மடயர்க்குப் பாடம் சொல்வாய்!

This entry is part [part not set] of 23 in the series 20081204_Issue

அகரம்.அமுதா


அக்குளில் அழுக்கி னைப்போல்
— அண்டியே துன்பு றுத்தும்
குக்கலின் என்பு டைத்துக்
— கொடுங்குளிர் காய வேண்டும்!
மக்களை மாய்க்கு மந்த
— மதியிலார் போக்கால் பாரில்
சிக்கலே தோன்று மாயின்
— தீயரை ஒறுக்க வெண்டும்

செப்படி வித்தை காட்டிச்
— செருவிடை மார்நி மிர்த்தி
எப்படை எதிர்த்த போதும்
— எறும்பென ஊதித் தள்ளும்
முப்படை நமக்கு முண்டே!
— முன்னரண் தாண்டி வந்தே
தப்படி வைப்பின் அன்னார்
— தாள்களை யொடிக்க வேண்டும்!

தந்தைக்குப் பிறந்தா லன்றோ
— தருக்கவான் நேரில்! மாட்டு
மந்தைக்குப் பிறந்த கூட்டம்
— மறைந்தன்றோ தாக்கும்!? முற்றும்
சிந்திக்கும் திறனில் லாத
— தீயரைப் பிடித்து வந்தே
தந்திக்கு முன்பு தைத்துத்
— தலைதனை இடர வேண்டும்!

சோற்றிலே கல்கி டந்தால்
— சுவைக்குமோ உண்டி? நெல்லின்
நாற்றிலே புல்வ ளர்ந்தால்
— நன்மையோ? பெருகி யோடும்
ஊற்றிலே நஞ்சி ருந்தால்
— உண்ணுதற் காமோ? நம்மில்
கூற்றெனக் கலந்து பட்ட
— கொடியரைக் கொல்ல வேண்டும்!

வேவுகொள் துறையே! நீயுன்
— வேலையை முடுக்கி விட்டு
வேவுகொள்; அன்றி நீயும்
— மெத்தென வீற்றி ருப்பின்
சாவுகொள்; எல்லை தாண்டித்
— தருக்கிடும் பேடி தம்மைக்
காவுகொள்;நாட்டின் ஆண்மை
— காவல்கொள்; விழிப்பி னைக்கொள்!

பஞ்சுமாப் பொதியிற் றீயைப்
— பதுக்கிடும் தன்மை போலே
கொஞ்சமா சூழ்ச்சி செய்தார்?
— கொடுமனப் போக்கி னாலே
நஞ்சுமா நெஞ்சர் ஆடும்
— நாடகம் அறிந்த பின்னும்
அஞ்சுமா இந்தி யாதான்?
— அயருமோ எல்லைக் காவல்?

அனுக்கமாய் எடுத்து ரைப்பாய்!
— அறிவிலாப் பேய்ம னத்தர்
இனக்கமாய் வாரா விட்டால்
— இடியெனப் பொருது! போ!போ!
சுணக்கமேன்? இந்தி யாவே!
— தூய்மனம் துயில்தல் இல்லை;
மணக்குமோ காகி தப்பூ?
— மடயர்க்குப் பாடம் சொல்வாய்!


agramamutha08@gmail.com

Series Navigation

அகரம்.அமுதா

அகரம்.அமுதா