இலக்கியத் தோட்டத்தின் விருது விழா

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

எம்.எஸ்.கனகரத்தினம்


கனடாவின் தமிழ் இலக்கியத் தோட்டத்தின் வருடாந்த இயல் விருது விழா வழமை போல் ரொறொன்ரோ பல்கலைக்
கழக சீலி மண்டபத்தில் யூலை மாதம் 17ம் திகதி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அமெரிக்காவின் சிக்காகோ பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சாச்சா
ஈபெலிங் (Sascha Ebeling) அவர்கள் கலந்து கொண்டார். ஜெர்மனியின் கொலோன் பல்கலைக் கழகத்தில் தமிழ்
இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர் ஈபெலிங் அவர்கள் கொலோன் பல்கலைக் கழகத்திலும்,
லண்டனில் School of Oriental and African Studies இலும் பணியாற்றிய பின் சிக்காகோ பல்கலைக் கழகத்தில்
சேர்ந்தார். தமிழ் இலக்கியம், குறிப்பாக 19ம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம், இவரது ஆராய்ச்சிகளில் முக்கியமானது.
இதற்காக German Oriental Society இன் 2007 ஆண்டுக்கான ஆராய்ச்சி விருது இவருக்கு வழங்கப்பட்டது. அவர்
தனது பேச்சில், ஒரு காலத்தில் இந்தியாவிலும் தென்கிழக்காசியாவிலும் மட்டும் தெரிந்திருந்த தமிழ் இலக்கியம்,
கடந்த சில ஆண்டுகளில் எப்படி உலகத்தமிழ் இலக்கியமாக மலர்ந்து பரந்திருக்கின்றது என்பதையும், அதற்கு நவீன
ஊடகங்களான இணையத்தளம், வலைப்பூ ஆகியன எப்படி உதவியிருக்கின்றன என்பதையும் விளக்கினார்.
அத்துடன், இந்த வளர்ச்சியை எப்படித் தங்க வைத்து இன்னும் வளர்த்தெடுப்பது புலம் பெயர் தமிழ் மக்களின்
கடமை என்பதனையும் சுட்டிக் காட்டினார். பேராசிரியர் ஈபெலிங்கின் உரை முதற்பாதி தமிழிலிலும் பிற்பாதி
ஆங்கிலத்திலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்முறை வாழ்நாள் இலக்கிய விருது கல்வெட்டு ஆராய்ச்சியாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கும்,
திறனாய்வாளர் திரு. கோவை ஞானி அவர்களுக்கும் கடந்த யூலை மாதம் 4ம் திகதி சென்னையில் நடந்த இயல்
விருது விழாவில் ஏற்கனவே வழங்கப்பட்டன. திரு. மகாதேவன் அவர்கள் நாம் வாழும் காலகட்டத்தின் மாபெரும்
ஆய்வாளர் என்பது பல்துறை அறிஞர்களின் கணிப்பு ஆகும். தமிழ் இலக்கியத்தின் தீவிர சிந்தனையாளராகவும்,
திறனாய்வாளராகவும் விளங்கி வரும் கோவை ஞானி தமிழில் நவீன இலக்கியத்தை மார்க்ஸிய நோக்கில்
ஆராய்ந்தவர்களில் முக்கியமானவர். இந்த இரு தமிழ் அறிஞர்களும் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழுக்கு ஆற்றிய சேவைக்காக இவர்களுக்கு வாழ்நாள் இயல் விருதை வழங்கியதில் இலக்கியத்தோட்டம் பெருமை
அடைகிறது.

இன்றைய விழாவில் ஏனைய விருதுகள் வழங்கப்பட்டன. புனைவு இலக்கியப் பிரிவில் ‘கொற்றவை’ நாவலுக்காக
ஜெயமோகனுக்கும், அபுனைவு இலக்கியப்பிரிவில் ‘ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்’ நூலுக்காக முனைவர் நா.
சுப்பிரமணியத்துக்கும், ‘ஆஷ் கொலையும் இந்திய புரட்சி இயக்கமும்’ நூலுக்காக ஆ. சிவசுப்பிரமணியனுக்கும்
விருதுகள் வழங்கப்பட்டன.

அத்துடன், கவிதைப்பிரிவில் ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ என்னும் கவிதைத் தொகுப்புக்காக கவிஞர் சுகுமாரன்
அவர்களுக்கும், தமிழ் தகவல் தொழில் நுட்ப சாதனைக்காக Tamil Linux KDE Group அமைப்பிற்கும், மாணவர்
புலைமைப்பரிசு கிருபாளினி கிருபராஜாவுக்கும் வழங்கப்பட்டன.
முடிவில், அமெரிக்காவில் இருந்து வருகை தந்திருந்த முனைவர் சஞ்சயன் அவர்கள் இலக்கியத்தோட்டத்தின்
பத்தாண்டுச் சேவையினைப் பாராட்டி ஒரு சிறு உரை நிகழ்த்தினார்.
இந்த விழாவுக்கு தமிழ் மக்கள் வாழும் பல நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்களும், அறிஞர்களும்,
கல்வியாளர்களும், எழுத்தாளர்களும் வருகை தந்து சிறப்பித்தனர்.

Series Navigation

எம்.எஸ்.கனகரத்தினம்

எம்.எஸ்.கனகரத்தினம்