விடாது நெருப்பு

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

கோமதி நடராஜன்


அக்கம் பார்த்தவாறு தய்ங்கித் த்யங்கி வந்துகொண்டிருந்தான் மாணிக்கம்.அன்றுவரை அவன்,தலை நிமிர்ந்து நடந்த வந்த அதே தெருதான்,ஆனால் இந்த முறை ,அவன் நடையில் ஒரு குற்ற உணர்வு தெரிந்தது.

“ஏய் நீ நம்ம ஸ்கூல் வாத்தியார் மாணிக்கம்தானே….!”ஆச்சரியமும் சந்தேகமுமாகக் கேட்டார் ஓய்வு பெற்ற தபால்காரர் ஆறுமுகம்

“….உன்னைக் காணோம்னு தேடிப் பார்த்துட்டு ,பள்ளிக் கூடத்து தீ விபத்திலே எறிஞ்சுபோனதிலே அடையாளம் தெரியாதவங்க லிஸ்ட்டிலே உன்னோட பேரையும் சேர்த்து அறிக்கை விட்டுருக்காங்க….நீ இங்கே குத்துக்கல்லாட்டம் வந்து நிக்றே…என்னப்பா ஆச்சு நீ எப்படித் தப்பினே..?”

இதே ஆச்சரிய தொனியில் அவனை வழியில் பார்த்த பங்கஜம் பாட்டி,கோடி வீட்டு குப்புசாமி,எதிர்வீட்டு வாண்டு கோபாலுன்னு எல்லோரும் கேட்டு மலைத்து நின்றார்கள்.

எல்லோருக்கும் ஒரே பதிலை வார்த்தை மாறாமல் வரிசை மறக்காமல் ,சொல்லிக் கொண்டே வந்தான்.

அவன் சொன்னது

“…நான் அன்னைக்குப் பள்ளிக் கூடமே போகலை ….ஒரு ஜோலியா என்னை டவுணுக்கு அனுப்பி வச்சுட்டாங்க…காலையிலே 6மணிக்கே போய்ட்டேன்….ரெண்டு நாளா வேலை அலைச்சல்லே எனக்கு எந்த சமாச்சாரமும் தெரியாம போச்சு…..”.

கண்றாவி…கஷ்டகாலம்,விதி ,நேரம் என்ற பல வார்த்தைகளைக் கொட்டி சொல்லியபடி வந்தான்

சரி சரி உன்னோட வீட்டுக்காரியைப் போய்ப் பாரு, ரெண்டு நாளா பச்சத் தண்ணி பல்லுலே படாம அழுதுட்டு இருக்கா ..ஓடிப் போய் அவளைச் சமாதானம் பண்ணு….பாவம் புள்ளைத்தாச்சி….இப்படி பட்டினியா கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆறது……அவ அழுகையைப் பார்க்கச் சகிக்கலை….யார் பேச்சையும் கேக்காம சுருண்டு கிடக்கா போ போ ….போய் அவளைக் கவனி..

மெதுவாக வீட்டை அடைந்தான்.உள்ளே இரு குடும்பத்தாரும் அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்றவர்களாக..அமர்ந்திருந்தனர்..

அவனைப் பார்த்ததும் உண்டான மலைப்போடு அனைவரும் அவனைச் சுழ்ந்து கொண்டனர்.எப்படிப்பா என்ன ஆச்சு எங்கே போனே …..வரிசையா,வந்து விழுந்த கேள்விகளை சமாளித்தவன் அஞ்சலையின் அருகே சென்றான்

அதுவரை அவன் நினைவை சுமந்தபடி துடித்துக் கொண்டிருந்தவள்…அவனைப் பார்த்த உடன் சந்தோஷம் இன்ப அதிர்ச்சி அனைத்தும் சேர அப்படியே மயக்கம் அடைந்தவாளாக சாய்ந்தாள்.

ரெண்டு நாளா சாப்பிடலை எதுவும் குடிக்கலை ஒரே அழுகையும் புலம்பலுமா கிடந்தா ,என்ன ஆகும்….உன்னைப் பார்த்ததும் அதிர்ச்சி எல்லாம் சேர்ந்து ஆளை அசத்திடுது….கொஞ்சம் கூட இருந்து பார்த்துக்கோ மாணிக்கம் .

பள்ளிக் கூடத்துக்கெல்லா அப்புறமா போய்க்கலாம்…..

எல்லோரும் விடை பெற்றார்கள்.

அவளை ஆதரவாகத் தாங்கியபடி படுக்கையில் அமரவைத்தான்.ஒரு சில நிமிடங்கள் கழித்து விழித்த அஞ்சலை,

“மாமா!வந்துட்டியா ,எப்படி மாமா தப்பிச்சே? என்ன நடந்துச்சு ?எனக்குத் தெரியும் உனக்கு ஒண்ணும் ஆகாதுன்னு…இருந்தாலும் துடிச்சு போய்ட்டேன் மாமா.., நாளைக்கு ரெண்டு புள்ளைங்களையும் வச்சிட்டு என்ன செய்ய்ப் போறேமோன்னு ..பதறி போய்ட்டேன்… ”

மாணிக்கம் மெதுவாக அவள்

“….நான் ஒரு விஷயம் சொல்றேன் யார்கிட்டேயும் சொல்லிடாதே..நான் பள்ளிக்கூட வேலையா வெளியே போய்ட்டதா எல்லார்கிட்டேயும் சொல்லிட்டு வந்திருக்கேன் ஆனா பள்ளிக்கூட வேலையா நான் எங்கேயும் போகலை.யாரும் என்னை அனுப்பவும் இல்லை….பள்ளிக் கூடத்திலே லேசா கருகிற வாசம் தெரிஞ்ச உடனே அது என்னன்னு கண்டு பிடிக்றதுக்குள்ளே மள மளன்னு நெருப்பு பரவ ஆரம்பிச்சுடுது…

என்ன சொல்றே நீ !!!

மாமா !அப்போ நீ ஸ்கூல் வேலையா டவுணுக்குப் போனதா சொன்னதெல்லாம் பொய்யா? நீ எங்கேயும் ..போகலையா?”

“….இல்லே அஞ்சலை அந்த சமயம் நான் அங்கேதான் இருந்தேன்…என்னாலே எதுவும் செய்ய முடியாத நிலை .

.கேட் சாவி என் கையில் கிடையாது எல்லா பக்கமும் பூட்டிவச்சிருந்தாங்க….எனக்கு வேற எதுவும் தோணலை ..நீயும் நமக்குப் பொறக்கப் போற குழந்தையும்தான் மனசிலே நின்னீங்க…அதான் அப்படியே ஜன்னல் வழியா குதிச்சு வெளியே வந்துட்டேன் …விசாரிச்சவங்க கிட்டேயெல்லாம் நான் டவுணுக்குப் போய்ட்டேன்னு சொல்லி சமாளிச்சுட்டேன்…நான் அங்கே இருந்திருந்தாகூட என்னாலே எதுவும் செய்திருக்க முடியாது…

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனாள் .

“….மாமா !!!! என்ன மாமா சொல்றே….விஷயம் தெரிஞ்சு நீ மட்டும் தப்பிச்சு வந்திட்டியா.

“ஆமா அஞ்சலை..”

அவளது கேள்வியின் வெப்பம் உணராது பதிலுரைத்தான் மாணிக்கம்.

அஞ்சலை மெதுவாகத் திரும்பிப் பார்த்தாள்..அவளது பார்வையில் ஆச்சரியம் கோபம் வேதனை அலட்சியம் அத்தனையும் கலந்திருந்ததை உணர மாணிக்கத்துக்கு நேரம் பிடித்தது.ஒரு புழுவைப் பார்ப்பது போல் பார்வை அவன் மேல் ஈட்டியாய் குத்தி நின்றது.

மாமா!….இதை சொல்றதுக்கு உனக்கு வெக்கமா இல்லையா மாமா?

…நீ தப்பிச்சு வந்தேன்னு வெளிப்படையா சொல்லியிருந்தாகூட மன்னிச்சிருப்பேன் ..

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சுட்டே ,டவுணுக்குப் போனேன் ,ஸ்கூல் வேலையா அனுப்பினாங்கன்னு பொய் சொல்லி எல்லாரையும் ஏமாத்திட்டு வந்து நிக்கிறியே உனக்கு வெக்கமா இல்லையா மாமா?

ஒரு சின்ன பொண்ணு ,தன் கூட படிக்கிற பிள்ளையைக் காப்பாத்தப் போயி அது கருகிப்போச்சுன்னு சொன்னாங்க …அதுக்கு இருந்த மனிதாபிமானமும் துணிச்சலும் அந்த ஸ்கூல் வாத்தியார் உனக்கு இல்லாம போச்சுதே ..

…உன்னை என் மாமான்னு சொல்றதே கேவலமா நினக்க வச்சுட்டியே

நீ பொறுப்பா நாலு பிள்ளைங்களை இழுத்துப் போட்டு காப்பாத்திருந்தா, நீ ஆம்பிளை….

.உன் மேலே இந்த இத்தனை வருஷமா நான் வச்சிருந்த நம்பிக்கை இன்னைக்கு செத்துப் போச்சு மாமா

….நாளைக்கு இதே மாதிரி நிலைமை வரும்போது, நீ என்னையும் புள்ளையையும்,,விட்டுட்டு ஓட மாட்டேன்னு என்ன நிச்சயம்……யாரும் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லைன்னு .ஓடும் போது ,உன் மனசாட்சியை அந்த தீயில் வீசிட்டு ஓடிட்டியா மாமா..

.

“….இப்படி பச்சப் புள்ளைங்களை, நெருப்புக்கு கொடுத்துட்டு வந்து நிக்கிறியே..நீ அந்த நெருப்பிலே போராடி உயிரை விட்டிருந்தாகூட, ஒரு பட்டாளத்தான் பொண்டாட்டி மாதிரி ,பெருமையா தலை நிமிர்ந்து நின்னு உன் இழப்பைத் தாங்கியிருப்பேனே….இப்போ உன்னைப் பார்த்தாலே அந்த புள்ளைங்க மரண ஓலம்தானே எனக்குக் கேக்குது …இனிமே நான் எப்படி உன்னோட குடும்பம் நடத்தப் போறேன்னு, எனக்குத் தெரியலையே…”

நீ யாரையும் காப்பாத்திருக்க வேண்டாம் அந்த இடத்திலே இருந்து நாலு பேரோட நின்னு கதறியிருந்தா கூட உன்னை மனுஷனா நினைச்சிருப்பேன்…

அவன் தலை குனிந்திருந்தது

“நல்ல வேளை மாமா…. நீயாவது தப்பி வந்தியே”ன்னு சந்தோஷப் படுவாள் என்று தான் போட்ட கணக்கு தப்பாகிப் போனதை உணர்ந்தான்.மாணிக்கம்.

…நீ இவ்வளவு சுயநலவாதியா….கோழையா இருப்பேன்னு நான் நினைக்கவேஇல்லை …..நான் உன் மேலே வச்சிருந்த மரியாதையெல்லாம் ஒரே நாள்லே அழிச்சுட்டே மாமா…

பச்சப் புள்ளைங்க கூட உயிரைக் குடுத்து இன்னொரு உயிரைக் காப்பாத்தியிருக்கு, நீ ஒரு கோழையா ஓட்டம் பிடிச்சுட்டியே…

…அந்த பாவம் நம்ம புள்ளைய எப்படி பிடிக்கப் போகுதோ..ஜென்ம ஜென்மத்துக்கும் தொடருமே…….”.

பள்ளியில் பிடித்த தீயில் விழாது சாமர்த்தியமாகத் தப்பிய மாணிக்கம்,அவளது ,புலம்பலும் விசும்பலும் ,எழுப்பிய ஜ்வாலையில்

பொசுங்கிக் கொண்டிருந்தான்.

Series Navigation

கோமதிநடராஜன்

கோமதிநடராஜன்