This entry is in the series 20110403_Issue

வே.பத்மாவதி


பேசினாய் பேசுகின்றாய் …… பேசுவாய்

இது தான்
காதல்
இலக்கணக் குறிப்பு

அழைத்தேன் அழைக்கிறேன் அழைப்பேன்

இன்று

காரணமே இல்லாமல்
நம்மிடையே பல
உரையாடல்கள்

காரணமே இல்லாமல்
பல சண்டைகள்

ஐந்து நிமடத்திற்கு
ஒரு முறை
அழைத்து
உன் குரல் கேட்கனும்
என்பாய்

ஐந்து
மணி நேரம் கழித்து
கூப்பிடுகிறேன்
மேடையில் ஒருத்தி
நன்றாக பேசிக்கொண்டிருக்கிறாள்
என்றாய்

பேருந்து
பயணங்களில்
எல்லாம்
உன் கைகள்
என் தோள்களை
வளைத்து பிடித்திருக்கும்

என் முகம்
வெட்கி சிவந்திருக்கும்

உன்
அருகில் நிற்கும்
அருகதை கூட
இழந்து விட்டேன்
போலும்
இப்பொழுது

தூங்கி எழுந்து
வந்தால் கூட
வருணனைகள் பல
செய்வாய்

தலை சீவி முடித்து
வந்த போதும்
வறண்ட வார்த்தைகள்
இல்லை

ஒரே ஒரு
அலைபேசி
முத்தம் கொடுக்க
ஓராயிரம் முறை
கெஞ்சி இருக்கிறாய்

ஒரு
முத்தம் தா
நானே
எப்படிக் கேட்பது

நான் எப்படி
காரணம் ஆக முடியும்

கருவிழியாக இருந்தது
கரு வளையங்கள் ஆனதற்கு
தென்னக் குழைத்த இடை
தொங்கிப் போனதற்கு

ஐயோ
உன் குழந்தையையும்
உன்னையும் பார்ப்பதில் தானே
என்னை மறந்தேன்

இளமை என்னை வெறுத்தர்க்கும்
இயற்க்கை என்னை மறுத்ததற்கும்
நான் வருந்தவில்லை

எத்தனயோ
ஆடவர்கள்
மத்தியில்
நான் தேர்ந்தெடுத்த
நீயும் கூட
விதிவிலக்கானவன்
அல்ல

தெரிந்திருந்தால்
கன்னியாகவே
இருந்திருப்பேன்

Series Navigation