என் கவிதையும் நானும்

This entry is part [part not set] of 32 in the series 20030710_Issue

பாரதிராமன்


துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம்

மலர்ந்தன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம்

கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம்

விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம்

வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் கொண்டோம்

புயல் வீசுமென்று பாய்மரங்களை இறக்கிக் கொண்டோம்

அக்னி நட்சத்திரத்தில் ஆடைகளைக் குறைத்துக் கொண்டோம்

பனி வீழ்கிறதென்று பட்டும் கம்பளியும் போர்த்துக் கொண்டோம்

போர்க் குழிகளில் பதுங்கி கிடைத்ததைப் பகிர்ந்துண்டோம்

இருளில் வாழக்கற்று இல்லாமைகளை ஏற்றோம்

இயலாமைகளைச் சகித்து இறைவன் செயல் என்றோம்

இன்னும் இரங்கி எதிாி அணி அகதிகளையும் ஆதாித்தோம்

எத்தனைதான் முடிகிறது

இந்த ஏற்றமிகு மனதால்-

அனுபவித்து ஆளவும்

அனுசாித்துப் பேணவும்

அவதிகளை ஏற்கவும்

அன்பைப் பொழியவும் கூட!

கவிதையை இங்கே முடித்துவிடலாம்தான்…இதை இப்படியே கவிதை வட்டத்தில் வாசித்தால் என்ன கருத்துகள் கூறப்படக்கூடும் ? மனதின் செயல்பாடுகளை விவாித்து இருக்கிறீர்கள். போர்க்கால பதுங்கு குழிகளைப் பற்றியும், போர்க்கால வாழ்க்கை முறைகள் பற்றியும் விவாித்திருக்கிறீர்களே…. நீங்கள் அதை அனுபவித்திருக்க வேண்டும். அதனால்தான் அந்த நிகழ்ச்சிகளை உங்களால் வர்ணிக்க முடிந்திருக்கிறது. இருந்தாலும் இந்த மாதிாி விவரங்களை அடுக்கிக்கூறும் கவிதைகள் நிறையவே வந்திருக்கின்றன. சிறப்பித்துக் கூற இக்கவிதையில் வேறு ஏதாவது ஈர்ப்பு வேண்டுமே என்று சிலர் கருதக்கூடும்.

இரண்டாம் உலகப்போாின்போது ஏ.ஆர்.பி. பதுங்கு கட்டிடங்களில் விமானத்தாக்குதல் ஒத்திகைகள் நடந்தபோது ஒளிந்துகொண்ட சின்ன வயது அனுபவம் மேகத்திரை போல் என் நினைவில் வந்தாலும் அதையும் அது தொடர்பானவற்றையும் கூறுவது ஒன்றே கவிதையின் சிறப்பாக முடியாது என்று உணர முடிகிறது. சுய ரசனைக்கே சற்றுக் குறைவாகப்படுகிறது. எனவே சிறிது சிந்தித்து சில வாிகளைப் பின்வருமாறு சேர்க்கிறேன்

எத்தனைதான் முடிகிறது

இந்த ஏற்றமிகு மனதால்..

அனுபவித்து ஆளவும்

அனுசாித்துப் பேணவும்

அவதிகளை ஏற்கவும்

அன்பைப் பொழியவும்கூட!

பிறந்தது பெண்

என்றபோதில் மட்டும்

பேதலித்துப் போவதேன்

பேய் மனம் ?

இப்போது கவிதையில் ஒரு திருப்பம் வந்திருக்கிறதல்லவா ? என்றாலும் என் ரசனையில் ஏதோ இடிக்கிறது… தொிந்தோ தொியாமலோ மனதை பேய் என்று அழைத்தாகிவிட்டது. ஆகவே அந்த மனம் சில வேளைகளில் பேதலித்துப் போவதை நான் ஏன் ஆச்சாியமாகப் பார்க்கவேண்டும் ? பேயின் இயல்புதானே பேதலிப்பது ?

இந்த திருப்பம்கூட இப்போது போதுமனதாகப் படவில்லை. இன்னும் சிந்தித்து மேலும் இரண்டு சொற்கள் சேர்க்கிறேன். இன்னொரு திருப்பம். நிஜமான ஆச்சாியம். முழுக்கவிதை இதோ!

துளிர்த்தன கொடிகள் எனத் தொட்டுக் குலாவினோம்

மலர்ந்த்ன பூக்கள் எனப் பறித்துச் சூடினோம்

கனிந்தன காய்கள் எனக் கவர்ந்து உண்டோம்

விளையட்டும் வேண்டுமட்டும் என விதைத்து மகிழ்ந்தோம்

வெள்ளம் பெருகுமென்று தோணிகளில் தொற்றிக் கொண்டோம்

புயல் வீசுமென்று பாய்மரங்களை இறக்கிக் கொண்டோம்

அக்னி நட்சத்திரத்தில் ஆடைகளைக் குறைத்துக் கொண்டோம்

பனி வீழ்கிறதென்று பட்டும் கம்பளியும் போர்த்துக் கொண்டோம்

போர்க் குழிகளில் பதுங்கி கிடைத்ததைப் பகிர்ந்துண்டோம்

இருளில் வாழக்கற்று இல்லாமைகளை ஏற்றோம்

இயலாமைகளைச் சகித்து இறைவன் செயல் என்றோம்

இன்னும் இரங்கி எதிாி அணி அகதிகளையும் ஆதாித்தோம்

எத்தனைதான் முடிகிறது

இந்த ஏற்றமிகு மனதால்..

அனுபவித்து ஆளவும்

அனுசாித்துப் பேணவும்

அவதிகளை ஏற்கவும் அன்பைப் பொழியவும்கூட!

பிறந்தது பெண்

என்ற போதில் மட்டும்

பேதலித்துப் போவதேன்

பேய் மனம் ?

பெண் மனமும்!

என் ரசனைக்கு இப்போது ஒரு திருப்தி. உங்களுக்கு எப்படியோ ?

—கணையாழி, அக்டோபர்-1994.

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.