கடிதங்கள் – நவம்பர் 27,2003

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

பித்தன் – பரிமளம் – ரோஸா வசந்த்


நாக.இளங்கோவனின் ‘காசி யாத்திரை ‘ படித்தேன். உண்மையான கரிசனங்கள். நியாயமான கேள்விகள். ஆனாலும் ‘இந்து ‘ ராமுக்கு ஒரு நியாயம், கலைஞருக்கு ஒரு நியாயமா என அவர் வியப்பது வியப்பளிக்கிறது. அதுதானே தமிழ் நாட்டில் பல காலமாக நிலவி வரும் நடப்பு. அது தானே தமிழக பத்திரிக்கைகளின் ‘பத்திரிக்கை தர்மம் ‘! நீதி, நியாயங்களைத் தூக்கி கடாசிவிட்டு, தமக்கு பிடித்தவர்களை தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவது. பிடிக்காதவர்களை சகட்டு மேனிக்கு -காரண காரியமற்று- திட்டுவது, இகழ்வது இதுதானே நடக்கிறது. துக்ளக் சோ, இந்து ராம் போன்றவர்கள் பல காலமாக இதைத்தானே செய்கிறார்கள்.இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை ஐயா. நாட்டு நடப்பை நன்கு அறிந்துகொள்ளுங்கள். தமக்கு ஒரு நியாயம் அடுத்தவருக்கு ஒன்று என்பது அரசியல், பத்திரிக்கை துறைகளில் புதிதல்லவே.

அண்மையில் மணிசங்கர் தாக்கப்பட்டதற்கு மறுநாள் செய்தியாளர்களுக்கு ஒரு உருக்கமான ( ?!) கட்டுரையை ஜெயலலிதா வாசித்தார். அதில் முக்கியமான பகுதி இது, ‘கோவிலுக்கு யானை செலுத்துவதோ, நேர்த்திக்கடன் செய்வதோ என் தனிப்பட்ட நம்பிக்கை. தனிமனித சமய நம்பிக்கையை விமர்சிப்பது நாகரிகமான செயல் அல்ல. அந்த நாகரிகம் கூட இல்லாமல் மணிசங்கர் என்னை அப்போது விமர்சித்தார் ‘ என்பது. இவரின் தனிப்பட்ட சமய நம்பிக்கையை விமர்சிப்பது நாகரிகமானது அல்ல எனின், காலம் காலமாக இருந்துவரும் பல குடும்பங்களின் சமய நம்பிக்கையை, பலி கொடுத்து குலதெய்வங்களை வணங்கும் சமய நம்பிக்கையை விமர்சிப்பது எந்த நாகரிகத்தில் சேர்ந்தது ? அதை சட்டம் போட்டு தடை செய்ய இவருக்கு என்ன தார்மீக உரிமை உள்ளது ? இவர் நம்பிக்கை மட்டும் ஒரு வேளை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா ? இப்படி நியாய வேறுபாடுகளைப் பற்றி பல உதாரணங்களை அரசியல் மற்றும் பத்திரிக்கைத் துறைகளில் காணலாம்.

– பித்தன்


அறிஞரும் பண்டிட்டும்

அறிஞர் என்னும் பட்டத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும் படிப்பறிவற்ற இலட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கண்களுக்குப் படித்தவராகத் தெரிந்ததால் தரப்பட்ட பட்டம் என்று வைத்துக்கொள்ளலாம் என்றும் ஒருவர் விளக்கம் கொடுத்த பிறகும் ‘அண்ணாவை எப்படி ‘அறிஞர்’ என்று சொல்லலாம் ?’ என்னும் தொனியில் சிவகுமார் அவர்கள் மீண்டும் கேட்பது தேவையற்றது. அதோடு ஜெயகாந்தன் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள் என்று சிவகுமார் கேட்பதும் முறையானதாகத் தெரியவில்லை. அண்ணாதுரையின் எழுத்துகள் அனைத்தையும் இல்லையென்றாலும் ஓரளவாவது படித்த பிறகு தனக்கேற்படும் ஐயங்களைச் சிவகுமார் தானே முன்வைத்து விவாதிப்பது நல்லதெனக் கருதுகிறேன். அதோடு நேரு எவ்வாறு பண்டிட்டுக்குத் தகுதி பெறுகிறார் என்பதையும் விரிவாக விளக்கி அண்ணாதுரையை அவரோடு ஒப்பிட்டுக் குறைகளைச் சுட்டினால் அதுதான் ஒரு நல்ல விவாதத்துக்கான தொடக்கமாக அமையும். இல்லையென்றால் ‘நேரு பண்டிட்டுக்குத் தகுதி பெறுவதைச் சுலபமாக நிறுவ இயலும்’ என்று ஒற்றை வரியில் தான் கூறுவதைப் போலவே அண்ணாவைப் பற்றி மற்றவர் ஒற்றை வரியில் ‘அறிஞர்’ என்று கூறுவதையும் சிவகுமார் ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்.

***

நேரு ‘பண்டிட்’ இல்லையென்பதற்கு எனக்குத் தெரிந்த சில காரணங்கள்.

1. வாரிசு அரசியலைக் கொண்டுவந்தது.

2. கட்டாயக் கல்வியை நடைமுறைப் படுத்தாதது. (மக்களுக்குக் கல்வி முக்கியமானது என்று எண்ணாத ‘பண்டிட்’ நேருவாகத்தான் இருப்பார். படிப்பறிவற்ற காமராசரிடம் இருந்த கல்விச்சிந்தனையை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்)

3. விடுதலைக்குப் பாடுபட்டிருந்தாலும் ஆட்சித்திறன் பற்றிய புரிதல் இல்லாமல் நிர்வாகச் சீர்கேட்டுக்கும் இந்தியா ஊழல் மலிந்த நாடு என்னும் புகழை அடைந்ததற்கும் வழிகோலியது.

4. மனித உரிமைகளில் கவனம் செலுத்தாதது.

5. காஷ்மீரில் ‘கருத்தறியும் வாக்கெடுப்பு’ நடத்தப்படும் என்று காஷ்மீரிகளுக்கும் ஐ.நாவுக்கும் கொடுத்த உறுதிமொழியைக் காற்றில் பறக்கவிட்டது. (சொன்ன சொல்லைக் காப்பாற்றாதவர் இழிவினும் இழிந்த மனிதரென்பது என் கொள்கை)

*** திண்ணையை மீண்டும் எட்டிப்பார்க்க இரண்டு மாதங்களாகலாம். தேவையற்றது என்று நான் கருதினாலும் ‘அறிஞர்’ பற்றிய விவாதம் தொடர்ந்தால் பிறகு வந்து கலந்துகொள்கிறேன்.

பரிமளம்.


நம் தமிழ் அறிஞர் சமுதாயத்தை சுளையிருக்க தோல் விழுங்கி என கூசாமல் சொல்லலாம். அலுப்பூட்டும் வெட்டிப் பேச்சில் வீணடிக்க மனம் விரும்பாமல் நொந்து போயிருக்கும் வளரும் இலக்கிய வாதிகள் எத்தனை பேரோ. ஜெயமோகன் எட்டு புத்தகங்கள் போட்டிருக்கிறார், எதிர்தரப்பில் இளையபாரதி எட்டு புத்தங்கள் போட்டுருக்கிறார் இவ்வளவு அக்கப் போர்களுக்கும் நடுவில் அந்த புத்தகங்களைப் படித்து உருப்படியாய் கருத்து சொல்ல ஒருவருக்கும் ஆர்வமில்லை.

படைப்புகள் காலத்தினால் உரைத்து மதிப்பிடப் படுகின்றன என்பதில் முழு நம்பிக்கை அற்ற நிலை தெள்ளன தெரிகிறது.தனி நபர் தாக்குதலும்,குழு அரசியலும் பதற்றத்துடன் தன்னை நிறுத்திக் கொள்ளவிழையும் எத்தனங்களிளும். இலக்கியம் எழுதும் கணத்திலெயே அதற்கான சந்தோசத்தை கூலியாக கொடுத்து விடும் என்று சொல்லவிரும்பும் ஆளை எளிதாக பொட்டலம் கட்டி பழமைவாதி என வீசிவிடுவார்கள்.புத்தக வியாபாரத்திலும்…இலக்கிய அரசியலிலும் உழன்று குட்டிப் போட்டிருக்கும் பெருச்சாளிகள். இன்னமும் கடுமையான இன்னல்களுக்கிடையில் சிறுபத்திரிக்கைகளின் ஊடாக இலக்கியம் வளர்க்க நினைக்கும் நமக்கு இது போன்ற destructive approach தேவையா ?

சுப்பிரமணியன் ரமேஷ்

subramesh@hotmail.com


பல விஷயங்களுக்கு பதில் சொல்ல நினைத்து, தள்ளி போட்டு, அலுப்பின் காரணமாக அது முடியாமலும் போய்விடுகிறது. இந்த சிவகுமார் என்ற ஜாதிவெறியர்(ஆமாம் ஜாதி வெறியரேதான், இது பெயிண்ட் அல்ல அவரே சான்றும் தருகிறார்) செய்யும் அழிம்பு தாங்கமுடியாமல் இந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும் குறிப்பிடுகிறேன். சிவகுமார் விஷயத்தை நேர்மையாய் கையாளும் தோற்றமளித்தால் பிறகு மீண்டும் நான் வினையாற்ற வரலாம்.

காந்தியின் நேர்மை குறித்து, அவரை ஏன் நம்ப முடியாது என்று , அவரிடம் ஏன் ஜாக்கிரதையாய் இருக்கவேண்டும் என்பது குறித்து அம்பேத்கார் விரிவாக எழுதியுள்ளார். காந்தியை ஏன் மகாத்மா என்று அழைக்க முடியாது என்று பெரியார் விரிவாய் பலமுறை பேசியிருக்கிறார்(அதற்கு மாறாகவும் இந்துதவத்தால் காந்தி கொல்லப்பட்ட போது எழுதியுள்ளார்). காந்தி மாகாத்மா என்று நிறுவ முடியும்( நிறுவுதல், அதையும் மாகத்மா பண்டிட் போன்ற அடைமொழிகளையெல்லாம் நிறுவுவதல் குறித்து சிவக்குமார் தன் அசட்டு அகராதியில் என்ன அர்த்தம் வைத்திருக்கிறர் என்று சொன்னால்தான் விளங்கும்) என்று சொல்வதற்க்கு முன்னால் இந்த வாதங்களை எதிர்கொள்ளவேண்டும்.

மீண்டும், மீண்டும் `நிறுவமுடியும் ‘ என்று பீலாவிடுகிறாரே ஒழிய சிவகுமார், ஏன் காந்தி மகாத்மா ஆனார், எப்படி நேரு பண்டிட் ஆனார் என்பதற்க்கு அதரவாக ஒற்றை வாதத்தை கூட முன்வைக்கவில்லை. துணைக்கு நரேந்திரனின் அசட்டு கட்டுரையையும் அழைத்து கொள்கிறார். சரி, காந்தி மகாத்மா என்று சொல்ல சில வாதங்களை முன்வைக்க முடியும். அகிம்சை அது இதென்று பேசலாம், சரி. நேரு எப்படி பண்டிட் ஆனார் ? சிவக்குமாரின் விளக்கம் அறிய மிகவும் ஆவலாய் இருக்கிறேன்.

என்னுடைய எல்லாவித அறிதலின் படி நேருவிற்க்கு `பண்டிட் ‘ என்ற அடைமொழி இருக்க ஒரே காரணம் அவரது ஜாதி. காஷ்மீர் பண்டிட் என்ற பார்பன இனத்தை சேர்ந்த ஒரே காரணத்தால் தன்னுடைன் `பண்டிட் ‘ என்ற அடைமொழியை காலம் முழுவதும் கொண்டிருந்தார், கொண்டிருக்கிறர். பண்டிட் என்ற அடைமொழி அவருக்கு எந்த கூச்சத்தை அளித்ததாக தெரியவில்லை. சிவகுமார் நேரு பண்டிட் என்பதற்க்கு தகுதியானவர் என்பதை நிறுவமுடியும் என்று கூறுவதை பார்தால், ஜாதி அடிப்படையில் ஒருவர் பண்டிட் ஆகலாம், ஆனால் பல ஆயிரம் இளைஞர்களை தனது நாவால், பேச்சால் ஈர்த்த, மக்களிடையே ஒரு பாதிப்பை ஏர்படுத்திய அண்ணா அறிஞர் ஆகமுடியாது என்ற மனுதர்மம் சார்ந்த தனது சாதிவெறியை சிவகுமார் வெளீப்படுத்தியதாகத்தான் கொள்ளவேண்டும்.

ஆனால் சந்தேகத்தின் பலனை அவருக்கு அளித்து நான் அப்படி நினைக்கவில்லை. சிவக்குமார் அறியாமையால்தான் அப்படி கூறுவதாக நினைக்கிறென். ஆனாலும் நேரு பண்டிட் ஆக இருப்பதன் காரணம் தெரியாமலே அதை நிறுவ இயலும் என்று தைரியமாக சொல்வதே அவரது சாதி, இன வெறி மனப்பன்மையைத்தான் காடுகிறது. எப்படி எனபதையும், சிவக்குமார் எழுதியுள்ளதின் மற்ற அபத்தங்களையும், என்னை மீண்டும் வினையாற்றும் அளவிற்கு provoke செய்தால் பிறகு பார்கலாம்.

ரோஸாவசந்த்.

rksvasanth@yahoo.com


Series Navigation

பித்தன் - பரிமளம் - ரோஸா வசந்த்

பித்தன் - பரிமளம் - ரோஸா வசந்த்