புழுத் துளைகள் (குறுநாவல் – 4)

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ரெ கார்த்திகேசு


அக்கிக்கோ பயன்படுத்திய அதே அலுவலகத்தில்தான் ஸ்டாவனின் அலுவலகம் இருந்தது. ஆனால் முன்பு அவன் பார்த்திருந்த பல கருவிகள் சாதனங்கள் அங்கே இல்லை. சுத்தமாக பெரும்பாலும் பொருட்கள் ஏதும் இல்லாமல் காலியாக இருந்தது. சுவரில் அக்கிகோவின் முப்பரிமாண ஓவியத்தில் அவர் கண்கள் உயிர்ப்புடன் இருந்தன.

ஸ்டாவன் அவனுக்கு அருந்த சாக்கே கொடுத்தார். ‘இந்த நூறாண்டுகளில் நாங்கள் மாற்றாமல் கடைப்பிடிக்கும் பழக்கங்களில் இதுவும் ஒன்று! ‘ என்றார்.

‘என்னால் எதையும் நம்ப முடியவில்லை ஸ்டாவன். இதென்ன மாயா ஜாலம் போல இருக்கிறது ? எப்படி நான் சில நிமிடங்களில் அலுங்காமல் குலுங்காமல் 2103-ஆம் ஆண்டுக்கு வந்திருக்க முடியும் ? ‘

‘இதன் அறிவியல் பரிமாணங்களை நான் விளக்க முடியும். ஆனால் அதனைப் புரிந்து கொள்ளுமளவுக்கு உங்கள் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகள் அறிவு வளர்ச்சி பெற்றிருக்கவில்லை. ஆனால் உங்கள் வாழ்நாளுக்குள் நீங்களே அதனைப் புரிந்து கொள்வீர்கள். உங்கள் காலத்தில் ஒரு முக்கியமான விஞ்ஞானி தன் ஆராய்ச்சியினால் இதற்கான கணித அடிப்படையைக் கண்டு பிடித்துக் கொடுத்தார். ‘

‘யார் அவர் ? ‘ என்று ஆவலுடன் கேட்டான் அரவிந்தன்.

ஸ்டாவன் தனக்கு வலப்பக்கமுள்ள கண்ணாடி ஜன்னலை மறைத்திருந்த திரையை நோக்கிக் கைகளை அசைத்தார். ரிமோட் கண்ட்ரோலில் திறப்பது போல திரை திறந்தது. அங்கே ஒரு கட்டிடம் இருந்தது. இந்தக் கட்டிடத்தைப் பார்த்த நினைவு அரவிந்தனுக்கு இல்லை. அக்க்ிக்கோவின் காலத்தில் இது திறந்த வெளியாகவும் சில மரங்களுடனும்தான் இருந்தது.

‘இது என்ன கட்டிடம் ? ‘ என்று கேட்டான்.

‘அந்தக் கட்டிடத்தின் பெயர் ஒரு செயற்கைப் பிளாட்டினம் தகட்டில் பொறிக்கப் பட்டுள்ளது. இங்கிருந்து நீங்கள் படிக்கலாம்! ‘

கூர்ந்து பார்த்தான். ஜப்பானிய எழுத்துக்களின் கீழ் ஆங்கிலத்தில் ‘Aravindhan Pure Time Research Unit ‘ என எழுதியிருந்தது. வாய் பிளந்து ஸ்டாவனைப் பார்த்தான்.

‘ஆமாம் அரவிந்தன் சான். தூய காலம் என்னும் அக்கிக்கோவின் கருத்தை ஏற்று அதைக் கணிக்கவும் வான்வெளிப் பயணத்தில் அதைப் பயன் படுத்தவும் நீங்கள்தான் கற்றுக் கொடுத்தீர்கள். இன்றும் பல விஞ்ஞானிகள் அது பற்றி ஆய்வு நடத்தி வருகிறார்கள் ‘

திகைத்து நின்றான். சாக்கே பிடித்திருந்த கிண்ணம் உறைந்து நின்றது. சாக்கேயிலும் அசைவுகள் இல்லை.

‘கொஞ்சம் படிப்படியாகச் சொல்லுங்கள் ஸ்டாவன்! மூளை ஐஸ்பெட்டியில் வைத்தது போல உறைந்து கிதக்கிறது. முதலில் எனக்குத் தெரிய 50 வயதான அக்கிக்கோ சான் திருமணமே செய்துகொள்ளவில்லை. நீங்கள் எப்படி அவர் கொள்ளுப் பேரனாக முடியும் ? ‘

‘சொல்லுகிறேன். அக்கிகோ சான் 65 வயதில் வான்வெளிக் கணிதத்திற்கான அனைத்துலக தோக்கியோ மையத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் தன் தனிமையைப் போக்க செயற்கைக் கருத்தரிப்பு முறையில் ஒரு குழந்தையை கருவில் ஏற்றுப் பெற்று வளர்த்தார். அந்த மகனின் வாரிசு நான். ஆகவே யஷிமோத்தொ என்னும் எங்கள் குடும்பப் பெயரையே நான் பயன் படுத்தி வருகிறேன். ‘

இது மூளைக்குள் ஏறி அமரக் கொஞ்ச நேரம் ஆயிற்று.

‘சரி, இந்த மையம் இருந்த இடத்திலேயே இருக்கிறதா ? இடம் மாறவில்லையா ? பெயர் மாறவில்லையா ? ‘

‘ஆம். இருந்த இடத்திலேயே இருக்கிறது. பெயரும் மாறவில்லை. புதியதாக பல இணைப்புக் கட்டிடங்களைச் சேர்த்திருக்கிறோம். கட்டிடம் முதுசொம் கட்டிடமாக அறிவிக்கப் பட்டிருப்பதால் வெளித் தோற்றத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அறிவியல் முன்னேற்றங்கள் உங்கள் காலத்தில் இருந்ததை விடக் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு வளர்ந்திருக்கின்றன ‘ என்று சொன்னவர் உதட்டைக் கடித்தார்.

‘மன்னிக்கவும். உங்களால் எல்லாவற்றையும் கறபனை செய்ய முடியும் என்பதை மறந்து விட்டேன். ‘

‘பரவாயில்லை, சொல்லுங்கள்! ‘

‘வேற்று மண்டலங்களுக்குச் சாதாரணமாகப் போய் வருகிறோம். ஏறக் குறைய 50 வெவ்வெறு கோளங்களில் மனிதர்கள் குடியேறி வாழ்கிறார்கள். ‘

‘இதெல்லாம் ஏதோ கனவு என்று சொல்ல எனக்குத் தோன்றுகிறது! ‘

‘இவை கனவாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இவற்றை இன்று நனவாக்கியது உங்கள் மூளைதான்! ‘

அந்த மூளை இப்போது புகை மண்டிக் கிடந்தது. பரவசத்துக்கும் பரிதாபத்திற்குமிடையில் ஊடாடிக் கொண்டிருந்தது.

‘சரி ஸ்டாவன். நான் உங்கள் காலத்திற்கு எப்படி வந்தேன் ? ‘

‘சொல்லுகிறேன், அரவிந்தன் சான்! காலப் பயணம் செய்ய விரும்பும் அக்கிக்கோவின் முயற்சிகளையும் உங்கள் முயற்சிகளையும் எங்கள் மையம் சில ஆண்டுகளாகவே தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஏனென்றால் நாங்கள் அனுபவித்து வரும் இந்த நிகழ்காலத்திற்கு அந்த இறந்த காலம் மிகவும் முக்கியம். ‘

‘அதெப்படி முடியும் ? நீங்கள் நூறாண்டுகளுக்கு முன்னால் அல்லவா வாழ்கிறீர்கள் ? ‘

‘முடியும். நூறாண்டுகள் பின்னால் ஒவ்வொரு மணித்துளியிலும் நீங்கள் செய்வதை எங்களால் காண முடியும். ஒரே ஒரு பிரச்சினைதான். உங்கள் மனதுக்குள் என்ன எண்ணங்கள் ஓடுகின்றன என்பதை மட்டும் கண்டறிய இன்னும் வழியில்லை! ஆகவே அடுத்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை எங்களால் கணிக்க முடியாது. நீங்கள் ஒன்றைச் செய்த பிறகே அதை நாங்கள் அறிய முடியும். ‘

‘அதாவது, செயல்களைப் படிக்க முடியும், சிந்தனைகளைப் படிக்க முடியாது! ‘

‘ஆமாம்! உங்கள் வான்கலம் புழுத் துளை நோக்கிப் பயணம் செய்ய நீங்கள் கணித்த சூத்திரம் பொதுவாகச் சரியானது. நெகிழ்வு நியதிகளைப் பயன் படுத்தி உங்கள் பழங்காலக் கணினிகள் பாட்டையை கணித்தன. அவற்றைத் துல்லியமாகச் செயல் படுத்தும் திறமையை அவை பெற்றிருக்கவில்லை! ஒரு அனுமானத்தின் பேரில் உள்ள பாட்டையில் நீங்கள் பயணம் செய்ய முன்வந்தீர்கள். அதில் சென்றிருந்தால் வான்கலம் வெடித்துச் சிதறியிருக்கும். நீங்கள் அழிந்திருப்பீர்கள் ‘

‘என் கணக்குத் தப்பா ? ‘

‘உங்கள் தப்பு என்பதை விட உங்கள் கற்பனா மனதின் கணிப்புகளைச் செயல் படுத்த இயலாத கணினியின் தப்பு என்றே சொல்லலாம். ஆகவேதான் அந்த வான்கலத்தை தரையிலிருந்து எழுப்ப விசையை நீங்கள் அழுத்திய அந்தக் கணத்தில் நாங்கள் தலையிட்டு உங்களை மரணத்திலிருந்து காப்பாறினோம்! ‘

‘ஏன் காப்பாற்றினீர்கள் ? எங்கள் உலகில் விபத்துகளில் சாகுபவர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள். என்னை மட்டும் ஏன் காப்பாற்றினீர்கள் ? ‘

‘ஏனென்றால் நீங்கள் சாதாரண மனிதரல்ல. அறிவியலின் போக்கை மாற்றி அமைக்கவல்ல அற்புதமான மனிதர்! ‘

‘ரொம்பப் புகழ வேண்டாம். புழுத் துளையை அடையாமல் நான் இங்கு வந்ததெப்படி ? ‘

‘அதே புழுத் துளை வழியாகத்தான். ஆனால் பருப்பொருளை ஆற்றலாக்கி மீண்டும் பருப்பொருளாக்கும் முறை எங்களிடம் இருப்பதால், உங்களையும் வான்கலத்தையும் ஆற்றலாக மாற்றி இங்கே கொண்டு வந்தோம்! மீண்டும் பழைய பருப்பொருள் வடிவம் கொடுத்தோம்! ‘

வியந்து நின்றான். என்ன கேட்பது என்று தெரியவில்லை. ஒரு மெளனத்தின் பின் சோர்ந்த குரலில் சொன்னான்: ‘ஸ்டாவன்! என்ன சொல்வதென்று தெரியவில்லை. கடவுள் மாதிரியல்லவா பேசுகிறீர்கள் ? ‘

‘கடவுள். அதை இன்னும் நாங்கள் காணவில்லை. ஆனால் அந்த எல்லையற்ற ஆற்றலின் ஒரு பகுதியைத்தான் படிப்படியாகப் பயன் படுத்தக் கற்றுக் கொண்டு வருகிறோம்! ‘

‘ஸ்டாவன். எல்லாவற்றையும் எனக்குக் கற்றுக் கொடுங்கள். உங்கள் ஆய்வில் நானும் கலந்து கொள்ளுகிறேன். இன்னும் பலவற்றை நாம் சாதிக்கலாம்! ‘

ஸ்டாவன் எழுந்து நின்றார். ‘அரவிந்தன் சான்! உங்களை இப்படி முகத்துக்கு முகம் சந்தித்ததில் எங்களுக்குப் பெரு மகிழ்ச்சி. சென்ற நூற்றாண்டின் ஒரு மகத்தான அறிஞரைச் சந்திப்பது பெரும் கெளரவம். ஆனால், அரவிந்தன் சான்! நீங்கள் உடனடியாக உங்கள் காலத்திற்குத் திரும்ப வேண்டும்! ‘

‘ஏன் ? இதையெல்லாம் சாதித்த பிறகு எதற்காக இன்னும் பழைய ஆராய்ச்சிகளில் நான் நேரத்தை வீணாக்க வேண்டும் ? இங்கிருந்து தொடரலாமே! ‘

‘ஏனென்றால், அரவிந்தன் சான், நீங்கள் இன்னுமொரு இருபதாண்டுகள் ஆராய்ச்சி செய்து சரியான சூத்திரங்களைக் கண்டுபிடிக்காவிட்டால், இங்கு நீங்கள் காணும் எதுவும் சாத்தியமாகாது! ‘

‘ஸ்டாவன். எதற்கு நான் என் ஆயுளை வீணாக்க வேண்டும் ? அந்தக் கணித சூத்திரம் உங்களிடம் இருக்கிறதல்லவா ? கொடுங்கள். இங்கு நடைபெறும் அத்தனையையும் 20 ஆண்டுகளுக்கு முன்னரே நடை பெறச் செய்யலாம்! ‘

ஸ்டாவன் அரவிந்தனின் முன்னால் வந்து நின்றார். ‘மீண்டும், அரவிந்தன் சான், உங்களைச் சந்திக்க முடிந்தது எனக்குப் பெரும் கெளரவம்! ‘

ஏதோ ஒரு கருவியினால் மூக்கினருகில் வாயுவைப் பாய்ச்சினார். அரவிந்தன் மயங்கி விழுந்தான். ‘சென்று வாருங்கள் அரவிந்தன் சான்! உங்கள் உலகத்தின் ஓட்டத்தை ஒரு நேநோ விநாடி நிறுத்தி உங்களைக் காப்பாற்றினோம். ஆனால் உங்கள் காலம் இயற்கையின் விதிப்படிதான் ஓடவேண்டும். எங்கள் காலத்திற்கு நீங்கள் புரிந்த வருகை பிரபஞ்சத்தின் ரகசியங்களுள் ஒன்றாகவே இருக்கும் – உங்களுக்கும் கூட! ‘

இரண்டு பேர் வந்து அவனைத் தூக்கி வான்கலத்துக்குள் இருத்தி வார்ப் பட்டைகளைப் பொறுத்தினார்கள். இறங்கினார்கள்.

காலம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.

*** *** ***

அவன் மயக்கம் தெளிந்து எழுந்த போது அவசரக் காப்பாற்றுக் குழு அவனை கேப்சியூலில் இருந்து வெளியே இழுத்துக் கொண்டிருந்தது.

‘என்ன செய்கிறீர்கள் ? ‘ என்று கோபத்துடன் கேட்டான்.

‘மன்னிக்க வேண்டும். ஏதோ காரணத்தினால் எல்லா இயந்திர இயக்கங்களும் நின்று விட்டன. உங்களிடமிருந்தும் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை. ஆகவேதான் உங்களைக் காப்பாற்ற வந்தோம் ‘ என்றார் அவசரக் காப்பாற்றுக் குழுத் தலைவர்.

சோர்ந்திருந்தான். ஏன் வான்கலம் கிளம்பவில்லை ? எங்கே தவறு நிகழ்ந்தது ?

இரண்டு பேர் கைத்தாங்கலாகத் தூக்க எழுந்து ஏணியில் இறங்கி வந்தான். அக்கிகோ பதைபதைப்புடன் அங்கு நின்றிருந்தார். அவனை நோக்கி வந்தார்.

‘என்ன நடந்தது அரவிந்தன் ? ‘

‘நீங்கள்தான் சொல்லவேண்டும் அக்கிக்கோ. தரையைவிட்டு மேலெழும்ப வைக்கும் விசையை அழுத்தியவுடன் இயந்திரங்கள் நின்றுவிட்டன. அப்புறம் நடந்தது தெரியவில்லை. நான் மயக்கமடைந்துவிட்டேன். இயந்திரக் கோளாறுதான் அக்கிகோ! ‘

‘தெரியவில்லை. பொறியியல் குழு நிபுணர்கள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். வாருங்கள். அவர்கள் முடிவு தெரியும்வரை என் அலுவலகத்தில் காத்திருப்போம்! ‘

மெதுவாக அக்கிக்கோ அலுவலகத்தில் சென்று அவருடைய விருந்தினர் சோஃபாவில் உட்கார்ந்தான். அக்கிக்கோ அவனுக்கு சாக்கே ஊற்றிக் கொடுத்தார்.

ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். அமைதியாக இருந்தது. மரங்களில் சில பறவைகள் இருந்தன. இலேசாகக் காற்று வீசிக் கொண்டிருந்தது. கூர்ந்து பார்த்தவாறு இருந்தான்.

‘என்ன அரவிந்தன் ? என்ன அப்படி உன்னிப்பாகப் பார்க்கிறீர்கள் ? ‘ என்று அக்கிகோ கேட்டார்.

‘ஓர் இணைப்புக் கட்டிடம் கட்டும் அளவுக்கு இங்கே இடம் இருக்கிறது அக்கிக்கோ! ‘ என்றான்.

சம்பந்தமில்லாமல் அவன் ஏதோ பேசுவதாக அக்கிக்கோவுக்குத் தோன்றியது. ‘ஆமாம்! ஆனால் அதற்கு இப்பொழுது என்ன அவசரம் ? தேவை வரும்போது கட்டலாம் என்றுதான் விட்டு வைத்திருக்கிறோம் ‘ என்றார்.

‘ஆமாம்! ஒன்றும் அவசரம் இல்லை. காலம் வரும்போது அது நடக்கும்! ‘ என்றான்.

—-

(முற்றும்)

kgesu@pd.jaring.my

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு

புழுத் துளைகள் (குறுநாவல்) – பகுதி 1

This entry is part [part not set] of 47 in the series 20040325_Issue

ரெ.கார்த்திகேசு-


ஜால் விமானத்தின் வசதியான வணிக வகுப்பு ஜன்னலோர இருக்கையிலிருந்து எட்டிப் பார்க்கையில் அதிகாலைத் தோக்கியோ மஞ்சள் வைரத்தில் வரிசை வரிசையாக மாலைகள் அணிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் நரித்தாவில் இறங்கிவிடலாம்.

வணிக வகுப்பில் அவன் இதற்கு முன் பிரயாணம் செய்ததில்லை. சிக்கன வகுப்பில் பிரயாணம் செய்த நேரங்களில், அதன் நெரிசலான சூழ்நிலையில் ஆசுவாசப் படுத்திகொள்ள எழுந்து நடக்கின்ற வேளைகளில் வணிக வகுப்பை எட்டிப் பார்த்து அதன் வசதியான இருக்கைகளில் கொடுத்துவைத்த பிரயாணிகள் கால் நீட்டித் தூங்கும் சொகுசைப் பார்த்துப் பெருமூச்சு விட்டதோடு சரி.

இதமாகத் தாங்கிக்கொள்ளும் பக்கவாட்டுப் பகுதிகளில் கையை அழுத்தி எட்டிப்பார்த்து பின்னர் முதுகை வசதியாகச் சாய்த்துக் கொண்டு காலை நீட்டி நெட்டி முறித்தான். இதெல்லாம் வாய்த்திருப்பது ஒரு தற்செயலான சூழ்நிலையில்தான். தற்செயலா ? ஒருவேளை இதற்கெல்லாம் ஒரு கணக்கு இருக்குமோ ? தான் ஒரு விஞ்ஞானியாக இருந்து பார்க்கும்போது இதனைத் தற்செயல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அவன் சமயமும் படித்திருக்கிறான். ‘அவனன்றி ஓரணுவும் ‘ என்று அவர்கள் சொல்வது பிழை என்று எந்த விஞ்ஞானமும் இன்னும் நிருபிக்கவில்லை.

ஒரு மாதத்திற்கு முன்னர் தான் அலுவலகம் போன போது கணினியில் அவனுக்குக் காத்திருந்த செய்தியையும் யாரா அப்படி அசைத்துத்தான் உண்டாக்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது.

*** *** ***

பினாங்கு அறிவியல் பல்கலைக் கழகத்தின் கணிதத் துறைக் கட்டிடத்தில் உள்ள தன் அறைக்குள் நுழைந்த போது இன்று நல்ல செய்தி வந்திருக்கலாம் என்று டாக்டர் அரவிந்தனுக்குத் தோன்றியது. ஏன் அப்படித் தோன்றியது எனத் தெரியவில்லை. இளம் ஆராய்ச்சியாளனான அவனுக்கு இந்த எதிர்பார்ப்பு என்றும் உண்டு. நாலைந்து அறநிறுவனங்களுக்கு ஆராய்ச்சி உதவி நிதி கேட்டு மனுச் செய்திருந்தான். மேலும் மேலும் விவரம் கேட்டுக்கொண்டே இருந்தார்கள்; ஆமாம் இல்லை என்று சொல்லவில்லை. மூன்று கட்டுரைகள் ஏற்கப்பட்டு அறிவியல்/கணித இதழ்களில் பதிப்புக்காகக் காத்திருந்தன. ஓராண்டாகியும் இன்னும் விமோசனம் பிறக்கவில்லை. இன்னுமொரு கட்டுரை நிபுணர்கள் பார்வைக்கு அனுப்பப் பட்டிருப்பதாக ஓர் இதழாசிரியர் அறிவித்திருக்கிறார். ஏதாகிலும் ஓர் இடத்திலிருந்து இன்று மின்னஞ்சலில் பதில் வந்திருக்கலாம்.

தூக்கி வந்த பிரிஃப் கேசை மேசையில் வைத்துவிட்டு கணினி விசைப் பலகையைத் தொட்டதும் திரை துலங்கியது. ‘உங்களுக்கு மின்னஞ்சல் இருக்கிறது ‘ என்ற செய்தியுடன் உரையாடல் தளத்திலிருந்து ‘அக்கிக்கோ உங்களை உரையாட அழைக்கிறார் ‘ என்ற செய்தியும் இருந்தது. யார் அக்கிக்கோ ? இந்த உரையாடல் அறைகளில் இப்போது சில்லறை உரையாடல்காரர்கள் அதிகம் நுழைந்து விடுகிறார்கள். ஆனால் இது தனது ஆராய்ச்சிகளுக்காக மட்டும் பயன் படுத்தும் உரையாடல் அறையாக இருப்பதால் அழைப்பவர் கல்வியாளராகத்தான் இருக்கும். அங்கும் இப்போது பல மேற்பட்டதாரி மாணவர்கள் நுழைந்து நான்கைந்து வருடங்களுக்கு முன்பு தான் எழுதிய கட்டுரைகளிருந்தெல்லாம் சந்தேகம் கேட்கிறார்கள். எரிச்சலாக இருக்கும்.

ஆனால் அக்கிக்கோ ? பேரைப் பார்த்தால் யாரோ பொழுது போகாத ஜப்பானியக் குட்டி மாதிரி இருந்தது. எதற்கும் பார்க்கலாம் என நுழைந்தான். சில்லறை விஷயமாக இருந்தால் சட்டென்று மூடிவிட்டுத் திரும்பி விடலாம்.

‘ஹெல்லோ, காலை வணக்கம் ‘ என எழுதினான்.

ஒரு விநாடிக்குப் பிறகு பதில் வந்தது. ‘காலை வணக்கம். என் கோரிக்கையை ஏற்றுப் பேசுவதற்கு நன்றி! ‘

‘யார் நீங்கள் ? ‘

‘அக்கிகோ. தோக்கியோவிலிருந்து! ‘

‘இது எனக்கு அறிமுகமான பெயராக இல்லை. எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன. உங்களுக்கு என்ன வேண்டும் எனச் சுருக்கமாகச் சொல்லுங்கள் ‘

‘ஓ. மன்னிக்க வேண்டும். அக்கிக்கோ என்ற பெயர் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் என நான் நினைத்துக் கொண்டது என் பிழைதான். மன்னிக்க வேண்டும்; மன்னிக்க வேண்டும். ‘

‘மன்னித்து விட்டேன். சீக்கிரம் சொல்லுங்கள்! ‘

‘நான் பேராசிரியர் ஏ. யஷிமோத்தோ! ‘

அதிர்ந்தான். நிமிர்ந்து உட்கார்ந்தான். ‘பேராசிரியர் யஷிமோத்தோவா ? வான்வெளிக் கணிதத்திற்கான அனைத்துலக தோக்கியோ மையத்தின் இயக்குநர் ? ‘

‘நானேதான். ‘

வெட்கப் பட்டான். இவரையா யார் எனக் கேட்டேன் ? இவர் வாய் திறந்தால் அறிவியல் உலகில் அலைகள் எழும். வான்வெளிக் கணிதத்தில் மேதை. இவரையா ?

‘பேராசிரியர் அவர்களே! நான் வெட்கத்தால் குறுகிப் போனேன். உங்களைத் தெரியாமலா ? என்னுடைய லட்சியக் கதாநாயகர் நீங்கள். ஆனால் அக்கிகோ என்றதனால் தெரியாமல் ஏமாந்து விட்டேன் ‘

‘பரவாயில்லை. விஷயம் இதுதான். நீங்கள் ‘கணிதமும் அறிவியலும் ‘ என்னும் இதழுக்கு அனுப்பிய ஆராய்ச்சிக் கட்டுரையை என்னுடைய முன்வாசிப்புக்கு அனுப்பினார்கள். அந்தக் கட்டுரை நினைவு இருக்கிறதா ? ‘

ஆறு மாதங்களாயிற்று அனுப்பி. ஆனால் ஒவ்வொரு சொல்லும் நினைவில் இருந்தது. அதுவும் யாஷிமோத்தோ பற்றியதுதான். ‘புழுத் துளை பற்றிய யாஷிமோத்தோ சூத்திரத்தின் நீட்சி ‘ என்பது தலைப்பு.

‘நினைவிருக்கிறது. உங்களின் சூத்திரத்தில் கைவைத்த என்னுடைய அகங்காரத்தை மன்னிக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு நீட்சி செய்ய முடியும் என நம்பினேன்! எதும் தவறாகிவிட்டதா ? ‘

‘இல்லை. இல்லை. தவறே இல்லை. என்னுடைய கணிப்புகளை இப்படி இலேசாக விரிவு படுத்தியதன் வழியாக ஒரு புதிய பரிணாமம் கொடுத்திருக்கிறீர்கள். எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது! ‘

‘அப்படியானால் அதைப் பிரசுரிக்கப் பரிந்துரைப்பீர்களா ? ‘

‘நிச்சயமாக. ஆனால் அது சின்ன விஷயம். இன்னும் முக்கியமான விஷயம் இருக்கிறது. நீங்கள் இங்கு தோக்கியோவில் எங்கள் மையத்திற்கு வந்து அது பற்றி மேலும் ஆய்ந்து எழுத வேண்டும் என நினைக்கிறேன். ஒரு ஆறு மாத ஆராய்ச்சிக்கு நீங்கள் இங்கு வர முடியுமா ? ‘

சொர்க்கத்துக்கு வா என்று அழைப்பதற்குச் சமம். அழைப்பவரும் கணித உலகில் சொர்க்கபுரிக்குத் தலைவர் மாதிரிதான்.

‘எனக்கு இது பெரும் கெளரவம் பேராசிரியர் அவர்களே. ஆனால் இங்கு எனக்கு அதற்கான விடுமுறை கொடுப்பார்களா என்று பார்க்க வேண்டும் ‘

‘கவலை வேண்டாம். உங்கள் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிக்குப் பொறுப்பான உதவித் துணைவேந்தர் ராம்லி முகமட் எனது நண்பர். அவரிடம் பேசுகிறேன். உடனே உங்களுக்கும் ஓர் அழைப்பு மின்னஞ்சலில் அனுப்புகிறேன். இங்கே வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களுக்காக ஃபெலோஷிப் இருக்கிறது. அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். உங்கள் செலவுகள் அனைத்தும் அந்த ஃபெலொஷிப் ஏற்கும். தேதிகளைப் பற்றிப் பிறகு பேசுவோம். நான் செல்ல வேண்டும். நாள் பூராவும் தீராத கூட்டங்கள் இருக்கின்றன. அடிக்கடி தொடர்பு வைத்திருங்கள். வணக்கம் ‘

‘வணக்கம் ‘ என்று பதில் எழுதி முடித்தபோது மகிழ்ச்சியில் தலைக்குள் நறுமணப் புகை அடர்ந்து மிதந்ததுபோல் இருந்தது.

***

( தொடரும் )

kgesu@pd.jaring.my

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு