தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

ருத்ரா


காதல் கவிதைகளுக்கு
குத்தகை எடுத்திருக்கும்
தப்பூ சங்கர்களின்
சர்க்கரை தடவிய வரிகளை
மொய்த்திருக்கும் சிற்றெரும்புகளே!
சங்கத்தமிழன்
சிங்கத்தமிழனாக
பரிணாமம் அடைவதற்குப்பதில்
வெறும்
சிருங்காரத்தமிழனாய்
சிறைப்பட்டிருந்தால் போதும்
என்று
புதுக்கவிதைப்பூதங்கள்
நிறையவே
கிளம்பியிருக்கின்றன.

இளந்தளிர்களே!
இளந்தமிழர்களே!
காதல் எனும்
மனிதநேயத்தின்
முதல் தீப்பொறியிலேயே
காதலைச் சுட்டு தின்று
உணர்ச்சியை பூதாகரமாக்கும்
இந்த
தப்பூத சங்கர்கள் எனும்
புதுக்கவிதைப்பூச்சாண்டிகளை
புறந்தள்ளுங்கள்.

மிக மிக மெல்லிய
சோப்புக்குமிழிகளில்
சொர்க்கத்தீவுகள் அமைத்து
கவிதைகளில்
கல்லா கட்டும்…இந்த
குல்லா வியாபாரிகளின்
குரல்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

எதேச்சையாய்
அவர் பேனா
தெளித்த மைப்புள்ளிகள்
எல்லாம்
காதலியின்
கால்விரல் நகத்துக்கு பூசிய
“மெகந்தி” என்பார்.

சன்னல் கம்பிகள்
வழியேயும்
முத்தம் இட
அவர் நிப்புமுனை
உதடு குவிக்கும்.
கேட்டால்
அந்த பஞ்சுமேகம்
காதலியின் கன்னம் என்பார்.

காதலியின்
கால் கொலுசுகளில் எல்லாம்
அவர் “கொசுக்கடிகள்” தான்.
இதற்கு யார் மருந்து அடிப்பது?
அந்த கொலுசு மணிக்குள்
அகத்தியன் புகுந்து வந்து
குடியிருந்து
தமிழுக்கு
இலக்கணம் படித்தான் என்பார்.

ஒரு புழுக்கைப்பென்சிலை
வைத்துக்கொண்டு
நகரப் பேருந்து நடத்துனர்
எச்சில் தொட்டு கொடுத்த
பஸ் டிக்கட்டின் பிஞ்சு சீட்டில்
கிறுக்கியது போல்
வானவில்லையும் வண்ணாத்திப்பூச்சியையும்
அதில் கசக்கிப்பிழிந்து
புதுக்கவிதை வார்த்து தருவார்.
கேட்டால்
அந்த பஸ்ஸில் வந்த
காதலியின்
சுடிதார் வர்ணங்களே
காரணம் என்பார்.

காதலர் தினம் என்பது
ஒரு நாள்மட்டும் தான் என்று
எந்த கயவாளிப்பயல் சொன்னான்?
அவனை
என் காதலியின்
கூந்தலில் சொருகியிருக்கும்
பூவின்
கொண்டை ஊசியின்
கழுகில் ஏற்றினால் என்ன?
என்று ஒரு “டெர்ரரிஸ்ட்” கவிதை
அரங்கேற்றி வைத்திடுவார்.

அன்று அண்ணா சாலை தோறும்
தூவிக்கிடப்பது
தூசிகள் இல்லையாம்.
காதலிகளின்
இதய ரோஜாக்கள் தானாம்.
கேட்டால்
அண்ணா சாலை
அன்று மட்டும்
தார் பூசவில்லை
ரோஜாக்களை பூசிக்கொண்டது
என்பார்.

சினிமாப்பாட்டுகளின்
சில்லறை இரைச்சல்களில்
திக்கு முக்காடிக்கிடக்கும்
இந்த ஈசல்கள்
மெல்ல மெல்ல
இறக்கை உதிர்த்து
இறக்கையில்
மூழ்கிப்போக
மூண்டெரியும் மத்தாப்பூக்களே
தப்பூ சங்கர் கவிதைகள்.

அது ட்ரம்கள் அல்ல
துடிக்கும் உன் உதடுகள்
என்று
தன் உதட்டைக்கிழித்து எடுத்த
ஒரு துண்டு சீட்டில்
காதலிக்கு கவிதை எழுதுவார்
தப்பூ சங்கர்.
அது வெறும் கிடார் நரம்புகள் அல்ல
உன் சங்கு கழுத்தில்
வானம் அழகாய் வீசியெறிந்த
மின்னல் என்பார்.

வாசலில்
காதலி போட்ட
சுண்ணாம்புக்கோல
வளைவு நெளிவுகள்
அம்மா பிழிந்து தந்த
ஜிலேபியையை விட இனிப்பு
என்பார்.

தப்பூ சங்கரின்
தப்புத்தாளங்களை வைத்துக்கொண்டு
சாரம் இல்லாத சில
வாரப்பத்திரிகைகள்
காரம் ஏற்றிக்கொள்ளுகின்றன.

காதல் எனும்
பூங்குமிழிக்கு..அவர்
பூப்பல்லக்கு தூக்கட்டும்.
ஆனால்
ஒரு இளைய தலைமுறை
உருவாகவிடாமல்
அதன் சவப்பெட்டிக்கு அல்லவா
அந்த காகிதப்பக்கங்களில்
சல்லாத்துணி விரிக்கிறார்.

மெல்லிய
மயிலிறகுகளைக்கொண்டு
இந்த இளசுகளின்
காது குடையும்
இவரது கிளு கிளுப்பு வேலைகளில்
இளைஞர்களின்
இருபத்தியொன்றாம் நூற்றாண்டு
எங்கோ தொலைந்து போனது.

கம்பியூட்டர் வகுப்புகள்
காமன்
கரும்பு வில்லேந்தும்
களம் ஆகிப்போனதாய்
கணினியின்
பூலியன் அல்ஜீப்ராவில்கூட
காதலியின் “ப்ரா” தைத்து
கவிதை எழுதிவிடுவார்.

கார்டியாலஜி என்றால்
இதயம் பற்றி மட்டுமே
இந்த மக்கு டாக்டர்கள்
விரிவுரை ஆற்றுவார்கள்.
இதய வடிவில்
அவள் அனுப்பியிருக்கும்
அந்த வேலண்டின் “கார்டு”பற்றி
இவர்களுக்கு என்ன தெரியும்.
இந்த கார்டு
கொஞ்சம் கசங்கினாலும்
எனக்கு “இஸ்கேமியா” தான்.
எங்கள் காதலின்
இன்னொரு
இனிமையான பெயர் இது.

இதயத்தின்
ஆரிக்கிள்-வெண்டிரிக்கிளில் கூட
ஈடன் என்னும் ஆப்பிள் தோட்டம் தான்.
காதல் கோப்புளிக்கும்
அந்த ரத்தத்தின்
குங்கும செப்புக்குள்
குடியிருப்பது
ஆதாமாய்-ஏவாளாய்
ஆகிப்போன
அந்த காதலர்கள் மட்டும் தான்.
அதனால்
பெற்றோர்கள்
என்று சொல்லிக்கொள்கிற
சைத்தான்களே தூர ஓடுங்கள்.

கோமாளி டாக்டர்கள்
உளறிக்கொட்டிக்கொண்டிருப்பார்கள்
அந்த துடிப்புகளை
“ஸிஸ்டாலிக் அண்ட் டையஸ்டாலிக்
மர் மர்கள்” என்று.
பாதரசக்குமிழிகளின்
அந்த முணுமுணுப்புகள்
என் காதலியின் பெயர் அல்லவா?

இப்படியெல்லாம்
காகிதத்தில்
காதலின் கத்திக்கப்பல்
விட்டுக்கொண்டிருக்கும்
கற்பனையின்
கனவுப்பொட்டலங்களே..இந்த
கஞ்சாப்பொட்டலங்களின்
விற்பனையை
எப்போது நிறுத்தப்போகிறீர்கள்.

இளைஞர்களுக்கு வலைவீசுங்கள்.
கடல் இல்லா
அலை இல்லா தேசத்தில்
காதல்மீன் பிடிக்க
வலை வீசக்கிளம்பியவர்களுக்கு
வலை வீசுங்கள்
ஆட்சேபணையில்லை.
ஆனால் அவர்களை ஒரு
கானல் நீர் தேசத்தில்
தள்ளிவிடப்பார்க்கும்
தப்பூ சங்கர்களே..
இளைஞர்கள்
சிந்தனையில்
சிகரம் ஏறவெண்டும்.
அவர்களூக்கு
சிகை அலங்காரம் செய்தா
நீங்கள்
சிந்தனைச்சிற்பி ஆகப்போகிறீர்கள்?

“நான் என்ன
வாலிபர்களுக்கு வலைவீசும்
விலைமாதா”
என்று கேட்டான்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
ஒரு சிந்தனை சிற்பி.
விலை போக வேண்டும் என்று மட்டுமே
எழுதும் கவிதை கூட
விலை மாது ஆகிப்போகும்
விசித்திரமான விளம்பரயுகத்தின்
வாரிசுகளா
உங்கள் இலக்கிய வார்ப்புகள்?

புதிய யுகத்தின்
சிந்தனையில்
வெளிச்சம் படர்வதற்கு
“ஹெம்லாக்” கோப்பை ஏந்தி
உயிரை விட்டவன் சாக்ரடீஸ்
ஆனால் நீங்களோ
தினம் தினம்
உணர்ச்சியின் நஞ்சு ஊற்றி
இவர்களுக்கு அருந்தக்கொடுப்பது
·ப்ராய்டிசம் நொதிக்கும்
உங்கள்
காதல் கோப்பைகள் தான்.

கடல் நுரைபோல்
தலை நரைத்த
அந்த சான்றோர்கள்
இந்த இளைஞர்களுக்கு
தூவியது அறிவு மழை.

காதல் எனும் உயிரிழைகளை
வெறும் நூலாம்படையாக்கி
அதிலும்
சாக்கரின் பூசிய
பூச்செண்டுகள் தயார் செய்து
ஒரு பஞ்சுமிட்டாய்க்காரனைபோல்
கூவி கூவி விற்றுக்கொண்டிருக்கும்
தபூ சங்கர்கள் தூவுவதோ
வெறும் ஜிகினா மழை.

கவிதைவரிகளுக்கு
முடக்கு வாதம் ஏற்படும்போது
அவை காதல் பற்றிய
“ஹைக்கூக்கள்”
என்று அழைக்கப்படுகின்றன.

சொற்களுக்கு
முட்கிரீடம் சூட்டி
சூன்ய வாதத்தையும்
மாயா வாதத்தையும்
காதலாக்கி
சிலுவையில் ஏற்றும்
தப்பூ சங்கர்களின்
“புதிய ஏற்பாடுகள்”
புழுதிப்புயல் வீசுவதில்
புதிய குருத்துகள்
பட்டுப்போக வேண்டுமா?

இனிய
இளைஞர் சமுதாயமே!
தப்பூ சங்கர்களுக்கு
கற்பூரம் கொளுத்தியது போதும்.
அவர்கள் வீசும்
காதல் எனும்
பொன் தூண்டில் விழுங்கப்போகும்
முன்
அந்த விடியல் என்னும்
ஒளி மீனை
கையில் பிடியுங்கள்.

ஓ இளைஞனே!
“உன் முன்னே
அவள் ஒற்றியெறிந்த
லிப் ஸ்டிக்குகள் எல்லாம்
செர்ரிப்பழங்கள்”
என்று
கவிதை எழுதி எழுதி
எறிந்த
அந்த காகித கசக்கல்கள் எல்லாம்
உங்கள் “நாளை” களை
தூள் தூளாக்கிவிடும்
“இன்றைய” கையெறி குண்டுகளே!
கண்விழி!
இளைஞனே கண்விழி!

=======================================ருத்ரா

கவிஞர் தபூ சங்கர் வெறும் அடையாளம் மட்டுமே.அவர் போன்ற புதுக்கவிஞர்களின்
பேனாக்கள் எழுத்துக்களை தடம் பதிப்பதற்கு பதில் வெறும் மையை மட்டுமே உமிழு
கின்றன.அதில் அமிழ்ந்து மூழ்கும் இளைய தலைமுறைக்கு இப்போது வேண்டுவது
காதல் காய்ச்சல் அல்ல.புது யுகம் நோக்கி பாயும் எதிர்நீச்சல் மட்டுமே.இந்த நீண்ட
கவிதையின் நோக்கம் அதற்கு ஆயத்தப்படுத்துவது மட்டுமே அன்றி காயப்படுத்துவதற்கு
அல்ல.

==================================அன்புடன் ருத்ரா.

09-10-08

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா