாமல் இருக்கத்தான் ‘எனி சர்விஸ் ‘ ஸின் உதவியையே நாடியிருந்தார். அடுத்துவந்த மூன்று நாட்களுமே அதைப்பற்றியேதான் பேச்சாயிருந்தது ஆபீஸில்.

‘சாங்கி ‘ ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி நடந்தேன்.மெள்ள விமான எண்ணைச் சரிபார்த்து உரிய இடத்தையடைந்தேன். அதிசயமாக இந்திய விமானம் சரியான நேரத்திற்குத் தரையிறங்கியிருந்தது. அடுத்த அரை மணிநேரத்தில் பயணிகள் நான்கு மணிநேரப் பயணக்களைப்பையெல்லாம் முகத்திலேந்திக்கொண்டும் தள்ளுவண்டிகளைத் தள்ளிக்கொண்டும் கூட்டம் கூட்டமாக வெளியேறினர். ஒருசிலரைத்தவிர மற்ற அனைவருக்கும் சொந்தபந்தங்கள் எதிர்கொண்டழைக்க வந்திருந்தனர். நான்கு அட்டைகளில் மூன்று நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்காகப் பிடித்துக்கொண்டிருந்தவை. நான் பிடித்துக்கொண்டிருந்தது தான் தனிநபருக்கானது. வெளியேறிய பயணிகளின் நடுத்தர வயதைக்கடந்த இந்தியப் பெண்மணியைத் தேடினேன். ராஜன் எடுத்துப்பல வருடங்களாகியிருந்த ஒரு நிழற்படத்தைக் காட்டியிருந்தார். அதில் இருப்பதைப்போல இப்போது இருக்கமாட்டார் என்றும் எச்சரித்திருந்தார்.

வெளிர் நீலச் சேலையணிந்து, தளர்ந்த கொண்டையுடன், தோளில் ஒரு பயணப்பையும் மறுகையில் ஒரு பணப்பையுமாக தூரத்தில் வந்துகொண்டிருந்தவர் தான் திருமதி. லீலாவாக இருக்கமுடியுமென்று தோன்றியது. அவர் கண்களில் நன்றாகப் படும்படி அட்டையைக் கொஞ்சம் பலமாக ஆட்டிவிட்டு அவரது உயரத்திற்குப் பிடித்தேன். கவனிக்காது என்னைக்கடந்து சென்றுவிடாமல் அவரையே உற்றுப்பார்த்தேன். அவர் அட்டையைப்பார்த்து என்னைநோக்கிவருவது தெரிந்ததும்தான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். நல்ல சிவந்த நிறத்தில் இருந்த அவர் பளீரென்று புன்னகைத்தார்.

‘நீங்க திருமதி லீலாவா ? ‘, என்றது ஆமென்று தலையசைத்தார். என் பெயர் ரவி. நான் ராஜன் கீழ வேலை செய்யறேன். அவர் எனக்கு நல்ல நண்பர் ‘, நானும் சிரித்துக்கொண்டே ராஜன் சொல்லச்சொன்ன முதல் பொய்யைச் சொன்னேன். அவ்வாறு சொல்வது என்வேலை என்று என் மனசாட்சிக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டேன். அந்தப்பொய்யால் குறைந்தபட்சம் அந்த வயாதான மூதாட்டிக்கு அதிர்ச்சியோ மனவேதனையோ இல்லாதிருக்குமென்றும் ஒரு கூடுதல் சமாதானம் உள்ளுக்குள் பிறந்தது. ஆனால், ராஜன் தவிர்க்க நினைக்கும் அளவிற்குப் பெரிய தொந்தரவாகத் தெரியவில்லையே இவரைப்பார்த்தால்.

ராஜன் சொல்லச்சொன்ன பொய்கள் ஒவ்வொன்றாக என் வாயிலிருந்து உதிர்ந்ததை உணர்ந்து எனக்கே என் மேல் ஆச்சரியம் பிறந்தது. ‘ ரெண்டுபேருமே கொழந்தைங்களக் கூட்டிகிட்டு பினாங்குக்குப் போயிருக்காங்க. இந்த ‘ட்ரிப் ‘ முன்னாடியே ப்ளான் பண்ணினது. அதனாலகேன்சல் பண்ண முடியல்ல. அதான் பாவம், வேற வழியில்லாம என்னை உங்களுக்குக் கம்பெனிகுடுக்க அனுப்பியிருக்காங்க. உங்க கிட்ட விளக்கிச்சொல்லிப் புரிய வைக்கச்சொன்னாங்க. ‘, என்றதுமே, ‘ ராஜன் வருவான்னு நெனச்சேன். போன்லயாவது அவனோட பேசலாமா ? ‘, என்று குழந்தையின் ஆர்வத்தோடுகேட்டார்.

இணைப்பு கொடுக்கக்கூடாது, பேசவிருப்பமில்லை என்ற ராஜனின் எச்சரிக்கை நினைவு வந்தது. ‘இல்ல, அவங்க போன் எடுத்துகிட்டுப்போகல்ல. இதையும்கூடச் சொல்லச்சொன்னாங்க. கவலைப்படாதீங்க. நான் அவர்கிட்டசொல்றேன். வரீங்களா ஒரு கப் காபி சாப்பிடலாம், ‘ என்று பேச்சை மாற்றினேன். ‘நானே ஒங்கிட்டக்கேக்கணும்னு நெனச்சேன் ஒரு காபி சாப்பிடணும்னு. அதுக்குமுன்னால குளிக்கணும் ரவி. ஒரே கசகசன்னு இருக்கு. இங்கே குளிக்க வசதியிருக்கா ? ‘

‘ஓ. இருக்கே ! ? என்றபடி குளியலறைகள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றேன்.

‘பரவாயில்லையே! இவ்வளவு வசதிகள் இங்கயே இருக்கும் பொழுது யார் வீட்டுக்கும் போய் தொந்தரவு பண்ண வேண்டாம் இல்ல ? என்றாள். எனக்கு லேசாக திடுக்கென்றது. ராஜனின் குட்டு வெளிப்பட்டுவிடுமோ ? ‘என்னோட பைய நீ பார்த்துக்கோ. நா சீக்கிரமே வந்துடறேன். வாபோன்னு நா ஒன்னக் கூப்பிடலாமில்ல. எப்படியும் நீ என்னோட கடைசி மகளவிடச் சின்னவனாத்தான் இருப்ப, அவளோட பிரசவத்துக்குத்தான் யூஎஸ் போறேன். முதல் பிரசவம்., ‘ என்றபடி உட்கார்ந்திருந்த இருக்கையிலிருந்து எழுந்துகொண்டார். பையிலிருந்து தனக்கு வேண்டிய சோப்பு, துண்டு, மாற்று உடை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அங்கு வரிசையாக இருந்து குளியலறைக்குள் சென்று மறைந்தார்.

கையில் இருந்த பையில் அவரது பாஸ்போர்ட் போன்ற முக்கிய ஆவணங்கள் இருந்ததால், கீழே வைக்காமல் மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்தேன். தீவிரவாதம், சார்ஸ், பறவைக்காய்ச்சல் எதுவுமே சுருங்கிவிட்ட உலகில் பயணத்துக்குத் தடையாகவே தெரியவில்லை. மக்கள் அலுக்காமல் மணிக்கணக்காகப் பறக்கத் தயாராகவேயிருக்கின்றனர். அங்கு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததில் இருபது நிமிடம் ஓடிவிட்டிருந்தது. மனதின் மூலையில் சிறு சந்தேகம் துளிர்த்தது. அது பயமாக வளருமுன் திருமதி. லீலா குளியலறையிலிருந்து வெளிப்பட்டார். அழுக்குடன் களைப்பையும் சோப்புப்போட்டு கழுவியிருந்தார். நிறம் இரட்டிப்பாகியிருந்தது. இருக்கைக்கு வந்தவர், ‘அடடா, சோப் பாக்ஸை உள்ளேயே விட்டுட்டேன்.,.. ‘, என்று மறுபடியும் திரும்பிச்சென்றவரை, அவர் ஒருமையில் என்னைக்கூப்பிட்ட தைரியத்தில், ‘ இருங்க ஆண்டி நா போய் எடுத்துகிட்டு வரேன். நீங்க உக்காருங்க,. இதோ வந்துடறேன், ‘ என்று அவரது பையை அவர் கையில் கொடுத்துவிட்டு குளியலறைக்குள் நுழையவிருந்த ஓர் இளம்பெண்ணிடன் சோப்புப்பெட்டியை எடுத்துக்கொடுக்கச்சொல்லி வாங்கிக்கொண்டு திருமதி. லீலாவிடம் கொடுத்தேன். ‘ரொம்ப தேங்க்ஸ்பா. வரவர ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுச்சு,.. ‘, என்றார் சிரித்தபடி. ‘காஃபெடேரியா ‘ வை நோக்கி நடக்கவாரம்பித்தோம்.

மறுபடியும் ராஜன். எண்ணைப்பார்த்ததும் என் குரலைக் குறைத்துக்கொண்டே, ‘ம்,. ஆமா சர். வந்துட்டாங்க. அவங்க இப்பத்தான் குளிக்கப்போயிருந்தாங்க. இப்ப காபி சாப்பிட அழைச்சிகிட்டுப்போறேன். தெரியும் சர். ம்,.. ஓகே சர். நோ ப்ராப்ளம், பை ‘, என்றபடியே என்பின்னே நடந்த திருமதி.லீலா வருகிறாரா என்று பின்னாடிப்பார்த்துக்கொண்டே அவருக்கு இசைவாய் மெதுவாக நடந்தேன். ‘ஆண்டி, உங்களுக்கு வேற ஏதும் சாப்பிட வேணாமா ? மேல ஒரு இட்டாலியன் ரெண்ட்ராண்ட் இருக்கு. ரொம்ப நல்லா இருக்கும். வேணாப்போவோமே. ‘ ‘இல்ல எனக்குப்பசிக்கல்ல. தாகமாத்தான் இருக்கு, காபியே போதும் ‘, என்றதும் நடையைத்தொடர்ந்தேன். ‘ரவி, பார்க்கத்தான் நான் கிண்ணுனு இருக்காப்போல இருக்கும். ஆனா, எனக்கு ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளமுண்டு ‘, என்றவரிடம் குற்றுவுணர்ச்சியுடன், ‘ஓ, ஐ ‘ம் சாரி ஆண்டி. நான் ரொம்ப வேகமா நடந்துட்டேன் இல்ல. மெதுவாவே நடப்போம். ஒண்ணும் அவசரமில்ல ‘, என்றேன் நடையின் வேகத்தைக்குறைத்தபடி.

தொந்தரவாக இருந்த மொபைலை ‘ஆஃப் ‘ பண்ணிவிடுவோமா என்று கை துருதுருத்தது. செய்தால் மறுநாளே வேலை போய்விடும். பாஸ் சரியான துர்வாசர். ஏன் என்னவென்றெல்லாம் விசாரிக்காமல் சீட்டைக்கிழிப்பதற்குப் பெயர்போனவர். நான் என் வேலையை இழக்கவிரும்பவில்லை. ஆகவே ‘சைலண்ட் மோட் ‘ இல் வைத்துக்கொண்டு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தேன். பேசிக்கொண்டே வந்தார். திருமதி. லீலா தன் மூத்தமகளுடன் சென்னையில் வசிக்கிறார்.

காபிக்குக் காசுகொடுக்கும்போது அவரிடம் சிங்கப்பூர்பணம் நூறு வெள்ளித்தாள்தான் இருந்தது. கடைக்காரர் சில்லறையாகக் கேட்டதும் நானே என்னிடமிருந்து இரண்டு காபிகளுக்கும் பணம் கொடுத்தேன். காபிக்கோப்பையைக் கையில் எடுத்துக்கொண்டே, ‘அங்கெயெல்லாம் டிசம்பர் ரொம்ப குளிராமே. என்னோட மூட்டுவலிதான் ஜாஸ்தியாயிடும். அதுக்குத்தான் சொல்லவந்தேன். இதோ இந்த ஏர்கண்டிஷனேகூட ஒத்துக்கல்ல. மூட்டு கொடைய ஆரம்பிச்சாச்சு ‘, என்றார்.

காபிக்குச் சர்க்கரை போட்டுக்கொள்ளாமல் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கோப்பை வரைபேசாமல் குடித்தார். பிறகு எதோ நினைவு வந்தவராகத் தன் தோள் பையைத் திறந்தார். அதில் வெவ்வேறு அளவுகளில் பொட்டலங்கள். அவற்றை வேறு ஒரு ப்ளாஸ்டிக் பையில் போட்டு என்னிடம் நீட்டி, ‘ எலவடாம், கடுகுமாங்கா, வெங்காயவத்தல், இதெல்லாம் நானே செஞ்சது. ஒரு பாட்டில் மாகாளிகூட இருக்கு. ராஜனுக்குப் பிடிக்கும். இதயெல்லாம் அவங்ககிட்ட நானே என் கையால கொடுப்பேன்னு தான் நெனச்சேன். பரவால்ல, நீயே கொடுத்துடு. பேரப்பிள்ளைக ரெண்டுபேரையும் பார்க்கமுடியாதது வருத்தம்தான். பார்த்து கிட்டத்தட்ட ஒண்ணரை வருஷமிருக்கும். ராஜனையும் ரேஷ்மியையும்கூட பாக்கணும்னு ஆசையாயிருந்தேன். ரெண்டுவாரம் முன்னாடி போன்லகூட ஊருக்குப் போகறவிவரம் சொல்லல்ல. அதான் வெளியவரும்போதே அவனோட முகத்தையே தேடிகிட்டு வந்தேன். ராஜன் எனக்கு ஒரே சன். ‘

‘என்ன ராஜன் உங்க மகனா ? ‘ என்று நாக்கு நுனி வரை வந்தகேள்வியை நல்லவேளை தக்க தருணத்தில் அடக்கிக்கொண்டேன். ‘ரொம்ப பாசம் எம்மேல அவனுக்கு. ரேஷ்மி இந்த நாட்டு பெண்ணா இருந்தாலும் எங்கூட சிநேகிதி மாதிரிப் பழகுவா தெரியுமா ? நான் போன தடவை வந்து ஒரு மாசமிருந்தேன். நாந்தான் தெனம் சமைப்பேன் விதவிதமா. ரேஷ்மிக்கு நம்ம சமையல் அவ்வளவா தெரியாது. கத்துக்கொடுத்தாத்தானே தெரியும். இந்த ஊர் கிச்சன் அவ்வளவா பழக்கமில்லையா. முதல்லே கொஞ்சம் தகராறா இருந்தது ‘, என்று தொடர்ந்தபடியே யோசனையிலாழ்ந்தார் ஆண்டி.

அடப்பாவி, சொந்தத் தாயா ? யாரோ தூரத்துச்சொந்தமென்றல்லவா சொன்னான் அந்த ராஜன் அன்று! ‘அம்மா ‘ வென்று சொல்லியிருந்தாலும் கூட பாஸ் இதற்கு இசைந்திருப்பார். அவருக்குத் தன் நிறுவனத்தின் சேவையின் தரம் மற்றும் வாடிக்கையாளர்களின் திருப்தி மிகமிக முக்கியம். உணர்ச்சிகளுக்கு இடமில்லையென்றிருப்பார். பாஸ் போகச்சொன்னால், நானும் மாட்டேனென்றா சொல்லியிருப்பேன் ?! ஆனால், வேறு யாரையாவது அனுப்ப முயன்றிருக்கலாம். ‘வேற யாராவது செய்தாலும் பரவாயில்லையாக்கும், நீ மட்டும் செய்யக்கூடாதோ. டேய் ரவி, இதுவும் ஒருவிதத்தில் சுயநலம்தாண்டா ‘, என்ற அதட்டியது மனசாட்சி. கண்களில் லேசாகக் கண்ணீர் தளும்பியது.

‘படிக்க ஏதானும் ‘மேகஸின்ஸ் ‘ கிடைச்சா வாங்கிட்டு வரமுடியுமா, ஆனா எங்கிட்ட ‘சேஞ்ச் ‘ தான் இல்ல, ‘ என்று தயங்கித்தயங்கிக் கேட்டார். அதோடு ஒரு பனடால் மாத்திரையும் கேட்டார். உடனே எழுந்து ‘நானே வாங்கிக்கிட்டு வரேன் ஆண்டி. ரொம்ப ஒண்ணும் ஆகாது, ‘ என்றுசொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் இருக்கும் ‘ஃபேர் ப்ரைஸ் ‘ கடையில் நுழைந்து அவர் கேட்டவற்றை வாங்கிகொண்டுவந்து கொடுத்தேன். புன்னகையாலேயே நன்றி கூறினார்.

சுமார் மூன்று மணிக்கு ‘ஏர் இந்தியா ‘ பயணிகளுக்கு முதல்அழைப்பு விடுக்கப்பட்டது. திருமதி. லீலா என் முகத்தைப்பார்த்தார். ‘பரவாயில்ல. இன்னும் நேரமிருக்கு. என்னோட போன் நம்பர் எழுதிக்கொடுக்கறேன். எப்போ இந்தியா திரும்பரீங்களோ அப்போ நா வரேன். நேரமிருந்தா உங்கள எங்க அக்காவீட்டுக்குக் கூட்டிட்டுப்போறேன் ‘, என்று ஒரு காகிதத்தில் என் முகவரி மற்றும் போன் நம்பர்களை எழுதிக்கொடுத்தேன்.

‘ உனக்கெதுக்கு வீண் சிரமம். வரும்போது ராஜன் இருப்பான். அவன் வந்து கூட்டிட்டுப்போவான். முடிஞ்சா உனக்கு போன் பண்றேன். பார்ப்போமா,.,. ஆமா, ராஜனை உனக்கு எத்தனை நாளா தெரியும் ?, ‘ விடைஎதிர் பாராத கேள்வியை உதிர்த்துவிட்டுக் கையசைத்துச் சென்றார். அவரது நம்பிக்கையும் பாசமும் அப்படியே இருக்கட்டுமே! ராஜனின் குட்டையுடைத்து அதன்மூலம் அந்தத்தாயின் இதயத்தையும் உடைக்க ஏனோ எனக்கு மனமே வரவில்லை. கஷ்டப்பட்டு என் வாயைக்கட்டுப் படுத்திக்கொண்டேன். குற்றவுணர்வு ஒருபுறமும் மனநிம்மதி மறுபுறமுமாக என்னைக் குழப்பின. விநோதமான ‘அசைன்மெண்ட் ‘ என்று காலையில் அதிசயித்தவன் என் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமையுமென்று நினைத்திருப்பேனா ! நெடுநாட்கள் பழகியவரைப்பிரியும் மனக்கனத்துடன் வெளியேறினேன்.

மொபைல் கவனத்தை ஈர்த்தது. ராஜனின் அழைப்பு மறுபடியும் ! இத்தனை முறை போனில் என்னோடு பேசமுடிகிற இவனால், பெற்றவளுக்காக நேரத்தை ஒதுக்கவும் வீட்டிற்கு அழைத்துப்போகவும் முடியவில்லை. ஹார்ட்லெஸ் ஃபூல்! ‘ ஹலோ, ரவி, அவங்களுக்காக நீங்க ஏதும் செலவு செஞ்சா அதுக்கெல்லாம் நான் பொறுப்பில்ல. முன்னாடியே சொல்லியிருக்கேன் ஞாபகமிருக்கில்ல ? இதுதான் என்னோட கடைசிக் ‘கால் ‘. உங்களுடைய சேவைக்கான கட்டணத்துக்கு என்னோட ஆபீஸுக்குப் பில்ல அனுப்பினா, ஒரே நாள்ள செக் அனுப்பிடறேன், சரியா ‘,என்றதும், ‘ செலவென்ன சர், பெரியசெலவு ? பணத்த நீங்களே வச்சிக்கோங்க சர். பாஸ்கிட்டவும் சொல்லிடறேன். இதுக்கு நான் ‘சார்ஜ் ‘ பண்ணப்போறதில்ல. குட் பை ‘, என்று பட்டென்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்தேன். எனக்குத்தான் அம்மா இல்லை. நிழலில் இருக்கும் ராஜன், வெயிலில் இருக்கும் என் அளவிற்கு நிழலின் அருமையை உணர்ந்திருப்பாரா என்ன ?!

—- ( முற்றும் )—-

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டி 2005 ல் பிரசுரத்திற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டு 18-09-05 அன்று பிரசுரமானது.

jeyanthisankar@gmail.com

http://jeyanthisankar.blogspot.com/

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்