கைகளை நீட்டி வா!

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


கைகளை நீட்டியபடி வா
அவையெம்மைச் சூடாக்கும்
உன் தலையை விரல் நகங்களுக்குள் திணித்துவிடு
உன் நீண்ட நினைவுகளை
கபாலத்துள் போட்டு வை

கைகளை நீட்டி வா
கைகளோடு கைகள் உரசும்போது
கலைந்துவிடும் நம் காழ்புணர்வுகள்
பூக்களின் வாசம்
இதயங்களுக்குள்ளும் உதிக்கும்

உன் செவிகளுடாக நானும்
என் செவிகளுடாய் நீயும் உலகின் நித்தியமான ஓங்காரயொலியைக் கேட்பது உறுதி
உன் இதழ்களோடு முத்தமிடும் என் உலர்ந்த மடல்
உரசிக்கொள்ளும் நொடியே
விடியலின் கட்டியக் காரன்

உன் இதழசைத்து நான் பேசுவேன்
நல்லிணக்கம் உனக்கு மட்டுமல்ல எனக்கும்தாம்
ஒரு பூனையின் பாச்சலுக்குள் முடங்கிவிட்ட இந்தப் பிரபஞ்சம்
இதற்குள் நீ-நான்,அது-இது ?

அம்புக்குறியாய் நீ
நீட்டிடும் ஆட்காட்டி விரல் மடிவதற்குள்
உலகத்தின் முடிவு நெருங்கி விடும்

சுடலையின் சுவர்கள்
பூனையைக் குற்றக் கூண்டில் ஏத்துகிறது
நிழல்களின் கரும் விரல்களால் மரணத்தையெண்ணியபடி

கைகளை நீட்டி வா
இதயத்துள் கூடிட்டு
கால் மடக்கி
கண்ணயர்வோம் ;
அனைத்தையும் மறந்து

குலைதலும் கூடுவதும
கூடுவதும் விலகுவதும்
உயிர்ப்பினது உறவுதாம்
உன் விழித்தடத்தில் உருளும் நீர் குமிழ் வெடிப்புள்
அமிழ்ந்தது ‘நான் ‘

கைகளை நீட்டி வா
மழலை மலரால்
இதயங்களை ஒத்திக்கொள்வோம்.

05.04.2005 -ப.வி.ஸ்ரீரங்கன்

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்