நீயின்றி …

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

சேவியர்


0

ஒரு சுவாசத்துக்கும்
மறு சுவாசத்துக்கும்
இடைப்பட்ட
பொழுதிலும்
உனைச் சுவாசிக்க நினைக்கிறது
மனசு.

புதையல் தேடி
அலைவோர் மத்தியில்
புதையலோடு அலைவதாய்ப்
படுகிறது
நீ அருகில் இருக்கையில்.

உணர்வுகள்
மெலியும் போது
வலி
உடலுக்குள்ளும் ஊடுருவுகிறது.

இதயம் துடிக்கும்
ஓசை
இடிவிழும் ஓசையாய்
செவிகளை உடைக்கிறது.
என்
மன இருக்கையை நீ
மடித்து வைக்கும் போது.

நீ
பற்றவைக்கும் பார்வைகளை
என் மீது உரசிப் போடாமல்
புறக்கணிக்கும்
போதெல்லாம்
எரிந்து போகிறேன்.

இத்தனையும் சொன்னபின்னும்
நண்பனே
என்றழைக்காதே என்னை.
நான்
நட்புக்குத் துரோகம் செய்துவிட்டேன்.

0
Xavier.Dasaian@in.eFunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்