பாஞ்சாலி ராஜ்யம்

This entry is part [part not set] of 26 in the series 20020210_Issue

பவளமணி பிரகாசம்


கல்லூரி ஹாஸ்டல் ரூமில் நெஞ்சின் மேல் அன்றைய செய்தித்தாள் பரப்பியிருக்க ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான் கோபால். நித்திரையில் கனவு கண்டான்.

மல்லிப்பட்டி கிராமத்து பண்ணை வீட்டு ஹால். ஊஞ்சலில் கையில் கதைப் புத்தகத்துடன் உட்கார்ந்திருக்கிறான் கோபால். அப்போது அங்கே நாரதர் வருகிறார்.

நாரதர்: ‘என்னப்பா கோபால், கைல கதைப்புத்தகத்தோட ஹாய்யா ஊஞ்சல்ல ஆடிக்கிட்டிருக்க ? ‘

கோபால்: ‘கண்ணை தடவாதய்யா. ஏதோ சீக்கிரமா கிரைண்டர்ல மாவை ஆட்டி முடிச்சிட்டு கிடைச்ச கொஞ்ச நேரத்தில கதைப்புத்தகத்தை எடுத்தேன். இப்போ பொன்னுத்தாயி வந்துருவா. அப்புறம் உட்கார உடாம ஓட ஓட விரட்டுவா. ‘

நாரதர்: ‘யாரு பொன்னுத்தாயி ? ஏன் உன்னை ஓட ஓட விரட்டுவா ? ‘

கோபால்: ‘அவதான் எங்க பொண்டாட்டி. ‘

நாரதர்: ‘என்னது ?எங்க பொண்டாட்டியா ? ‘

கோபால்: ‘ஆமா. நான் அவளோட அஞ்சாவது புருசன். கோவிந்தன் நாலாவது புருசன் -பிள்ளைகளை ஸ்கூல்லேர்ந்து அழைச்சிட்டு வர போயிருக்கான். மூணாவது புருசன் தயாளன் சமையல்கட்டுல சப்பாத்தி செஞ்சிகிட்டு இருக்கான். இரண்டாவது புருசன் ரமேசு பண்ணையில கூலியாட்களுக்கு சம்பளம் பட்டுவாடா பண்ண போயிருக்கான். முதல் புருசன் முருகேசு பொன்னுத்தாயி கூட ஹெலிக்காப்டர் ஓட்டிக்கிட்டு போயிருக்கான். ‘

நாரதர்: ‘என்னப்பா இது ? ஒரு பொண்ணுக்கு அஞ்சி புருசனா ? ‘

கோபால்: ‘ஆமய்யா. நீர் எந்த லோகத்துலேர்ந்து வர்றீர் ? ‘

நாரதர்: ‘மீண்டும் பாஞ்சாலியா ? ‘

கோபால்: ‘ஆமாமாம். அதேதான்.இந்த 2102ம் வருசத்துல பாஞ்சாலி ராஜ்யந்தான் நடக்குது…..ஹெலிக்காப்டர் சத்தம் கேட்குது, பொன்னுத்தாயி வந்துட்டா.வேகமா அந்த பீரோ பின்னால ஒளிஞ்சிக்கோய்யா. ‘

பொன்னுத்தாயி வருகிறாள்.முருகேசு கையில் ஃபைல்கட்டுடன் பின்னால் வருகிறான்.

பொன்னுத்தாயி: ‘என்னய்யா கோபாலு, ஏன் இப்படி மசமசன்னு நின்னுக்கிட்டிருக்க ? தின்னுட்டு சோம்பேறியா வெட்டிப் பொழுத போக்குறதே உன் வேலையா போச்சி. வீட்டை இன்னும் கொஞ்சம் சுத்தமா,நீட்டா வச்சிருப்போம்னு தோணுதா ? ‘

தயாளன் காப்பி டம்ளரை தட்டில் வைத்து கொண்டு வந்து நீட்டுகிறான். பொன்னுத்தாயி அதை முகச்சுளிப்போடு எடுத்துக் குடிக்கிறாள்.

பொன்னுத்தாயி: ‘என்னய்யா இது ? காப்பியா ? களனித்தண்ணியா ? ஆறி அவலாப்போன இந்தக் காப்பிய நீயே குடி….இன்னிக்கு என்ன டிபன் ? ‘

தயாளன்: ‘சப்பாத்தி, பட்டாணி குருமா. ‘

பொன்னுத்தாயி: ‘அதை நாய்க்கு போடு. எனக்கு 2 நிமிஷத்தில முறுகலா மசால் தோசை வேணும். ‘

தயாளன்: ‘சரிம்மா. ‘

பொன்னுத்தாயி: ‘ஏ, கோபாலு! அந்த ரமேசுகிட்ட பம்புசெட்ல என்ன கோளாறு, ஏன் ஷாக் அடிக்குதுன்னு பாத்துட்டு வர சொன்னேனே, அவன ஞாபகப் படுத்தினியா ? ‘

கோபால்: ‘ஒரு வாட்டிக்கு ஒன்பது வாட்டி சொல்லி அனுப்பினேம்மா. ‘

பொன்னுத்தாயி: ‘கோவிந்தனெங்க காணோம் ? இன்னுமா ஸ்கூல்லேர்ந்து பிள்ளைங்க வரல ? ஒருத்தருக்கும் ஒரு துப்பு கிடையாது. ‘

கோவிந்தனுடன் குழந்தைகள் ராமாயியும், முத்துராசுவும் வருகிறார்கள்.

ராமாயி: ‘அம்மா, இன்னிக்கி கணக்குல நான்தாம்மா ஃபர்ஸ்ட் ராங்க்! ‘

பொன்னுத்தாயி: ‘கண்ணு! என் செல்லம்! என் பொண்ணுல்ல நீ! ‘

அணைத்து முத்தமிடுகிறாள்.

முத்துராசு: ‘அம்மா, அம்மா! நானும் கணக்கு டியூஷனுக்கு போறேம்மா. ‘

பொன்னுத்தாயி: ‘போதும், போதும். நீ டியூஷனுக்குப் போயி படிச்சி என்ன செய்யப் போற ? தண்டம்! அடுப்படில கூடமாட வேல செஞ்சி பழகு. போற எடத்துல நல்ல பேரு வாங்கலாம். ‘

கோபால்: ‘இன்னிக்கு சாயங்காலம்…..நான் முன்னாடியே கேட்டிருந்தேனே…..பக்கத்து டவுனுல ஆடவர் சங்க மீட்டிங்……போயிட்டு சீக்கிரமா வந்துருவேன். ‘

பொன்னுத்தாயி: ‘உம்.உம்.(உறுமுகிறாள்).வேல வெட்டி இல்லாத ஆம்பளைங்கெல்லாம் சேந்து வம்பளக்குறது. உருப்படாததுங்க. ‘

உள்ளே போகிறாள். உடனே கோபால் வாசலுக்கு ஓடி பைக்கை ஸ்டார்ட் செய்கிறான்.நாரதர் வேகமாய் ஓடி வந்து பில்லியனில் தொத்திக் கொள்கிறார்.

கோபால்: ‘உன்னை மறந்தே போய்ட்டேன்யா. எனக்கு பெர்மிஷன் கிடச்ச சந்தோஷத்தில அவ மனசு மாற்றதுக்குள்ள தப்பிச்சா போதும்னு கிளம்பிட்டேன். ‘

நாரதர்: ‘ஏம்பா கோபால், என்னால இதையெல்லாம் நம்பவே முடியலையே. ‘

கோபால்: ‘மீட்டிங்ல வந்து பாரும். ஆண்களோட அவல நிலை புரியும். ‘

சிறிது நேரத்தில் மீட்டிங் நடக்கும் இடத்தை அடைகிறார்கள்.

தலைவர்: ‘எல்லோரும் தவறாம வந்ததுல பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆண்கள் இன்றைக்கு எப்படியெல்லாம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, பாவப்பட்ட இனமாக, இரண்டாம்தர பிரஜைகளாக நடத்தப்பட்டு வருகிறோம்னு உங்களுக்கெல்லாம் தெரியும். பெண்ணாதிக்கத்திலிருந்து விடுபடவும், ஆடவரோட கெளரவத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்டவும், ஆலோசனைகளை வழங்க இன்னிக்கு இங்க கூடியிருக்கோம். ‘

நாராயணன்: ‘கூட்டத்த சீக்கிரமா நடத்தி முடிக்கணும்யா, இல்லாட்டி என் வீட்டுக்காரிகிட்ட பேச்சு கேட்க முடியாது. ‘

வரதன்: ‘எங்க வீட்டிலயுந்தான். இங்க வர்றதுக்காக இன்னிக்கி அதிகாலையிலேயே எந்திரிச்சி எல்லா வேலைகளையும் பறந்து பறந்து செஞ்சிட்டு வந்திருக்கேன். போய் செய்றதுக்கு இன்னும் அவ்வளவு வேலை இருக்கு. ‘

தங்கய்யா: ‘இங்க வர்றதுக்காக நாலு நாளா அவ ஏவின வேலையெல்லாம் முகம் கோணாம செஞ்சி முடிச்சி நைஸ் பண்ணியிருக்கேன். அவ சொன்ன நேரத்துக்கு திரும்பலைன்னா அவ்வளவுதான்…அடுத்த மாச மீட்டிங்க்கு என்னை விடமாட்டா. ‘

தலைவர்: ‘சரி, சரி.அவரவர் சொந்தக்கதையையும்,சோகக்கதையையும் பேசுறதுக்கா இங்க வந்துருக்கோம் ? ஆளுக்கு அஞ்சு ஆண்கள கல்யாணம் பண்ணிக்கிட்டு அவங்கள அடிமைகளா நடத்துற பெண்களோட கொட்டத்த அடக்குறதுக்கான யோசனைகளை இப்போ ஒவ்வொருத்தரா சொல்லுங்க. ‘

ராசப்பன்: ‘பார்லிமெண்டுல ஆண்களுக்கு 23 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யணும்னு மசோதா தாக்கல் செய்யணும். உடனடியா ஆடம் டாஸிங்கிற்கு தண்டனை கொடுக்க சட்டம் இயற்றணும். ‘

கலையரசன்: ‘நம்மோட தெருக்கள சுத்தம் பண்ணி, மரம் நட்டு, மருத்துவ முகாம்கள் நடத்துறது மட்டும் நம் பணிகள் இல்ல.சமுதாயத்தில ஒரு விழிப்புண்ர்ச்சிய ஏற்படுத்தணும். ‘

உலகநாதன்: ‘முதல்ல ஆண்களே ஆண்களுக்கு எதிரா செயல்பட்றத தடுக்கணும். ‘உங்களுக்கென்ன குறை ?சாப்பாடு, உடை, உறைவிடம் எல்லாம் குறைவில்லாம கிடைக்குதே, நம்ம வீட்டு வேலைகள நாம செய்யிறதுல நமக்கென்ன கெளரவ குறைச்சல் ? ‘ அப்படின்னு பேசுற புல்லுருவிகள் நமக்குள்ளேயே இருக்காங்க. ‘

பக்கிரிசாமி: ‘அது மட்டுமில்ல. பேராசை பிடிச்ச பெண்களுக்கு துணை போறதும் நிறைய ஆம்பளைங்கதான்.டாக்டர், இன் ஜினியர்,பேங்க் ஆபீஸர், இன்னும் கை நிறைய சம்பாதிக்கிற நிறைய ஆம்பிளைங்க 4வது,5வது புருசனா கூட கல்யாணமாகாம வரதட்சிணை கொடுமையினால முதிர் பிரம்மச்சாரிகளா வலம் வந்துகிட்டிருக்காங்க. ‘

பூவேந்தன்: ‘சரியா சொன்னீங்க.நமக்கு நாமே எதிரிகளா இருக்கிற நிலைமைய மாத்தி எல்லா ஆடவரும் ஒத்துமையா செயல்பட்டா பழைய ஆண் தலைமை சமுதாயத்தை உருவாக்க முடியும். ‘

தணிகாசலம்: ‘அதுக்கு நம்ம பலத்த நிரூபிக்கணும். வர்ற மார்ச் 18ம் தேதி அகில உலக ஆண்கள் தினத்த மிக சிறப்பா கொண்டாடணும். எல்லோரும் அதிசயப்பட்ற மாதிரி, பத்திரிக்கைகள் எல்லாத்திலயும் செய்தி வர்ற மாதிரி, ஆண்களுக்குள் இவ்வளவு திறமையாங்கற மாதிரி சாதிச்சி காட்டணும். ‘

தலைவர்: ‘ரொம்ப நல்லா சொன்னீங்க.அந்த மாபெரும் விழாவை எப்படி சிறப்பா நடத்துறதுன்னு எல்லோரும் யோசிச்சி அடுத்த மீட்டிங்கில வந்து சொல்லுங்க, சரியான திட்டம் வகுப்போம். இன்னிக்கு ரொம்ப நேரமாயிட்டதால இத்தோட இன்றைய கூட்டத்த முடிச்சுக்குவோம். ‘

எல்லோரும் அவசரமாக கலைகிறார்கள்.வண்டியை நோக்கி விரையும் கோபாலை நாரதர் பிடித்து நிறுத்துகிறார்.

கோபால்: ‘என்னய்யா, நாரதரே!உன்னோட பெரிய தொல்லையா போச்சு. காலா காலத்துல போய் சேரலைன்னா யார்யா பாட்டு கேக்குறது ? ‘

நாரதர்: ‘எனக்கு ஒன்னே ஒன்னு மட்டும் விளங்கல. அதை மட்டும் சொல்லி விடு. ‘

கோபால்: ‘சட்டுனு கேளுய்யா. ‘

நாரதர்: ‘நூறு ஆண்டுகளுக்கு முன்னால நிலைமை வேற மாதிரி இருந்ததே, எப்படி இந்த மாதிரி தலைகீழாய் மாறியது ? ‘

கோபால்: ‘உசிலம்பட்டி, உசிலம்பட்டின்னு தமிழ் நாட்டுல ஒரு ஊரு இருக்கப்பா. அங்க பெண் குழந்தைகள பிறந்த உடனே கொன்னுக்கிட்டிருந்தாங்க. அதுக்கெல்லாம் நிறைய டெக்னிக் இருக்கு-நெல்லுமணி, எருக்கம்பாலு அப்படின்னு. அப்புறமா விஞ்ஞானம் ரொம்ப வேகமா வளந்துச்சா, அம்மாக்காரி வவுத்துல இருக்கையிலயே ஸ்கான் பண்ணி பாத்துட்டு பொண் குழந்தைய கருவிலயே அழிச்சிட்டாங்க. அதனால என்ன ஆச்சி ? பெண் ஜனத்தொகை குறைஞ்சி போச்சி. பாஞ்சாலி ராஜ்யம் ஆரம்பிச்சிருச்சி ! ‘

நாரதர்: ‘அரசாங்கம் வேடிக்கை பாத்துகிட்டா இருந்திச்சி ? ‘

கோபால்: ‘சும்மா இருக்கலை. ஏதோ தொட்டில் குழந்தை திட்டம் வந்து அனாதை இல்லங்கள் நிறைஞ்சிது. அப்புறம் வரதட்சணைங்கற காரணத்த களையெடுக்கிறத விட்டுட்டு ஸ்கான்ல என்ன குழந்தைன்னு சொல்லக்கூடாதுன்னு சட்டம் போட்டு உண்மையான மருத்துவ பலன்கள் கிடைக்கவிடாம செஞ்சதுதான் பலன். மக்கள் மனசு மாறல. வினைய விதைச்சிட்டு விளைவை அனுபவிக்கிறோம்.போதுமாய்யா விளக்கம் ? இப்ப ஆள விடுறியா ? ‘

கோபாலின் நண்பன் ரகு ரூமுக்குள் வருகிறான்.

ரகு: ‘என்னடா, கோபால் ? தூக்கத்தில பினாத்திகிட்டிருக்க ? அதுவும் பட்ட பகல்ல பேப்பரை மார்ல போட்டுகிட்டு அப்படி என்ன தூக்கம் உனக்கு ? ‘

கோபால்: ‘கடைசி செமஸ்டருக்கு ராவெல்லாம் கண் முழிச்சி படிக்கிறதுல கண்ணை அசத்திடுச்சிடா. பேப்பர்ல படிச்ச செய்தி அப்படியே ஒரு கெட்ட சொப்பனமா வந்து நான் கதி கலங்கிப் போய்ட்டேண்டா. ‘

ரகு: ‘முழிப்பா இருக்க வேண்டிய நேரத்துல முழிப்பா இருந்தா எந்த கெட்ட சொப்பனமும் வராது, வீணா கதி கலங்கவும் வேண்டாம். ‘

என்ன சரியா ?

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்