இந்த வாரம் இப்படி (செம்டம்பர் 2, 2004) கலைஞர் காணும் காட்டுமிராண்டித்தனம், நேபாளிகள் ஈராக்கில் கொலை, இந்தியர்கள் விடுதலை, சிவராஜ

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

சின்னக்கருப்பன்


***

தலைவர் கலைஞர் அவர்களது கேள்வி பதிலிலிருந்து.

செய்தியாளர்: மணி சங்கர் அய்யரின் உருவப்பொம்மை மீது செருப்பால் அடிக்கும் போராட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற பேரவைத்தலைவர் போன்றவர்களே கலந்து கொள்வதைப் பற்றி.

கலைஞர்: அந்தப் போராட்டமுறை அநாகரிகமானது. சுருக்கமாகச் சொல்லப்போனால் காட்டுமிராண்டித்தனமானது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

*

ராமன் உருவப்படத்தின் மீது செருப்புமாலைபோட்டு, செருப்பால் அடிப்பதை முற்போக்கானதாகவும் போராட்டமுறையாகவும் செய்தவர் டாக்டர் கலைஞரும் திராவிட இயக்கத்தினரும், அதன் தலைவர் பெரியார் ஈ வெ ராமசாமி அவர்களும்.

இன்று அப்படிப்பட்ட போராட்டமுறை அநாகரிகமானது என்றும் காட்டுமிராண்டித்தனமானதும் என்றும் சொல்வது மனதுக்கு நிறைவானதாக இருக்கிறது.

ஒன்று கவனியுங்கள். ராமனுக்கு செருப்புமாலை போடுவதோ அல்லது செருப்பால் அடிப்பதோ தவறு என்று நான் கூறவில்லை. சாக்கியநாயனார் தினந்தோறும் கல்லால் அடித்ததை மலரர்ச்சனையாக ஏற்றவர் எம்பெருமான். செருப்பால் அடிப்பதையும் ராமன் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார் நிச்சயம். அந்த செருப்புமாலையையும் பெரியார் அளித்த மலர்மாலையாகவே ஏற்றிருப்பார் ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து, அரு மறைக்கு உணர்வு அரும், அஞ்சனக் கரு முகிற் கொழுந்து எழில் காட்டும் சோதி.

குழந்தை கால் பட்டு தாய் கோபிக்குமா என்ன ?

ஆனால் மணி சங்கர் அய்யர் சமாச்சாரம் வேறு. அவர் சாதாரண மனிதர். ஆகவே டாக்டர் கலைஞர் கூறுவது சரிதான்.

***

மிகவும் வருத்தத்திற்குரிய நிகழ்ச்சியாக, நேபாள் நாட்டைச் சார்ந்த 12 உழைப்பாளர்கள் ஈராக்கில் கொல்லப்பட்டார்கள். துருக்கியைச் சேர்ந்த உழைப்பாளர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஈராக்கிய இஸ்லாமிய ராணுவம் என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு தீவிரவாத அமைப்பு இந்த கொலைகளை செய்துவிட்டு, யூதர்களுக்கும் கிரிஸ்துவர்களுக்கும் வேலை செய்ய வந்த இந்த நேபாளிகளைக் கொல்வதில் பெருமை கொள்வதாகக் கூறியது.

நேபாள அரசாங்கம் நேபாளிகளை ஈராக்குக்குப் போகவேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த போரில் எந்த பக்கத்திலும் சாயாமல் நேபாள அரசாங்கம் இருந்துவந்திருக்கிறது. இந்த நிலைமையில் இப்படி நேபாள உழைப்பாளர்களை கொல்வதன் மூலம், ஈராக்கின் தீவிரவாத அமைப்புக்கள், எந்த ஒரு மூன்றாம் நாட்டு உழைப்பாளர்களும், பணத்துக்காகக்கூட ஈராக்குக்கு வந்து வேலை செய்யக்கூடாது என்பதையே தெளிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இதன் விளைவு நேபாளத்தில் வெடித்திருக்கிறது. அங்கு சிறுபான்மையாக இருக்கும் முஸ்லீம்களது வழிபாட்டுத்தலங்கள் கோபம் கொண்ட நேபாளிகளால் தாக்கப்பட்டிருக்கின்றன. ஆயிரக்கணக்கான நேபாளிகள் காட்மண்டுவில் இருக்கும் ஜமா மஸ்ஜிதை தாக்கி எரித்திருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கும் அங்கிருக்கும் இந்துக்களுக்கும் வரலாற்று ரீதியாக எந்த பிரச்னையும் இருந்ததில்லை. ஆனால் இப்போது துரதிர்ஷ்டவசமாக உலக அரசியல் காரணமாக அங்கும் மதக்கலவரம் தோன்றும்படி ஆகியிருக்கிறது. இந்தியாவில் மதக்கலவரங்கள் இருந்தபோதும்கூட நேபாளத்தில் முஸ்லீம்கள்மீது எந்தவிதமான மனவருத்தமும் நேபாளிகளுக்கு இருந்ததில்லை. இப்போது ‘இஸ்லாமிய ‘ அடையாளம் கொண்ட ஈராக்கிய எதிர்ப்புப்படை நேபாளிகளை கொன்றது நேபாளத்தில் எதிர்விளைவை ஏற்படுத்தியிருக்கிறது.

‘இஸ்லாம் ஒழிக ‘ என்று கத்திக்கொண்டு காட்மண்டு தெருவில் சென்ற போராட்டக்காரர்களை நேபாள ராணுவம் சுட்டு இரண்டுபேர் இறந்திருக்கிறார்கள். நேபாளத்தில் பாரதிய ஜனதா கட்சி போன்ற இந்துக்கட்சி ஏதுமில்லை. அங்கு இருப்பது காங்கிரஸ் பாதிப்புள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியுமே. ஆகவே இது தூண்டி நடத்தப்பட்டது என்று குறைசொல்லவும் ஏதுமில்லை.

ஈராக்கில் தேள் கொட்டினால் காட்மண்டுவில் நெரி கட்டும் உலக அரசியலுக்குள் நுழைகின்ற வரலாற்றையே நாம் பார்க்கிறோம்.

***

இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

சிறைபடுத்தப்பட்டிருந்த இந்திய உழைப்பாளர்கள் ஈராக்கிய தீவிரவாதிகளால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இந்திய அரசாங்கம் தாங்கள் எந்த உறுதிமொழியும் கொடுக்கவில்லை என்று சொன்னாலும், இந்தியர்கள் விடுதலைக்கு ஏதேனும் சிலவிஷயங்கள் கொடுக்கல் வாங்கல் நடந்திருக்கலாம் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அப்படி இருந்தாலும் அது ஒரு பாதகமான விஷயம் அல்ல. ஒரு உயிரைக் காப்பாற்ற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் (இன்னும் பல உயிர்களை பலி கொடுப்பது தவிர) குவாய்த் கல்ஃப் லிங்க் டிரான்ஸ்போர்ட் கம்பெனி 1 மில்லியன் டாலருக்கு மேல் ஈட்டுத்தொகையாக வழங்கியிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது. இந்திய அரசாங்கம் அவ்வாறு எதும் தரப்படவில்லை என்று கூறுகிறது. எதுவாயினும், இந்தியர்களை விடுதலை செய்து கொண்டுவந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஈ அகமது பாராட்டுக்குரியவர்.

ஆனால் இந்த கொடுக்கல் வாங்கல் வெற்றியின் மூலமாக, இந்தியர்கள் கிள்ளுக்கீரை என்றோ அல்லது இந்தியர்களைக் கடத்தினால் இந்திய அரசாங்கம் பணிந்து போகும் என்றோ ஒரு கருத்து வெளியாகுமாயின் அது இந்தியர்களுக்கும் இந்தியாவுக்கும் நல்லதல்ல. அது நீண்டகால துன்பமாக இந்தியாவுக்கு தொடர்ந்து இருக்கும்.

***

மணிப்பூரில் இந்திய ராணுவத்தை வாபஸ் வாங்கும்படி நடக்கும் போராட்டத்தைபற்றி கவலைப்படாமல், பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படாமல், லாரி ஓட்டுனர் வேலை நிறுத்தம்பற்றி கவலைப்படாமல், இன்று, சவர்க்கர் சமாச்சாரம், எதிர்கட்சி தலைவர்களை அவமானப்படுத்துவது என்று காங்கிரஸ் அரசாங்கம் தேவையில்லாத சமாச்சாரங்களை ஊதிப்பெரிது படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு அரசியலும் ஒரு கேளிக்கைதான் என்று புரிந்து வைத்திருக்கிறார்கள்.

இது ஓரளவுக்கு பழைய காங்கிரஸ் கலாச்சாரம்தான் என்றாலும் படித்தவர்கள் எண்ணிக்கை இன்று அதிகம் என்பதை காங்கிரஸ் கலாச்சாரவாதிகள் கணக்கில் எடுத்துக்கொண்டால் தேவலை.

கடந்த பலவருடங்களாக தேசிய ஜனநாயக முன்னணியின் கீழே இந்தியாவின் பணவீக்கம் கட்டுக்குள்தான் இருந்தது. இந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியேறியவுடனேயே பணவீக்கம் வழக்கம்போல 7 சதவீதம் 8 சதவீதம் என்று சுரவேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. நாட்டு பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 8 சதவீதம் அளவுக்கு கொண்டு சென்றதை கேலி செய்த இந்த காங்கிரஸ் அரசு, மீண்டும் 3 சதவீதத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. வேலையில்லாதவர்களுக்கு வேலை என்று பேசிய இந்த காங்கிரஸ் அரசு அது பற்றி இன்று வாயே திறப்பதில்லை.

பணவீக்கத்துக்குக் காரணம் , ஆட்சி ஏறியவுடனேயே அறிவித்த பெட்ரோல் விலை ஏற்றமும், லாரி ஓட்டுனர் வேலை நிறுத்தமும், இன்னும் பல இந்த காங்கிரஸ் ஆட்சி கொள்கை முடிவுகளுமே. இதுவெல்லாம் தெரியாதவர்களல்லர் மன்மோகன்சிங் அவர்களும், சிதம்பரமும். ஏதேனும் பிரச்னை என்றால் முந்தைய ஆட்சியின் மீது பழி போடுவது வழக்கம்தான் என்றாலும், கொஞ்சம் அறிவுடன் பழி போடவேண்டும். பதிலுக்கு உங்களால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் ஆட்சி விலகுங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்று பாஜக சொன்னால் என்ன சொல்வார்கள் ?

***

சமீப செய்திகளில் என்னை புண்படுத்தியது ஒன்று உள்ளது என்றால், அது உள்துறை அமைச்சர் சிவராஜ் பாடில் மணிப்பூரி இளைஞர்கள் பற்றிச் சொன்னதுதான்.

‘மணிப்பூர் இளைஞர்களுக்கு வேலை இல்லாமையால் அவர்கள் ஆயுதம் தாங்கி அலைகிறார்கள். வேலை கொடுப்பது இயலாதது. அதனால் அவர்களுக்கு பொருத்தமான இடமாக மணிப்பூர் படாலியன் ஒன்று உருவாக்கி அதில் இந்த இளைஞர்களை சேர்க்கலாம். மணிப்பூர் மக்களுக்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிடிக்கவில்லை என்றால், அவர்கள் நம்பக்கூடிய மணிப்பூர் பட்டாலியனை உருவாக்கிக்கொள்ளலாம். ‘ என்று பேசியிருக்கிறார்.

http://www.indianexpress.com/full_story.php ?content_id=54222

இதுதான் காங்கிரஸ் அரசு இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் லட்சணம்.

மணிப்பூர் பட்டாலியன் ஒன்று உருவாக்குவது நல்லதுதான். அதுவும் அந்த பிரச்னைக்கு ஒருவர் பரிந்துரைக்கக்கூடிய ஒன்றுதான். நிச்சயமான தீர்வாகக்கூட இல்லாமலிருக்கலாம். ஆனால், சொல்லும் விதம் இருக்கிறதே. வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை உருவாக்குவோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், ‘jobs are difficult to come by ‘ என்று ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார். எப்படி ? பொருளாதார வளர்ச்சியை 8 சதவீதத்திலிருந்து 3 சதவீதத்துக்கு கொண்டுவருவதன் மூலமாகவா ? பணவீக்கத்தை 8 சதவீதத்துக்கு அதிகரிப்பதன் மூலமாகவா ?

அணுகுமுறையே சரியில்லை என்றுதான் தோன்றுகிறது.

***

செம்டம்பர் 26ஆம் தேதிக்குள் இந்த அரசு கவிழ்ந்துவிடும் என்று யாரோ ஒரு ஜோசியக்காரர் சொன்னாராம். பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். அதற்கேற்றாற்போலவே உமாபாரதி விவகாரம், சவர்க்கர் விவகாரம் என்று பாரதிய ஜனதா கட்சியினர் கையில் அவர்களுக்குச் சாதகமாகவே காங்கிரஸாரும் எடுத்துக்கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனாலும், ஜோதிடத்தை நம்பாத கம்யூனிஸ்ட் கட்சியினர் இருக்கும்போது காங்கிரஸ் ஆட்சிக்கு ஒரு பிரச்னையும் இல்லை என்றே தோன்றுகிறது. மேற்குவங்காளத்துக்கு ஒரு பைசா கூட கொடுக்கமுடியாது என்று காங்கிரஸ் கட்சி சொன்னால் கூட இந்த ஆட்சியை கவிழ்க்க மாட்டார்கள் கம்யூனிஸ்ட் கட்சியினர்.

பேசாமல் பாஜகவினர் உருப்படியாக எதிர்கட்சி வேலையை பொறுப்புடன் செய்ய ஆரம்பிக்கலாம்.

***

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்