தீர்ப்பு எழுதும் கலம்கள்

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

ஹெச்.ஜி.ரசூல்



இஸ்ராயிலின் கைப்பிடித்து நடந்த்
என் நெஞ்சமெங்கும் பிரளயம்
ப்றத்தலின் நீட்சி
மேகக் கூட்டங்களைத் தாண்டிச் சென்றது.
அழைத்த குரல்களுக்கு
பதில் சொல்லின மேகங்கள்

முன்னூற்று அறுபத்தைந்து வருடங்கள்
உயிர்வாழ்தலைப் பற்றிய பிரம்மைகள்
பொய்த்துப்போன துயரத்தில் மூழ்கி எழுகிறேன்.
மரணத்தோடு கைபிடித்து
அன்றாடம் வாழ்வதெப்படி சாத்தியம்..
என்னை சிறகுகளில் சுமந்து செல்ல முயன்ற
இஸ்ராயிலின் முகம் பார்த்தேன்.
கருணையும் பரிவும் நிரம்பி இருந்தது.
உயிர் வாங்கும் ஒரு பயங்கரவாதியிடம்
இப்படியொரு சாது தோற்றமா..

உயிர்வாங்கும் மலக்குக்கு
குடும்பம் இல்லை
குழந்தைகள் இல்லை.
இழப்பின் துயரங்களுக்கு
எதுவுமில்லை ஈடாக..
நரகம் பற்றியோ சுவனம் பற்றியோ
தீர்ப்பு எழுதும் கலம்களை
முறித்துப் போடச் சொல்லி
அல்லாவிடம் வற்புறுத்துகிறேன்..

———————————————————–
கலம் – எழுதுகோல்
இஸ்ராயில் – அல்லாவின் ஆணப்படி மரணத்தை கொண்டுவரும் வானவர்
மலக்கு – ஒளியால் படைக்கப்பட்டவர் – இறைக் கட்டளையை நிறைவேற்றும் வானவர்.
அல்லா – கடவுள்

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்