ஆன்மீக வியாபாரிகள்

This entry is part [part not set] of 35 in the series 20091106_Issue

பா பூபதி


ஒரு ஜென் குரு ஒவ்வொரு நாள் மதியமும் தூங்கி ஓய்வெடுப்பார். சீடர்கள் அவர் எழுந்ததும் ஏன் தூங்கினீர்கள் ஐயா என்று கேட்டார்கள். குரு விட்டுக் கொடுக்காமல், “நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று அங்கு இருக்கும் முன்னோர்களிடம் பாடம் கேட்டு வருகிறேன்” என்று சொன்னார்.

ஒரு வாரம் கழித்து வகுப்பில் ஒருவன் தூங்கிக் கொண்டிருக்கக் கண்டார். ஏன் தூங்கினாய்? என்று கேட்டதற்கு அவனும், “நான் தூக்கத்தில் கனவுலகிற்குச் சென்று முன்னோர்களிடம் பாடம் கேட்டுக் கொண்டிருந்தேன்” என்றான். குரு,”என்ன கேட்டாய்?” என்றார்.

சீடனும், “எங்கள் குரு தினமும் வருகிறாரா?” என்று கேட்டேன். அவர்கள், “நீங்கள் யாரென்றே தெரியாது என்கிறார்களே!?” என்றான்!

ஆன்மீக குரு சொல்வதையெல்லாம் கேட்டு ஆட்டுமந்தைக்கூட்டம் போல அவர்கள் பின்னால் செல்லாமல், அவரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்ன என்பதை உங்களுக்குள்ளே தேடிப்பாருங்கள். அவரின் வளர்ச்சிக்கு நீங்கள்தான் காரணம் என்பதை புரிந்துகொள்வீர்கள்.

ஒரே கடன் பிரச்சனை, குடும்பத்தில் நிம்மதியில்லை, உடலில் நோய் ஒன்று போனால் மற்றொரு நோய் வருகிறது. மன அழுத்தம் அதிகரிக்கிறது, சர்க்கரை நோய் அதிகரிக்கிறது, மன நிம்மதியே இல்லை. மருத்துவரும் கை விரித்துவிட்டார். அடுத்து என்ன செய்வதென்றே தெரிய வில்லை என்பவர்கள் நிம்மதியான வாழ்விற்கு திரும்ப ஒரே வழி ஆன்மீகம். பக்தர்களுக்கு மட்டுமல்ல பக்தர்கள் வழிபடும் ஆன்மீக குரு நிம்மதியாக வாழ வேண்டும் என்றாலும் ஆன்மீகம் தான் ஒரே வழி. ஏனெனில் பக்தர்கள் அந்த குறிப்பிட்ட குருவிடம் செல்வதை நிருத்தி விட்டார்களானால் அந்த ஆன்மீக குருவும் நிம்மதியிழந்து, உடல் நோய்களெல்லாம் ஏற்பட்டு சராசரி பக்தனின் நிலையை அடைந்து இறந்து போவார். ஆன்மீக குரு மரம் என்றால் அதற்கு தேவையான நீர், உரம் எல்லாமே பக்தர்கள்தான். பக்தர்களை நம்பித்தான் ஆன்மீக குரு வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஆனால் ஆன்மீக குருவை நம்பி பக்தர்கள் வாழ்வது போன்ற பிரம்மையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அமைதியின் உறைவிடம்:

அங்கே நீங்கள் சென்றிருக்கின்றீர்களா! அருமையான இடம், அங்கு போனாலே மன நிம்மதியாக இருக்கும். மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் எவ்விதமான சத்தமுமில்லாமல் எவ்வளவு அமைதியான இருக்கும் தெரியுமா! என பக்தர்கள் சிலாகித்து பேசிக்கொள்வது வழக்கம். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, பொதுவாகவே எல்லா ஆன்மீக குருவிடம் இப்படி ஒரு இடம் அதாவது ஆசிரமம் இருக்கும். யாரும் கண்டு கொள்ளாத மலையடிவார இடமாகப்பார்த்து மொத்த இடத்தையும் வளைத்துப்போட்டு அற்புதமாக ஒரு அசிரமம் கட்டுவார். கொஞ்ச நாளைக்கு பிரபலமாகும் வரை சில ஆன்மீக சொற்பொழிவுகள், சில தியான முறைகள், அந்த தியான முறைகளால் நோய் தீர்ந்தவர்கள் என்ற சில பக்தர்களின் பேட்டிகள் இது போதும். அந்த ஆன்மீக குருவின் வம்சமே சந்தோஷமாக வாழும். பட்டம் விடும் போது குறிப்பிட்ட உயரம் செல்லும் வரை பட்டம் மேலே ஏறுவது கீழே இறங்குவதுமாக இருக்கும். குறிப்பிட்ட உயரத்தை அடைந்ததும் பட்டம் கீழே இறங்காமல் நிலையாக நின்றுவிடும் சிறுவர்கள் இதை மேல் காற்று என்பார்கள். அப்படித்தான் ஆன்மீக குருக்களின் வாழ்வும் கொஞ்சம் முயற்சி செய்து பிரபலமடைந்து விட்டால் போது அதற்கு பிறகு அவர் செய்ய வேண்டியது எதுவுமில்லை.

வியாபார வித்தை:

வியாபாரத்தை பெருக்குவது எப்படி என்று பல பல்கலைகழங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களே முழிபிதிங்கியிருக்கும் போது. இந்த ஆன்மீக குருக்கள் மிக எளிதாக வியாபாரத்தை செய்து முடித்துவிடுகிறார்கள். மிகச்சிறந்த எழுத்தாளரின் புத்தங்கள் கூட கனிசமான அளவே விற்பனையாகிறது. ஆனால் ஆன்மிக குருவின் உபதேசங்கள் அடங்கிய புத்தங்கள் பெருமளவு விற்று தீர்ந்துவிடுகிறது. புத்தகம் விற்பது, இவர்களின் புகைப்படம் விற்பது, இவர்களின் படம் இருக்கும் பேனா விற்பது, இவர்களின் சொற்பொழிவுகள் அடங்கிய ஆடியோ, விடியோ சிடிகள் என அனைத்தையும் எளிதாக விற்று காசு பார்த்துவிடுகிறார்கள். இது போதாதென்று இவர்களின் ஆன்மிகத்தன்மையை சந்தைப்படுத்துவதற்கென்று சிஷ்யக் குழுக்கள் உண்டு. இவர்கள் பல புதிய பக்தர்களை கூட்டி வருவதற்கும். ஆன்மீக குருவின் விற்பனைப் பொருற்களை விற்பதற்கும் பயன்படுபவர்கள். சமீபத்தில் ஒரு ஆன்மீக குருவின் சிஷ்ய குழு ஒன்றை சந்திக்க நேர்ந்தது. சிறிது நேரம் ஆன்மீகம் சம்பந்தமாக பேசிவிட்டு அவர்களுடைய தியான முகாமில் கலந்துகொள்ளச் சொன்னார்கள். நுழைவுக்கட்டணமாக ரூபாய் 700 செலுத்த வேண்டும் என்றார்கள். இப்படி எவ்வளவு 700 ரூபாய்க்கள்! இது தவிர வெளிநாட்டு பக்தர்கள் கொடுக்கும் பணம் என்று வாரி குவிக்கிறார்கள். இதற்கெல்லாம் வரியும் கட்டவேண்டியதில்லை காரணம் இவையெல்லாம் சேவை சார்ந்த அமைப்புகள். அடடா என்ன ஒரு ராஜ வாழ்கை, ராஜாவிற்குகூட சில பொருப்புகள் இருக்கும் இவர்களுக்கும் அதுவும் கிடையாது.

வார்த்தைகளின் சக்தி:

அவருடைய முகம் எவ்வளவு பிரகாசமாக இருக்கிறது தெரியுமா! அவருடைய கண்கள் அமைதியின் உருவமாக திகழ்கிறது. அவர் பேசும் போது எவ்வளவு நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக அனுபவித்து பேசுகிறார் என்று தெரியுமா! அவரிடம் பேசிக் கொண்டிருந்தாலே நம்முடைய மன பாரம் குறைந்துவிடும் என்று ஆன்மீக குருவை நேரில் கண்ட பக்தர்கள் சிலாகித்து சொல்வது வழக்கம். உழைக்காமல் குவிகிறது பணம் அதற்கு வரி பிரச்சனையில்லை, சொகுசான இருப்பிடம், நேர நேரத்திற்கு சத்தான உணவு வகைகள் கிடைத்தால் யார் வேண்டுமானாலும் அந்த ஆன்மீக குருவைப்போல பிரகாசமான முகத்தையும், எவ்வித அவசரமுமில்லாமல் ஒவ்வொரு வார்த்தையாக ரசித்து ரசித்து அமைதியாக பேச முடியும். எனவே மரம் பசுமையாக செழிப்பாக இருக்கிறதே என்று வாய் பிழக்க வேண்டாம். அதற்கு தேவையான நீரும் உரமும் எங்கிருந்து வருகிறது என்பதை ஆன்மீக குருவின் தோற்றத்தில் மயங்குபவர்கள் சிந்திக்க வேண்டும். ஆன்மீக குருக்கள் சொல்லும் தத்துவங்கள் எதுவும் புதிதல்ல ஏற்கனவே நாம் அறிந்த விசயங்கள்தான் அவற்றை புத்திசாளித்தனமாக மக்களை கவரும் விதத்தில் பேசுவது அவர்களின் திறமை. மற்றபடி விஷயம் ஏற்கனவே நாம் அறிந்ததுதான். நாம் உருப்பட வேண்டும் என்று விரும்பினால் நமக்கு தெரிந்த நல்ல விசயங்களை பின்பற்றினாலே போதுமானது.

நீரை நிருத்துங்கள்:

ஆன்மீக குருவிற்கு கொடுக்கும் பணத்தை நிருத்திப் பாருங்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட பொருற்களை கொள்முதல் செய்வதை உடனே நிருத்திப்பாருங்கள். அப்படி செய்தீர்களானால் ஆன்மிக குரு நிலைகுழைந்து போய்விடுவார். அதற்கு பிறகு அவரிடம் தத்துவம் பேச சொல்லிப்பாருங்கள். ஒரு தத்துவமும் அவருக்கு நினைவிற்கு வராது. விலைமதிப்பான ஆடைகள் அணிய முடியாது. சொகுசான கார்கள் வைத்துக்கொள்ள இயலாது, விமான பயணம் செல்ல முடியாது, சத்தான உணவு கிடைக்காது. கிட்டத்தட்ட ஒரு பிரச்சனைக்குறிய பக்தனின் முகம் எப்படி இருக்குமோ அந்த நிலமைக்கு அந்த ஆன்மீக குரு வந்துவிடுவார். பிறகு அவரை சரி செய்ய வேறொரு ஆன்மீக குரு வர வேண்டியிருக்கும். மோசமான பொருற்களை விற்று சம்பாதிப்பவனை வீட மோசமானவர்கள் இவர்கள் ஏனெனில் இவர்கள் அந்த மோசமான பொருற்களை கூட கொடுக்காமல் சத்தமில்லாமல் ரத்தம் உறுஞ்சும் அட்டைப்பூச்சியைப்போல மக்களிடம் பணம் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் நின்று யோசிக்க அவர்களால் இயலாது. பிரச்சனையில் இருந்து வெளியேறிவிட்டால் போதும் என்ற சிந்தனையில் அவர்கள் இருப்பதால். அவர்களால் இதை உணர முடியாது. சரி மக்கள் பணம் கொடுக்கிறார்கள் அதனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் அதோடு நிருத்திக்கொள்கிறார்களா தேடி வரும் பெண்களை கற்பழிப்பது, குழந்தைகளை பல காரணங்களுக்காக கொல்வது, கடத்துவது என பல அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்கிறார்கள். யாராவது குற்றம் சாட்டும் வரை அனைவருமே நல்ல அன்மீக குரு போலத்தான் இருப்பார்கள். ஆன்மீக குருக்கள் உருவாக மக்கள்தான், மக்களின் பணம் தான் காரணம் அதை மக்கள் நிருத்த வேண்டும், திருந்த வேண்டும். பிறகு ஆன்மீக குருக்கள் தோன்ற மாட்டார்கள்.

முக்தியின் வழி:

உங்களின் அன்பிற்கினிய ஆன்மீக குரு இவ்வளவு சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் பணம் மட்டுமே காரணமே தவிர வேறு எந்த தத்துவமும் காரணம் இல்லை. பணமே ஆதார தத்துவம் அவர்களுக்கு. அவர்களுக்கு பணம் கொடுப்பதைவீட அதை சேமித்து, குடும்பத்திற்கு போதுமான அளவு பணத்தை நீங்கள் சம்பாதித்தால் நீங்கள் தேடும் மன அமைதி, நிம்மதி எல்லாம் உங்கள் வீடு தேடி வரும் அதை விட்டு விட்டு நிம்மதியை தேடும் முயற்சியில் ஒரு சோம்பேறியை கோடிஸ்வரன் ஆக்காதீர்கள்.

Series Navigation

பா.பூபதி

பா.பூபதி