எது சுதந்திரம்?

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

மதுமிதா


சுதந்திரம் என்றால் என்ன? விட்டு விடுதலையாவதா? எதை விட்டு, எப்படி விடுதலையாகி, எங்கு செல்வது? ஆசாபாசங்களைவிட்டா? தீயபழக்கங்களை அல்லது தீய எண்ணங்களை விட்டா? எனில் நல்லது என்றால் என்ன? தீயது என்றால் என்ன? இதிலிருந்தெல்லாம் எப்படி சுதந்திரம் பெறுவது? எனில் எது சுதந்திரம்? அந்த சுதந்திரம்
கிடைக்கப் பெற்றிருக்கிறோமா?

இவ்வுலகில் உதித்து உதிர்ந்த எத்தனையோ மகான்கள் எவ்வளவோ கருத்துகளை மக்களின் நலனுக்காக கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். எல்லா தளைகளிலிருந்தும்
விடுபடவே, சுதந்திரத்தை முன்னிறுத்தியே சொல்லிவிட்டு சென்றிருக்கின்றனர். அவை ஒட்டியும் வெட்டியும் மனித மனங்களுக்கேற்ப எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ்வளவுக்குப் பிறகும் இங்கே எதிலெல்லாம் சுதந்திரம் இருக்கின்றன என பார்த்தோமென்றால், எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் இதன் பொருள் மாறுமா? மாறாதிருக்குமா?

கருத்து சுதந்திரம் இருக்கிறதா என்றால், சொன்ன கருத்துக்காகவே வெறுக்கப்படும் மனப்பான்மையே இங்கே அதிகமுள்ளது. கருத்தை எதிர்க்கிறோம் கருத்தைச்
சொன்னவனையல்ல என்னும் மனோபாவம் இன்னும் இல்லை இங்கே.

பேச்சு சுதந்திரம் இருக்கிறதா என்றால், பேசிய ஒரே காரணத்துக்காக தனியான ஒரு முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்படுகிறான்.

மொழி சுதந்திரம் இருக்கிறதா என்றால் மொழியாலேயே பிரிக்கப்பட்டு விரோதம் கற்பிக்கப்படும் சூழலும் உள்ளது.

மத சுதந்திரம் உள்ளதா என்றால், தனக்குப் பிடித்த மதத்தை தேர்ந்தெடுப்பவன் அல்லது மதமே வேண்டாமென இருப்பவன் மததீவிரவாதியாகவோ, நாத்திகனாகவோ ஒவ்வொரு கேட்டகரியில் அடைக்கப்படுகிறான்.

தேச சுதந்திரம் உள்ளதா என்றால் இரு உலகப்போருக்குப் பின்னும், விலங்கிலிருந்து பரிமாணம் பெற்ற மனிதம் இன்னும் இரத்தவாடையை ருசிக்க நாக்கைச் சுழற்றிக்கொண்டு பதுங்கிக் காத்திருக்கிறது.

அரசியல் சுதந்திரம் உள்ளதா என்றால் இடியாப்பச் சிக்கலுக்குள் ஒளிந்துகொண்டு வெந்துகொண்டிருக்கிறது.

தனிமனித சுதந்திரம் என்றால் கேலிக்கூத்தாகிவிட்டது.

பாலியல் சுதந்திரம் என்றால் பேசப்படக்கூடாத பொருளாகிவிட்டது.

அடிமைச் சங்கிலியை தகர்த்தெறிந்து சுதந்திரமாக இருக்க வேண்டி எடுக்கப்பட்டதே மனிதப்பிறவி. அடிமைச்சங்கிலியென ஒன்று இருக்கும் பட்சத்தில், பார்வைக்குத் தெரியும்படியாகவோ, பார்வைக்கு அகப்படாத அடிமை விலங்கை ஏற்றுக்கொண்டாலோ, அதை வலிமையுடன் உடைத்தெறிந்து அதிலிருந்து முற்றும் விலகி சிறகடிக்க வேண்டுமென்பதே அடிப்படை நோக்கம். எனில் எது சுதந்திரம்?

அன்புடன்
மதுமிதா


madhuramitha@gmail.com

Series Navigation

மதுமிதா

மதுமிதா