This entry is in the series 20100815_Issue

சசிதரன் தேவேந்திரன்



ரகசியங்களின் ஒற்றை சாவி
கண்டெடுக்கப்பட்டது.

அவர்தம் ரகசியங்கள் கொண்டே
தோற்கடிக்கப்பட்டவர்களின் எலும்புகளால்
அது செய்யப்பட்டிருந்தது.

பயங்களின் ஆழ்ந்த பள்ளத்தாக்குகளில்
ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்
அனைவரின் ரகசியங்களும்
பாதுகாப்பற்றதாகின.

மெல்ல மெல்ல செய்தி ஒரு
காட்டுத் தீயென பரவத் தொடங்கியது.

அவரவர் ரகசியங்களுக்காய்
பதற தொடங்கினர் அனைவரும்.

ரகசியங்களின் ஒற்றை சாவி
கண்டெடுக்கப்பட்ட நாளில்
மீள்பாதையற்ற அடர் வனத்தினுள்
அனைவரும் தொலைக்க தொடங்கினர்
தத்தமது ரகசியங்களை.

– சசிதரன் தேவேந்திரன்
சென்னை – 92.

Series Navigation