கவிஞனாகும் முன் சில ஆயத்தங்கள்
குமரி எஸ். நீலகண்டன்

அரசியல்வாதியின் புதல்வனுக்கு
கவிஞனாக ஆசை….
முதலிலேயே
சாகித்திய அகாதெமிக்கு
சாதகமாய் ஒரு
பாதைப் போட்டாயிற்று.
பரவலாய் அறியப்பட்ட
பல எழுத்தாளர்களின்
பலகீனங்களையும்
கேட்டுத் தெரிந்தாயிற்று.
துதி பாடும் கூட்டத்தின்
சுருதியோடு ஒரு
இலக்கிய வட்டமும்
ஆரம்பித்தாயிற்று….
ஒரு இலக்கிய இதழ்
ஆரம்பித்து அதில்
ஆசிரியராக தனது
பெயரையும் போட்டு
பல துதிபாடிகளைப் பற்றிப்
பாராட்டி தனக்கொரு
பாதுகாப்பு வளையமும்
வரைந்தாயிற்று.
வாழ்த்துரை, சிறப்புரை,
தலைமையுரையென
தனது புகைப்படத்தை
அவ்வப்போது நாளிதழ்களில்
நகரவிட்டாயிற்று.
ஒரு மடிக்கணினியும் வாங்கி
மடியில் வைத்தாயிற்று.
சரி இனிதான் எனது
முதல் கவிதையை
எழுத வேண்டும்…
குமரி எஸ். நீலகண்டன்