This entry is in the series 20070621_Issue

தாஜ்


நித்திரை யோகம்.

சிலிக்கும் காற்றேடு
முத்து முத்தான மழை
மண் மணக்க
பூப்பும் காய்ப்புமாய்
படர்ந்தக் கிளைகளில்
துளிர்களின் அட்டகாசம்
கோல திசையெங்கும்
கண்களைத் தேடும்
ஜீவ வர்ணஜாலம்.

வானலாவிய
இருப்பிடங்களின் மறைவில்
மிகுந்தப் பாதுகாப்பில்
எம்மக்கள் வசிக்கிறார்கள்.
பேருயிர் கசிந்து
உண்டு உடுத்திக்
களிக்கிறார்கள்.
கதவு சன்னல்கள்
தீர தாழிடப்பட
ஒலி ஒளி ஆனந்தம்.
விழுங்கும் இருள் கவிழ
தலை கொடுத்து நிம்மதி.
ஆழ்கடல் உறக்கத்தில்
கண்விழிப்பின் பிரகாசம்
விடியலின் கனவு.



மலம்கொண்ட உடல்.

அருவருப்பு கூடுகிறது
கண்வழியே வாய் வைக்கும்
இந்த மிருகம்
பன்றியாகவே தெரிகிறது.
என் ஒளிவட்ட நிமிஷம்
கபால பொந்துக்குள்
ஓடி மறைகிறது.
வெளிப்படும் பொழுது
ஸ்தலம் பூராவும் திரிகிறது
என் பாதையோர துளிரை
துவசம் செய்து
வழியெல்லாம் நரகல்.
வேலியிட்டுப் பயனில்லை
விரட்டினால் ஓடுகிறது
மயங்கும் நேரம்
பின் புறமாய்
மேய்ந்தப்படி பாதைக்கு
வந்து விடுகிறது.

********
satajdeen@gmail.com
www.tamilpukkal.blogspot.com

Series Navigation