பேப்லோ நெருதா கவிதை- 3 : துன்பரசம் பிழிந்து ஒரு கவிதை ( ‘Saddest poem ‘ )

This entry is part [part not set] of 55 in the series 20041104_Issue

ருத்ரா


துயரத்தின் சிகரம் ஏறி நின்று

இதோ ஒரு கவிதை…

இரவுகளின் துன்பரசம் பருகிக்கொண்டே

இதோ ஒரு கவிதை…

நட்சத்திரங்களை

மேய வந்து விட்ட இரவு..

இதோ நானும்

மென்று தின்னப்படுகிறேன்.

துன்பம் இறுகிய

அந்த ராட்சத தாடைகளின்

கடைவாய்ப்பற்களில்

அரை பட்டு

நானும் தின்னப்படுகிறேன்.

தூரத்தில்..

நீலக்கண்களாய்

வெள்ளிமீன்களாய்

அதோ அவள் சிமிட்டுகிறாள்.

அந்த மெல்லிய இமைகள்

எப்படி ரத்தம் சொட்டும்

கில்லட்டின் ஆனது ?

துண்டு துண்டாய் நான்..

காகிதமும் பேனாவுமாய்..

கவிதைச்சடலங்களாய்

வாரி இறைந்து கிடக்கும்

இந்த வார்த்தைக்குப்பைகளை

அள்ளிக்கொண்டு போங்கள்.

சுழற்றி சுழற்றி அடிக்கும் அது

இரவு நேரம்

எனும்பேய் விரித்த புயல் அல்ல.

அவள்

மெல்லிய கூந்தல் தான் அது.

மரணம் தூவும்

மெல்லருவி அது.

ஆனால் முரட்டுத்தனமாய்

என் முகத்தில் அறைந்தது.

என் காதல் எல்லாம் எங்கே போனது ?

விம்மித்தணியும் மார்பு போல்

அந்த வானம்

குமிழிவிட்டு குமிழிவிட்டு

கீதம் முழக்கியது.

எல்லைகள் எல்லாம்

தொலைந்து போன

இதே வானத்தின் கீழ் நின்று

அவளை

பூச்செண்டாய்

என் கைகளில் ஏந்தி நின்றேன்.

எத்தனை முத்தங்கள் இட்டேன்.

அத்தனையும்

அமுத தடங்களாய்…அதோ

அந்த நட்சத்திரங்கள்.

நான் காதலித்தேன் அவளை.

நான் காதலிக்கப்பட்டேன் அவளால்.

அவள் என்னைக் காதலித்தாள்.

அவள் என்னால் காதலிக்கப்பட்டாள்.

இந்த வாக்கியங்களின்

வைக்கோல் போரை

நாங்கள் சுற்றி சுற்றி வந்தோம்.

ஆனாலும்

புறப்பட்ட இடத்திலேயே

நிற்கிறோம்.

எங்கள் காதல் என்ன ஆயிற்று ?

எங்கோ அது காத தூரம்

தூக்கியெறியப்பட்டுவிட்டதே!

நிலை குத்தி நின்றதுபோல

அவளது

அகன்ற பெரிய விழிகள்

உறைந்து நின்ற

அண்டார்டிகா கடலாய்

என்மீது

ஒரு சமாதியை

போர்த்திவிட்டது.

அந்த கரியவிழிகளில்

இருள் பாளங்கள் மண்டிய சுரங்கம்.

வெட்டி வெட்டி எடுத்துக்கொண்டே

இறங்குகிறேன்.

சூரியப்பிழம்பின்

ரத்தம் கசியும் வரை

வெளிச்சத்தின்

வெள்ளி இழைகள்

உமிழப்படும் வரை

என் காதலைத் தேடி

தோண்டிக்கொண்டிருக்கிறேன்.

என் கவிதையைக் கேளுங்கள்.

கம்பரசம் நொதிக்கும்

கிண்ணம் அல்ல இது.

துன்பரசம் கொப்புளிக்கும்

என் செய்யுளுக்கு

கொஞ்சம் செவிசாயுங்கள்.

அவள் இல்லாமல்

என்னை நான்

உருவம் செய்து கொள்ளவா ?

அது எப்படி முடியும் ?

அவளை நான்

இழந்து போய் விட்டேனா ?

என் பிணத்தை நானே

ஒரு ‘பிரேஸில் ‘ மைதானத்தில்

‘கால் பந்தாட்டம் ‘ ஆடுகிறேனா ?

என்ன இது ?

வேதனை என்னை

வேதாளமாய்

பிய்த்துத் தின்கிறதே !

இரவின் இடியோசையில்

முரசின் தோல் போல் நடுங்குகிறேன்.

அவள் இல்லாத வெறுமையின்

ஓங்காரத்தில்

அதிர்ந்து ஒடுங்கி விட்டேன்.

பச்சைப்புல் விரித்த பாயில்

ஆயாசமாய்

என் கவிதைத்துளி ஒன்று

கண்மூடிக்கிடக்கின்றது.

அது

நெருப்பு கருவுயிர்த்த

பனித்துளியா ?

இல்லை

பனிச்சதையின் சிப்பிக்குள்

சுடர் அவிழ்க்கும்

உயிர் முத்தா ?

என் உடல் எனும் சுமையை

சற்று சார்த்தியிருந்தேன்

இந்த உயிர் மீது.

ஆனால் இந்த உயிரின்

சுமைதாங்கி அல்லவா

அவள் காதல்.

அதை

யார் இங்கே பிடுங்கி எறிந்தது ?

அவளே இல்லாத போது

யாருக்கு வேண்டும்

இந்த தங்க வானமும்

நட்சத்திர வைரங்களும் ?

இந்த கூழாங்கற்களை

காய்ச்சியா கூழ் குடிப்பது ?

எங்கே அவள் ?

எட்டாத தொலைவில்

அதோ அவள்.

யாரோ பாடுவது போல்

அந்த அசையும் உதடுகள்

உலைக்களத்தின்

துருத்தியாய்

ஊதி ஊதி என்னை

எரித்துக்கொண்டிருக்கிறது.

பார்வைத்தூண்டில்

வீசி வீசி தேடுகிறேன் அவளை.

என் இதயம் படர்ந்த

நூலாம்படையை எல்லாம்

துடைத்தெறிந்து விட்டு

அவளைத் தேடுகின்றேன்.

அன்றொரு இரவு

மின்னல் வெள்ளையடித்ததில்

மரங்கள் உயிர் உதிர்த்து

நரை வெளுத்த வானமாய்

துவண்டு போனபோது

நாங்களும் வேரற்று வீழ்கின்றோம்.

அதே இருவராய்

அதே இரவில்

வெறும் நிழலாய்

பரந்து கிடக்கின்றோம்.

அவளை நான் காதலித்தது

உண்மையிலும் உண்மை.

அவளை நான்

காதலித்தேனா இல்லையா ?

என்ற கேள்வியின்

திரிமுனையை பற்றவைத்தது யார் ?

தெரியவில்லை.

இதோ கொஞ்சநேரத்தில்

வெடித்து சிதறப்போகின்றேன்.

அவள் யார் ?

யார் அவள் காதலன் ?

என் முத்தங்கள்

அந்த ரோஜாவுக்கு

வேலி போடவில்லையா ?

நீண்ட குகைவழிப்பயணம் இது.

அந்தப்பக்கம்

தெரியப்போகிற முகத்துக்காக

இந்த பக்கம்

என் முகம்

ஏன் தொலைந்து போனது ?

காற்றுக்கரைசலில்

இந்த காதறுந்த ஊசி

காணாமல் மறைந்து போகும் முன்

காதல் நூல் தேடி அலைகிறது.

இந்த கந்தல்களை வைத்து தைத்த

ஒரு கனவுலகம் தேடி

கரைந்து போனது.

என் குரல்

இந்தப்பாறையிலும்

வீரிட்டு முளைக்கிறது.

அவள் செவிபுகுந்து

செழிப்பாக

பூவிரித்து

புலன்கள் தோறும்

தீ பாய்ச்ச

தினவெடுத்து திரிகின்றது.

‘நீ உண்மையிலேயே

அவளை காதலித்தாயா ? ‘

‘என்ன கேள்வி இது ?

என்ன அடையாளங்களை

நான் காட்டுவது ? ‘

அவள் குரலில்

எனது ஒலி.

அவள் உடற்பூவில்

என் மகரந்தங்கள்.

மைல் கற்கள் நடப்படாத

பாதை அது.

என்னை எங்கோ

கட்டியிழுத்த

அவள் கண்கள் அது.

இந்த பிரபஞ்சமே

ஒரு கம்பளம் விரித்த

அந்த மைவிழிக்குள்

மையம் இழந்த புயல் ஆகினேன்.

துன்பம் நேர்கையில்

யாழெடுத்துப் பாட

காதல் தேடினேன்.

காதலே…நீயோ

வாளெடுத்து என்னை

வதைக்க வந்தாய்.

என் ஆத்மாவைக்

கூறுபோட்டுவிடு

கவலையில்லை.

அவள் இல்லாத எனக்கு

ஆத்மாவும் இல்லை.

அண்டங்களும் இல்லை.

அவளைக் கைகளில் ஏந்தி

களிப்புற்று இருந்தேன்.

அப்போது

இந்த உலகங்கள் எல்லாம்

வெறும் தூசு எனக்கு.

சுறுக்கென்று குத்திய

அந்த காதலின் வலி

இன்பம் பரப்பிய

அந்த கணங்கள் போதும்.

மற்றவையெல்லாம்

எனக்கு மரத்துப்போகட்டும்.

நீண்ட வாழ்க்கையை

இழுத்துக்கொண்டே ஓடும்

ஒரு பந்தயம் இது.

கனமான தங்கப்பதக்கங்கள்

கழுத்திலும் காலிலும்

பூட்டிய சங்கிலிகள்.

அவள் கொடுத்த

இந்த காதல் வலியே

என் கடைசி வலி.

இதோ கீழே விழுந்து

துடிக்கின்ற…

காதல் எனும்

காக்காய் வலிப்பு

வந்த இவனுக்கு

சாவிக்கொத்துகள் வேண்டாம்.

கடைசி கடைசியாய்

இவன் கையில்

ஒரு பேனாவைத்தாருங்கள்.

நுரை கக்கும்

இவன் கவிதைக்குள்

துன்பம் எனும் இன்பங்கள்

பொங்கிப்பெருகுவதை

கண்டு களிப்பெய்துங்கள்.

====ருத்ரா.

(இது ஒரு காதல் கவிதையின் மொழிபெயர்ப்பு அல்ல.

இது ஒரு காதலின் ‘வலி ‘பெயர்ப்பு)

====
epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா