கரியமில இரகசியம்

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

ஒளியவன்


அளவாய்ப் பால் கொடுத்தாய்
அருந்தினோம்
அதுவும் போதவில்லையென
உன் முலைக்காம்புகளைத்
தின்று செரித்தோம்
உன் உடலினைத்
துளையிட்டு துளையிட்டு
இன்பம் கொண்டோம்
உன் ரோம
மரங்களை வெட்டிச் சாய்த்து
மொட்டையடித்தோம்
கட்டிகளைக் காட்டி
வளர்ச்சிகளென்றோம்
உன் கண்களெங்கிலும்
கரியமிலம் வீசினோம்
குருடானாய்…
உன் காதுகளெங்கிலும்
பிளாஸ்டிக்கை அடைத்தோம்
செவிடானாய்…
கரியமிலவாயுவை நுகரச்செய்தோம்
பைத்தியக்காரியானாய்
கோலம் கலைந்தாய்
காலநிலைகளை மறந்தாய்…

நாங்கள் வாழத்தகுதியற்றவர்கள்
எங்களனைவரையும்
கொன்றழித்து
உன் உள்ளம் குளிரக் குளிர
மீண்டுமொரு மனிதனை
உருவாக்கு,
அவனுக்காவது கரியமில
இரகசியம் தெரியாமலிருக்கட்டும்!

Series Navigation

ஒளியவன்

ஒளியவன்