ஒரு சிறு பத்திரிக்கை வாசகியின் கையறு நிலை

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

மோனிகா


போரென்றும் பசியென்றும் பாழாய்போன உலகத்திலே
நீயும் நானும்தான் நல்லவற்றின் எச்சமாய்
இம்மாஞ்சோடு உலகத்துல இத்துனூண்டு மக்களாய்
எழுதியும் பேசியும் எவ்வளவோ வித்தை செய்து
உலகத்தை மாத்தலாம்னு
கோலியாத்து உலகத்துல டேவிட்டா ஊர்ந்துகிட்டு
கையெழுத்தில் அச்செழுத்தில் கடன்வாங்கி கடன்கொடுத்து
வயத்துப் பசிதாண்டி
வாய்க்கு வாய் தருமம்பேசி
கொடுமை கண்ட போதெல்லாம் கூட்டம் கூட்டி
நோட்டாஸ் போட்டு
வறுமையும் அதிகாரமும் கட்டவுட் கணக்கா உயரும்போது
வாய்சண்டை, சொத்துச் சண்டை, வரிக்குவரி வசவுமழை
மார்க்சிஸம், மாடர்னிசம், மனிசனிசம், மனுசியிசம், மாமிசம்
எல்லாம்தாண்டி
ஏதோ இந்த மனசை எதுவோ செய்து அமைதிகொள்ள
எடுத்துகிட்ட இலக்கியமோ ஏமாந்து போச்சு மச்சான்…..
ஐ.நா சபையின் அண்ணன் அமெரிக்கா இல்லை நாம
அறுவடைக்கு முன்னாடி அடுத்தவனை அடிச்சு திண்ண…..
வாசகன்னு சொல்லிக்கிட்டு வாசிக்க உட்கார்ந்தா
எல்லா சிறுபத்திரிக்கையும் இரைக்குது அவதூறு
இருக்கிறதும் யோசிப்பதும் ஏதோ பத்துபேரு
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில் வாழுகிறோம்
எத்தனை பேர் வந்தாலும் எழுத்துப் பசியிருக்க
வேண்டாத கதையெதுக்கு வெறும் வாயில் அவல் எதுக்கு
விசாலப்பார்வையிலே விழுங்கு என்றார் பாரதிதாசன்
பாலென்று இருந்தால்தானே நீரென்று பிரித்துப் பார்ப்போம்
விமர்சனம் செய்தாலே விரோதப் போக்கெதற்கு!
இதுக்கும் மேலெ எடுத்துச் சொல்ல
அண்ணே நான் அறிஞன் இல்லே
இரண்டெழுத்து படிப்போமென்ற இயலாமை
புலம்பிவிட்டேன்.
——————————————————————————
memorystake@yahoo.com

Series Navigation

மோனிகா

மோனிகா