கடவுள் பேசுகிறார்

This entry is part [part not set] of 39 in the series 20080605_Issue

ரஜித்


சூரையாடியது சூரைக்காற்று
அறுந்த பட்டங்களாய்
பறந்தன கூரைகள்
மல்லாந்தன சுவர்கள்
பிடுங்கி வீழ்ந்தன மரங்கள்
பிடுங்கப்பட்டன உயிர்கள்
ஆறு நிமிடக் காற்றுக்கு
அறுபது உயிர்கள் காவு

அடுத்த நாள்

அடுக்கப்பட்டன உடல்கள்
சுற்றி அழுதன சுற்றங்கள்

‘கண்ணீர் துடைக்கும் கடவுளோ
கண்களைப் பிடுங்குவது’

உப்பிட்ட மண்ணெல்லாம்
உப்புக் கண்ணீர்

அப்போது
விண்ணைக் கிழித்தது மின்னல்
கொட்டிக்கவிழ்த்த வைரமென
திக்கெட்டும் வெளிச்சம்
வெண்மேகம் எழுந்தது
அங்கே இறைமுகம் தெரிந்தது
வாய் திறந்தது
வார்த்தைகள் விழுந்தது

‘நான்தான் கடவுள்
அப்படியே நில்லுங்கள்
பத்து நிமிடம்
இங்கே நிற்கும் ஒருவரின்
உயிர்கொண்டு
அறுபது உடலையும்
எழுப்புவேன்
1 .. 2 .. 3 .. 4 .. 5 .. ‘

பத்து நிமிடம் கடந்தது
அங்கே பிணங்கள் மட்டுமே
கிடந்தது


rajid_ahamed@yahoo.com.sg

Series Navigation