நிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

வெளி ரெங்கராஜன்.


பெரியாருடைய கருத்துக்களின் தொகுப்பிலிருந்து ஒரு கோர்வையற்ற தேர்வும், சேர்க்கையும் கூட ஒரு இயக்கத்தின் குணாம்சமும், வலிமையும் கொண்டு ஒரு நெகிழ்வான மேடை இயக்கத்தை அளிக்க முடியும். அதே சமயம் எவ்வளவு செறிவுடன் முன்நிறுத்தப்படும்போதும் பெரியாரின் ஆளுமை அவற்றில் சிக்காமல் திருப்தியற்று நழுவிவிட கூடிய அபாயமும் உண்டு. பெரியார் குறித்த நிஜ நாடக இயக்கத்தின் நாடகமாக்கலில் இத்தகைய கலவையான பல உணர்வுகளை பெற முடிந்தது.

பெரியாருடைய இயக்க உணர்வுகளிலிருந்து பெரிதும் விலகிப்போய்விட்ட இன்றைய தமிழ் சூழலில் உண்மையும் தீவிரமும் கொண்ட பெரியார் போன்ற ஒரு சமூகச் செயல்வீரரின் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் வேண்டி நிற்கிற ஒரு பார்வையாளர் கூட்டத்தின் முன் பெரியார் குறித்த எத்தகைய மேடைச் சித்திரமும் ஒரு எழுச்சியை உருவாக்கவும், பல இடைவெளிகளை இட்டு நிரப்பவும் முடியும் என்பதற்கு மு.ராமசாமியின் நாடக நிகழ்வு ஒரு நிரூபணமாக இருந்தது. இத்தகைய உணர்வு பூர்வமான ஒரு பார்வையாளர் ஈடுபாட்டில் நாடகத்தின் பல பலகீனங்கள் மறக்கப்பட்டு நாடகம் விட்டுச்சென்ற பல சரடுகளை கோர்த்துச் செல்லும் மனநிலையே பார்வையாளர்களிடம் மேலோங்கி இருந்தது. பெரியாருடையதே ஒரு பெரும் மக்கள் திரளை உடன் இணைத்துச்சென்ற ஒரு இயக்கம் தானே. நாடகம் படிப்படியாக விரிந்து சென்றதில் பார்வையாளர்களின் மனப்பயணங்கள் கணிசமான பங்கு வகித்தன என்றே கூற வேண்டும்.

ஆனால் பெரியாரின் நாடகத்தை எடுத்துக் கொள்வதற்கு இந்த குழுவுக்கு முன் உள்ள காரணங்களாக நடிகர்கள் வெளிப்படுத்தியவை இந்த உணர்வுக்கு எந்த விதத்திலும் நியாயம் சேர்க்கவில்லை. பெரியாருடைய நாடகத்தை எடுத்தாளும் குணாம்சமும், அவருடைய கருத்துக்களை தாங்கிச் செல்லும் உறுதியும், கம்பீரமும் குழுவிடம் போதுமானதாக இல்லை என்பதையே அவர்களுடைய மேடை நடவடிக்கைகள் வெளிப்படுத்தின். பெரியார் குறித்த நாடகத்துக்கான தேர்வு மிகவும் தற்செயலான ஒரு உருவ ஒற்றுமையின் பலத்தில் நேர்ந்தது என்பது குழுவின் கருத்தியல் பார்வைக்கும், தேர்வுக்கும் பெருமை சேர்ப்பதாக இல்லை.

ஆனால் பெரியாருடைய பிரவேசம் நாடகத்தில் நிகழ்ந்த உடனேயே நாடகத்தின் போக்கிலும், குணாம்சத்திலும் ஓர் இறுக்கம் நுழைந்து விடுகிறது. பெரியாருடைய கருத்துக்களின் பின்புலத்தில் ஓரு ஐம்பது ஆண்டுகால சமூக வரலாறும், போராட்ட களனும் நாடகத்தை ஆட்கொள்ள ஆரம்பிக்கின்றன. தாழ்த்தப்பட்டோரின் ஆலய பிரவேசம், காங்கிரசின் சாதிய மனப்பான்மையால் பெரியார் வெளியேற நேர்ந்தது, பக்தியின் பெயரால் மூட நம்பிக்கைகள் மலிந்த தமிழ்ச்சூழலில் கடவுள், மத மற்றும் பிராமண எதிர்ப்பை முன்னிறுத்தியது, ஒடுக்கப்பட்டோருக்கும் பெண் உரிமைக்கும் ஆதரவாக குரல் கொடுத்தது முக்கியமாக எல்லாத வித அடிமைத்தனங்களுக்கும் எதிராக ஒரு தெளிவான சுய மரியாதையையும், விசாரணையையும் முன்னிறுத்துவது என பெரியார் கடந்து வந்த பல கட்டங்கள் பல சம்பவங்களாகவும், உரையாடல்களாகவும், பதில்களாகவும், விளக்கங்களாகவும் நாடகத்தில் இடம்பெற்ற விதம் செறிவாகவும், கூர்மையாகவும் ஒரு இயக்கத்தன்மை கொண்டிருந்தன. இவை தமிழ் சமூகம் கடந்து வந்த பல வரலாற்று கட்டங்கள் என்பதால் ஒரு உணர்வு பூர்வ எழுச்சிக்கான பின்புலம் கொண்டிருந்தன.

ஆனால் நாடகம் ஒரு மிகையான அரசியல் மேடையின் சாயல் கொண்டு தனிமனித சுய விசாரணைகளைத் தாண்டி கோஷ்டி உணர்வுகளுக்குள் தஞ்சம் புகுந்து விடும் அபாயம் கொண்டிருந்தது. பெரியாரைப் போலவே பெரியார் பற்றிய நாடகமும் உண்மையான கட்டுமான அழிப்பிலும், கலகத்திலும், சங்கடத்திலும் பார்வையாளர்களை ஆழ்த்தும்பொழுதுதான் பெரியார் நாடகம் வெற்றி என கொள்ள முடியும். பெரியாருடைய கலக மனப்பான்மையும், இடதுசாரி இயக்க உணர்வுகளும் ஒன்று சேர்ந்திருந்தால் அதிக பயன்கள் விளைந்திருக்கும் என்ற விழைவுடன் கலகக்காரர் தோழர் பெரியார் என்று பெயரிட்டு அந்தப் பின்புலத்தில் நாடகத்தை நிகழ்த்திச் சென்றது ஒரு குறிப்பிடத் தகுந்த மறுவாசிப்பு என்றே சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக மு.ராமசாமி பெரியாருடைய பாத்திரத்தை தாங்குவதற்கான எல்லாவிதமான சரளத்தன்மையுடனும், அழுத்தத்துடனும் வெளிப்பட்டது நாடகத்தின் ஓட்டத்தை பெரிதும் சாத்தியப்படுத்தியது என்றே கூற வேண்டும். தமிழ்ச்சூழலில் இந்த நாடகம் பரவலாக எடுத்துச் செல்லப்படுவதற்கான வாய்ப்புகளை இது உருவாக்கி உள்ளது.

ஆனால் போலிஸின் பிடியிலிருந்து இந்த நாடகத்தை வெளியே கொண்டுவருவதில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் எதிர்கொண்ட பிரச்னைகளை பார்க்கும்போது பெரியார் நாடக செயல்பாட்டின் கலக குணாம்சம் அதிக முக்கியம் பெறுகிறது.

—— நன்றி : நிழல்

Nizhal

31/48 Rani AnnaNagar

K.K.Nagar

Chennai – 78.

Ph : 247 28326

nizhal_2001@yahoo.co.in

Series Navigation

வெளி ரெங்கராஜன்

வெளி ரெங்கராஜன்