அன்பு மகள் (தொடர்ச்சி)

This entry is part [part not set] of 38 in the series 20091015_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


‘எந்த ஏ.பி.சி.டி.யை சொல்லிக் கொடுக்க இவ்வளவு தொகை சற்று அதிகம்தான். வேறு என்ன செய்வது. சேமிப்பில்தான் கை வைக்க வேண்டும். எவ்வளவுதான் ஒழித்து; வைத்தாலும் பிடுங்கப்பட்டு விடுகிறதே. இந்த சமுதாயம் ஒரு மோசமான திருடனை விட அநியாயமானது. சற்று கூட மனசாட்சியற்றது. சிரித்துக் கொண்டே கேட்கிறானே அவ்வளவு பெரிய தொகையை”

தலை சுற்றி விழுவதற்குள் அந்த டொரினோவை குடித்து முடித்தார்.

பின் குழந்தை லத்திகா அநியாயத்துக்கு படிக்க ஆரம்பித்துவிட்டாள்.

எல்.கே.ஜி. யிலேயே இவ்வளவு ஆர்வமா என் வியந்து போனார். அது எவ்வாறெனில். இரவு 1.30க்கு எழுந்திருப்பாள், அப்பா மூச்சா வருது என்று கூறி அனைவரையும் எழுப்பி விட்டு கருப்பு பூனை பாதுகாப்பு படையுடன் பின் சூழ செல்வது போல் பாத்ரூம் வரை செல்வாள், பின் படுக்கைக்கு வந்து உடனே தூங்கிவிட மாட்டாள், ஏ.பி.சி.டி.யை முழுவதுமாக ஒரு முறை சொல்லிக் காண்பிப்பாள். கோபாலகிருஷ்ணன் தன் மகளுக்கு முன் கொட்டாவி விட்டு விடக் கூடாது எனக் கட்டுப்படுத்திக் கொண்டு உட்கார்ந்திருப்பார். பின் அவளாக விருப்பப்பட்டாள் தூங்குவாள், இல்லையென்றால் உடனே ஒரு ரைம்ஸ். ரைம்சை மட்டும் கோகிலாவிடம் தான் கூறுவாள். பின் காலை ஒரு முறை குளிப்பாட்டும் பொழுது, பின் இட்லி சாப்பிட்டுக் கொண்டே ஒரு முறை, அது எந்த அளவிற்கு கோபால கிருஷ்ணனை பாதித்திருந்தது என்றால். அலுவலகத்தில் ஏதோ ஒரு பைலில் தவறுதலாக ரைம்சை டைப் செய்யும் அளவிற்கு பாதித்திருந்தது. கோபாலகிருஷ்ணன் என்றைக்கு மதியம் தூங்கிவிழாமல் டைப் செய்திருக்கிறார். அரை தூக்கத்தில் குத்துமதிப்பாக எதையாவது டைப்செய்வது தான் அரசு அலுவலகத்திற்கு அழகு.

குழந்தை லத்திகாவின் கல்விச் செலவு கண்ணைக் கட்டியது. அவள் 5 வகுப்பு வருவதற்குள் சில லட்சங்கள் செலவாகி விட்டன. கோபால கிருஷ்ணன் ஓவர் டைம்மாக பார்த்து பார்த்து ஒல்லியாகிப் போனார். ஆனால் கோகிலா அப்படியில்லை. திருமதி. கோகிலா இதே ரேஞ்சில் போய்கொண்டிருந்தால், ஒரு சீன மல்யுத்த வீரனைப் போல ஆகிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

அன்று ஒரு நாள் குழந்தை லத்திகாவை உற்சாகப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு இப்படி ஒரு வாக்குறுதியை கொடுத்து விட்டார் கோபால். அவள் மட்டும் வகுப்பில் முதல் மாணவியாக வந்தால், ஒரு தங்க கைக்கடிகாரத்தை பரிசளிப்பதாக, லத்திகா வேறு புத்திசாலியாக இருந்தாள். அவளுக்கு தங்கத்திற்கும், தங்கமுலாம் பூசப்பட்டதிற்கும் இப்பொழுதே வித்தியாசம் தெரிந்திருந்தது. அவசரப்பட்டுவிட்டோமோ என்று மனம் வெதும்பிக் கொண்டிருந்தார் கோபாலகிருஷ்ணன் கடிகாரக் கடைக்கு சென்று ஒரு தங்க கைக்கடிகாரத்தின் விலையை கேட்ட பொழுது, அவரது ரத்த ஓட்டம் முழுவதுமாக நின்று போனது. இதயம் வேறு நான் இப்பொழுது துடிக்கவா? வேண்டாமா? என்று கேள்வி கேட்டது. மகளுக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படி மீறுவது. லத்திகா படிப்பதை பார்த்தால் அவள் இப்பொழுது பி.ஹெச்.டி. முடித்துவிடுவாள் போல. ஒரு தீவிரம். இதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் பீடிங் அதிகமாகிப்போன பூனை போல அன்பு மனைவி கோகிலா. அவளுக்கு என்ன கவலை. சாம்பாரில் உப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை தவிர.

லத்திகா சொன்னதை நிறைவேற்றிவிட்டாள். வேறு வழியில்லாமல் கோபால கிருஷ்ணன் முதன் முறையாக வட்டிக்கு கடன் வாங்க வேண்டியிருந்தது. மகளுக்கு அந்த வாட்சை போட்டுப் பார்த்து அன்று முழுவதும் அழகு பார்த்தார். கடினமான விஷயம் என்னவாக இருந்தது எனில் கோகிலாவை சமாளிப்பது தான். அவளது கேள்வி கேட்கும் திறமை ஒரு தேர்ந்த வழக்கறிஞருக்கும் வராது. திரு. கோபாலகிருஷ்ணன் மட்டும் மகாத்மா காந்தியின் சத்திய சோதனையை படித்து விட்டு உணர்ச்சியேற்பட்டு பொய் கூற மாட்டேன் என்று உறதி மொழி ஏற்றிருந்தால் என்னாவது? இந்நேரம் அந்த வீணை அல்லவா உடைந்திருக்கும் அவர் தலையில் பட்டு. பின் கோகிலாவின் உடல் பலத்திற்கு பூரிக் கட்டை எல்லாம் தீக்குச்சி போல் அல்லவா இருக்கும். வீணைதான் அவருக்கு தகுதியானது.

அவர் அந்த கடனை அடைப்பதற்குள் கண்ணாம்முழி இரண்டும் பிதுங்கி வெளியே வந்து விட்டது. இந்த உலகில் ஒரு போர் வீரனாக வாழ்ந்துவிடலாம். பாகிஸ்தான் காரனுடன் சண்டை போடுவது கூட அப்படி ஒன்றும் பெரிய விஷயமாக இருக்காது. இரண்டில் ஒன்று தெரிந்துவிடும். வாழ்வு அல்லது சாவு. ஆனால் ஒரு நடுத்தர குடும்பஸ்தனாக இருப்பது சாதாரண விஷயம் அல்ல. என்ன செய்வது என்று தெரியாத பல சூழ்நிலைகளை உருவாக்கி வேடிக்கை பார்க்கும் வாழ்க்கை. இங்கு வேறு ஆப்ஷனே கிடையாது. சாமாளித்து தான் ஆக வேண்டும்.

குழந்தைகளை பொறுத்த வரை தந்தையிடம் பரிசு வாங்குவது என்பது அழாதியான விஷயம். இதற்காக் லத்திகா ஒவ்வொரு முறையும் முதல் மாணவியாக வந்து கொண்டிருந்தாள். கோபாலகிருஷ்ணனும் தன் சக்திக்கு மீறி செலவு செய்து கொண்டிருந்தார். மகள் தன்னிடம் ஏதேனும் கேட்டு அதை இல்லை என்று சொல்லிவிடும்; நிலை மட்டும் வந்து விடக் கூடாது என்று அவர் கடவுளிடம் வேண்டிக் கொண்டார்.

லத்திகாவிற்கு, தான் தன் தந்தையை சிரமப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது புரியம் வயதும் வந்தது. அவள் பத்தாவது படித்துக்கொண்டிருந்தாள். அவள் மெச்சூர்ட் ஆகியிருந்தாள். தந்தையிடம் கேட்பதை நிறுத்திவிட்டாள், ஆனால் பெரிய குழந்தை கோகிலா அப்படியில்லை. அவள் இன்னும் கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் இப்பொழுதெல்லாம் வீட்டுக்குள் செல்ல வேண்டுமானால், இரண்டு கதவையும் திறந்து வைக்க வேண்டியிருக்கிறது. அன்று ஒரு நாள் கேட்டாள். தன் இடுப்புக்கு தங்க ஒட்டியானம் வேண்டும் என்று. குறிப்பிடப்பட விஷயம் என்னவெனில். கேட்டவுடன் மயங்கி மட்டுமே விழுந்தார் கோபால். இதயம் நன்றாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று டாக்டர் கூறிவிட்டார். இதெல்லாம் தெய்வச் செயலாக இல்லாவிட்டால் வேறு என்னவாக இருக்க முடியும். அந்த இடுப்புக்கு தங்க ஒட்டியானம், அதை நினைக்கையில், அதை கெட்ட கனவாக நினைத்து மறந்துவிடுமாறு நிமிடத்திற்கு ஒருமுறை ராம்கி சமாதானம் கூறிக் கொண்டேயிருக்க வேண்டியிருந்தது. இந்தியப் பெண்கள் உடற்பயிற்சி செய்வதேயில்லை. கேட்டால் வீட்டு வேலை செய்கிறேன் என்பார்கள்.

அன்று ஒரு விரும்பத்தகு விஷயம் நடந்திருந்தது. லத்திகா 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மாணவியாக வந்து விட்டாள். அதை தன் தந்தையிடம் கூறுவதற்கு சங்கடப்பட்டாள். ஏனென்றால் இதைக் கேட்டதும், சந்தோஷ மிகுதியில் ஏதேனும் விலையுயர்ந்த பொருளை வாங்கித் தர பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பார். அவர் ஒரு சாதாரண அரசு அலுவலர். அவருக்கு இவ்வளவு சுமை என்பது சற்று அதிகம். ஆனால் விஷயம் ஒன்றும் சாதாரணம் இல்லையே. எப்படி தெரியாமல் போய்விடும். தன் மகளின் போட்டோவை பத்திரிகையில் பார்த்த பொழுது கோபால் அலவலகத்தில் காபி (அலுவலக செலவில்) குடித்துக் கொண்டிருந்தார். மகிழ்ச்சியில் காபியானது மூக்கின் வழியாக வந்து விட்டது சூடாக. அலுவலகத்திற்கு 10 நாள் விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டார். அலுவலக தலைமை அவரை ஆச்சரியமாக பார்த்தது. ஏனெனில் எறும்பு கடித்து விட்டால் கூட 20 நாள் லீவ் போடுவார்கள் இந்த அலுவலகத்தில். கோபாலுக்கு அரசு அலுவலகத்தின் மேல் சற்று கருணை உண்டு.

கோபாலகிருஷ்ணன் தன் மகளுக்கு பிடித்த இனிப்புகளையெல்லாம் வாங்கிக் கொண்டார். அவளுக்கு என்ன பரிசளிக்கலாம் என வெகு நேரம் சிந்தித்தன் விளைவாய் ஒரு முடிவுக்கு வந்தார். ஒரு அழகான ஸ்கூட்டி பெப் தான் அது, அது தன் மகளுக்கு ஏற்ற இரு சக்கர வாகனம். தன் மகளுக்கு ரோஸ்கலர் பிடிக்கும் என்று தெரியும். வீட்டிற்கு செல்லும் பொழுது வண்டியோடுதான் செல்ல வேண்டும் என்று சபதம் எடுத்துக் கொண்டார். ஆனால் அவரது துரதிஷ்டம் ரோஸ் வண்ணத்தில் எந்த வண்டியும் ஸ்டாக் இல்லை. பிடிவாதம் என்றால் அப்படி ஒரு பிடிவாதம். வண்டி வந்தால் தான் கடையை மூடவிடுவேன் என ரௌடியிசம் செய்ய ஆரம்பித்துவிட்டார். அவருக்காக பக்கத்து ஊர் ஷோ ரூமிலிருந்து குட்டியானையில் (ஆட்டோவில்) ஏற்றி வரப்பட்டது அந்த வண்டி. மணி 10 ஆகிவிட்டது. தன் மகள் தான் முதன் முதலில் அந்த வண்டியை ஓட்ட வேண்டுமென்பது அவரது விருப்பம். ஷோரூமிலிருந்து வண்டியை பார்சல் செய்து தூக்கி வரப்பட்டது. அந்த பகுதியே கோபாலகிருஷ்ணன் வீட்டில்தான் குடியிருந்தது. லத்திகாவிற்கு ஏக மகிழ்ச்சி இவ்வளவு பெரிய பரிசை அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.

பின் தன் மகளின் படிப்பு விஷயத்தில் அதீத ஆர்வம் காட்ட ஆரம்பித்து விட்டார். இரவு நேரங்களில் ஒருகையில் ஹார்லிக்ஸ் மற்றொரு கையில் ப்ளாஸ்க் என கடிகாரத்தை பார்த்த படி காத்து கொண்டிருப்பார். படித்துக் கொண்டிருக்கும் லத்திகா கேட்கிறாளோ? இல்லையோ? அவளுக்கு ஹார்லிக்சை கலந்து குடுப்பது அவரது தலையாய கடமை. தன் மகள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது கரண்ட் கட் ஆகிவிட்டாள் அவ்வளவு தான், ஈ.பி காரன் தொலைந்தான். பின் ஒரு ஜெனரேட்டரை வாங்கி வைத்துக் கொண்டார். தன் மகள் இரவு நேரங்களில் அதிக நேரம் படிப்பதால் கண்ணாடி போடும் சூழ்நிலை உருவாகிவிடுமோ என பயந்து கொண்டிருந்தார். வைட்டமின் நிறைந்த கீரை வகைகளை அதிகமாக உணவில் சேர்த்து கொடுத்தார். நல்ல வேலையாக அவளுக்கு அப்படியொரு சூழ்நிலை உருவாகவில்லை. எதிர் பார்த்தது போல் 12ம் வகுப்பிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் வாங்கினாள்.

இந்தியாவை பொறுத்தவரை மாவட்ட அளவில் யாரேனும் நல்ல மதிப்பெண் வாங்கி, அவர் மருத்துவப் படிப்பை தேர்ந்தெடுக்காவிட்டால் அவரது மூளை குழம்பிவிட்டது என்று அர்த்தம். நேராக அறைக்குள் சென்று கால்மேல் காலை போட்டுக் கொண்டு. தன் மகளுக்கான மருத்துவக் கல்லூரியை தேர்ந்தெடுத்தார் கோபால். தமிழ் நாடு கல்வித்துறை மட்டும் ஏதேனும் காரணம் கூறி தட்டிக் கழித்திருக்கும் பட்சத்தில் குறைந்தபட்சம் 4 பேருந்தையாவது கொழுத்தியிருப்பார். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. தனது சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி தனது மகளை படிக்க வைத்தார்.

கோபாலகிருஷணன் ஓவர் டைமாக பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட அலுவலக தலை மிரண்டு போனது. பின அந்த பதவி உயர்வை அவருக்கு அளித்து தன்னை கவுரவித்துக் கொண்டது அரசு அலுவலகம். அவர் தனக்கான சம்பள உயர்வை பற்றி மனைவி கோகிலாவிடம் கூறவில்லை. காரணம் தன் மகளுக்கான சேமிப்பிற்கு அது உதவும் என்பதுதான்.

அன்று ஒரு நாள், உடல் நிலை சரியில்லாமல் போகவே. நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த லத்திகா. தன் தந்தைக்கு மருத்துவம் செய்தாள். அவள் குத்திய ஊசியால் அழுகை வந்து விட்டது அவருக்கு. அனைவருக்கும் தெரியும் ஊசி என்றால் உயிர் போக கத்துவார் என்பது. ஆனால் அன்று அழுத அழுகை. அது என்ன விதமானது என்பது லத்திகாவிற்குத் தெரியும். தன் உடல்நிலை சரியில்லாமல் போனது குறித்து அன்று மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார் கோபாலகிருஷ்ணன். வலி சுகமாகும் தருணம் அழகானது. அந்த அனுபவம் கிடைத்ததற்காக நன்றி கூறினார் கடவுளுக்கு.

தன்னை மொத்தமாக இழந்து தன் மகளை உருவாக்கிவிட்ட சந்தோஷத்தில் திளைத்திருந்த சமயத்தில் தான் அவளின் திருமண வயது நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். இன்னும் ஓய்வெடுக்கும் வயது வரவில்லை என்பதை உணர்ந்தவராய் செயல்பட ஆரம்பித்தார். தான் இதுவரை ரகசியமாக சேர்த்து வைத்தது, தனது சம்பள உயர்வு சேமிப்பு மற்றும் தான் ஆசையாக கட்டிய வீட்டை அடமானமாக வைத்து வங்கியில் வாங்கிய சில லட்சங்கள் என ஒட்டு மொத்தமாக தன்னை காலி செய்து தனது பெண்ணிற்கான மணமகனை தேர்வு செய்து திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார். தனது ரிடையர்டுமென்ட் பணத்தை வைத்து தான் அவர் வீட்டை திருப்ப வேண்டும். இப்பொழுது அவர் ஒரு ஜீரோ. ஒன்றுமற்றவர். ஒட்டு மொத்தமாக, எந்த எதிர்பார்ப்புமற்று தன்னை பங்கிட்டு கொடுத்தவர்.

அன்று கோகிலா, கோபாலிடம் எதார்த்தமாக இவ்வாறு கூறினாள்.

‘உங்க சம்பள உயர்வ வச்சு எனக்குத்தான் தங்க ஒட்டியானம் வாங்கிக் கொடுக்கல. ஆனா நம்ம பொண்ணுக்கு பண்ணி போட்டிங்களே, எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்று கோபால், தான் மறைத்ததாக நினைத்த விஷயம் கோகிலாவிற்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. என்ன அழகான புன்னகை அவரிடமிருந்து வெளிப்பட்டது தெரியுமா.

இழப்பு எப்பொழுது சுகமாகும் என்பது அது யாருக்காக என்பதை பொருத்தது. தனது அன்பு மகள் தன்னை ஏதோ ஒரு வகையில் நிறைவடையச் செய்துவிட்ட பிறகு இழப்பு குறித்து கவலைப்பட என்ன இருக்கிறது. அவள் அழகானவள். அவள் தைரியமானவள். அவள் புத்திசாலி. அவள் அவர் மகள்.

சில வருடங்களுக்கு பிறகு

உடல் வலுவிழந்து மரணப் படுக்கையில் இருந்தபடி நேரத்தை எண்ணிக் கொண்டிருந்த சமயம். உயிர் போய் விடும் முன் மகளைப் பார்க்கும் ஆர்வம் கண்களில் மின்னியது. கோபாலகிருஷ்ணன் ஏக்கத்தின் உச்சத்திலிருந்தார். லத்திகாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவள் டெல்லியிலிருந்தாள் தனது குடும்பத்துடன்.

லத்திகா : அப்பா உடம்புக்கு எப்படியிருக்கு

கோபால் : (பேச முடியாவிட்டாலும் குரலை கேட்டுவிட்ட சந்தோஷத்தில் கண்ணீர் வழிந்தது.)

லத்திகா : அப்பா நான் உடனே வருகிறேன்.

கோபால் : (தான் அவ்வளவு கொடுத்து வைத்திருக்கும் பட்சத்தில், தனது கண்கள் மூடிவிடாது என்று தன்னம்பிக்கையோடு கார்த்திருக்க ஆரம்பித்தார்)

அவரது கண்கள் வாசலை வாசலை நோக்கியிருந்தது.

(முற்றும்)

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்