ஸ்தலபுரம்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

பத்ரிநாத்


மணி சரியாக ஐந்து.. சாயரட்சை பூஜைக்காக கிருஷ்ணன் காத்துக் கொண்டிருந்தார்.. எந்த கிருஷ்ணனா.. ? சாட்சாத் பகவான் ஸ்ரீகிருஷ்ணன்தான்.. தன் பரம பக்தன் குண்டுராமனுக்காக.. குண்டுராமனுக்கு ஏன் அந்தப் பெயர் என்ற ரிஷிமூலம் தெரியவில்லை.. கொஞ்சம்.. கொஞ்சம் என்ன நன்றாகவே குண்டுதான் என்றாலும் அவர் குடும்பத்தில் மற்றவர் அப்படி இல்லை என்பதால் என்னவோ இவரைத் தனியாகக் காட்ட அப்படி அடையாளப் பட்டிருக்கலாம்..

பட்டணத்தை ஒட்டிய அந்தப் புதிய புற நகரில், லோக க்ஷேமத்திற்காக அந்த ஊரின் பக்த கோடிகள் கட்டியதுதான்அந்தச் சிறிய கோவில் .. குண்டுராமன் கிருஷ்ணரின் பாதாரவிந்தகளில் சேவை செய்ய அந்தப் பாக்யத்தைப் பெற்றார். இரண்டே முக்கால் அடியில் காலை மாற்றி வைத்துக் கொண்டு குழல் ஊதியபடி நிற்கும் அந்த அழகிய சிற்பம் யாரோ கலைநயம் மிக்க சிற்பத் தொழிலாளி உருவாக்கியிருந்தார் .. அதைப் பிரதிருஷ்டை செய்து அந்த ஊரின்ி பதினோராம் கோயிலை உருவாக்கினார்கள், அந்த ஊர் மக்கள்.. பிற பத்து கோயில்கள் வேறு பற்பல இடத்தில் இருக்கிறது.. இவ்வளவுதான் அந்தக் கிருஷ்ணன் கோவில் ஸ்தல புராணம்..

இதோ வந்து விட்டார் குண்டுராமன்..

‘ ‘ வந்துட்டேன்டா.. கிருஷ்ணா.. லேட்டாயிடுத்தா.. என்னது யாரையும் காணல.. ‘ ‘, என்றார்.

‘ ‘ஆமாடா.. நீ இவ்வளவு தாமதமா வந்தா, எந்த பக்தா காத்துண்டு இருப்பா.. ஏன் இவ்வளவு லேட்டு.. ‘ ‘,ன்னார் கிருஷ்ணன்.

‘ ‘கோச்சுக்காதடா.. நோக்குத் தெரியாதா.. வழக்கப்படி எம் பொண்ணு சண்டையப் போட்டுண்டு ஆத்துக்கு வந்துட்டா.. அவள சமாதானம் பண்ணிட்டு வர முடியல.. அவ விஷயத்தில நேக்கு கொஞ்சம் உதவப்படாதா..கல்லாட்டும் நிக்கறயே.. ‘ ‘,

‘ ‘டேய்.. அவசரப்படாத.. கொஞ்ச நாளைக்கு நோக்கு க்ஷீண திசை.. அத அனுபவிச்சுதான் ஆகணும்.. ‘ ‘,

‘ ‘ ஆமா.. இதோட பத்தாயிரம் தரம் இப்படிச் சொல்லிட்ட.. ஒன்னால முடியாததா.. இருந்தாலும் சும்மா நா கஷ்டப் படறத வேடிக்கை பாக்கறது நோக்கு ரொம்ப பொழுது போக்கு.. அதான் நேக்கு நன்னா தெரியும்.. கபடநாடக சூத்ரதாரி நீ.. இரு .. இரு.. இப்போ லோகத்தில எல்லாரும் ஸ்டிரைக் பண்றா.. அதுமாதிரி நானும் உனக்கு எதிரா பண்ணலாம்னு இருக்கேன்.. அப்படியாவது வழிக்கு வரயான்னு பாக்கலாம்.. ‘ ‘,

‘ ‘டேய்.. ஏடாகூடமா அப்படி எதையும் பண்ணி வைக்காத.. இப்ப லோகம் கெட்டுண்டு இருக்கு.. கலி முத்துண்டு வர்றது.. அதைப் பாத்துட்டுத்தான் நோக்கு அப்படித் தோணிடுத்து.. சரியல்லடா ராமா.. நோக்குன்னு கர்மா இருக்கு.. அதப் பண்ணாம உன்ன விட்டுட முடியுமா.. அதப் பண்ணித்தான் தீரணும்.. அனுபவிச்சுதான் ஆகணும்.. சரி..சரி.. மீதிய அப்பறமா பேசலாம்.. யாரோ பக்தா வர்ற சத்தம் கேக்கறது.. போய் அதை கவனி.. ‘ ‘, ன்னு அவசரப்படுத்தினார் பகவான்..

‘ ‘ என்ன ராமன் சார்.. சும்மா இந்தப் பக்கமா வந்தேன்.. கோயில்ல லைட்டு எரிஞ்தப் பாத்துட்டு வந்தேன்.. மள வேற வர்ற மாதிரி இருக்கு.. இருட்டிட்ிடு வேற வர்றது.. வீட்டுக்குப் போகலயா.. ‘ ‘, என்று கேட்டபடி வந்தார் ராமலிங்கம்.. ஏரிக்கரைத் தெருவில் அவர் வீடு..

அவருக்குப் பிரசாதம் கொடுத்தார் குண்டுராமன், ‘ ‘ம்ம்.. போகணும்..இப்ப கிளம்பிடுவேன்.. ‘ ‘, என்றார்..

‘ ‘என்ன சார்.. ரொம்ப கவலையா இருக்கிங்க.. ஒங்கப் பொண்ணு பிரச்சன எப்படி இருக்கு.. ‘ ‘, என்றார்.

‘ ‘ச்ச்.. போயிண்டு இருக்கு.. அவங்கிட்ட மொறயிடறதத் தவிர வேற வழி என்ன.. ? ‘ ‘, என்றார் தொய்வாக..

ராமலிங்கம் என்ன பேசினாலும் அதற்குத் தெளுவில்லாமலும், எதையோ பார்த்துக் கொண்டு குண்டுராமன் இருந்ததால் அதற்குமேல் வெறுத்துப் போய் ராமலிங்கம் விடை பெற்றுச் சென்றார்..

அவர் சென்றதும், ராமன் மீண்டும் ஆரம்பித்தார், ‘ ‘ பாத்தியா.. பாத்தியா.. ஊரே சிரிக்கறது.. யாரப் பாத்தாலும் உமாவ பத்தித்தான் பேசறா.. நாக்க புடிங்கிக்கலாம் போலருக்கு.. சின்னது ரமாவுக்கு ஹார்டு வீக்காம்.. அதனால அவளால படிக்கவும் முடியாது, வேலைக்கும் போக முடியாது.. கல்யாணம் பண்ணிக்கவும் முடியாதாம்.. போதாக் கொறைக்கு பொண்டாட்டிய வேற அழச்சுண்டுட்டே.. ஆனா நா பொறுமையா இருக்கணும்னு உபதேசம் பண்ற.. நன்னா இருக்குடா.. இப்படி நாலா பக்கமும் அபிமன்யுவ சூழ்ந்துண்ட மாதிரி என்னை குத்தினா, நா என்னடா கிருஷ்ணா பண்ணுவேன்.. எல்லாம் ஒன் லீலைன்னு பேசாம அமுக்கிண்டு இருக்கேன்.. ‘ ‘, கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தோடியது..

‘ ‘அடாடா.. என்னடா ராமா.. பச்சக் கொழந்தையாட்டம்.. அதான் நான் பாத்துண்டேயிருக்கேனோல்யோ.. அப்படி விட்ருவேனா.. சரி.. சரி கண்ணத் தொடச்சிக்கோ.. உன் கிரகப் பலன்கள் சரியில்லடா.. நோக்கு இதச் சொல்ல வேண்டாம்னு பாத்தேன்.. சரி..சரி மனச தேத்திக்கோ.. சீக்கிரம் எல்லாஞ் சரியாய்டும்.. ‘ ‘, என்றார் பகவான்..

சற்று நேரம் அப்படியே அமர்ந்து விட்டு, நன்றாக மூக்கைச் சிந்திவிட்டுக் எழுந்தார், குண்டுராமன்.. ‘ ‘, நான் வர்றேன்டா கிருஷ்ணா.. ‘ ‘, என்று கூறிவிட்டு கோவிலைப் பூட்டிவிட்டு கிளம்பினார்..

‘ ‘சார்.. டாலிங் கிளார்க் ராமன் டெண்டர் ஃபையில்ல போட்ட அந்தக் குறிப்பு எந்த ரூலிங்ல இருக்குன்னு ஏஓ கேக்கறார்.. ஏடாகூடமாஇவரு நோட் எளுதிப் போட்டு வைக்கிறார்.. நாம கேட்டாலும் வெறிநாய் மாதிரி எரிஞ்சு விழுவார்.. ‘ ‘, அந்த ஊழியர் பக்கத்திலிருந்தவரிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே குண்டுராமன் அங்கு வந்துவிட்டார்..

அவரைப் பார்த்ததும் திடுக்கிட்ட அந்த ஊழியர், ‘ ‘ வாங்க ராமன் சார்.. நீங்க போன வாரம் குறிப்பு எளுதின ஃபையில் திரும்பி வந்துடுச்சு.. ரூலிங் தெளுவில்லையாம்.. ‘ ‘, என்று அந்த ஊழியிர் சொன்னதும் தாமதம்.. குண்டுராமன் நரசிம்ம அவதாரம் எடுத்துவிட்டார்.. , ‘ ‘ எல்லாம் வெத்து வேட்டுப் பசங்க.. இவனுங்களுக்கு எதுவும் புரியாது.. என்னத் தொல்ல பண்ணுவானுங்க.. கொண்டாங்க அந்த ஃபையில.. ‘ ‘, என்று வாங்கி கிழிக்க ஆரம்பித்தார்..

உடனே பலர் ஓடிவந்து சூழ்ந்து கொண்டு, அந்த கோப்பு மேலும் கிழிபடாமல் காப்பாறினர்.. அலுவலகமே களேபரச் சூழலாகிப் போனது.. பலர் குண்டுராமனைச் சாந்தப் படுத்தி அழைத்துச் சென்றனர்..

இந்த நிகழ்ச்சி அலுவலக வட்டாரத்தில் பெரிய பரபரப்பாகியது.. பெரியவர் வரைக்கும் சென்றது.. பலர் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வேண்டிக் கொண்டனர்.. அதன் பேரில் குண்டுராமன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப் படவில்லை.. மேலும் அவருக்கு அதிகமாகப் பிரச்சனை இல்லாத , வேலை இல்லாத ‘சீட் ‘ தரப்பட்டது..

‘ ‘அவர வேணும்னா வாலண்டரி கொடுக்கச் சொல்லுங்க.. ஸ்டாஃப் பலபேர் அவரு வயலண்டா பிஹேவ் பண்றதா புகார் சொல்றாங்க .. மெண்டலாயிட்டிருக்காறா.. ‘ ‘, மேலதிகாரி சிலரைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘ ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா.. என்னடா இது.. நேக்கு ஏண்டா இந்தச் சோதனை.. என்னக் காப்பாத்த மாட்டியா.. பல பேரு எங் காதுபட மெண்டல்னு பேசறானுங்க.. இதுதானா உன் பக்தனுக்கு நீ செய்யிற உபகாரம்.. ‘ ‘, சற்று உரத்தே கூறினார் குண்டுராமன்.

‘ ‘டேய்.. என்னடா இது.. இப்போ பக்கதில யாரு இருந்தாலும் கவலப் படாம சத்தம் போட்டு என்னோட பேச ஆரம்பிச்சுட்டே.. நேக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னு தெரியுமோல்யோ.. இந்த மாதிரி மறுபடியும் பண்ண, நா வெறும் கல்லு மாதிரி நின்னுண்டு பதிலே சொல்ல மாட்டேன் பாத்துக்கோ.. ‘ ‘, பகவான் எச்சரித்தார்..

‘ ‘நீ என்ன சொன்னாலும் பண்ணினாலும் , இனிமே நேக்கு நீ உதவற வரைக்கும் விடப் போறதில்ல.. அப்படித்தான் பண்ணுவேன்.. வேணும்னா உன்னோட சக்ராயுதத்தால என்ன அறுத்துப் போட்டுடு.. இனிமே நா தாங்க மாட்டேன்.. ‘ ‘,

‘ ‘கஷ்டகாலம்.. ‘ ‘, பகவான் தலையில் அடித்துக் கொண்டு சொன்னார்.

அத்தனை நேரம் அங்கு வந்து நின்று கொண்டிருந்த ராமலிங்கம் , குண்டுராமன் அவர் வந்ததையே கண்டு கொள்ளாமல் , கடவுளைப் பார்த்து ஏதோ பேசிக் கொண்டிருந்ததைக் கவனித்தார்..

துபக்கத்திலிருந்தவரிடம் கூறினார்.., ‘ ‘ பாத்தா பாவமாதான் இருக்கு.. அடிமேல் அடி விழுந்தா ஒரு மனுசன் எப்படியெல்லாம் ஆயிடறான் பாருங்க.. ‘ ‘, என்றார்.

‘ ‘ச்ச்.. ஆமா சார்.. நா பல நாள் கவனிச்சுருக்கேன் .. ஆரம்பத்தில பாத்த போது , கோயில்ல நா இருக்கறவரைக்கும் நல்லா இருப்பாரு.. நா வாசப்படி தாண்டியத பாத்தவுடனே திரும்பிக் கடவுளப் பாத்து கைய நீட்டி நீட்டி ஏதோ பேச ஆரம்பிச்சுடுவாரு.. மறுபடியும் நா உள்ள வந்தா அடங்கிப் போயிடுவாரு.. இப்போ ரொம்ப முத்திப் போச்சு போலருக்கு.. யாரு வந்தாலும் கவலப் படாம அவரு பாட்டுக்கு கடவுள்கிட்ட பேசிட்டு இருக்காரு.. ‘ ‘, என்றார் அவர்.

‘ ‘ம்ம் ‘ ‘, என்று பெருமூச்செறிந்த ராமலிங்கம் , ‘ ‘ இவரப் பாத்தா எனக்கு இருக்கற கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போய்ரும் போலருக்கு.. ‘ ‘, என்றார்.

=========

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்