ஒலி மிகைத்த மழை

This entry is part [part not set] of 45 in the series 20090731_Issue

எம்.ரிஷான் ஷெரீப்


மின்னலைப் பார்த்திருக்கும்
விழிகளுக்குச் சலனமேதுமில்லை
அநிச்சையாய் விரல்கள்
பின்னலை அவிழ்த்து மீண்டும் மீண்டும்
பின்னிக் கொண்டேயிருக்கின்றன

தவளைகள் கத்தும் சத்தம்
மழையை மீறிக் கேட்டபடியிருக்கிறது
இலைகள் கோப்பைகளாகி
நீரைத் தேக்குகின்றன
மழை ஓய்ந்த தென்றலுக்கு
பன்னீர் தெளிக்கக்கூடும் அவை

இப்பெருத்த மழைக்கு
கூட்டுக் குஞ்சுகள் நனையுமா
சாரலடிக்கும் போது
கூட்டின் ஜன்னல்களை மூடிவிட
இறக்கைகளுக்கு இயலுமா

மிகுந்த ஒலியினைத் திருத்த
இயந்திரக் கரங்களோடு எவனும் வரவில்லை
இரைச்சல்கள் அப்படியே கேட்டபடியிருக்கின்றன

நீயும்
எதனாலும் காவப்படமுடியாதவொரு
மனநிலையைக் கொண்டிருக்கிறாய்
இறுதிவரையிலும்
உன்னில் அமைதியை ஏற்படுத்த
என்னால் ஆக முடியாமல் போனதைப் போல

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி – கலைமுகம் இலக்கிய இதழ் – 49 (ஜனவரி – ஜூன், 2009)

mrishanshareef@gmail.com

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்