‘எது நியாயம் ? ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)

This entry is part [part not set] of 40 in the series 20031225_Issue

செங்காளி


அன்று ஞாயிற்றுக்கிழமை.அம்மா வழக்கம்போல் காலை ஆறுமணிக்கே எழுந்துவிட்டு வேலைகளில் மூழ்கிவிட்டார். அப்பா விடுமுறை நாளை நன்றாகஅனுபவித்தே தீருவது என்பதுபோல் எட்டு மணிக்கு மேல் மெதுவாக எழுந்து, ஒரு கோப்பைக் காப்பியைக் குடித்துவிட்டு, அன்றைய செய்தித்தாளைப் படிப்பதில் ஆழ்ந்துவிட்டார்.

திடாரென்று ‘ஐயா இருக்காங்களா ? ‘ என்று யாரோ கேட்கும் சத்தம் கேட்டு அப்பா சாய்வு நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே சென்று பார்த்தார். ‘அடடா வெங்கடாசலமா, வாங்க..வாங்க ‘ என்று சொல்லி வந்தவரை வரவேற்றார். ஒரு நாற்காலியைக் காட்டி ‘உட்காருங்க ‘ என்றார். இதையெல்லாம் கேட்டுக்கொண்டே சமயலறையிலிருந்து வெளியே வந்த அம்மா, வந்தவரைப் பார்த்துவிட்டு, ‘வாங்க, வாங்க ‘ என்று சொல்லிவிட்டு சமயலறைக்கே திரும்பிப்போய் விரைவில் ஒரு சொம்பில் தண்ணீருடனும் ஒரு தம்ளரில் காப்பியுடனும் வந்தார். ‘காப்பி குடிங்க ‘ என்று சொல்லிவிட்டு, காப்பித் தம்ளரை அவருக்கு பக்கத்திலுள்ள ஸ்டூலின்மேல் வைத்தார். பிறகு தண்ணீர்ச்சொம்பை அவரிடம் கொடுத்தார். ‘எதுக்குங்கம்மா ‘ என்று சொன்னவர், ‘பரவாயில்லை குடிங்க ‘ என்று அம்மா மறுபடியும் சொல்லவே, சொம்பை வாங்கிக்கொண்டார். வெளியே சென்று திண்ணையில் நின்றவாரே முகத்தைக் கழுவிக்கொண்டு, பின்னர் வாயில் தண்ணீர்விட்டுக் கொப்பளித்து உமிழ்ந்துவிட்டு, மேலே போட்டிருந்த துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்ே உள்ளே வந்தார். சொம்பை அம்மா வாங்கிக்கொள்ள, நாற்காலியில் அமர்ந்துகொண்டு காப்பியை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்.

கிராமத்தில் எங்கள் தோட்டமும் வெங்கடாசலத்தின் தோட்டமும் அடுத்தடுத்து இருக்கின்றன. நாங்கள் எங்கள் தோட்டத்திற்கு இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சென்று வருவோம். அப்படிப் போய்விட்டு வரும்பொழுதெல்லாம் அப்பா பக்கத்துத் தோட்டத்திற்குச் சென்று அவரையும் பார்த்து வருவார். அவரிடம் ‘நம்ப தோட்டத்தையும் அப்படியே பார்த்துக்கங்க ‘ என்று சொல்லிவிட்டு வருவார். அவரும் நாமக்கல்லுக்கு வரும்பொழுதெல்லம் எங்கள் வீட்டிற்கு வராமல் போகமாட்டார். இன்று காலையிலேயே வீட்டிற்கு வந்திருக்கிறாரென்றால் ஏதாவது முக்கியமான காரணமாகத் தானிருக்கும்.

அவர் காப்பியைக் குடித்து முடிக்கும்வரை பொறுத்திருந்துவிட்டு, ‘என்ன திடாரென்று காலங்காத்தாலெ இந்தப்பக்கம் ‘ என்று அப்பா கேட்டார். அப்பா கேட்டதற்கு ‘எல்லாம் சொந்த விசயமாத்தான்…உங்ககிட்ட ஒரு உதவி கேட்கலாம்னு வந்திருக்கிறேன்… ‘ என்று சிறிது தயக்கத்துடனே சொன்னார். ‘என்ன தயக்கப்படறீங்க, சும்மா சொல்லுங்க ‘ என்றார் அப்பா. அவர் மறுபடியும் கொஞ்சம் சங்கடப்படுவதைப் பார்த்தவுடனே, தான் இருப்பதால்தான் அவர் இப்படி யோசிக்கின்றார் என்று அறிந்த அம்மா, ‘சரி, நீங்களும் அய்யாவும் பேசிமுடிங்க, அப்புறம் நான்வந்து உங்ககிட்ட கொஞ்சம் பேசவேணும் ‘ என்று வெங்கடாசலத்தைப் பார்த்துச் சொல்லிவிட்டு சமையலறைப்பக்கம் போய்விட்டார்.

அம்மா போகும் வரை பொறுத்திருந்து, ‘எம்பொண்ணு பரிமளம் இருக்குதில்லீங்களா ‘ என்று வெங்கடாசலம் தொடர்ந்தார். ‘அதுக்கு என்னாச்சு ‘ என்று அப்பா சிறிது பதட்டத்துடன் கேட்டார். அதுக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லீங்க. ஆனா ஒரு பயதான் அதுக்கு ரொம்ப தொந்தரவு கொடுத்திக்கிட்டிருக்கிறான்… உங்களுக்குத்தான் தெரியுமே பரிமளம் நம்ப பக்கத்தூரில இருக்கிற பள்ளிக்கூடத்தில படிக்கிறது. அது தெனம் சைக்கிள்ளதான் பள்ளிக்கூடத்துக்குப் போய்வருது. நம்ப ஊருக்கு வடகோடால இருக்கிற வீரப்பன் ஊட்டைத்தாண்டித்தான் போவணும். இப்பத்தான் கொஞ்சநாளா அந்த வீரப்பன் தங்கச்சிப் பையன் ஊரில இருந்துவந்து அவிங்களோட இருக்கறான். தெனம் பரிமளம் பள்ளிகூடத்துக்குப் போறபோதும் வர்றபோதும் அதைக் கலாட்டா பண்ணிக்கிட்டிருக்கான் ‘ என்று ஒரே மூச்சில் சொல்லிமுடித்தார்.

அவர் சொன்னது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, ‘நீங்க போயி அந்த வீரப்பங்கிட்ட சொல்லவேண்டியதுதானே ‘ என்று அப்பா கேட்டதற்கு, ‘அவன் பெரிய மொரடன்னுதான் உங்களுக்குத் தெரியுமே, நான் போய்ச்சொன்னா ஏதாவது ஏடாகூடமா பேசினாலும் பேசுவான்னுதான் உங்ககிட்ட வந்தேன். எங்க பசங்க ரெண்டுபேருங்ட நாங்க போயி அவன மெரட்டாட்டு வர்றம்னுதான் சொன்னாங்க. நாந்தான் வேண்டான்னு சொல்லிட்டு இங்க வந்தேன். நீங்கதான் கொஞ்சம் வந்து, வீரப்பங்கிட்ட பேசி அந்தப் பையனை கொஞ்சம் ஒழுங்கா இருக்கும்படி செய்யணும் ‘ என்றார். ‘அட ஏதோ விளையாட்டுக்குச் செஞ்சிருப்பான் ‘ என்று அப்பா சொன்னதற்கு, அவர் ‘ஒருநாள் ரெண்டுநாளுன்னா பரவாயில்லீங்க. தெனமும் இப்படிப் பண்ணுனா எப்படாங்க. பொண்ணும் அழுதுகிட்டு நான் பள்ளிக்கூடத்துகு போகமாட்டேன்னு தகறாறு பண்ணுது. நான் என்னங்க பண்றது. இதப் பெரிசுபண்ணாம சுமுகமா முடிச்சுட்டா நல்லதுன்னு பாக்கறேங்க. அனாலதான் காலையில எழுந்திரிச்சு ஓடிவந்தேங்க.. முடிஞ்சுதின்னா சிரமத்தப் பாக்காம இப்பவே எங்கூட வந்தீங்கன்னா செளகரியமாயிருக்கும். நீங்க வந்து சொன்னா அந்த வீரப்பன் கேப்பானுங்க ‘ என்றார்.

கொஞ்ச நேரம் யோசனையில் இருந்துவிட்டு, ‘சரி, நான் குளிச்சுட்டு வந்திடறேன். அம்மாகிட்டையும் சொல்லிவிட்டுப் போகலாம் ‘ என்றார் அப்பா. ஏதோ சொல்ல வந்த வெங்கடாசலத்தையும் அமைதியாக இருக்கும்படி சொல்லிவிட்டு அம்மாவைக் கூப்பிட்டு அவரிடம் எல்லாவற்றையும் விரிவாகச் சொன்னார் அப்பா. அம்மா ஒன்றும் பேசாமலிருக்கவே, ‘இவரு கேட்டுக்கிட்ட மாதிரி அந்த வீரப்பனைப் பார்த்துப் பேசிட்டு அப்படியே நம்ம தோட்டத்தையும் ஒரு எட்டி பார்த்திட்டு வந்திடறேன். என்னம்மா நான் சொல்லறது ‘ என்றார் அப்பா. அம்மா இதற்கும் ஒன்றும் பதில் சொல்லாதிருக்கவே, ‘என்னம்மா ஒண்ணுமே சொல்லமாட்டேங்கறே ‘ என்றார் அப்பா. அம்மா மேலும் கொஞ்ச நேரம் பேசாமலிருந்துவிட்டு பிறகு மெதுவாக அப்பாவைப் பார்த்துச் சொன்னார், ‘பரிமளத்திக்கிட்ட அந்தப் பையன் வம்பு பண்ணறதுக்கு அவனை நல்லா கண்டிக்கவேண்டியதுதான். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க ஒண்ணு செய்யணுமே….. ‘ இதைக் கேட்டவுடன், ‘என்ன, என்னம்மா, சொல்லு ‘ என்றார் அப்பா.

‘சொல்றேன் ‘ என்று நல்லதம்பியைப் பார்த்துக்கொண்டே ‘மொதல்ல இவருடைய பெரிய பையனைப் பார்த்து புத்தி சொல்லுங்க… ‘ என்றுஅம்மா சொன்னார். இதைக்கேட்டவுடன் நல்லதம்பியும் அப்பாவும் சிறிது திடுக்கிட்டுப்போனார்கள்.

அம்மா அதைக் கவனிக்காதது போல மேலே தொடர்ந்தார். ‘அன்னக்கி நம்ம கருப்பன் வந்து உங்ககிட்ட என்ன சொல்லி அழுதான் ? அவன் பொண்ணு..அதான் அந்தப் பூச்சியம்மா நம்ம தோட்டத்திலே வேலை செஞ்சுட்டு, குறுக்கு வழின்னு தினம் இவிங்க தோட்டத்து வழியாத்தான் சேரிக்குப் போகும். அடிக்கடி இவருடைய பெரிய பையன் அதுகிட்ட வம்பு பண்ணியிருக்கிறான். அந்தப் பொண்ணும் பெரிய எடத்து வம்பு எதுக்குன்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு இருந்திருக்குது. ஆனா பத்து நாளைக்கு முன்னால இவன் என்ன செஞ்சான். அதுகிட்ட ரொம்பவும் மோசமா நடந்துகொள்ள, அது பாவம், கட்டியிருந்த சேலையைக்கூட அப்படியே விட்டுட்டு தப்பிச்சாப் போதும்னு வெறும் பாவாடையோ ஒடியிருக்குது. அடுத்தநாள் கருப்பன் போயி இவருக்கிட்ட கெஞ்சினதுக்கு இவரு என்ன சொன்னாரு. எம்பய அப்படியெல்லாம் ஒண்ணும் செஞ்சிருக்கமாட்டான், உம் பொண்ண மொதல்ல ஒழுங்கா இருக்கச்சொல்லுன்னு சொல்லியிருக்காரு. அப்பறந்தான் கருப்பன் நம்ம வீட்டுக்கு வந்தான். இங்க வந்து உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லி அவன் அழுததுக்கு நீங்க என்ன பண்ணினீங்க…கிராமத்துக்கு வர்றப்போ பேசிக்கலாம்னு பட்டும்படாம சொல்லி அவனை அனுப்பி வச்சீங்க. ஆனா இவரு வந்து கேட்டவுடனே சரி வர்றேன்னு புறப்பட்டிட்டாங்க. இது என்னங்க..இவருக்கு ஒரு நியாயம், கருப்பனுக்கு வேற நியாயமா. உங்க ரெண்டு பேருக்கும் இது எல்லாம் தெரிஞ்சதுதான். இருந்தாலும் நல்லா ஒறைக்கிட்டும்னுதான் மறுபடியும் சொன்னேன். நானே இதப்பத்தி உங்ககிட்ட கேக்கணும்னு இருந்தேன். இன்னக்கி இவரும் வந்தது வசதியாப்போச்சு. சொல்லவேண்டியதைச் சொல்லிட்டேன் ‘ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டு சமையலறைக்குள் சென்றுவிட்டார்.

அப்பாவும் வெங்கடாசலமும் சவுக்கடி பட்டார்ப்போல பதைத்துப்போய் நின்றார்கள்.

—————————-

natesasabapathy@yahoo.com

Series Navigation

செங்காளி

செங்காளி