எனக்கென்று ஒரு மனம்

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சத்தி சக்திதாசன்


இன்டைக்கு எனக்கு கிளாஸுக்கு போகவே விருப்பமில்ல . அம்மா பேசுவா எண்டதுக்காக போகப்போறன் . இந்தக் காம்பில இருந்து வெளிக்கிட்டு அரை மணித்தியாலம் நடந்தாத்தான் பஸ் ஸ்டொப்பே வரும் . அதுக்குப்

பிறகு பஸ்ஸுக்கு காத்துக்கொண்டு நின்டு பேந்து பஸ்ஸிலே ஏறி , டைப்பிங் கிளாஸுக்குப் போக வேணும்.

அம்மாவுக்கு பாவம் நான் எதையாவது படிச்சு உத்தியோகம் எடுக்கவேணும் தன்னை மாதிரி குசினிக்கை இருந்து அடுப்பை ஊதி , ஊதிப் பத்த வைக்கக்கூடது என்றதில ஒரு வைராக்கியம்.

தம்பி பாஸ்கர் , ரோட்டு மூலையில நிண்டு பெடியளோட குறைச் சிகரெட்டு குடிக்கிறது தெரிஞ்சா , அம்மா உசிரை விட்டுடுவா , அவனும் சொன்னாக் கேக்கப் போறானே ? எத்தினை தரம் சொல்லிப்பாத்திட்டன்.

நாங்கள் அத்தியடியில இருக்கிற வரைக்கும் நல்ல சந்தோசமாத்தான் இருந்தனாங்கள் , என்டைக்கு எங்கட

வீட்டை ஆமி அடிச்சு உடைச்சாங்களோ அண்டைக்குப் பிடிச்சுது எங்களுக்குச் சனி . நாங்களும் மாறி மாறி எத்தினை ஊரெண்டு போயிட்டம்.

அப்பாவும் பாவம் களைச்சுத்தான் போட்டார் ,எங்களைப் பத்திரமாப் பாக்க வேணும் என்டு அவர் பட்டபாடு .எத்தினை இடமெண்டு அவரும் வேலக்கு அலைஞ்சவர் , ஆர் குடுக்கப் போயினம் வேலை , ஊர் ஊரா அலையிற அகதிகளுக்கு . அதோடு எல்லா வேலையிடத்திலையும் ஒரே பிரச்சனை தானே அவையளுக்கும் நிம்மதி இல்லாத சீவியம் தானே.

ஒரு மாதிரி இப்ப ஒரு மூண்டு வருசம் இங்க வவுனியாவில காம்பில இருக்கிறம் . வாழுறம் என்டு சொல்ல ஏலாது , ஏதோ காலத்தை கடத்துறம் எண்டுதான் சொல்ல வேணும். அம்மாவுக்கு ஒரு நம்பிக்கை ‘ என்னடி சுவுந்தரா

நீ படிச்சு ஒரு மாதிரி வேலை எடுத்துடுவாய் என்ன பிள்ளை ? ‘ என்டு ஆசையா அம்மா கேக்கேக்கில நான் எனக்கு நம்பிக்கை இல்லை என்டு எப்பிடிச் சொல்லுவன்.

அப்பாக்கு இப்ப நான் படிக்கிறனோ ? இல்லாட்டி இல்லையோ அதெல்லாம் ஒண்டும் கவனமில்லை . வேலையால பின்னேரம் வீட்ட வரேக்க ஒரே சாராய நாத்தம் அடிக்கும் அம்மா கேட்டா ‘ சும்மா போடி என்ட மனசில எவ்வளவு கவலை இருக்கு என்டு தெரியுமோடி ? ‘ என்டு கத்துவார் . அம்மாவும் பேசாம உள்ளுக்குப் போயிடுவா.

பேந்து ராத்திரி அவவைப் போட்டு ஒரே கரைச்சல் படுத்துவார் , குடிசேக்குள்ள நடக்கிறது எல்லாருக்கும் கேக்கும் தானே ? பாஸ்கர் நல்லா குறட்டை விட்டு நித்திரை கொள்ளுவான்.

குடிச்சாப் போல கவலை எல்லாம் முடிஞ்சுடுமே , அவரை எங்க கேக்கிறது காலம்பற வேலைக்குப்

போகேக்கையில மட்டுக் சமி கும்பிட்டு , விபூதியும் பூசிக் கொண்டு வடிவாத்தான் போவார்.

ஏதோ போராட்டம் எண்டு , கனபேர் செத்துப் போயிட்டினம் , எங்க பக்கத்து வீட்டில இருந்த குமாரும் செத்துப் போனானம் , ஆமி சுட்டுப் போட்டுதாம் . நேத்துத்தான் கனகம் மாமி அம்மாக்குச் சொல்லிக் கொண்டு இருந்தவ.

குமாரை இன்னும் மறக்க ஏலாமக் கிடக்குது . என்னைச் சுத்தி , சுத்தி வந்து கொண்டிருப்பான் . ‘ சவுந்தரா உனக்கு ரெட்டைப் பின்னல் நல்ல வாடிவா இருக்கு ‘ என்டு நான் கோயிலுக்கு போகெக்க பின்னால வந்து சொல்லுவான் . கோவிச்சுப் பாத்தாலும் எனக்கு மனசுக்க கொஞ்சம் சந்தோசம் தான்.

அவனும் இயக்கத்தில சேருவான் என்டு நான் கடைசி வரை நினக்கேல்ல , ஒருநாள் வந்து ‘சவுந்தரா ஈழத்திண்ட விடுதலைக்குப் பிறகு நான் வருவன் ‘ எண்டு சொல்லீட்டுப் போனவன். அவனும் இப்ப செத்துப் போயிட்டான் எண்டால் என்னவோ மனசுக்க கொஞ்சம் பாரமாத்தான் இருக்கு.

என்னெண்டுதான் அப்பா ஒவ்வொரு நாளும் கூலி வேலைக்குப் போயிட்டு பேந்து இப்பிடிக் குடிச்சிட்டு வாறாரோ தெரியாது .

அம்மாவும் பாவம் நேத்து கனகம் மாமி வீட்டில போய் அரிசி கடன் கேக்கேக்கை கூனிக்குறுகிப் போயிட்டா , கனகம் மாமி லேசுப்பட்டவ இல்ல ‘ இஞ்ச பார் நல்லம்மா , நெடுக இப்பிடி கடன் வாங்கிச் சீவியம் நடத்தப் போறியே ? பேசாம உவள் சவுந்தராவைப் பிடிச்சு ஒரு வேலைக்கு அனுப்பி விடு , அங்கால ரோட்டில நெசவுக்கு ஆக்களை எடுக்கினமாம் ‘ எண்டு சொல்ல ‘ இல்லை அக்கா அவள் என்னை மாதிரி கஸ்டப்படாம ஏதாவது கொஞ்சம் நல்ல உத்தியோகம் எடுப்பாள் , அதுதான் அவளை டவுனுக்க அனுப்புறன் ‘ எண்டு மெதுவாச்

சொன்னவ.

இந்த டைப்பிங் படிச்சிட்டு எங்க வேலை கிடைக்கப்போகுது . கிளாஸுக்கு போனா அங்க என்னையும் , மூண்டு வீடு தள்ளி இருக்கிற பார்வதியையும் அதுகள் படுத்துற பாடு , அது எப்பிடி அம்மாவுக்குத் தெரியும் ?

அதுகள் எங்களுக்கு வச்சிருக்கிற பேர் ‘வீடில்லாமத் திரீயிற அகதிகள் ‘ அங்க வாற சுகந்தி , சரஸ்வதி , வத்சலா அதுகள் எல்லாம் போடுற உடுப்புகள் , குலுக்குற குலுக்கல்கள் . அண்டைக்கு அப்பிடித்தான் வத்சலா , சரசுவதிக்குச் சொல்லிக் கொண்டிருந்தது ‘ எனக்கு லண்டன் மாப்பிள்ளை பேசீனம் , அதுதான் சும்மா டைப்பிங் படிச்சாக் கொஞ்சம் ஸ்டைலா இருக்குமெல்லே ‘ எண்டு.

கொஞ்சநாளைக்கு முன்னால அப்பா ஒருநாள் வெறியில அம்மாவிட்ட சொல்லிக் கொண்டிருந்தவர் ‘ ஏய்

நல்லம்மா ஒரு மாதிரி பிடிச்சு இவளை வெளிநாட்டுக்கு அனுப்பி விட ஏலாதே ? ‘ எண்டு அதுக்கு அம்மா ‘ இஞ்சை பார் நீயென்ன பெரிய காசுக்காரன் எண்ட நினைப்பே அதுக்கு லட்சம் , கோடி வேணும் எதையாவது விக்கலாம் என்டாலும் எண்ட தாலி கூட கயித்தலதான் தொங்குது , பேருக்கு கூட அரை அங்குலம் நிலமில்லை

பேந்து சும்மா விசர்க்கதை கதைச்சுக் கொண்டு இருக்கிறாய் , பேசாமப் போய் படு ‘ எண்டு சொன்னவ.

கனபேர் இஞ்சை பிரச்சனை எண்டு சொல்லி வெளிநாடுகளுக்கு போகினம் தான் ஆனா அவையிண்ட அப்பா

அம்மாவிட்ட வித்துக் கித்து வெளியில அனுப்புறதுக்கு காணி பூமி கிடந்திது , நெத்து சோறோட மோறும் கருவா

டும் இண்டைக்கு என்னண்டு தெரியல்ல இதுதான் எங்கட சாப்பாடு பிறகு வெளிநாடு எல்லாம் கனவில கூட வருமே ?

இவ்வளவு சொல்லுறன் எனக்கு நல்லாச் சீவிக்க வேணுமெண்டு விருப்பமில்லையே ? முந்திப் பாட்டி உசிரோட இருக்கேக்கச் சொல்லுறவ ‘ கிடைக்கிற பொருளாப் பாத்து ஆசைப்படு மோனை , எட்டத பழம் வேணும் எண்டு வீணா ஏமாந்து போகாத ‘ எண்டு . அது இன்னும் எண்ட காதுக்கை கேட்டுக்க்காண்டு இருக்குது.

எலக்சன் மூட்டம் ஒவ்வொருநாளும் கும்பிட்டுக் கொண்டு இந்த எம்.பி மார் வந்து , வந்து போச்சினம் இப்ப அண்டைக்கு பக்கத்து வீட்டு குமாரசாமி மாமா சொல்லிக் கொண்டிருந்தவர் , அந்தக் காம்பில இருக்கிற ஆக்களுக்கு ஏதேனும் நிரந்தர இடம் கேட்டு அவேண்ட ஒபிசுக்கு போனா பாக்கக் கூட நேரமில்லை எண்டு சொல்லியினமாம்.

அம்மாவைக் கேட்டா ‘உனக்கு என்ன வயசு பதினாறுதானே உதெல்லாம் எப்பிடி விளங்கும் ? ‘ எண்டி வாயை மூடிப்போடுவா . இப்ப எங்களுக்கு இதைச் சொல்லித் தராட்டி பேந்து எப்பிடி எங்களுக்கு விளங்கும் எண்டு கேக்கிறன் ? ‘

எனக்கெண்டா இண்டைக்கு கிளாஸுக்குப் போக விருப்பமேயில்ல . போற வழியில அந்தச் சந்தியில அந்தப் பரமசிவமும் , சுந்தரமும் அவங்களோட சேந்து நிக்கிற கும்பலும் என்னைப் பாக்கிற மாதிரியே எனக்குப் பிடிக்காது . அண்டைக்கு கேக்கிறாங்கள் ‘ ஒருநாளைக்கு எங்களோட வாறியே ? ‘ என்டு பக்கத்திலே ஆமிக்காரன் நிண்டு சிரிச்சுக் கொண்டு நிக்கிறான் . இதெல்லாம் அம்மாவுக்குச் சொன்னா பாவம் இருக்கிற கவலை போதாதெண்டு இதையும் போட்டு மண்டையை உடைச்சுக் கொண்டு இருப்பா .

அப்பா சாராயத்தைக் கண்டா எல்லாத்தையும் மறந்திடுவார் .

டாச்சரும் எங்களைக் கவனிக்க மாட்டா , அவ வத்சலா , சரசுவதி கூட்டத்தோடதான் அண்டைக்கு ஆரோ

சொல்லிச்சினம் , அந்த டைப்பிங் கிளாஸ் நடக்கிற கட்டிடம் , வத்சலாண்ட அப்பாவிண்டையாம் .

போன கிழமை அப்பிடித்தான் நானும் , பார்வதியும் கெதியாப் போனதால முன்னுக்கு இருந்திட்டம் . பேந்து வந்த வத்சலா ‘ என்ன அகதிகளெல்லாம் முன்னுக்கு வந்திட்டுதுகள் , உங்கட இடத்தில போயிருக்க வேண்டியது தானே ‘ என்டு சொல்ல நானும் , பார்வதியும் எழும்பிப்போய் பின்னால இருந்திட்டம் . பாவம் பார்வதீண்ட

கண்ணில தண்ணி வந்திட்டுது .

அதுகளையும் பிழை சொல்ல ஏலாது எங்கட இந்த பழைய சட்டையைத் தானே நாங்க தோச்சுத் தோச்சு ஒவ்வொரு நாளும் போடுறம் அதுகளுக்கு இளக்காரமாத் தானே இருக்கும் . ஆனா பார்வதி சொல்லுது ‘ தன்னை விட எளியவங்களைக் கண்டா இரங்க வேணும் என்டெல்லே சின்னப் பிள்ளையில சொல்லித் தந்தவை , அப்பிடி இதுகளுக்குச் சொல்லிக் குடுக்க இல்லையே ‘ எண்டு .

ஆனா இதையெல்லாம் பாத்துக் கொண்டு அந்த பஸ் ஸ்டாண்டிலே ஒரு குயில் ஒவ்வொரு நாளும் பாடிக்கொண்டு இருக்குது அதுக்கு தெரியும் போல ‘ அகதியெண்டாலும் எனக்கு ஒரு மனம் இருக்கெண்டு ‘.

—-

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்