கோவாவில் பொது சிவில் சட்டம்

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

தேவிதாஸ் குப்தா (அவுட்லுக்)


அரசாங்க கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy)-இன் ஷரத்து 44 ‘அரசாங்கம் ஒரு பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுமைக்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் கொண்டுதர முயலவேண்டும் ‘ என்று கோருகிறது.

இந்த முயற்சியைச் செய்ய, மத்தியில் வந்த அரசாங்கங்கள் தொடர்ந்து தயங்கியே வந்திருக்கின்றன. ஆனால் கோவாவில் பொது சிவில் சட்டம் இன்றும் அமலில் இருந்து வருகிறது ,இந்து முஸ்லிம், கிறுஸ்துவர்கள் என எல்லா மதத்தினரும் ஒப்புதல் அளித்து இந்தச் சட்டம் நடைமுறையில் உள்ளது என்பது பல இந்தியர்களுக்குத் தெரியாதது. கோவா சிவில் சட்டங்களின் தொகுப்பு கோவா குடும்பச் சட்டம் என்று அழைக்கப் படுகிறது. 19-20 நூற்றாண்டுகளில் போர்த்துகீசிய காலனியமைப்பின் கீழ் உருவந்தரப்பட்டு, இது அமல்படுத்தப் பட்டது. 1961-ல் கோவா விடுவிக்கப்பட்டபின்பு இந்திய அரசு எல்லா காலனியச் சட்டங்களையும் ரத்து செய்தது. ஆனால் கோவாவின் குடும்பச்சட்டம் மட்டும் ரத்து செய்யப் படவில்லை. காரணம்: எல்லா மதத்தினரும் இதை வேண்டிக் கேட்டுக் கொண்டனர். முன்னாள் தலைமை நீதிபதி ஒய் வி சந்திரசூட் ‘ பொது சிவில் சட்டம் பற்றிய தேசத்தின் கனவு கோவாவில் நனவாகியுள்ளது ‘ என்று குறிப்பிட்டு, ‘மதப் பிரிவினைகளில் சிக்குண்ட இந்தியா ஒரு நாள் விழித்தெழுந்து கோவாவைப் பின்பற்றும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அருண் சின்ஹா சமீபத்தில் ஒரு நூல் வெளியிட்டுள்ளார்: ‘ கோவா இந்தியா : காலனியாதிக்கத்திற்குப் பின்பட்ட கோவா பற்றி ஒரு விமர்சனச் சித்திரம் ‘. இதில் எப்படி பொது சிவில் சட்டம் மத அடிப்படைகளைத் தாண்டியுள்ளது என்று விவரித்துள்ளார். பெண்களை மோசமாக நடத்த முடியாதபடி உரிமைகளை கோவாவின் பொது சிவில் சட்டம் வழங்கியுள்ளது என்கிறார். சொத்தில் சம உரிமை இருப்பதால் பெண்களின் நலன் பாதுகாக்கப் படுகிறது. விவாகரத்து பெற்றால் குடும்பச் சொத்தில் பாதி பெண்களைச் சேர்ந்தது. கோவாவில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பொது சிவில் சட்டம் போர்த்துகீசிய சிவில் சட்டத்தின் அடிப்படை தத்துவம் குடும்பத்தைப் பாதுகாப்பதாகும். சமூகத்தின் முதுகெலும்பான குடும்பம் பரஸ்பர சகிப்புத்தன்மையில் இயங்கி, குடும்பத்தில் எவரும் பிறர் மீது அநீதி செலுத்தாத முறையில் அமைந்துள்ளது என்கிறார் சின்ஹா. இந்த சிவில் சட்டத்தின் பெண்களைப் பாதுகாக்கும் ஷரத்து இப்படி அமைந்துள்ளது : திருமணத்திற்கு முன்னும், பின்னும் எந்த சொத்து எவரால் சேகரிக்கப் பட்டிருந்தாலும் அது குடும்பப் பொதுச் சொத்தாகும். திருமணம் முடிவுக்கு வரும் வரையில் இது பொதுச் சொத்தாகவே இருக்கும். இந்தியாவின் மற்ற பகுதிகளில் தனிச்சட்டங்கள் பெண்களுக்கு சமத்துவம் தராத சட்டங்கள். இதனால் கணவனை முழுக்கச் சார்ந்தும் , கணவனின் முஸ்லிம் தனிச்சட்டம் பெண்களுக்கு எதிரான பல ஷரத்துகளைக் கொண்டது. இதனால் பெண்கள் ஆதரவிழந்து தவிக்கிறார்கள். முஸ்லிம்கள் தவிர்த்த மற்ற மதத்தினரின் தனிச் சட்டமும் பெண்களுக்கு எதிரானதே. விவாக ரத்துப் பெற்ற இந்து பெண்மணியும் கூட வெறும் 20 அல்லது 30 ரூபாய் ஜீவனாம்சம் பெற்று வாழ்க்கை நடத்த வேண்டிவருகிறது. இதற்கு மாறாக விவாகரத்துக் கோருதல், ஜீவனாம்சம், குழந்தைகள் மீதான உரிமை, சொத்துரிமை, தத்து எடுக்கும் உரிமை எல்லாவற்றிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்குகிறது.

கோவாவின் குடும்பச் சட்டத்திலும் சில அநீதிகள் உண்டு ன்கிறார் சின்ஹா. உதாரணமாக ஓர் இந்து மனைவி 25 வயதிற்குள் ஒரு குழந்தையைப் பெறாவிட்டாலோ, அல்ல்து 30 வயதிற்குள் ஒரு ஆண்குழந்தையைப் பெறாவிட்டாலோ, விவாகரத்துக் கோரும் உரிமை கணவனுக்கு உண்டு. ‘இது மிகவும் அபத்தமான ஒரு சட்டப் பகுதி. சட்ட மைப்பும் சரி, சமூக விதிகளும் சரி இதை ஒப்புக் கொள்வதில்லை ‘ என்கிறார் சின்ஹா. சநாதன முஸ்லிம் மதவாதிகள் பலமுறை கோவாவின் பொது சிவில் சட்டத்தை எறிந்துவிட்டு , இந்தியாவின் முஸ்லிம் தனிச்சட்டத்தை கோவாவிற்கும் அமல் படுத்தக் கோரி 1980-களில் ஒரு போராட்டம் நடத்தினர். கோவாவின் சட்டசபையில் இருந்த ஒரு முஸ்லிம் அமைச்சரும் இதற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் ஓர் இளம் முஸ்லிம் பெண்மணி ரஷீதா முசவர் – அப்போது சட்டம் முதல் ஆண்டு மாணவி இவர் – இதற்கெதிராக மிகத் தீவிரப் போராட்டம் ஒன்றை மக்கள் ஆதரவுடன் நடத்தினார். முல்லாக்களுக்கு எதிராக இவருடைய பேச்சு பெரும் மக்கள் திரளைத் திரட்டியது. ஷரியத் சட்டம் கோவாவில் அமல் படுத்தக் கோரியும், அதை எதிர்த்தும் கிட்டத்தட்ட ஒரு வருடம் போராட்டமும் எதிர்ப் போராட்டமுமாக இது தொடர்ந்தது. கடைசியில் தாராளவாத முஸ்லீம்கள் கோவாவில் பெரும் எண்ணிக்கையில் இதனை எதிர்க்கவே, பொது சிவில் சட்டம் தொடர்ந்தது. நீதிபதி சந்திர சூட் இப்படிக் குறிப்பிட்டார். ‘ இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம் இன்று வெகுதூரத்தில் உள்ளது. கோவாவில் பொது சிவில் சட்டம் நீக்கப் பட்டால் அது பின்னோக்கிச் செல்வதாகும். ‘

Series Navigation

தேவிதாஸ் குப்தா (அவுட்லுக்)

தேவிதாஸ் குப்தா (அவுட்லுக்)