உடையும் மதிப்பெண்கள்

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

புதியமாதவி


அம்மா..
ஏன் அழுகிறாய் ?
உன் கனவுகளை எல்லாம்
என்னிடம் சுமத்தினாயே.
தாங்க முடியாமல் என் தோள்கள் வலிக்கின்றன.
அம்மா..
உன் ஆசைகளை எல்லாம்
என் கனவுகளில் தூவினாயே
தூக்கமில்லாமல் என் இமைகள் துடிக்கின்றன
அம்மா
எபோதும் எதிலும்
உனக்காகவே என் போட்டிகளும் பரிசுகளும்.
அம்மா..
உன்னையும் என்னையும்
இணைத்திருப்பது
தாள்களில் எழுதப்பட்டிருக்கும் மதிப்பெண்களும்
தரைகளில் உடைந்துவிழும் பரிசுகளும்
மட்டும்தானா ?
அம்மா
இவை இல்லை என்றால்
நீயும் நானும் வெறும் பொம்மைகளா ?

அம்மா..
நான் அழுதப்போது உன் மார்பில் அணைத்தாயே
அந்த ஈரத்தில் மட்டும்தான் இருந்தது
உனக்கும் எனக்குமான உறவு.
அந்த நினைவுகளிலெயே
இதோ..
மாடியிலிருந்து குதிக்கிறது
உன் கனவுகளைச் சுமந்த
என் தோள்கள்.
அம்மா ..
அப்பாவிடம் சொல்லிவிடு
உடைந்து போனது
அவர் கனவுகள் மட்டுமல்ல
என் வாழ்க்கையும்தான்.

….
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை