‘முரசொலி ‘ மாறன் (1934-2003)

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

காஞ்சனா தாமோதரன்


மறைந்த திரு. ‘முரசொலி ‘ மாறன் அரசியல்வாதி, தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்-இயக்குநர்-வசனகர்த்தா என்று பன்முகம் வாய்ந்தவர்.

திரு. மாறனின் முக்கியப் பங்களிப்புகள் உள்நாட்டு அரசியல் விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, அவரது உலகப் பொருளாதார-அரசியல் பற்றிய ஆழமான புரிதலிலிருந்தும் நிர்வாக அனுபவத்திலிருந்தும் எழுபவை. பண்பு குறையாத அழுத்தத்துடன் நேரடியாய்த் தன் பார்வையை முன்வைத்துப் பிறநாட்டு அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் திறமையுள்ளவர்; அதனாலேயே அமெரிக்கா உள்படப் பல தேசத்து அரசுகளாலும் மதிக்கப்பட்டவர். உலகமய உலகில் இந்தியாவின் இடம் பற்றித் தன்னளவில் தெளிவான திடமான கருத்துகள், கொள்கைகள், செயல்பாடுகள் மூலம் இந்தியப் பொருளாதார வரலாற்றில் தடம் பதித்தவர். உலக வர்த்தகத்தில் ஐரோப்பிய-வட அமெரிக்கத் தேசங்களின் பல்லாண்டு காலத்திய அதிகார வர்க்கமுறைமையைத் தட்டிக் கேட்டுச் சமதளம் கோரி, பிற வளர்முக நாடுகளுக்கு முன்மாதிரியாக விளங்கியவர்.

திராவிட முன்னேற்றக் கழகக் கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினராக முப்பத்தைந்து வருடங்கள். மத்தியப் பெருநகர் வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி (1989-90). மத்தியத் தொழில்துறை அமைச்சராய் இருந்த வருடங்களில் (1996-98), கொள்கைச் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய நெடுங்காலத் திட்டங்களின் மூலம், குறிப்பிடத்தக்க அளவிலான அந்நிய முதலீடுகள் இந்தியாவினுள் வர வழி வகுத்தார். 1999 துவங்கி மத்திய வர்த்தக-தொழில்துறை அமைச்சர் பதவியிலிருந்தார். அந்தந்தக் காலகட்டத்து அரசியல் சூத்திரங்களின் படி மத்தியில் பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது (முறையே வி.பி.சிங், தேவ கெளடா & ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய் தலைமையிலான அரசுகள்).

அமெரிக்காவின் ஸியாட்டில் நகரத்தில் கூடிய 1999 உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் திரு. மாறன் ஆற்றிய உரை பல தரப்பினரின் நம்பிக்கையையும் அமெரிக்க வர்த்தக இதழ்களின் கவனத்தையும் மதிப்பையும் ஒருசேர ஈர்த்தது. உரையிலிருந்து சில பகுதிகள்: ‘……..அந்நிய முதலீட்டுக்காக எங்கள் பொருளாதாரக் கதவுகளை நாங்கள் தெளிவான, வெளிப்படையான முறையில் திறந்து வைக்கிறோம். எங்கள் நலத்துக்காக, எங்கள் தேர்வின் படி, எங்களுக்கேற்ற வேகத்தில், முற்போக்கான பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் தாராளமயமாக்கலையும் நடத்துவதில் நாங்கள் உறுதியாயிருக்கிறோம்……. anti-dumping, அறிவுசார் சொத்துரிமை, மானியங்கள் முதலானவை பற்றிய பல ஒப்பந்தங்களின் சமதளமின்மை கவலை தருகிறது. வளர்முக நாடுகளின் இந்தக் கவலை நியாயமானது என்று ஒப்புக் கொள்ளும் அதே வேளையில், ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இறங்க வளர்ந்த நாடுகள் மறுக்கின்றன…….வேளாண்மைத் துறையில், ஏற்றுமதி மானியங்கள் உள்பட வர்த்தகத்தைக் கோணலாக்கும் செயல்பாடுகள் அனைத்தையும் வளர்ந்த நாடுகள் விட்டொழிக்க வேண்டும். அதே சமயத்தில், கிராமம்சார் விவசாயப் பொருளாதாரச் சமுதாயங்கள் தம் உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாக்கவும், தம் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வேலை சம்பந்தப்பட்ட குறிக்கோள்களை அடையவும் ஏதுவான சூழலை வருங்காலப் பேச்சுவார்த்தைகள் கெடுக்கக் கூடாது…… வர்த்தகமல்லாத விஷயங்களான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்சூழல் விதிமுறைகள் ஆகியன உலக வர்த்தக அமைப்பு விவாதப்பொருளாக இணைக்கப்பட்டது பற்றி நிறையப் பேசியாயிற்று…இந்தியக் கலாச்சாரத்தின்/சரித்திரத்தின் அடிப்படைச் சாரம் இயற்கையை மதிப்பது மட்டுமல்ல, அதை வணங்குவதுமாகும். உலக வர்த்தக அமைப்பின் வர்த்தக-சுற்றுச்சூழல் குழுவை நல்லுணர்வு-நம்பிக்கையின் அடிப்படையில் இந்தியா அங்கீகரித்திருக்கிறது. ஆனால், அக்குழுவின் குறிக்கோளையோ அமைப்பையோ ஒருதலையான வர்த்தகக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்தும் வகையில் மாற்றுவதைப் பலமாக எதிர்க்கிறோம்…… தொழிலாளர் குறித்த விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் இந்தியா கவனத்துடன் செயல்படுகிறது; சர்வதேசத் தொழில்துறை அமைப்பின் முறைமைகளில் பலவற்றை அங்கீகரித்துள்ளது…ஆனால், இப்பிரச்சினைகள் உலக வர்த்தக அமைப்பின் அதிகாரத்தினுள் வர முடியாது. இவை சர்வதேசத் தொழில்துறை அமைப்பினால் கவனிக்கப்பட வேண்டியதே சரியானது என்று சிங்கப்பூரில் நாம் முடிவு செய்தோம். இவற்றை எந்த வடிவிலும் இப்போது இங்கே புகுத்துவதை இந்தியா உறுதியுடன் நிராகரிக்கிறது…. ‘

உலக வர்த்தக அமைப்பு அங்கத்தினரில் முக்கால் பங்காகும் வளர்முக நாடுகளின் வர்த்தக உரிமைகள், உலக வர்த்தக அமைப்பின் அதிகார வீச்சு முதலியனவற்றைத் தெளிவாக வரையறை செய்யக் கோரிய திரு. மாறனின் 1999 ஸியாட்டில் உரை, அவரது 2001 தோஹா மாநாட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் அடித்தளம் போட்டது.

தோஹா நகரத்து (கத்தார்) உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில் சீனா புதிய அங்கத்தினராய்க் கலந்து கொண்டது பொருளாதார-அரசியல் வரலாற்றில் முக்கியமானதாய்ச் சொல்லப்பட்டது. தன் வல்லரசுத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் குறியாயிருக்கும் சீனா இக்கூட்டத்தில் கலந்து கொண்டதில் ஆச்சரியமில்லை. உலகமயமாதல் என்பது பணக்கார G-8 நாடுகளின் ஒருவழி ராஜபாட்டை அல்ல என்று அடித்துச் சொல்லி, தனது நாட்டுக்கும் பிற வளர்முக நாடுகளுக்கும் குரலுண்டு என்று காட்டிய திரு. மாறனின் பங்களிப்பே தோஹா கூட்டத்தின் முக்கிய அம்சம்; சமீபத்திய கேன்கூன் கூட்டத்தில் உலக வர்த்தக அமைப்பின் கீழ்ச் சில முக்கியமான முதலீட்டு முடிவுகளைக் கொண்டு வர ஐரோப்பிய யூனியன் நாடுகள் முயலவும், வளர்முக நாடுகள் அத்திட்டத்தை ‘மாறன் பாணியில் ‘ முறியடித்ததை இங்கு குறிப்பிட வேண்டும்.

தோஹா கூட்டத்தில், அது முடிய வேண்டிய நேரத்தையும் கடந்து, திரு. மாறன் தன் தரப்புக்கான வாதத்தை விடாப்பிடியாகத் தொடருகையில், வளர்ந்த நாடுகளுக்கு உட்கார்ந்து கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. ( ‘வாஷிங்டனுடன் வேண்டுமானால் ‘தொலைபேசு ‘ங்களேன், திரு. மாறன் ? ‘ ‘நன்றி, நான் டெல்லியுடனேயே பேசிக் கொள்கிறேன், அது வரை காத்திருக்கிறீர்களா ? ‘) இறுதியில், வளர்முக நாடுகளுக்குச் சில வெற்றிகள்–இந்த அரங்கத்தில் இந்த நாடுகளின் முதல் வெற்றிகள். அமெரிக்காவின் anti-dumping விதிகள் மற்றும் ஐரோப்பாவின் விவசாய மானியங்கள் ஆகியன அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்ற உத்தரவாதம். காப்புரிமை மற்றும் அந்நிய முதலீடு பற்றிய விதிமுறைகளின்படி நடக்கப் பழகுவதற்கு மேலதிக அவகாசம். ‘எய்ட்ஸ் ‘ முதலான நோய்களுக்கும் தேசீய அவசரநிலைக் காலங்களின் நோய்களுக்கும் மருந்து உற்பத்தி செய்வதற்குக் காப்புரிமை விதிவிலக்கு. உலகமயமாதல், உலக வர்த்தக அமைப்பு முதலியவற்றை ஒட்டுமொத்தமாய் எதிர்த்து நிராகரிக்கும் மக்கள் அமெரிக்கா உள்பட உலகம் முழுதும் உண்டு. திரு. மாறனின் பார்வை வேறுபட்டது: ‘நாம் ஒரு வலுவான பொது வர்த்தக அரங்கத்தை வேண்டுகிறோம்; அது விதிமுறைகளைச் சார்ந்து இயங்க வேண்டும், அதிகாரத்தைச் சார்ந்து அல்ல ‘ — அதிகார வட்டத்தினுள் நின்றபடியே அந்த வட்டத்து விதிகளை (ஓரளவேனும்) மாற்றியமைத்துத் தன் மக்களுக்குக் கடமையாற்றும் திறனுள்ள ஓர் அரசியல்வாதி.

2002-ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ‘பிசினஸ் வீக் ‘ வர்த்தக இதழ் ‘கவனிக்கப்பட வேண்டிய உலகத் தலைவர்க ‘ளுள் ஒருவராய்த் திரு. மாறனை இனங்கண்டு கெளரவித்தது. அமெரிக்கத் தேசீயப் பாதுகாப்பு ஆலோசகர் திரு. கான்டலீஸா ரைஸ், ஜோர்டானிய மன்னர் திரு. அப்துல்லா, சீனத் துணையதிபர் திரு. ஹ்யூ ஜின்டாவோ முதலியோர் அடங்கியது இப்பட்டியல்.

திரு. மாறன் உள்ளிட்டோர் திடமாக நம்பிச் செயல்படுத்திய தாராளமயமாக்கல்-தனியார்மயமாக்கல்-உலகமயமாக்கல் (liberalization-privatization-globalization/ LPG) கொள்கைதான் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆகச் சிறந்த வழியா என்ற கேள்வி பல்வேறு பின்னணிகளிலிருந்தும் கேட்கப்பட்டிருக்கிறது; ஒரு ஜனநாயகச் சமுதாயம் உரிமையுடன் எழுப்பும் இக்கேள்வியை இங்கு குறிப்பிடுவதே முழுமை. இக்கேள்வியின் இலட்சியவாதத்துக்கும் யதார்த்தத்துக்குமிடையே உள்ள தொலைவை அளக்கச் சில கேள்விகள்: வெளியுலகத்தின் பெரும் பொருளாதார-அரசியல்-தொழில்நுட்ப மாற்றங்களிலிருந்து இந்தியா தன் கதவுகளை மூடிக் கொண்டிருந்திருப்பது சாத்தியமா ? அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய ஆதாயம் என்ன, இழப்பு என்ன ? அந்தப் பாதையில் போயிருந்தால் உலக/ஆசியப் பொருளாதாரத்திலும் உலக/ஆசிய அரசியலிலும் இந்தியாவின் இடம் இன்று என்னவாக இருந்திருக்கும் ? இக்கேள்விகளின் இயல்பான மறுபக்கமாய்த் தொடரும் கேள்விகளும் உண்டு: வெளியிலிருந்து வரும் முதலீடுகளினால் பெறும் வளர்ச்சியின் மூலம் உள்ளார்ந்த பலங்களையும் வளர்ச்சியையும் முதலீட்டுச் சக்தியையும் ஊட்டி ஊக்குவிக்கும் தொலைநோக்கு, அதற்கான நிர்வாக உள்கட்டமைப்புகள்; வளர்ச்சியின் பயன்கள் சமுதாயத்தின் அனைத்து மட்டங்களுக்கும் எட்டும் பகிர்தல் முறை, அதற்கான நிர்வாக உள்கட்டமைப்புகள்; பொருளாதார வளர்ச்சியும் சமூக/தனிமனித வளர்ச்சியும் கைகோர்த்துச் செல்லுவதன் அவசியம்; இவை போல் இன்னும் பல கேள்விகளையும் அவற்றுக்கான அறிவுபூர்வமான தீர்வுகளையும் தொடர்ந்து முன்வைக்க வேண்டியது இந்தத் தலைமுறையின் பொறுப்பு.

திரு. மாறன் உலகப் பொருளாதாரம் பற்றி ஸியாட்டிலில் பகிர்ந்து கொண்டது உள்நாட்டுச் சமூக-பொருளாதார நிலைக்கும் பொருந்தும் முக்கியமான பார்வை: ‘….எந்தப் பேச்சுவார்த்தையின் மையக்கருவும் வறுமையை முற்றிலும் ஒழிக்கும் சக்தியுள்ள முழுமையான வளர்ச்சி பற்றியதாய் இருப்பது அவசியம். வறியவர்களின் பிரச்சினைகளைப் பின்னுக்குத் தள்ளி விட்டுப் பொருளாதார ஒற்றுமை முன்னகர முடியாது…..ஒரு சில அதிர்ஷ்டசாலிகள் மட்டுமேயல்லாமல் பூமியின் மக்கள் எல்லாரும் பயனுறும் முன்னேற்றமே நமக்குத் தேவையானது. ‘

திரு. மாறனின் மறைவுக்கு இரங்கல்கள்.

(சில தகவல்களுக்கு நன்றி: இந்தியத் தூதரகம், வாஷிங்டன்.)

நவம்பர் 24, 2003

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்