சோமு தங்கச்சியும் குஷ்புவும்

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

சம்பத் ரங்கநாதன்


எனது நண்பன் சோமு வீட்டுக்கு போயிருந்தேன்.அவன் மேட்டூருக்கு போயிருப்பதாக சொன்னார்கள்.சரி எதோ சுற்றுலா போயிருக்கிறான் என்று நினைத்துகொண்டிருந்தேன்.நாலைந்து நாள் கழித்து பார்த்தால் நொண்டி நொண்டி நடந்து வந்து கொண்டிருந்தான். ‘என்னடா ஆச்சு ‘ என்று கேட்டதற்கு மேட்டூரில் போலீஸ் லத்திசார்ஜ் செய்து காலில் அடித்தார்கள் என்றான்.

‘அட பாவமே போலீஸ் கிட்ட எதுக்குடா அடி வாங்கினாய் ? ‘ என்று கேட்டேன். ‘கோர்ட்டில் குஷ்பு மீது தக்காளி வீசியதற்கு தடியடி நடந்தது.அதில் அடிபட்டுவிட்டது ‘ என்றான்.

‘ஓ இதுதானா நீ மேட்டுருக்கு போன சுற்றுலா ‘ என்று நினைத்துகொண்டேன்.அதன் பிறகு ரொம்ப நேரம் சுகாசினியை திட்டிகொண்டிருந்தான்.என்னால் காதுகொடுத்து கேட்க முடியவில்லை.

‘அப்படி என்னடா தப்பா சொல்லிட்டாங்க ‘ என்றேன்.பிலுபிலு என்று பிடித்துகொண்டான். ‘திருமணத்துக்கு முன் பெண்கள் செக்ஸ் வைத்துகொள்வது தப்பில்லை,பெண்கள் பாருக்கு போவது தண்ணியடிப்பது தப்பில்லை என்கிறார்கள்,பாய் பிரண்ட்ஸ் வைத்துகொள்ள சொல்கிறார்கள்.இதைஎல்லாம் விட்டுவைப்பதா ‘ என்று பொங்கினான்.

‘சரி நீ தண்ணியிலேயே மூழ்கி கிடப்பவனாயிற்றே,பெண்கள் தண்ணி அடித்தால் என்ன தப்பு ‘ என்று கேட்டேன்.அவனுக்கு பிரமாதமான கோபம் வந்துவிட்டது. ‘ஆண் என்ன வேண்டுமானாலும் செய்வான்.பெண் செய்யகூடாது.அது தான் கலாச்சாரம்,தமிழ் பண்பாடு ‘ என்றான்.

‘சரியப்பா,ஆம்பளை தான் உசத்தி,பொம்பளைக பணிஞ்சு தான் போகணும் ‘ என்றேன்.அந்த பதில் அவனுக்கு பிடிக்கவில்லை போலிருந்தது. ‘அப்படி எல்லாம் இல்லை.ஆனா யோசிச்சுபார் நாம சைட் அடிக்கிறோம்,தம் அடிக்கிறோம்.சரி.அதே நம்ம அக்கா, தங்கச்சி தம் அடிச்சா,கல்யாணத்துக்கு முன்னாடி எவன்கூடவாவது போனா ஒத்துக்குவமா ? ‘ என்று கேட்டான்.

‘இல்லடா அது முடியாது ‘ என்று சொன்னேன்.அவனுக்கு ஒரே சந்தோஷமாகிவிட்டது. ‘அதுதாண்டா நானும் சொன்னேன்.ஆம்பளைக ஆயிரம் தப்பு பண்ணுவானுங்க,பொம்பளை போட்டி போட்டுட்டு அதே மாதிரி தப்பு பண்ணலாமா ‘ அப்படின்னு கேட்டான்.

எனக்கு இதில் எதோ தப்பு இருக்கற மாதிரி தெரிஞ்சது. ‘இல்லடா சோமு.அப்ப நீ என்ன தாண்டா சொல்லவர்ரே ?நீ பப்புக்கு,டிஸ்கொதேக்கு போவே ஆனா உன் தங்கச்சி போககூடாது அப்படிதானே ‘ என்று கேட்டேன். ‘ஆமாம் ‘ என்று சொன்னான்.

‘நீ மட்டும் ஏண்டா போறே ? ‘ என்றேன். ‘அது என் அடிப்படை சுதந்திரம் ‘ என்று சொன்னான். ‘உன் தங்கச்சிக்கு அந்த சுதந்திரம் இல்லையா ‘ என்று கேட்டதற்கு ‘இல்லை,தமிழ் கலாச்சாரம் ‘ என்றான்.திருவிளையாடல் சிவன் தருமி பாணியில் ஒரு கேள்வி பதில் அடுத்து ஆரம்பமானது.

‘சரி நீ கல்யாணத்துக்கு முன்னாடி உன்னோட ஆளோட ,பீச்சு,பப்புக்கு,டிஸ்கோக்கு போவியா ? ‘

‘பின்ன,இங்க எல்லாம் போகாமயா லவ்வு பண்ண முடியும் ? ‘

‘சந்தர்ப்பம் கிடைச்சா பலான விஷயம் கூட பண்ணுவே இல்லையா ? ‘

‘கண்டிப்பா..இது என்ன கேள்வி ?என்னோட ஆளுன்னு இல்லை.எந்த பொண்ணு கிடைச்சாலும் விடமாட்டேன். 12 வயசுல இருந்து எப்படா வாய்ப்பு கிடைக்கும் எவ மாட்டுவான்னு காத்துட்டிருக்கேன்..எது என்னடா கேள்வி ? ‘

‘சரி அப்ப உன்கூட பப்புக்கு,பீச்சுக்கு வர்ரத்துக்கு,பலான விஷயம் பண்றதுக்கு உன்னோட ஆளுக்கு சுதந்திரம் வேணுமா வேண்டாமா ? ‘

‘கண்டிப்பா வேணும். ‘

‘அவ அண்ணன்காரன் தடுத்தா என்ன பண்ணுவே ? ‘

‘கைய்ய உடைப்பேன்.நான் ஆம்பளை ‘

‘என்னடா அக்கிரமமா இருக்கு.கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தங்கச்சி எல்லாம் ஒழுக்கமா வீட்டுல இருக்கணும்னு சொன்னாய்.இப்ப என்னடான்னா மாத்தி பேசறாய் ? ‘

‘அது என் தங்கச்சிக்கு சொன்னது.என் தங்கச்சி ஒழுக்கமா இருக்கணும்.அவ்வளவுதான் ‘.

‘அப்ப அடுத்தவன் தங்கச்சி ஒழுக்கமா இருக்ககூடாதா ? ‘

‘அதெப்படி ?அப்புறம் யார் என்கூட மஜா பண்ணறது ?அதெல்லாம் ஒத்துக்க முடியாது.மத்த பொண்ணுக கட்டுபெட்டியா இருந்தா எனக்கு புடிக்காது ‘

‘குஷ்பு சொன்னதும் அதுதாண்டா. ‘எல்லா பொண்ணுங்களும் ஜாலியா இருக்கணும் ‘னு நீ சொல்றதை தானே அவங்களும் சொன்னாங்க.அப்புறம் எதுக்கு நீ தக்காளி வீசுன ? ‘

‘குஷ்பு அப்படி பேசிருக்க கூடாது.வேற மாதிரி பேசிருக்கணும் ‘

‘எப்படி பேசிருக்கணும் ? ‘

‘சோமு தங்கச்சி சிவகாமி மட்டும் தமிழ் பண்பாட்டோட இருக்கணும்.மத்த பொண்ணுங்க எல்லாம் அடிச்சு தூள் கிளப்பணும்னு ‘ பேசிருக்கணும்.

நான் மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.

—-

doctorsampath@gmail.com

Series Navigation

சம்பத் ரங்கநாதன்

சம்பத் ரங்கநாதன்