பிழைப்பு

This entry is part [part not set] of 39 in the series 20030925_Issue

மணி வேலுப்பிள்ளை


மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்திவிட்டு, நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய், ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன். அப்புறம் காதர்-கடைக்குள் நுழைந்து றொட்டியும் மாட்டிறைச்சியும் சாப்பிட்டுவிட்டு ஒரு சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டு லொறியில் ஏறிக் குந்தினேன்.

தெருவிலிருந்து கிளைவிடும் அந்த ஒழுங்கையில் லொறியைத் திருப்பினேன். காலை வெயில் கன்னத்தில் தெறித்தது. காற்றின் குளுமை காதோரம் கசிந்தது. கசிப்பு வாடை மூக்கில் ஏறியது. புல் பூண்டுகள் மண்டியிட்டன இருமருங்கிலும் குடிசைகள் பின்னடைந்தன. வெகுண்டெழுந்த ஊர்நாய்கள புழுதிவாரித் தூற்றின…

பெரேராவின் குடிசைக்கு எதிரே லொறியை நிறுத்தினேன். அவன் வெளியே ஓடிவந்தான். ஒரு கல்லை எட்டி எடுப்பது போல் குனிந்தான். நாய்கள் பாய்ந்தோடின. “வாங்கோ, சிவா மாத்தையா” என்று வரவேற்றான். நாய்கள் எட்டிநின்று குரைத்தன. ஒரு கல்லை எடுத்து வீசினான். நாய்கள் ஓட்டம் எடுத்தன.

பெரேராதான் எனது நெல்லுத் தரகன். நான் மதவாச்சிக்கு நெல் ஏற்றப் போகும் போதெல்லாம் பெரேராவின் குடிசைக்குப் போய் அவனையும் அக்கம் பக்கத்தவர்களையும் ஏற்றிக்கொண்டு நாட்டுப் புறத்துக்குள் நுழைவது வழக்கம். நெல்லு லொறிகளில் வேலைசெய்வதே அவர்களுடைய பிழைப்பு. ஒழுங்கையில் லொறியைக் கண்டதும் அவர்கள் பெரேராவின் குடிசையைச் சூழ்ந்துவிடுவார்கள்.

அன்று ஏனோ அப்படி எல்லாம் நடக்கவில்லை. மெனிக்கா வந்து பெரேராவுக்குப் பின்னாடி நின்று “சிவா மாத்தையா!” என்று விழிக்கவில்லை. அஞ்சனா வந்து தமக்கையின் பின்னலில் பிடித்துக்கொண்டு என்னை ஓரக்கண்ணால் பார்த்து முறுவலிக்கவில்லை… பெரேரா ஒன்றும் பேசாமல் நின்றான். தூங்காத மூஞ்சியுடன், குளிக்காத தேகத்துடன், வாராத தலையுடன்…

கொஞ்சம் பொறுத்து மெல்ல நெருங்கி கையைப் பற்றி என்னைக் குடிசையின் உள்ளே இட்டுச் சென்றான். மெனிக்கா எழுந்து நின்றாள். ஒரு பாயில் வெள்ளைத் துணியினால் மூடிக்கட்டி உப்பிய நிலையில் ஓர் உருவம்… அஞ்சனா… அவள் செத்துப் போனாள் என்றான் பெரேரா! “ஐயோ…” என்று கத்தினேன். ஏது ? எப்படி ? எதற்காக ? கேள்விகள் தொண்டையை அடைத்தன.

என்னை மதவாச்சிக்கு ஈர்த்தது நெல்லு மட்டுமல்ல. அஞ்சனாவின் ஒயிலும் துடினமும் நளினமும்… என்னைக் கொல்லாமல் கொல்வதில் அவள் பொல்லாதவள். அவள் முன்னிலையில் எனக்குக் கிறுதி வரும். வாக்கினாலும் காயத்தினாலும்தான்; நான் அவளுடன் உறவு கொள்ளவில்லை. மனத்தினால் நான் அவளுடன் உறவு கொண்டவன். நான் அஞ்சனாவிடம் கற்பிழந்தவன். இத்தனைக்கும் அவள் எனது பேத்திக்குச் சரி!

பெரேரா என்னை வெளியே கொண்டுவந்து சாடைமாடையாக விபரம் தெரிவித்தான். அஞ்சனா கருத்தரித்ததாகவும், அதனால் நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும்…

யார் அந்தப் பேர்வழி ? எனக்கு அந்த இனந்தெரியாத பேர்வழிமீது மிகுந்த பொறாமையும் அவள்மீது பொல்லாத கோபமும் ஏற்பட்டது. பொறாமைப்படுவதற்கும் கோபப்படுவதற்கும் நான் யார் என்ற கேள்வி என் மனத்தில் எழவே இல்லை.

அஞ்சனாவை அடக்கம் செய்வதற்கான ஒழுங்குகள் பற்றி விசாரித்தேன். ஒன்றுமே செய்யவில்லை என்றான் பெரேரா. ஏன் என்று கேட்டேன். கையில் உள்ள காசு போதாது என்றான். உறவினர்கள் ஒன்றும் கொடுத்துதவவில்லையா என்று கேட்டேன். கொடுத்துதவ வேண்டுமே என்பதற்காகத்தான் செத்த வீட்டுக்கே ஒருவரும் வரவில்லை என்றான். ஊர்ச் சங்கம் ஓர் உதவியும் செய்யாதா என்று கேட்டேன். மாதம் ஐந்து ரூபா கட்டி வந்திருந்தால் அது ஆயிரம் ரூபா தந்திருக்கும் என்றான். ஆயிரம் ரூபா போதுமா என்று கேட்டேன். அவன் ஒன்றும் பேசவில்லை.

நான் நெல்லுக் கட்டுவதற்காக வைத்திருந்த காசில் ஆயிரத்து இருநூற்றி ஐம்பது ரூபாவை எண்ணி எடுத்தபொழுது “மாத்தையா” என்று சொல்லி அவன் என்னைக் கட்டிப் பிடித்து விம்மினான். மெனிக்கா ஓடிவந்து “சிவா மாத்தையா” என்று சொல்லி எனது காலடியில் விழுந்தாள்.

அஞ்சனா… அவளுடைய … எப்போது நடந்தது என்று கேட்டேன். முதல்நாள் என்றான் பெரேரா. அவளுக்கு மூன்று மாதங்களாய் மாதவிடாய் வரவில்லையாம். ஆனால் மாதவிடாய் வந்ததாக நடித்தவளாம். மேற்கொண்டு நடிக்க முடியாதபடியால் அவள் நஞ்சு குடித்துச் செத்ததவளாம். வேறு சுகயீனமாய் இருக்காதா என்று கேட்டேன். மெனிக்கா எழுந்து போய் அஞ்சனா சிங்களத்தில் எழுதி வைத்த ஒரு கடிதத்தை எடுத்து வந்து எனக்குக் காட்டி, அதில் அவள் கருத்தரித்த சங்கதி இருப்பதாகத் தெரிவித்தாள். அது எனக்கு மிகவும் எரிச்சலாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

மனம் தனிமையை நாடியது. ஆனால் பெரேராவும் மெனிக்காவும் என்னை அங்கிருந்து கிளம்ப விடப்போவதில்லை. அவர்கள் என்னை விட்டு விலகப்போவதுமில்லை. அதேவேளை நானும் லொறியும் அங்கு நிற்பதால் அஞ்சனாவின் அடக்கத்துக்கு இடைஞ்சல் ஏற்பட்டே தீரும். அது முதல்நாள் பிரிந்த உயிர். உடனடியாக அடக்கம் செய்யப்படவேண்டிய உடல். ஆகவே பெரேராவை ஓர் ஓரமாகக் கூப்பிட்டு, நான் ஹொறவப்பொத்தானைக்குப் போய்வரவேண்டி இருப்பதாகத் தெரிவித்தேன். அப்படி என்றால் அங்கிருந்து திரும்பி வரும் வழியில் தனது குடிசைக்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போவதாக வாக்குத் தரும்படி அவன் என்னைப் பிடித்துக்கொண்டான். அப்படியே வாக்குக் கொடுத்துவிட்டு லொறியை எடுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

லொறி அந்த ஒழுங்கை வழியே திரும்பிப் போய்க் கொண்டிருந்தது. எனது நெஞ்சம் இன்னும் பெரேராவின் குடிசையில்… அஞ்சனாவின் நினைவில்… இளமை ததும்பும் அவள் மேனியில் நிலைகொண்டது. அதுவரை ஒடுங்கிய உணர்வலைகள் பொங்கியெழுந்து நெஞசத்தில் மோதுண்டன. நான் லொறியைச் செலுத்தவில்லை, லொறியே என்னைச் செலுத்தியதுபோல் இருந்தது… திடாரென ஒரு நாய் வீலிட்டது. எனக்குச் சுயநினைவு திரும்பியது. லொறியை நிறுத்தினேன். யாரோ ஒருவன் ஓலமிட்டபடி ஓடிவந்து அந்த நாய்க் குட்டியைத் தூக்கி வைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்தான். சப்பளிந்த நாய்க் குட்டியின் இரத்தம் அவனுடைய முழங்கைவழி ஓடி நிலத்தில் சிந்தியது

எனது பிழை. அதில் சந்தேகமே இல்லை. அதற்குப் பிராயச்சித்தமாக ஐம்பது ரூபா தாள் ஒன்றை எடுத்து நீட்டினேன். அவன் காசை வாங்கிக்கொண்டு எட்டி நடந்தான். நான் புறப்பட்டேன். நான் கொஞ்சத் தூரம் போனவுடன் அவன் அந்த நாய்க் குட்டியின் வாலில் பிடித்து அதனை ஒரு சுலட்டுச் சுலட்டி அங்கிருந்த பற்றைக்குள் வீசிவிட்டு, குனிந்து கொஞ்சம் மண்ணைக் கிள்ளி முழங்கையில் உரஞ்சிக்கொண்டு ஓட்டம் எடுத்தான்.

எங்கேயாவது போய் தனிமையில் இருந்து அஞ்சனாவின் நினைவில் மூழ்கவே மனம் விரும்பியது. அந்த நாய்க் குட்டி முதல்நாள் செத்திருந்தால் அஞ்சனாவை அன்று உயிருடன் கண்டிருக்கலாமே என்று ஒரு விசித்திரமான எண்ணம் என்னைப் பீடித்துக்கொண்டது.

ஹொறவப்பொத்தானைக்கு போய்க் கொண்டிருந்தபொழுது எனக்கு வயிற்றைக் கலக்கியது. ஒரு வண்டித் தடத்தில் லொறியைத் திருப்பி ஒரு குட்டையை அண்டி நிறுத்தினேன். கீழே இறங்கி எட்டி நடந்து ஒரு மர நிழலில் குந்தினேன். குட்டையில் தாமரை இலைகள் மிதந்து கொண்டிருந்தன. எருமைகள் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன. குருவிகள் அவற்றின் மூக்குகளை அகழ்ந்து கொண்டிருந்தன. ஈக்களும் வண்டுகளும் நான் குந்தியிருந்த இடத்தை மோப்பம் பிடித்து முற்றுகையிட்டன. குட்டையில் கால் கழுவிக்கொண்டு லொறிக்குள் ஏறி இருக்கையில் சரிந்தேன்.

என் நெஞ்சமெல்லாம் அஞ்சனா நிறைந்திருந்தாள். அவளுடன் கூடி வாழ்ந்த உணர்வே எனக்கு ஏற்பட்டது. ஊரில் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மனைவி மக்கள் எனக்கு அந்நியர்களாகவே தெரிந்தார்கள். வெறும் பிழைப்பு வாழ்க்கை ஆகாது என்று மனம் சொல்லியது. அஞ்சனாவை நான் வைத்திருந்ததாகக் கற்பனை செய்வதிலேயே வாழ்வின் அர்த்தம் தெரிந்தது. அஞ்சனாவின் தற்கொலையுடன் எனது வாழ்வும் கருகிவிட்டதாகவே புலப்பட்டது.

அந்த உணர்வுகளுடன் கண் அயர்ந்துவிட்டேன். விழித்தபொழுது இருட்டியிருந்தது. மண்ணுலக நிதானம் மெல்ல மெல்லத் திரும்பியது. இனிமேல் மதவாச்சிக்குத் திரும்புவதே நல்லது என்று பட்டது. மதவாச்சிச் சந்தியில் ஓர் ஓரமாக லொறியை நிறுத்தினேன். நேரே காதர்-கடைக்குப் பின்னாடி இருக்கும் சந்துக்குப் போய் ஒரு மிடறு மெண்டிஸ் ஸ்பெ~ல் வாங்கிக் குடித்தேன். காதர்-கடைக்குள் நுழைந்தபொழுது சோறும் மான் இறைச்சியும் சாப்பிடலாம் என்றார்கள். அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு இரண்டு துண்டு பாணில் தேன் பூசிச் சாப்பிட்டேன். திரும்பவும் அந்தச் சந்துக்குப் போய் ஒரு டசின் பியரும் ஒரு போத்தில் மெண்டிஸ் ஸ்பெ~லும் வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.

தெருவிலிருந்து கிளைவிடும் அந்த ஒழுங்கையில் லொறியைத் திருப்பினேன். காற்றின் குளுமை காதோரம் சீறியது. கசிப்பு வாடை மூக்கில் ஏறியது. புல் பூண்டுகள் மண்டியிட்டன. குடிசைகள் இருமருங்கிலும் பின்னடைந்தன. வெகுண்டெழுந்த ஊர்நாய்கள் புழுதிவாரித் தூற்றின…

பெரேராவின் குடிசைக்கு முன்பாக ஒரு பெற்றோமாக்ஸ் எரிந்தது. அக்கம் பக்கத்தவர்கள் அங்கே திரண்டிருந்தார்கள். பெரேராவும் மெனிக்காவும் வெளியே ஓடிவந்து “சிவா மாத்தையா… சிவா மாத்தையா” என்று ஆர்ப்பரித்தார்கள். லொறியை ஒரு புறமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன்.

அவர்களை அவன் இராச்சாப்பாட்டுக்கு அழைத்திருப்பதாக அறிந்துகொண்டேன். அடக்கம் முடிந்த அன்றிரவு அக்கம் பக்கத்தவர்களுக்குச் சாப்பாடு போடுவது ஊர் வழமை என்று கேள்விப்பட்டேன். நான் வந்து சேரப் பிந்தியதே இன்னும் பந்தி வைக்காத காரணமாம்! பியரையும் சாராயத்தையும் எடுத்து பெரேராவிடம் கொடுத்தேன். ஆரவாரமும் வாதப் பிரதிவாதங்களும் ஆரம்பித்தன. அப்பொழுது யாரோ ஒருவன் “மாத்தையா! அனே, மாத்தையா!” என்று கூப்பிடுவது காதில் விழுந்தது. எல்லோரும் ஆரவாரத்தை நிறுத்தி என்னையே பார்த்தார்கள். நான் பெரேராவைப் பார்த்துக் கண்களைக் கூசினேன். அவன் கையில் ஒரு விளக்குடன் வந்து என்னைக் கூட்டிக்கொண்டு கோடிப் புறமாகப் போனான். மூத்திர நெடி மூக்கில் மோதியது.

என்னை மேற்கொண்டு நகரவேண்டாம் என்று சொல்லிவிட்டு அவன் அப்பால் எட்டி அடி எடுத்து வைத்தபொழுது மீண்டும் “மாத்தையா! அனே, மாத்தையா!”… பெரேரா அவனை அதட்டி, விளக்கை மேலே தூக்கிப் பிடித்தான். கண்ணாமண்டை நைந்து போயிருந்தது. பெரேரா விளக்கைப் பதித்தான். கைகள் கட்டப்பட்டிருந்தன. விளக்கு இன்னும் கீழே பதிந்தது. அரையில் ஆடை இல்லை. பெரேரா விளக்கை நிலத்தில் வைத்தான். கால்கள் சாரத்தால் கட்டப்பட்டிருந்தன.

அவன்தான் எனது லொறியில் அகப்பட்ட நாய்க் குட்டியைத் தன்னுடையது என்று பொய் சொல்லிக் காசு வாங்கியவன் என்று பெரேரா சொன்னான். அவன் திரும்பவும் என்னை “மாத்தையா!” என்று கூப்பிட்டு தன்னை அவிழ்த்துவிடச் சொல்லும்படி மன்றாடினான். அவன் நாய்க் குட்டியைச் சுலட்டி வீசியதை ஊர்ச் சங்கக் காரியதரிசி கண்டவனாம். அப்பொழுது காரியதரிசி அந்தப் பற்றைக்குள் ஒளித்திருந்து கசிப்புக் குடித்தவனாம். அஞ்சனாவை அடக்கம் செய்வதற்கு நான் காசு கொடுத்து உதவியதை அறிந்த குடிசைவாசிகள் திரண்டு வந்து இவனிடமிருந்து காசைப் பறித்து அடித்து உதைத்துக் கொண்டுவந்து அங்கே கட்டிப் போட்டார்களாம்…

கட்டவிழ்த்த கையோடு அவன் ஓட எத்தனித்தான். நான் அவனை ஓட வேண்டாம் என்று சொல்லித் தடுத்தேன். பெரேரா அந்த ஐம்பது ரூபாவை எடுத்து என்னிடம் நீட்டினான். நான் அந்தக் காசை வாங்கி வைத்துக்கொண்டு அவனுக்குச் சாராயமும் சாப்பாடும் கொண்டுவரும்படி பெரேராவிடம் சொன்னேன். பெரேரா விலகியவுடன் அந்தக் காசை அவனிடமே திருப்பிக் கொடுத்து, குரலைத் தாழ்த்தி, அஞ்சனாவுடன் சம்பந்தப்பட்ட பேர்வழி யார் என்று கேட்டேன். “தயானந்தா…” என்று முணுமுணுத்தான். அது யார் என்று கேட்டேன்… அவனுடைய பதிலிலிருந்து அது ஊர்ச் சங்கக் காரியதரிசி என்பது புரிந்தது.

பெரேரா சாராயமும் சாப்பாடும் கொண்டுவந்தான். அவன் சாராயத்தை வாங்கி ஒரே மிடறில் குடித்துவிட்டு சாப்பாட்டை வாங்கிக்கொண்டு ஓட்டம் எடுத்தான். நானும் பெரேராவும் முற்றத்துக்குத் திரும்பி மற்றவர்களுடன் சேர்ந்துகொண்டோம். தாமரை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டது. சோறு, மான் இறைச்சி, மாசிச் சம்பல், கருவாட்டுப் பொரியல், நெத்தலிச் சொதி, அவித்த முட்டை…

அடுத்த நாள் காலை நாங்கள் எல்லோரும் எங்கள் பிழைப்பக்குத் திரும்பினோம். அன்று மாலை வழக்கம் போல நூற்றி ஐம்பது மூடை நெல்லுடன் நான் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். லொறி தெருவில் ஏறும்வரை பெரேரா கூட வந்தான். எனக்குக் கிடைத்த துப்பை உறுதிப்படுத்துவதற்காக யார் அந்தப் பேர்வழி என்று கேட்டேன். “தயானந்தா…” என்றான். அது முன்கூட்டியே தெரியுமா என்று கேட்டேன். தெரியும் என்றான். ஏன் தடுக்கவில்லை என்று கேட்டேன். பெரேரா லொறியை விட்டு இறங்கி நின்று, அது ஊர்ச் சங்க காரியம் என்று சொல்லிக், கை அசைத்து விடை கொடுத்தான்.

manivel7@hotmail.com 2003/01/05

Series Navigation

மணி வேலுப்பிள்ளை

மணி வேலுப்பிள்ளை

பிழைப்பு

This entry is part [part not set] of 5 in the series 20001225_Issue

ரகுநாதன்


1

ஆபீஸ் வேலை முடிந்ததும் எழுந்து வெளியே வந்தேன். அன்று வீட்டுக்குச் செல்வதைத் தவிர வேறு யோசனை கிடையாது. பீச்சுக்குச் சென்று நல்ல பாம்பு மாதிரி ‘காத்துக் குடித்துவிட்டு ‘ வரவோ, பழைய புத்தகக் கடையில் பரிவர்த்தனை பண்ணவோ அல்லது மறுநாள் பாட்டுக்கு யாரிடமேனும் ‘அஞ்சு பத்து ‘ கைமாத்து வாங்கவோ, வரவேண்டிய கதைக்கு முன்பணமாக தவணை அச்சாரம் வாங்கவோ மனசு இல்லை; வழியும் இல்லை. ‘கொக்குக்கு ஒன்றே மதி ‘ என்ற மாதிரி எனக்கு வேண்டியதெல்லாம் ஒரு கப் காப்பிதான். ஆனால், பாக்கெட்டில் அதற்கு வழி உண்டா என்றால், அது இனிமேல் தான் தெளிவுபட வேண்டிய விஷயம். என் பையில் ரூபாய்க் கலத்தில் காசு புரளும் வரை எனக்குக் கணக்கும் தெரியாது; கண்ணும் தெரியாது. கரன்ஸிச் செலவாணி என்ற நிலை பிறழ்ந்து காசுச் செலாவாணியில் வரும்போதுதான் நான் கையைக் கொஞ்சம் இறுக்கிப் பிடிப்பேன். ஆனால் தும்பைவிட்டு, வாலைப் பிடித்தால் முடியுமா ?

பஸ் ஸ்டாண்டுக்கு வருமுன்னர் பையில் பஸ்ஸஉக்கேனும் காசு இருக்கிறதா என்று துழாவினேன். ஒண்ணே காலணாவுக்கு மேல், ஒரு துரும்புகூட இல்லை. காப்பிக்குக் காசு இல்லை. ஆகவே இன்று வீட்டுக் காப்பிதான். ஆனால், அந்த ‘மூணே முக்கால் துட்டு ‘க்குச் செலவு வேண்டுமே ‘

ஆபீசிலிருந்து என் வீடு அதிக தூரமில்லை. குறுக்குப் பாதையாக நடந்து சென்றால், முக்கால் மைல் இருக்கும். பஸ்ஸில் சென்றால், ஒரு அணாக் காசுதான். லஸ்ஸில் இறங்கி நடந்துவிடலாம்.

பஸ்ஸில் சென்றால் ஒரு அணா; கால் அணா மிஞ்சும். ஆனால், இந்தக் காலத்தில் காலணா மிஞ்சுவதும் ஒன்றுதான்; மிஞ்சாமல் போவதும் ஒன்றுதான். பஸ்ஸில் செல்லாமல் பக்கத்து நாயர் கடையில் இரண்டு வில்ஸ் சிகரெட் வாங்கினால் அந்தக் காலணாவும் பயனுள்ளதாகப் போய்விடும். பையைத் துப்புரவாகத் துடைத்துவிட்டு சிகரெட்டைப் புகைத்தவாறே நடந்துவிடலாம். இந்தப் பணப் பெருக்கக் காலத்தில் காலணா என்ற நாணயம் வேறு எதனோடாவது ஒட்டிப் பிழைத்தால்தான் மதிப்புப் பெறமுடியும். காலணா மட்டும்தனித்தியங்க முடியாது. அப்போது அது செல்லாக்காசாக மாறிவிடும். ஆகவே அந்தக் காலணாவை வைத்து தர்மம் செய்யலாம்; அல்லது யானை வாயில் ஒதுக்கிவைத்த சுண்ணாம்புத் தேங்காய் மாதிரி சமயத்தை எதிர் நோக்கி, பர்சில் போட்டும் வைக்கலாம்……

இப்படியாக நான் சுய தர்ம விசாரணையில் மனம் கலங்கி சர்ச்சை செய்து கொண்டிருக்கும்போதுதான் என் காதில் அந்தப் பர தர்மம் விழையும் பரிதாபக் குரல் விழுந்தது.

திரும்பினேன்.

பஸ் ஸ்டாப்புக்கு அருகிலுள்ள பூவரச மர நிழலில் அந்தக் கிழவி ஓடியோடிக் கத்திக் கொண்டிருந்தாள்.

‘அய்யாமாரே, அனாதைப்புணமுங்க; தூக்கிப் புதைக்கிறதுக்குக்கூட நாதியில்லைங்க. மவராசா, ஒரு காலணா தருமம் பண்ணுங்க ‘ என்று பதறிப் பதறிக் கத்துவதும், அங்கு கிடத்தப்பட்டிருந்த பிணத்தின்மீது தலைவிரி கோலமாய் விழுந்து மாரடித்துக் கதறுவதுமாக இருந்தாள்.

நான் பார்த்தேன்.

மரத்தடியில் அந்தப் பையனின் பிரேதம் கிடந்தது. உடம்பு நீட்டி நிமிர்த்திக் கிடத்தப்பட்டிருந்தது. பெருவிரல்கள் இரண்டும் சடம்புக் கயிற்றால் கட்டப்பட்டிருந்தன. வாயின் கடையோரத்தில் உமிழ்நீர் வழிந்தோடியிருந்தது. கண்ணில் சந்தனம் அப்பப்பட்டிருந்தது. நெற்றியிலே ஈரம் கலையாத விபூதிப் பூச்சு ‘

அதைப் பார்க்கவே பரிதாபமாய்த் தானிருந்தது. மத்தியானம் நான் டா குடிக்க வெளியில் வந்தபோது, அந்தப் பையனும்தான் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் ‘ அதற்குள்ளாகவா இந்த மரணம் ? வேளாவேளைக்கு வயிற்றுக்கு உணவில்லாமல் அணு அணுவாய்ச் செத்து வருபவனுக்கு சாவு என்பது திடாரென்று கொதிநிலை அடைந்த தண்ணீரைப் போலத்தான் இருக்குமா ? சே ‘ என்ன அநித்யமான வாழ்வு ? இந்தக் கிழவியும் மத்தியானம் தனக்கு வருகிற ஒன்றிரண்டு காசையும் அந்தப் பையனுக்கே தத்தம் செய்து விட்டாளே ‘அதற்குள்ளாகவா இந்த அவச்சாவு ?… ‘

பஸ் ஸ்டாண்டில் நின்றவர்கள் தரும சிந்தையோடு காலணா அரையணா போட்டார்கள். பிணத்தின்முன் விரித்திருந்த துண்டில் காசு சேர்ந்தது.

என்னாலும் தருமம் பண்ண முடியாமல் இருக்க முடியவில்லை. பர்சிலிருந்து காலணாவை எடுத்து விட்டெறிந்தேன். ‘கடைசிக் காசை ராஜாவைப்போல் செலவழி ‘ என்று சொன்ன இங்கர்ஸாலின் பொன்னுரை ஞாபகத்துக்கு வராவிட்டாலும், அடுத்தபடியாக நான் செய்த காரியம் காரில் ஏறியதுதான். ஆகவே, அந்த ஒண்ணே காலணாவை எப்படிச் செலவழிப்பது என்ற யோசனையும் தானே தீர்ந்து போய் விட்டது.

காரில் சென்றபோதும், லஸ்ஸில் இறங்கி நடந்த போதும் என் மனசில் ஒரே ஒரு சிந்தனைதான் மிஞ்சி நின்றது.

‘அவளுக்கும் அந்தப் பையனுக்கும் எந்தவித ரத்த பந்தமும் இல்லை; என்றாலும் அவள் ஏன் அந்தப் பிணத்துக்காக விழுந்து விழுந்து கதறவேண்டும் ? மனித குணத்தின் நல்லுணர்ச்சியாலா ? அதெல்லாமிருக்க முடியாது. மற்றவர்கள் இதயத்திலுள்ள கருணை, அன்பு, அனுதாபம் போன்ற நல்லுணர்ச்சிகளைக் குறையிட்டு, அதன் மூலம் தனது வயிற்றைக் கழுவிக்கொள்ளவே அந்தக் கிழவி வழி பார்க்கிறாள். நானும்தான் என்ன செய்கிறேன் ? எழுத்தாளன் என்ற சாக்கில் மனித உள்ளத்தில் கிடந்து தூங்கும் கருணையுணர்ச்சிகளைத் தூண்டி, சமூகத்தின் கண்ணீரை வரவழைத்து, காசு வாங்குகிறேன் ‘ ஆனால், இந்தக் கிழவி இதற்கு முன்னெல்லாம் தனக்குக் கிடைக்கும் தர்மக் காசை இந்தப் பையன் இடையில் விழுந்து தட்டிக் கொண்டு போய்விடுகிறான் என்பதற்காக, அந்த இடத்திலிருந்து அவனை விரட்டியடித்து, அந்த ‘வியாபார ஸ்தலத்தை, தனக்கே ஏகபோக உரிமையாக்கிக்கொள்ள நினைத்தாளே. ஆனால் இப்போதோ— ? ‘

‘தருமப் பிரபுக்களே, பெத்த வயிறு எரியுதய்யா ‘ எம்புள்ளையைப் பார்க்க முடியலையே. ராசா ‘ நீ போயிட்டியடா கண்ணு ‘ உன்னை இப்படி அனாதைப் புணமாய் பார்ப்பதற்கா பெத்துப் போட்டேன். ஐயா, ஒரு காலணா கொடுங்க ‘ என்று கதறினாள் கிழவி.

–பெற்ற வயிறா ?

‘நிச்சயமாய் இருக்கமுடியாது. அவளையும், அந்தப் பையனையும் நான் எவ்வளவோ காலமாக அறிவேன். அவர்கள் இருவரும் தாயும் பிள்ளையும் அல்ல. அவன் வேறு; அவள் வேறு. அதுமட்டும் நிச்சயம். இருந்தாலும் அவளும் பெண்பிள்ளைதானே. ஆயிரம்தான் தொழில் முறையில் விரோதங்கள் இருந்தாலும், அவளுக்கும் இருதயம் என்று ஒன்று இருக்கத்தானே செய்யும் ? அவளும் மனுஷிதானே. தன் கண் முன்னே செத்து விழுந்த பையனைக் காணும்போது அவளுக்கு நெஞ்சம் கலங்காதா ? அப்படியானால் பெற்ற வயிறு என்று சொல்லி ஏமாற்றுவதன் காரணம் ?–

‘எத்தனையோ ‘தருமப் பிரபுக்களின் ‘ மனசுக்குள் உறுத்தும் உணர்ச்சிகளைக் கிண்டிவிட்டு அல்லது திருப்திப்படுத்தி என் எழுத்தின் மூலம் எனது பசியைத் தணித்துக் கொள்ள வழி பார்க்கிறேனே, அதுபோலவேதான் அவளும் பிழைப்பு நடத்துகிறாளா ? அந்தப் பையனின் மரணத்தில்தான் அவளது ஜீவனம் நடக்க வேண்டுமா ? ஏன், ஊரானின் சவத்தின் மீதுதான் உலகத்தின் பிழைப்பே நடக்கிறதா ? ஒருவன் பிழைக்க வேண்டுமென்றால், இன்னொருவன் செத்து ஆகவேண்டுமா ? அல்லது சாவதுதான் பிழைக்கிற வழியா ?…

‘இல்லை, யாருமே சாகவேண்டியதில்லை; சாவதற்குக் காரணமாயுள்ள சமுதாய அமைப்புத்தான் சாகவேண்டும் ‘ ஒருவனைச் சாகடித்து மற்றவன் வாழ விரும்பினால், முதலில் அவன்தான் சாகவேண்டும் ‘… ‘

என் மனம் என்னென்னவோ அழிவு கோட்டைகள் கட்டி அலைக்கழிந்து கொண்டிருந்தது.

அன்றைக்குக் காப்பி சுகப்படவே இல்லை; கஷாயம் மாதிரிக் கசந்தது.

2

இரவு படுக்கைக்குப் போன பின்னும் அந்தச் சிறுவனின் பிரேத உருவமே என் கண்முன் நின்று கொண்டிருந்தது. ‘சாமி நேத்துக் காலையிலே நான் பிச்சை கேட்டப்போ, தரமாட்டேன்னியே. இப்போ நான் செத்துப் போயிட்டேன். இனிமே உன் பிச்சையும் வேணாம். நீயும் வேணாம் ‘ என்று அவன் சொல்வது போல இருந்தது.

எனக்குத் தூக்கமே பிடிக்கவில்லை.

அந்தக் கிழவியையும், பையனையும் நான் கொஞ்ச காலமாக அறிவேன். எங்கள் ஆபீசுக்கு முன்னுள்ள பஸ் ஸ்டாண்டுதான் அவர்கள் வீடு, வாசல், குடியிருப்பு எல்லாம்.

கிழவிக்கு கிட்டத்தட்ட அறுபது வயதிருக்கலாம். எனினும் தலையெல்லாம் பறட்டையாகி, சூம்பிப் போட்ட பனங்கொட்டை மாதிரி திரிதிரியாய் இருக்கும். முழுநரை; எண்ணெய் அறியாததால், அதில் பளபளப்புக்கு இடமில்லை. சொத்தையாடித் தெறித்துப் போன இரண்டு குறைப் பற்களைத் தவிர வேறு பல் கிடையாது. முகம் சுருக்கு விழுந்த ஈரத் துணி மாதிரி வதங்கிக் கிடக்கும். இடையில் கந்தல் கந்தலான ஒரு சேலை தனது நிஷ்காம்ய சேவை பங்கப் பட்டுவிடக் கூடாதே என்று ஒட்டி ஒடுங்கிக் கிடக்கும்.

அவள் தினம் தினம் பிச்சை யெடுப்பாள். காரில் ஏற வரும் ஆத்மாக்கள் யாரேனும் தாராளமாய் மடியவிழ்த்தால் உண்டு. ஆனால், ஒவ்வொரு பஸ்ஸாக இடமில்லாமல் தவறவிட்டுத் தவிக்கும் நபர்களுக்கு தரும சிந்தனைக்கு இடமிராதுதான். எனினும் சிலர் அவர்களுக்குத் தருமம் செய்ததன் புண்ணியமாகவாவது, அடுத்த பஸ்ஸில் இடம் கிடைத்துவிடாதா என்ற நம்பிக்கையில் காலணா அரையணா விட்டெறிவதும் உண்டு. ஆனால், அரசமரத்தைச் சுற்றி விட்டு, அடிவயிற்றைத் தொட்டுப் பார்ப்பதில் எவ்வளவு அர்த்தம் உண்டோ அவ்வளவுதான் இதிலும் உண்டு.

அந்தப் பையனும் அப்படித்தான், ‘சாமி ‘ தாயில்லாப் பிள்ளை, சாமி ‘ என்று சொல்லிப் பிச்சை யெடுப்பான்.

அவர்கள் இருவரும் பிச்சையெடுப்பதை நான் எவ்வளவோ காலமாகப் பார்த்து வந்திருக்கிறேன்; என் பையில் கடைசியாக மிஞ்சும் காலணாவையும் அவர்களுக்கு விட்டெறிந்து சித்ரகுப்தனின் தருமச் சிட்டையில் நானும் இடம் பெற முயன்றிருக்கிறேன். சமயங்களில், ‘சரி தாண்டா, போடா. நீ கைநீட்டிபிச்சை எடுக்கிறே; நான் அதைச் செய்யலே ‘ என்று முப்பது முப்பத்தோராம் தேதிகளில் எரிந்தும் விழுந்திருக்கிறேன்.

அவர்கள் பிழைப்பு அந்தப் பிச்சையிலேதான் நடந்து வந்தது. பிச்சையெடுக்கும் அவர்களால் சேர்த்து வைக்கமுடியாது. ‘நாலணா சேர்ந்தது; பக்கத்து ரிக்ஷா ஸ்டாண்டுக் கூடைக்காரியிடம் ஒரு கவளம் சோற்றை வாங்கித் தின்றோம் ‘ என்றும் கிடையாது. ஓரணா சேர்ந்ததுமே பக்கத்து நாயர் ஹோட்டல் அவர்களை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும். உடனடிப் பிரச்னையாக தோன்றித் தோன்றி வரும் பசியை, தற்காலிகமாகத் தணிக்கவெண்ணி நாயர் ஹோட்டலில் ‘டா சிங்கிள் ‘ சாப்பிடுவார்கள்; அதன் மூலம் பசியைத் தணித்துக் கொள்ள முடியாவிட்டாலும் பசியைக் கொன்று விடுவார்கள்.

சமயங்களில் அவர்கள் இருவருக்கும் சண்டையும் மூண்டு விடுவதுண்டு.

‘பிசாசே ‘ நீயென் இங் ‘னெ வந்து பிச்சை யெடுக்கே ? உனக்குப் பேதிவராதா ? போயேன், அந்த இஸ்டாண்டுக்கு, இங் ‘னே வந்து என் புயைப்பிலே ஏன் மண்ணைப் போடுதே ? ‘ என்று சீறுவாள் கிழவி.

‘நீதான் போயேன் ‘ ‘ என்று பையன் துணிந்து ஒரு வார்த்தை சொல்லிவிட்டு, மீண்டும் கைநீட்ட ஆரம்பித்து விடுவான்.

இருவரும் தொழில் முறையில் அநேகமாக எதிரிகளாகவே பழகி வந்தார்கள் ‘ எனினும் அந்தப் பையனின் திடார் மரணம் ?

‘என்ன இருந்தாலும் அவளும் ஒரு பிள்ளையையாவது பெற்று, கொஞ்சிக் குலாவியிருக்கமாட்டாளா ? அவளுக்கும் இதயம் கிடையாதா ? பாவம்…..அந்தப் பையன் செத்ததால், தனக்கு இனி தொழில் வட்டாரத்தில் ஏக போக ஆதிபத்யம் கிடைக்கும் என்று தெரிந்தபோதிலும், அவள் ஏன் கண்ணீர் விடுகிறாள் ? அவளும் மனுஷி ‘ அவளும் கருணை உணர்ச்சியுள்ள கட்டை ‘

‘அப்படித்தானா ?…. ‘

நான் எப்போது தூங்கினேனோ, எனக்குத் தெரியாது.

3

மறுநாள் காலையில் நான் சாப்பாட்டை முடித்து விட்டு, ஆபீசுக்குக் கிளம்புமுன் டிராயரைத் துழாவினேன்; அதில் அரையணாக்கூட இல்லை. ‘சரி. போனால் போகுது ‘ என்று பொடி நடையாக வண்டியைத் தட்டிவிட்டேன். வரும் வழியெல்லாம் அந்தக் கிழவியும் பையனுமே என் மனசில் வட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்.

‘இன்று அந்தக் கிழவி தனியாகத்தான் பிச்சை யெடுத்துக் கொண்டிருப்பாள். அந்தப் பையனின் உடம்பும் இதற்குள் புதை பட்டுப் போயிருக்கும். இன்று அவளைப் பார்க்க வேண்டும். எதிரி தொலைந்துவிட்டான் என்ற மகிழ்ச்சியோடிருப்பாளா அல்லது தனது தொழில் முறைச் சகாவும், பேச்சுத் துணையுமாயிருந்தவன் போய்விட்டானே என்ற வருத்தத்தோடு இருப்பாளா ? ‘– என்றெல்லாம் யோசித்துக் கொண்டே நடந்தேன். நடக்கும் போது யோசிக்க ஏதாவது வேண்டுமே ‘

ஆபீசை நெருங்கியதும் என் பார்வை பக்கத்துச் சந்தில் திரும்பியது.

அங்கு நான் கண்ட காட்சி–

சந்துக்குள் அந்தக் கிழவியும், அந்தப் பையனும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். கிழவி சந்தனத்தை அவனுடைய மூடிய கண்களில் அப்பிக் கொண்டிருந்தாள்; பையன் தன் இரு பெருவிரல்களையும் சடம்புக் கயிற்றால் கட்டிக் கொண்டிருந்தான்.

‘ஏ, கெய்வி ‘ கண்ணுலே மெதுவா அப்பு. ஒரேயடியாக் கரிக்குது ‘ என்றான் பையன். அதுவும் என் காதில் விழத்தான் செய்தது. ஆம். அந்தப் பையன் சாகவில்லை ‘

எனக்கு மண்டையில் ஓங்கியடித்த மாதிரி இருந்தது.

‘அப்படியானால் நேற்று நடந்ததெல்லாம் ஒரே மாய்மாலம் தானா ? அந்தப் பையன் செத்துப்போன மாதிரி நடிப்பதும், அவள் பெற்றுப்போட்ட தாய்மாதிரி அலறுவதும் அவர்களுக்குள் நடந்து கொண்ட வியாபார ஒப்பந்தம்தானா ? எப்படி மதகுரு ஏசுவின் சிலுவைப் புண்களைக் காட்டிக் காசு பறிக்கிறானோ, எப்படி வயிற்றில் சேலையைப் பொதிந்து கட்டிக் கொண்டு, பிள்ளைத்தாச்சி என்றுகூறி, சில பெண்கள் பிச்சை எடுக்கிறார்களோ, எப்படி உடம்பிலும் நாக்கிலும் வேல் ஊசிகளைக் குத்திக் கொண்டு முருகன் பேர் சொல்லி சிலர் பிச்சை யெடுக்கிறார்களோ, எப்படி எழுத்தாளன் சோகக் கதைகளை எழுதி, பிழைப்பு நடத்துகிறானோ–அப்படித்தான் இவர்களும் பிழைக்கிறார்கள். உலகில் நல்லபடியாய் பிழைக்க முடியாதா ? மனிதனின் நல்லுணர்ச்சிகளைச் சுரண்டித்தான் பிழைக்க முடியுமா ? ‘

எதுவும் புரியாமல் ஆபீசுக்குள் சென்றேன். அங்கு யாரோ, யாரிடமோ ‘இது என்னங்க, வெறும் செத்த பிழைப்பு ‘ ‘ என்று கூறுவது காதில் விழுந்தது.

‘அப்படியா ? இந்தச் சமுதாய வாழ்க்கையே வெறும் செத்த பிழைப்புத்தானா ? இல்லை. இல்லவே இல்லை. பிழைப்பு வேறு; வாழ்க்கை வேறு. நாம் நம் வயிற்றைக் கழுவ நினைப்பது பிழைப்பு. சமுதாய முழுமைக்கும் வயிற்றைக் கழுவ வழி காண்பது வாழ்க்கை. நாம் வாழ்வதற்காகவே பிழைக்க வேண்டும்; பிழைப்பதற்காக வாழக்கூடாது ‘ இந்த எண்ணம், எனக்கு, உங்களுக்கு, அந்தக் கிழவிக்கு, அந்தப் பையனுக்கு எல்லோருக்கும் ஏற்பட்டு விட்டால், நாம் செத்துச் செத்துப் பிழைக்க வேண்டியதில்லை; நன்றாக, பரிபூரணமாக வாழ்ந்த திருப்தியோடேயே சாகலாம்… ‘

அன்றைய மாலைக் காப்பி கசக்கத்தான் செய்தது; என்றாலும் அந்தக் கசப்பில் நல்ல ருசியும் இருந்தது.

Series Navigation

ரகுநாதன்

ரகுநாதன்