சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
ஜோதிர்லதா கிரிஜா
ஆர். சூடாமணி எனும் இயற்பெயரில் தமிழிலும், தன் தந்தையாரின் பெயரைத் தன்னுடையதுடன் இணைத்துக்கொண்டு, சூடாமணி ராகவன் என்னும் பெயரில் ஆங்கிலத்திலும் எழுதிக்கொண்டிருந்த மாபெரும் எழுத்தாளர் மறைந்துவிட்டார். எண்பது அகவைகளைக் கடந்துவிட்ட நிலையிலும் – தள்ளாத உடல் நிலையிலும் -– விடாது அவ்வப்போது தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தவர்.
பல ஆண்டுகளுக்கு முன்னால் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், அமரர்கள் குயிலி ராஜேஸ்வரி, மகரம் ஆகியோருடன் அவரது இல்லத்துக்குச் சென்றிருந்த முதல் தடவைக்குப் பின், 2001 இல் (என்று ஞாபகம்) இரண்டாம் தடவையாக அவரை நேரில் சந்தித்திருந்ததோடு சரி. எப்போதாகிலும் தொலைபேசிக்கொள்ளுவது வழக்கம்.
தமிழ் எழுத்தாளர்களில், மனத்தத்துவத்தின் அடிநாதத்துடன் எழுதிக்கொண்டிருந்த ஒரே எழுத்தாளர் சூடாமணி. இவருடைய உன்னதமான கதைகள் மொழிபெயர்க்கப்படும் போது இந்த அடிநாதம் உள்ளபடி ஒலிக்காமல் போவதுண்டு. அந்த அளவுக்கு மனத்தத்துவத்தின் அரிய நுட்பங்களுடன் எழுதிக்கொண்டிருந்த ஒரே தமிழ் எழுத்தாளர். இந்த விஷயத்தில், இவருக்கு ஒப்பாரும் இலர், இவரை மிக்காரும் இலர். எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களால் கொண்டாடப் பட்டவர் சூடாமணி என்பதே இதற்குச் சான்றாகும்.
இவர் சிறந்த நகைச்சுவையாளர் என்பது தொலைபேசி உரையாடல்களின் போது வெளிப்பட்டதுண்டு. ஒரு முறை டிசம்பர் மாதத்தில் அவரது தொலைபேசி இணைப்புக் கிடைக்கவில்லை என்பதையும், ‘இந்தத் தொலைபேசி உபயோகத்தில் இல்லை’ என்னும் தவறான பாட்டையே தொலைபேசி இலாகா திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டிருந்ததையும் பின்னர் அவரிடம் கூறிய போது, ‘இது டிசம்பர் கச்சேரி சீசனாச்சே! அதான் பல்லவி பாடி யிருக்கும்’ என்றார் சூடமணி.
சூடாமனியின் குடும்பம் ஒரு கலைக்குடும்பம் என்பதாக அவருடனான முதல் சந்திப்பிலேயே தெரிய வந்தது. அவரைப் போலவேஅவருடைய தாயாரும் நன்றாக ஓவியம் வரைவார் என்று கேள்வி. கலைப் பொருள்களும் தயாரிப்பாராம்.
இலக்கியமும் அவரது குடும்பத்தின் அடிநாதமே. அவருடைய பாட்டி (ரங்கநாயகி அம்மாள் என்று நினைவு) எழுதி வைத்திருந்த புதினத்துக்கு மெருகேற்றி அதைச் சில ஆண்டுகளுக்கு முன் சூடாமணி பதிப்பித்தார்.
தமிழக அரசின் பரிசுகள், ஆனந்த விகடனின் வெள்ளிவிழாப் பரிசு போன்றவை உட்பட, ஏராளமான பரிசுகளைப் பெற்றவர். இவருடைய சகோதரி எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி என்பது பலருக்கும் தெரியும். முனைவர் விக்கிரமன் அவர்களின் இலக்கியப் பீடம் மூலம் ஆண்டுதோறும் சிறந்த படைப்புகளுக்குச் சூடாமணி பரிசு அளித்துக்கொண்டிருந்தார்.
கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நூல் வெளியீட்டாளர்களின் சங்கம் இவருக்கு ஓர் இலட்சம் பரிசளிக்க முன்வந்தபோது, அந்தப் பரிசுக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்பதைக் கேட்டு உறுதிப் படுத்திக்கொண்டதன் பின்னரே அதை ஏற்றார்! அரசியல் கட்சிச் சார்புடையதெனில் அதை மறுதலிப்பதற்கு இருந்தவர்!
மிகச்சிறந்த எழுத்தாளரான சூடாமணி அவர்களைச் சாகித்திய அகாதெமி புறக்கணித்துள்ளது. இதன் வாயிலாக அந்த இலக்கிய அமைப்புத் தன்னைத்தானேதான் இழிவு படுத்திக்கொண்டுள்ளது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
இலக்கிய உலகில் சூடாமணிக்கு என்று உள்ள மிகச் சிறந்த தனியான இடத்தை எந்த அகாதெமியாலும் பறிக்க முடியாது என்பது மட்டும் உண்மை.
………
- ராமச்சந்திர குஹாவின் “இந்திய வரலாறு காந்திக்கு பிறகு ”- விமர்சனம்
- முஹம்மது யூனூஸின் “எனது பர்மா குறிப்புகள்”
- சமுதாய மேம்பாடும் பக்தி உணர்வும்
- சூடாமணி, இலக்கிய மகுடம் சூடிக்கொண்ட மணி
- நினைவுகளின் சுவட்டில் – (54)
- பரிமளவல்லி – 14. மஞ்சள் கேக்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -15
- மொழிவது சுகம்:- தலைவர்களும் மனிதர்களும்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
- பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு
- பைத்தியக்காரர்களின் உலகம்
- இடம்பெயர்ந்தவர்களின் முகாமிலிருந்து எழுதுகிறேன்
- மழை வரப்போகிறது இப்போது !
- அவனும், அவளும்
- அவன் இவள்…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) பூரணம் அடைவது கவிதை -34 பாகம் -1
- பெயெரெச்சம்..
- ஏதோவொரு நாள்
- இவர்களது எழுத்துமுறை – 9. –இந்திராபார்த்தசாரதி
- சங்கத் தேய்வு இலக்கியம் – திணைமாலை நூற்றைம்பது.
- இனிக்கும் கழக இலக்கியம்
- பரிமளவல்லி பற்றி
- வெட்சி (சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் இலக்கியத்துறை கருத்தரங்க கட்டுரைகளை முன்வைத்து…)
- திருப்பூரில் பதியம் இலக்கியக் கூடல்
- அன்புள்ள அய்யனார்—சுந்தர ராமசாமின் கடிதங்கள்
- சனியின் ஒளிவளையம் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் [Christiaan Huygens] (1629-1695)
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள்:
- முள்பாதை 49
- சிங்கப்பூர்த் தமிழ் இணைய இதழ் ‘தங்கமீன்
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் மூன்றாவது குறுந்திரைப் பயணம் கல்பாக்கம் (கடலூர் கிராமம்)
- அதிகாரப்பூர்வமாக!
- நீர்க்குமிழி
- நிராகரிப்பு
- குடைக் கம்பிகள் எழுதும் கதைகள் …
- கடந்து செல்லும் கணங்கள்…
- மூன்றாவது கவிதைத் தொகுதி –
- அம்ஷன் குமார் நடத்தும் குறும்பட ஆவணப்படங்களுக்கான இருதின பயிற்சிப்பட்டறை
- படைப்பாளி
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்