கீதாஞ்சலி (103) உனக்கு வந்தனம் புரிகையில்!

This entry is part [part not set] of 31 in the series 20061214_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா



உந்தன் பாதத்துக்கு ஒருமுறை நான்
வந்தனம் செலுத்தும் போது,
எழுந்திடும் என் உணர்ச்சிகள்
இந்த உலகம்
முழுவதும் பரவித்
தழுவட்டும் என் இறைவனே!
தணிவாய்க் கனம் தாங்காது,
வேனிற்கால கருமுகில் பெய்யாது,
வானில் தொங்குவது போல்,
பணிந்திடும் என்னிதயம்
உன் வாசற் கதவில்,
ஒருமுறை உனக்கு நான் வந்தனை
புரியும் போது!
எனதினிய கீதங்கள்
மனத்தின் பல்வேறு முறிவைத் திரட்டி,
மௌனக் கடல் நோக்கி
ஓடிச் செல்லட்டும்,
ஒற்றை நீரோட்டமாய்,
ஒருமுறை உனக்கு நான் வந்தனை
புரியும் போது!
இரவு பகலாய்ப் பறந்து
குன்றிலுள்ள தம் கூட்டுக்கு மீளும்
கொக்கு மந்தை போல்,
என் வாழ்க்கைப் பயணமும்
நேரே செல்லட்டும், அதன்
நிரந்தர இல்லம் நோக்கி,
ஒருமுறை உனக்கு நான் வந்தனை
புரியும் போது!

*****************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 11, 2006)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா