அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு

This entry is part [part not set] of 50 in the series 20040226_Issue

நாக.இளங்கோவன்


அன்பிற்குரிய வைகோ அவர்களுக்கு,

உங்களின் பொதுக்குழுவில் நீங்கள் வரும் பாராளு மன்றத்

தேர்தலில் நிற்கப் போவது இல்லை என்று முடிவெடுத்து

திரு.இரவிச்சந்திரனை சிவகாசியில் நிற்க வைத்திருப்பதற்குப்

பாராட்டுகள்.

இம்மாதிரியான தலைவர்களைத் தமிழர்கள் நேசிப்பது

இயல்பு.

நீங்கள் தேர்தலில் நிற்காததைவிட அதற்குச் சொன்ன

காரணம்தான் நம்மைப் பெரிதும் மகிழ்வடையச் செய்திருக்கிறது.

அரசியல் காரணங்கள் எதுவாயிருந்தாலும் அது பற்றி

நமக்குக் கவலையில்லை. நீங்கள் சொன்ன காரணங்களில்

ஒரு காரணத்திற்காக நான் உம்மைப் பாராட்டியே

தீரவேண்டும். நான் மட்டுமல்ல தமிழ்கூறு நல்லுலகமும்

உம்மைப் பாராட்டும்.

‘கிராமம் கிராமமாக பட்டி தொட்டி எங்கும் சென்று

திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்புவேன்;

மதவெறி இம்மண்ணில் கால் ஊன்ற விடமாட்டேன் ‘

என்று நீங்கள் கர்ச்சித்திருப்பதுதான்

நம்மைக் கவர்வதற்குக் காரணம்.

நீங்கள் கைதாகிக் கொண்டிருந்த அந்த சூலை-2002

காலத்தில் கீழே உள்ள பாட்டைத்தான் நான் எழுதி தமிழ்-உலக

இணைய மடற்குழுவில் இட்டு என் உள்ளக் கிடக்கையை ஆற்றிக்

கொண்டேன். சற்றே படித்துப் பாருங்கள். மீண்டும் ஒரு முறை

படித்துப் பாருங்கள். நான் மட்டுமல்ல பலருக்கும் இது

உள்ளக் கிடக்கையை ஆற்ற உதவியிருக்கக் கூடும்.

குனிஞ்சு குனிஞ்சு கோலம் போட்ட கோவாலு – இப்ப

குட்டுப்பட்டு நிக்கிறியே கோவாலு!

குருவை மிஞ்சிக் குதிச்சுப் போன கோவாலு – இப்ப

பருந்துகிட்ட சிக்கினியே கோவாலு!

மஞ்சள் துண்டு போட்டுப் போன ஓராளு – இப்ப

மொத்துபட்டு நிக்கிறாரு கோவாலு!

கோவணமே காவியான கோவாலு – அதைக்

கழட்டியேதான் விடுவாங்க கோவாலு!

தனிமனிதச் சண்டை இல்ல கோவாலு – இது

மூனாயிரத் தாண்டுகதை கோவாலு!

பனுவல்களைத் திறந்துபாரு கோவாலு – மெல்ல

மறந்ததெல்லாம் நினைவு வரும் கோவாலு!

எல்லோருமாச் சேர்ந்து இங்கே கோவாலு – எமை

இளிச்ச வாயா ஆக்கீட்டிங்க கோவாலு!

நல்லோரெல்லாம் உங்களால கோவாலு – மனம்

நலிஞ்சுபோயிக் கிடக்கிறாங்க கோவாலு!

இதில் தெரிவது என் நையாண்டி என்றால்

இதனை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்.

ஆனால் அதில் தொனிக்கும் வேதனையை தமிழறிந்த

நீங்கள் தவற விடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

தற்போது உங்களிடம் காணப்படுகிற தெளிவு,

மற்றும் தமிழ், திராவிட இயக்கத்தவரிடம் ஏற்பட்டிருக்கும் தெளிவு

மீண்டும் சற்றே உங்கள் அனைவரிடமும் ஒரு

எதிர்பார்ப்பினை உருவாக்கியிருக்கிறது.

இந்த எதிர்பார்ப்பினை அணையாது எடுத்துச்

செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுக்கும்

தமிழ், திராவிட இயக்கத்தினருக்கும் இருக்கிறது.

தற்போது ஏற்பட்டிருக்கும் தெளிவும் உணர்வும்

உண்மையானது என்றால், தமிழ், திராவிட இன உணர்வாளர்கள்

அண்மையில் பட்ட கொடுமைகளை நான் வரவேற்கிறேன்.

மறுமலர்ச்சி என்பது இப்படித்தான் ஏற்படும் என்றால்

அப்படித்தான் ஆகியிருக்கிறது போலும்.

இது இப்படியிருக்க, பா.ச.க கூட்டணியில்

இருந்து நீங்களும் உங்களின் பாசத்திற்குரிய அண்ணனும்

வெளியேறி வந்த பின்னரும், ஏதோ வாச்பாயி உங்களுடைய

ஒன்று விட்ட சித்தப்பா, அல்லது பெரியப்பா மாதிரி எண்ணிக்

கொண்டு, பா.ச.க வே அவ்வப்போது மறந்து விடுகின்ற

வாச்பாயியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டிருப்பது

பார்க்கவும் கேட்கவும் நன்றாக இல்லை. மாறாக, வாச்பாயி

உங்கள் இருவரையும் மருந்துக்கும் மதிப்பதாகத் தெரியவில்லை.

உறுதி வேண்டும் உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும்.

சரியான பாதைக்குத் திரும்பியிருக்கின்ற நீங்கள்,

இதைக் கருத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

தமிழ், திராவிட இனத்தவர்களை தீக்கங்கு சுட்ட

போது ஒருவருக்கொருவர் மயிலிறகால் மருந்து போட்டுக்

கொண்ட இதே ஒற்றுமை, குறிப்பாக தீங்கும் துன்பமும்

வருங்கால் இருக்க வேண்டிய ஒற்றுமையும் நட்பும்,

என்றும் இந்தத் தமிழ் மண்ணில் நிலைக்க வேண்டும்.

மற்றபடி, உங்கள் குறிக்கோள்கள் வெல்ல வேண்டும்

என்றும், எதிர்காலத்தில் தமிழ்நாட்டை ஆள்வது,

மாறி மாறி ஆள்வது தி.மு.கவும் ம.தி.மு.கவும் ஆக

இருக்க வேண்டும் என்றும், இரு பெரும் கட்சிகளாக தி.மு.கவும்,

ம.தி.மு.கவும் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அந்த நிலையை

ஏற்படுத்த நீங்கள் அயராது உழைக்க வேண்டும் என்றும்,

தமிழகம் இழந்து விட்ட மானமும் மரியாதையும் மதிப்பும்

மீட்டெடுக்கப் படல் வேண்டும் என்றும்,

சிறையில் தொய்ந்த உடல்நலத்தைக்

காத்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டு, நெஞ்சம்

நிறைய வாழ்த்துவதில் மனநிறைவடைகிறேன்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

—-

elangov@md2.vsnl.net.in

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்