கனவின் கால்கள் – பாகம் 2

This entry is part [part not set] of 53 in the series 20031127_Issue

கோச்சா


சென்றவார இறுதி வரிகள்:

பரிமாறுபவரோ பக்கத்திலிருப்பவரைக் காண்பித்து ‘இவரு மாப்பிள்ளையோடா சித்தப்பா… மாப்பிள்ளை அப்பா பேரச் சொல்லு.. இவரே சரியான்னு சொல்வார்… ‘ கரண்டியால் சாம்பாரை கலக்கியவாறே கேட்டார்.

சித்தார்த்துக்கு அப்படியே மறைந்து போக மாட்டோமோன்னு இருந்தது. பிச்சையும் எச்சலும் சாப்பிடுபவர்கள் நிலையிலும் தாழ்ந்து போன மன நிலை கொண்டு குமட்டியது. தொண்டை அடைத்தது. அவமான உணர்ச்சியில் சித்தார்த்தின் கண்கள் கலங்க ஆரம்பித்தன….

இந்த வாரம்…

சித்தார்த்துக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் தைரியமில்லை. ஒரு நிசப்தமான மெளன சூழல் நிலவியது.

அந்த மெளனச் சூழலைக் கிழித்துக் கொண்டு வந்தது கணீர் குரல்,

‘அது கிடக்கட்டும், போய் மானேஜரைக் கூட்டி வா.. ‘ என்றார் பக்கத்திலிருந்தவர்.

சித்தார்த் என்னவோ உடனே தான் நிமிர்ந்தான். அந்த சர்வர் போனது காணவில்லை, ஆனால், அவன் ஒரு வயதான கண்ணாடி போட்ட மனிதருடன் வந்து நின்றிருந்ததைக் கண்டான்.

நல்லது நடக்கத்தான் நாலு நாள் ஆகும். கெட்டது உடனே நடக்கும் போல் இருக்கு.

சித்தார்த்துக்கு பக்கத்து மனிதரைப் பார்க்கவே தைரியமில்லை. என்ன நடக்கப் போகுதோ எனும் பதைபதைப்பில் நிலை குத்திய பார்வையுடன் இருந்தான்.

பக்கத்து இலை மனிதர் சற்று அசைந்து நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, ‘என்னங்கையா.. ? கூப்பிட்டாகளாமுல… ‘ என்று கேட்டு நிற்கும் மானேஜரை தீர்க்கமுடன் பார்த்தவாறு,

‘ சமையல் இன்னைக்குப் பிரமாதம். நல்லா அருமையான நளபாகம். அறுசுவை நடராஜன் சமையல அடிச்சுக்க ஆளில்லைன்னு நிரூபிச்சிட்டார். ‘ என்றவர், சித்தார்த்தை ஒரு முறைப் பார்த்து விட்டு தொடர்ந்தார்,

‘ என்ன தான் நல்ல சமயலா இருந்தாலும் அதை ருசிச்சுச் சாப்பிட ஆளு இல்லைன்னா அப்புறம் அத சமைச்சு என்ன.. ? பரிமாறி என்ன.. ? கல்யாணத்துல வந்த பல பேரு ஊருக்குப் போற அவசரத்திலே லபக்கு லபக்குன்னு வயித்துக்குள்ள தள்ளுனப்ப.. இதோ இந்தத் தம்பி.. என் ஊருக்காரரு, உறவுக்காரரு.. நல்லா ருசிச்சு… ரசிச்சு… சாப்பிடுறாறு… என்ன.. பரிமாறுற அவசரத்துல உங்க ஆளுங்களாலத் தான் கவனிக்க முடியலை. விருந்து சுவையே கவனிப்புல தான கூடுது…. ‘ என்றார்.

அதற்கப்புறம் அவர் பேசிய எதுவும் சித்தார்த் காதில் விழவில்லை. அவர் சாப்பிட்டு முடித்திருந்தாலும், இவன் சாப்பிட்டு முடியும் வரை காத்திருந்தார். மானேஜர், என்ன சொன்னாரோ… இவனைத் தனியாக கவனித்துப் பரிமாற ஒரு ஆள் அருகேயே இருந்து சாப்பிட்டு எழும் வரை கூடேயே இருந்தான்.

சித்தார்த் பக்கத்திலைக்காரரின் எதிரே கல்யாண மண்டபத்தில் மெளனமாய் அமர்ந்திருந்தான்.

அவரிடம் ‘சின்னய்யா.. ‘ என எல்லோரும் வந்து வந்து பேசிச் சென்றனர்.

வெத்தலைப் பாக்கு கொடுத்துப் போட்டுக் கொள்ளச் சொன்னார்.

‘சொல்லுங்க தம்பி… பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க , அப்புறம் ஏன் இந்த மாதிரி.. ஏதாவது வேல வாங்கித் தரவா.. ? தந்தா போவிங்களா… ? ‘

‘அய்யா.. வேல தேடிட்டுத்தான் இருக்கேன்… ‘ என்று ஆரம்பித்து தன்னைப் பற்றிச் சொன்னான் சித்தார்த்.

உங்க அப்பா ஒன்னும் சொல்றதில்லையா.. ? கேட்டார்.

‘ஓ.. அந்த ஆளு ஒரு பைத்தியக்காரன்… தலைமைச் செயலகத்திலே நல்ல வேலையில இருந்தாரு… சரிப்பா.. ரிட்டயர் ஆனதுக்கப்புறம் இங்கனையே வீடு கட்டிச் செட்டிலாயிடுன்னு சொன்னா… சொந்த ஊருலே சாதி சனத்துக்கு நடுவிலே வீடு கட்டணும்னு மதுரைலேயே வீட்டக் கட்டிப் போயிட்டாரு. ‘

‘ அது சரிப்பா.. அவரு சம்பாத்தியம் , அவரு கட்டினாரு.. நீ சம்பாரி.. நீ கட்டு.. வேண்டாமுன்னா சொல்லப் போறாரு… ‘

‘அடப் போங்க சார்.. அவரு படிச்சு .. வேலை பார்த்துச் சம்பாதிரிச்சு… வீடு கட்டி.. பின் நானும் அதையேத் திரும்பிச் செஞ்சா.. அதுல தொலையுற 50வருட முன்னேற்றம்.. ? ஒரு மனிதன் தன்னோட வாரிசு மூலமா சமுதாயத்திற்கு ஒரு கைமாறு செய்யணும் சார்.. அது தான் என் வாழ்க்கை… ‘

அவ்வளவு தான், அதற்கப்புறம் பேசிக் கொண்டேயிருந்தார்கள். பல முறை காபி வந்தது. பேசினார்கள்.. பேசினார்கள்.. கல்யாண மண்டபம் காலி செய்யும் வரை…

கிளம்பும் போது தன் முகவரி கொடுத்து வந்து பார்க்கச் சொன்னார்.

சித்தார்த் சந்தோஷமாக அன்று இரவு தூங்கினான்.

மூன்று வருடம் முன் அப்பா கல்யாணம் கட்டி வைத்து, மதுரையிலேயே இருந்து விட்ட அத்தை மகள் ஞாபகம் வந்தாள். கட்டிக் கொண்டால் 5 லட்சம் தருவதாகச் சொன்னதால் 13 வயது இடைவேளியைக் கூடப் பொருட்படுத்தாமல் தாலி கட்டினான் சித்தார்த். முதலிரவுக்கு முன் அப்பாவிடம் போய் அந்த ஐந்தைப் பற்றிக் கேட்டான்.

அவரோ, ‘ஐந்து லட்சத்திற்கு மதுரையிலேயே கடை வைத்துக் கொடுப்பதாகச் சொன்னார். சினிமா சினிமான்னு அலையாம ஒழுங்கா புள்ளயப் பெத்து போட்டு பொறுப்பா இருக்கச் சொன்னார். ‘

வந்த கடுப்பில், ‘போடா….. ‘ என்று வாய்க்கு வந்த மாதிரி அப்பாவை திட்டி விட்டு சென்னைக்கு வந்தவன் தான்.

வந்த நினைவுகளில், இன்று மதுரையிலிருந்து வந்தத் தபாலைப் பிரிக்காமல் அப்படியே போட்டிருந்தது ஞாபகம் வந்து எழுந்தான்.

தபாலைப் பிரித்தவுடன், அப்பாடா என்றிருந்தது.

இரு வருடம் முன் , அத்தை மகளுடன் சேர்ந்து மனு செய்திருந்து பின் பல முறை அலைந்த ‘டைவர்ஸ் ‘ பிரச்சனை முடிவுக்கு வந்திருந்தது. கோர்ட் நகலை அனுப்பிருந்தார்கள்.

பின் தூக்கத்தைத் தொடர்ந்தான். கனவில்லை தூக்கத்தில்.

காலையில் சின்னய்யாவைப் போய் பார்க்க முடிவு செய்தான். பஸ் சிலவுக்கு காசு கொடுத்திருந்தார்.

அவரின் வீடு பெரியதாக இருந்தது. அவர் வரச் சொன்னார் என்றவுடன் உள்ளே விட்டார்கள்.

காத்திருந்தான். காத்திருந்தான்.

எழுந்து போய் விடலாம் , எனும் போது வந்தார்.

‘என்ன தம்பி கிளம்பிட்டாங்க.. ? ‘

‘சார், நீங்க தான் என்னைய்ய பத்து மணிக்கு வரச் சொன்னது.. அப்படியிருக்கும் போது இப்படி இரண்டு மணி நேரம் காக்க வைப்பது சரியில்லை.. ‘ என்று பொரிந்தான்.

‘தம்பி சும்மா தானே இருக்கீங்க… அப்புறம் ஏன் அலுத்துக்கனும்.. ? ‘ என்றார் அவர்.

‘நான் சும்மா இருக்கேன்னு யார் சொன்னது.. ? நீங்க வரச் சொன்னதாலே… மனசு வேற எதுலும் ஒட்டல.. வேல கெட்டது தான் மிச்சம்…!! ‘ சலித்தான் சித்தார்த்.

‘வேலையா.. ? ‘

‘ஏதாவது சிந்திச்சிட்டு இருந்திருபேன்.. சிந்திக்கிறது கூட வேலை தான் சார்… ‘

‘சாரி தம்பி.. ‘

பின் அமர்ந்து ரொம்ப நேரம் பேசினார்கள். அவரும் சின்ன வயதில் சினிமா முயற்சியில் இருந்தவராம். ஆனால் தாக்குப் புடிக்க முடியாமல் வாழ்க்கயை தொலைத்து விடக் கூடாது என அப்பாவோட பிஸினஸில் செட்டில் ஆகி விட்டாராம்.

உள்ளே எழுந்து போய் ஒரு சாக்குப் பையை இழுத்து வந்தார். பிரித்தால்.. புத்தகம் புத்தகம்..

ரஷ்யா சிதறிய பின், ‘நியூ செஞ்சுரி புக் கவுஸ் ‘ சிதைந்து விடும் எனும் அச்சத்தில் ஓடிப் போய் வாங்கி வந்த தமிழ் மொழியில் மாற்றம் செய்யப்பட்டிருந்தக் கதைகள், இலக்கியங்கள்….

ஒவ்வொன்றாய் எடுத்து எடுத்துப் பார்த்தான்… தடவிக் கொண்டான்.

‘எல்லாம் உனக்குத்தான் சித்தார்த்… எங்க பழையப் புத்தகக் கடைக்காரனுக்குத் தான் போய் சேருமோன்னு மனசு கஷ்டமாயிருந்துச்சு… நல்ல வேலை.. சரியான ஆளுக்கிட்டே போய் சேர்ந்துச்சிடுச்சு…. இனி கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்.. ‘

அன்று இரவு கட்டலில் இவனுக்கு படுக்க இடமில்லை… சுத்தி புத்தகத்தை பரப்பி வைத்திருந்தான். ஊடேயே ஒருக்களித்துப் படுத்துக் கொண்டான்.

எப்பேற்பட்ட புத்தகங்கள்.. ? அப்பாடி… நல்ல நேரம்னு தான் சொல்லனும். அலைந்து தேடினாலும் கிடைக்காது..

புழாங்கிதம் அடைந்து போனான்.

‘டே சித்தார்த், யோரோ சூரீன்னு ஒருத்தன் காலையில இருந்து உனக்காக காத்திருக்கான்டா… டாக்கடையில தான் இருக்கான் உன்னைப் பார்க்கனும்னு… ‘

இவன் காலையில் கண் விழித்தவுடன் ரூம் மேட் சொன்னான். அவன் சொன்னதை விட, அவன் கையில் இருந்த இவனது புத்தகம் தான் சித்தார்த் கண்ணில் விழுந்தது.

விருட்டென்று எழுந்தவன் அவன் கையிலிருந்த இவனது புத்தகத்தைப் பிடிங்கியவாறே…

‘டேய் எத்தனை தடவ சொல்லுறது.. என் புத்தகத்தைத் தொடாதேன்னு… உனக்கு சினிமா டிஸ்கஷனுக்கு அவுத்து விட தாஸ்கோவஸ்கியும்.. மார்க்ஸிமும் தான் கேட்குதா.. ? உன் டைரக்டர் போற ரேஞ்சுக்கு, சாந்தி தியேட்டர் எதிர்த்தாற்ப்பில கிடைக்கிற சரஜோதேவி போதும்.. போடா போ… ‘ என்று விரட்டி குளிக்கப் போனான் சித்தார்த்.

டாக்கடையில் இவனுக்காக சூரி காத்திருந்தான்.

சூரி இவனிடம் வந்தது ரஷ்யன் கான்சுலேட்டில் பார்த்த சினிமாவின் இடைவேளையில் தான்.

ஊதி விட்ட சிகரெட் புகை மண்டலத்தின் நடுவே.. சினிமா கனவுகள் கண் நிறைக்கச் சித்தார்த்தைச் சுற்றி சிறு கூட்டம். அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் படத்தை சித்தார்த் சிலாகித்துப் பேச பேச கூட்டம் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

கூட்டத்திலிருந்து தள்ளி நின்றிருந்த சூரி சித்தார்த்தையே பார்த்துக் கொண்டிருந்தான். படம் முடிந்து அனைவரும் காரிலும் பைக்கிலும் பறக்க.. தனியே நடந்த சித்தார்த்தின் பின்னே வந்து சூரி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மேன்ஷன் வரை பேசிய படி வந்தான்.

யாரையும் எளிதில் ஒத்துக் கொள்ளாத சித்தார்த்திற்கு சூரியின் சிந்தனை மிக மிக சந்தோஷம் தருவதாய் இருந்தது.

மேன்ஷன் வாசலில் நின்றபடி நள்ளிரவு தாண்டி மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு சூரியின் விஷயத்தில் பிடித்திருந்த முக்கிய விஷயம், அவனுக்கு அவனின் அப்பா சப்போர்ட் உண்டு என்பதே..! ‘

சித்தார்த் டாக்கடைக்குப் போனான்.

‘வணக்கம் சார் ‘ என்று புன்னகைத்தான் சூரி.

‘என்ன சூரி.. நான் வெளிய போக வேண்டியிருக்கு… சாயங்காலம் வேணும்னா வா பேசலாம்.. ‘

‘அது இல்ல … ஒரு விஷயம்.. மாட்டேன்னு சொல்லக் கூடாது… ‘ என்றவாறு தயங்கிய சூரி தொடர்ந்தான்,

‘என்னய உங்க அஸிஸ்ட்டன்டா சேர்த்துகுவீங்களா… ‘ என்றான்.

கையால் கண்ணாடி கிளாஸை அசைத்து சற்று சுடு ஆற்றி டாயை வாயில் உறிஞ்சிய சித்தார்த்துக்கு வந்த சிரிப்பில் வாயிலிருந்த டா வெளியே சிதறியது….

‘அட நல்லா ஜோக்கடிக்கிற.. எனக்கேப் படத்தக் காணோம்.. வேலையும் காணோம்.. எனக்கு அஸிஸ்ட்டண்டா.. ? கேட்கிறவன் சிரிக்கப் போறான்டா… ‘

‘இல்லை.. என்ன சேத்துக்கோங்க… சினிமா பேசலாம்… கதை ரெடி பண்ணலாம்.. எனக்கு காசு எதுவும் வேண்டாம்.. எங்கப்பா தினமும் பாக்கேட் மணி 50 ரூபாய் தருவாறு… ‘ என்றான் சூரி.

டாக் குடித்து சூரியுடன் நேற்று வரச் சொல்லியிருந்த புரொடியூஷரிடம் போய் கதை சொன்னான் சித்தார்த்.

பெருமையாய் சூரியையும் அஸிஸ்டண்ட் என அறிமுகப் படுத்தினான்.

கதை சொல்லி வெளி வந்து முக்கிலிருந்த டாக்கடையில் காத்திருந்தார்கள். அவனது நண்பன் உள்ளே புரொடியூசரிடம் பேசிப் பதிலுடன் வருவான்.

‘சார், உங்க கதையைக் கேட்டப்ப எனக்கு படத்தையே பார்த்த மாதிரி இருந்துச்சு. நல்லா விஷுவலா கதை சொலுறீங்க.

‘இந்த படம் நிச்சயமா கேன்ஸ் விருது வாங்கும்.. ‘ என்றான் சூரி.

ஒரு போருக்குப் போய் வந்த மாதிரி இருந்தான் சித்தார்த். கதையை ஒன்றி சொல்லிக் களைத்துப் போய் இருந்தான்.

காத்திருந்த இவர்களை நோக்கி வந்தான் சித்தார்த் நண்பன். ‘சக்ஸஸ்டா… கதை பிரமாதம். உன்னிட்ட ஒரு ஃபயர் இருக்குன்னு சொல்றார் புரொடியூசர். நாளைக்கு வந்து அட்வான்ஸ் வாங்கிக்கச் சொன்னார். நீ சொல்ற எந்த பட்ஜெட்டிலேயும் பண்ணலாமுன்ட்டார். புது பசங்கன்னு காபி டா வாங்கிக் கொடுத்து அல்வா தர்ற பார்ட்டி இல்லை. பூஜை அன்னிக்கு கார் பிரசெண்ட் கொடுக்கிறேன்னார். ‘ என்ற நண்பன், சூரிப்பக்கம் பார்த்து, ‘எல்லாம் உன் அஸிஸ்ட்டன் ட் வந்த நேரம் தான் ‘ என்றான்.

சூரிக்கும் மகிழ்ச்சி.

சித்தார்த் நண்பனைப் பார்த்தவாறே, ‘ அது சரி… கதை பத்தி என்ன சொன்னார்.. ? ‘

‘அது தான் சொன்னேன்னுலே… ரொம்ப புடிச்சிருக்கு.. உடனே பூஜை போடலாம்னு சொன்னார்னு ‘ என்றான் நண்பன்.

‘அது மட்டுந்தானா… ‘

‘ஆமாடா,, என்னாலேயே நம்ப முடியல.. நல்ல டாமா போட்டுக் கதைய இன்னும் நல்லா ஷேப் பண்ணிடலாமும்னு சொல்லி ஆபிஸ் பையனை உடனே மகாபலிபுரத்திலே ரூம் போடச் சொல்லிட்டாரு… ‘

‘அது தானே பார்த்தேன்.. இந்த பாரு கதையெல்லாம் மாத்த முடியாது. ஒரு டாமும் வேண்டாம். அது சரின்னா பார்க்கலாம்… இல்லைன்னா விடு.. ‘

‘டேய்.. உளறாதே..! அவன் அவன் ஜாதகத்தைக் கொண்டாந்து இவர் கையிலே கொடுத்திட்டு கதை சொல்ல நேரம் கேட்டு அலைஞ்சிக்கிட்டு இருக்கான்… உன்னக் கூப்பிட்டு விட்டுக் கேட்டா.. நீ இப்படித் தான் அதோட வேல்யூ தெரியாம பேசுவே… ‘

‘டேய் அவரு ஒன்னும் சும்மா கூப்பிடலை… என் வேல்யூ புரிஞ்சுதான் கூப்பிட்டாரு.. ‘

சூரி பேஸ்து அடிச்ச மாதிரி இவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.

வார்த்தைகள் வாக்குவாதமாக முற்றியது.

நண்பன் கோபமாய் தன் பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து , ‘ இந்த ஜென்மத்திலே நீ படம் பண்ண மாட்டேடா… ‘ என்று சீரியபடி சென்றான்.

சித்தார்த் தானே பேசியபடி நடக்க ஆரம்பித்தான். சூரி தொடர்ந்தான்.

‘ஒரு அக்கறை கிடையாது தொழில் மேலே.. ஒன்னு நல்ல டப்பாங்குத்து எடுத்து கூத்து மாதிரி படம் எடுக்கனும்.

அதை விட்டு விட்டு நல்ல சினிமா பண்ணனும் கதை சொல்லுங்கன்னு சொல்லிட்டு… அப்புறம் இந்த மாதிரி சொல்றது….

அடச் சீ…

டேய்.. சூரி.. நல்ல சினிமா பண்றது கஷ்டமுடா… சொல்றதக் கேளு.. எந்த டைரக்டருக்கிட்டே சேரணும் சொல்லு.. சேர்த்து விடுறேன்.. ‘

என்றான் சித்தார்த்.

சித்தார்த் யாரையாவது சொன்னால் உடனே எடுத்துக் கொள்வார்கள். அவன் கணிப்பு தவறாது என்று.

‘இல்லை சார்… நான் உங்க கூடேயே இருக்கேன். என்னைக்காவது ஜெயிப்போமுன்னு நம்பிக்கை இருக்கு.. நம்ம நடறது நல்ல செடி மாதிரி.. கஷ்டப்பட்டு தண்ணி ஊத்தி வேலி போட்டு தான் வளர்க்கணும். தானா வளர்ர களை அதிகமாகத் தான் இருக்கும். களை என்னைக்கும் ஊடு பயிர் கூட ஆகாது. எனக்கு காத்திருக்கத் தெம்பு இருக்கு சார்.. ‘ என்றான் சூரி. வெறும் இருவத்து ஐந்து வயதிற்குறிய பேச்சாக மட்டும் தெரியலை சித்தார்த்துக்கு.

நடந்த சித்தார்த் டக்கென்று நின்றவன், சூரியின் தோளை இரு கைகளாலும் பிடித்து அவனது கண்ணை ஆழாமாக பார்த்தபடி சொன்னான்,

‘சபாஷ்டா…. இனி நீ ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ணாதே.. பிலிம் இன்ஸ்டியூட்டிலே சேர்ந்திடு.. ‘ என்றான். சொன்னவுடன் ஒரு கணம் புஷ்கரன் மனதில் வந்து போனார்.

‘இல்லை சார், எப்படி சினிமா எடுக்க வேண்டிய சாதனங்களப் பயன்படுத்துறதுன்னு கத்துக்கிறத விட, சினிமா எந்த மாதிரி சிந்தனையிலேயும்.. வடிவத்திலேயும் எடுக்கனும்னு தான் எனக்கு கத்துக்க ஆசை.. அது உங்க கூட இருந்தா எனக்குக் கிடக்குமுன்னு தோணுது… ‘ என்றான் சூரி.

‘உனக்கு சரின்னு பட்டா எனக்கும் சரிதாண்டா…

ஜாலியா பொழுது போக்குக்காகப் படம் எடுப்பதில் எனக்கு ஏனோ ஆர்வமே வரவில. எனக்கு நம்ம வாழும் காலகட்டத்தைத் தாண்டி

பிரோஜனமாயிருக்கிற மாதிரி படம் பண்ணனுமுன்னு தான் ஆசை.

வருடங்களைத் தாண்டி ‘பதேர் பாஞ்சாலி ‘ இன்னைக்கும் பார்க்கப்படுற அளவிற்க்கு அந்த காலகட்டத்திலேயே வந்த போழுது போக்கை மட்டுமே மையமா கொண்ட படம் பார்க்கப்படுதா.. ? இல்லையே…! ‘

சித்தார்த் தொடர்ந்து பேசினான்.

‘ஆனா, இங்கு எல்லாமே… கல்வி, மருத்துவம் ன்னு.. எல்லாமே வியாபாரமாப் போச்சு. இந்த சூழலிலே ஒரு நல்ல படத்தைப் பண்ண முடியாம தோத்து விடுவேன்ற பயம் மனசு முழுதும் வந்து போச்சு. ஆனா நீ இவ்வளவு ஈடுபாட்டோட ஒரு நல்ல படம் பண்ணுற வெறியோட இருப்பதைப் பார்க்கும் போது, எனக்கே என் போன வயசு திரும்பி வந்தது போல் இருக்கு… ‘

சித்தார்த் முகத்தில் ஒட்டி கொண்டாற் போல் நெருக்கமாக நின்று பேசினான்.

‘நான் படிச்சது , பார்த்தது ,கேட்டது எல்லாத்தையும் உனக்குச் சொல்லித்தர்றேன். எனக்கும் 50 வயசு ஆகப் போகுது. மனசும், உடம்பும் தளர ஆரம்பிச்சுருச்சு. சில சமயம் என் முதுகிற்குப் பின்னாடி ‘பெரிசுன்னு ‘ கூப்பிடும் போது பயமா இருக்குமுடா. இனிக் கவலையில்ல.. என் அனுபவத்த சாறு பிழிஞ்சு உனக்குத் தாரேன்… என் புத்தகமெல்லாம் இனி ஒன்னோடது தான்.. படி.. பிச்சு பீராஞ்சு அனலைஸ் பண்ணுவோம்.

ஒரு நல்ல தமிழ் படத்த என்னால பண்ண முடியாட்டிக்கூட என் எண்ணத்தையும் அனுபவத்தையும் அடுத்த தலை முறையில உன்னப் போல ஒரு அக்கறையுள்ள திறைமைசாலி கிட்டே விதைச்சிட்டு போறேன்டா…

நான் படம் பண்ண முடியாம தோத்தாக் கூட, என் சிந்தனை அடுத்த தலைமுறையிலேயேயும் தன் பயணத்தைத் தொடருதுன்ற நிம்மதியோட நீ ஜெயிப்பேன்ற நம்பிக்கையும் இருக்குடா. உன்னிட்ட நான் என்னைப் பாக்குறேன். என்னைய விட அறிவாளியாவும், ஜெயிக்குற வரை சாமர்த்தியமா போராடுறவனாவும் வளர்க்குறேன். இன்னைக்கோ , நாளைக்கோ நான் இறக்கலாம். ஆனா உனக்குள்ள கரைஞ்சு போற என் அனுபவம் உன் திறமையோட சேர்ந்து ஒரு நாள் ஜெயிக்கிறப்ப .. அன்னைக்கு நான் மீண்டும் பிறப்பேண்டா….. சூரி ஜெயிக்கனும்டா… நாம தோத்தா கூட நம்ம சிந்தனையும் லட்சியுமும் ஜெயிக்கனுமுடா.. அது தாண்டா… அது தாண்டா.. நான்……. ‘ மேலும் பேச முடியாமல்

சித்தார்த் சூரியின் கைகளைப் இறுக்கப் பிடித்தாவாறே மெளனமாக நடக்க ஆரம்பித்தான்.

‘சூரி.. உன்னோட கைகளை இப்படி பிடிச்சுட்டு நடக்கிற போது, ‘பை-சைக்கிள் தீஃப் ‘ படம் ஞாபகம் வருது. அந்தப் படம் ஒரு கண்ணீரால் எழுதப்பட்ட கவிதை. அதில………….. ‘ என்றவாறு சித்தார்த் சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தான். அதை தனது முதல் வகுப்புப் பாடம் போல் சூரி ஆர்வமாகக் கவனிக்க ஆரம்பித்தான்.

நாளைய விருட்சத்திற்கான வளர்ப்பு அங்கு ஆரம்பித்தது.

காலத்தின் ஓட்டத்தில் மக்கிப் போகும் மரங்கள் குப்பையானலும் சரியாக பயன்பட்டால் உரமாகும் என்பது போல்.. இதோ சித்தார்த்.

Series Navigation

கோச்சா

கோச்சா