சென்னை..என்னை…

This entry is part [part not set] of 45 in the series 20040122_Issue

கற்பகம்


——————–
கோலமிடும் பனிக்காலை மயில்களும்
மார்கழியின் மாலைக் கச்சேரிகளும்
பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும்
பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும்.

நடாஜன் அங்கிள் என்று அபிராமி
அன்பாய் அழைக்கும் ஓட்டுனரும்.
அக்கா அக்கா என்று ஆசையோடு
பின்னால் சுற்றிய உதவிப் பெண்ணும்.

நடைபாதை ஓரத்தில் மசாலாப் பொரி விற்பவரும்
பேரம் பேசாமைக்கு பரிசாய் புன்னகையுடன்
அரை முழம் பூ அதிகம் தந்த பூக்காரியும்.
பத்துக்கு எட்டுதான் என்று கறாராய்க் கூறிவிட்டு
கூடுதலாய் ஒரு பலாச்சுளையை
பொட்டலத்தில் போட்ட மூதாட்டியும்.

சரவண பவனும் , ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸும்
நெரிசல் சுவர்க்கமாய் ரங்கநாதன் தெருவும்
அங்கங்கே நிறுத்தப்பட்ட வாகனங்களும்
ஒய்யாரமாய் ஓடும் டயோடா குவாலீசுகளூடே
சைக்கிள்களின் கிண்கிணிகளும்.

பணக்காரர்கள் பொழுதுபோக்கும் ஸ்பென்சர் ப்ிளாசாவில்
அவர்களோடு சேரந்துவிடப் போராடும் நடுவர்க்கம்.
ஃபூட் வர்ட்டிலும், லாண்ட் மார்க்கிலும் மும்முரமாய்
நோட்டம் விடும் ஒரு பருவக் கூட்டம்!
அத்தனை பேரையும் காணக் காண மனதில்
பூக்காடாய் உற்சாகம் பிறக்கும்!

ஆனால் –
தமிழ் மக்கள் மறந்தும் இங்கே தமிழ் பேசாத கூத்தைக் கண்டு
வருத்தம் வந்து மிகுதியாய் அழுகை முட்டும்!

ஊரைச் சுற்றிவிட்டு தாமதமாய் வீடு வந்தால்
முணுமுணுக்கும் அத்தை,
அடுத்த கனம்… சாப்பிட்டாயா என்று கேட்கின்ற தாய்ப்பாசம்.
எழுந்ததுமே சுடச்சுட ஃபில்டர் காபியை ஆற்றி
கையில் திணிக்கும் மாமாவும்
கறியோ, குழம்போ சமைத்த கடாயில்
சாதம் பிசைந்து ஊட்டி விடும் நாத்தனாரும்
அண்ணியின் சமையல் அற்புதம் என்று
என் மைக்ரோவேவ் பீட்ஸாவைப் புகழ்கின்ற மைத்துனரும்.

அழுத்தமாய் இருந்துவிட்டுப் பிரிகையிலேயே
தழுதழுக்கும் குரலில் தொலைபேசச் சொன்ன அப்பாவும்
அழுதுகொண்டே போகாதே என்று தோளைத் தட்டி
எங்கே சிரி என்று தேற்றிய அண்ணாவும், தம்பியும்

ஒரு குடும்பம் ஒரு வீடு
ஒரு ஊர் ஒரே குடும்பம்.

சென்னை என்னை
ஆழமாய் ஆட்கொண்ட ஆறு வாரங்கள்
விடமுடியவில்லை விடுமுறை நினைவுகளை!

திரும்பும் நாள் வந்தொழிந்தது
விமான நிலையத்தில் நிலை குலைகின்றேன்…

வீட்டுக்குப் போகிறேனா
வீட்டை விட்டுப் போகிறேனா ? ? ? ? ?

karpagam610@yahoo.com

Series Navigation

கற்பகம்

கற்பகம்