நினைவுகளின் தடத்தில் – (38)

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

வெங்கட் சாமிநாதன்


கும்பகோண வாசம் அப்போதும் பிடித்திருந்தது. இப்போது அது பற்றி நினைத்துப் பார்க்கும்போதும் பிடித்துத் தான் இருந்ததாகத் தோன்றுகிறது. அந்த வளரும் வயதில் ஒவ்வொரு இடமும், எதிர் நிற்கும் புதிய அனுபவங்களும், சுவாரஸ்யமாகத் தான் இருந்தன. அதிலும் கும்பகோணத்தில் என் இஷ்டத்துக்கு நாட்களைக் கழிக்கும் தனிக்கட்டையாக சுதந்திரத்தோடு இருந்தது பிடித்திருந்தது. இப்போது அது பற்றி எழுதும்போது சில வேடிக்கையான சம்பவங்களும் ஞாபகத்துக்கு வருகின்றன.

ஒரு நாள் பாட்டி இரண்டு நாட்கள் முன் நடந்த ஒரு சம்பவம் பற்றிச் சொன்னாள். ராத்திரி நேரத்தில் அங்கு திருடன் வருகிறான் என்று. பின் வேடிக்கையான ஒரு திருட்டு பற்றியும் சொன்னாள். இரண்டு மூன்று வீடுகள் தள்ளி ஒரு வீட்டில் வைத்திருந்த பெரிய பித்தளைச் சாமான்கள் நிறைய களவு போய்விட்டதாம். மகாமகக் குளம் மேற்குத் தெரு முடியும் இடத்தில், வடக்குத் தெரு ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு ஹோட்டல் இருந்தது. அந்த ஹோட்டல் காரரின் பாத்திரங்கள்ளாம் களவு போனது. அந்த ஹோட்டல் எப்போதும் கண்ணில் பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ஒரே ஒரு தடவை தான் அந்த ஹோட்டலுக்கு ஒரு நாள் இரவு பசிக்கு ஏதாவது சாப்பிடவேண்டும் என்று போயிருக்கிறேன். காசு ஏது? ஒரு தடவை பரிட்சைக்குத் தயாராக முதல் நாள் சாயந்திரமே நான் உடையாளூரை விட்டுக் கிளம்பி கும்பகோணம் வந்தேன். வந்தால், பாட்டி இல்லை. கிராமத்துக்குப் போயிருக்கிறாள். மறு நாள் காலைதான் வருவாள். நான் கிராமத்திலிருந்து நேரே பள்ளிக்கூடம் போய்விட்டு மறு நாள் திங்கட்கிழமை சாயந்திரம் தான் பாட்டி வீட்டுக்கு வருவேன், அதனால் திங்கட் கிழமை காலை வந்தால் போதும் என்று எண்ணி பாட்டி கிராமத்துக்குப் போயிருக்கிறாள். பாட்டி பேரில் தப்பில்லை. நான் தான் வழக்கத்துக்கு மாறாக வந்து சேர்ந்தேன். பாட்டி வீட்டில் குடியிருக்கும் கபிஸ்தலத்து மாமி, “பாட்டி இல்லியேப்பா, நாளைக்குத்தானே வருவோ” என்றாள். “நாளைக்குப் பரிட்சை, அதனால் தான் வந்தேன்” என்று அவர்களுக்குப் பதில் சொன்னேனே தவிர என்ன செய்வது என்று தெரியவில்லை. யோசித்தேன். பரிட்சை நடந்து முடிந்துவிட்ட பாடங்கள் சம்பந்தப்பட்ட நோட்புக், புஸ்தகங்களை பழைய பேப்பர் கடையில் போட்டால் ஏதோ காசு கிடைக்கும். ஒரு தோசைக்காவது ஆகும். அப்படித்தான் அந்த ஒரு நாள் அந்த ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு ஊத்தப்பம் சாப்பிட்டேன். மறு நாள் காலை பாட்டி வந்துவிட்டாள். “என்னடா இது? இப்படிப் பண்ணிட்டே. என் கிட்டே முன்னாலேயே சொல்லப்படாதோ, நான் ஒரு நா முன்னாலேயே வந்திருப்பேனோல்யோ, ராத்திரி ஏதாவது சாப்பிட்டியா இல்லியா?” என்று ரொம்ப கவலைப்பட்டு விட்டாள் பாட்டி. தன்னை நம்பி வந்துள்ள பிள்ளையை ஒரு ராத்திரி பட்டினி போட்டு விட்டோமே என்ற ஆதங்கம் பாட்டிக்கு. அங்கு இருந்த இரண்டு வருடங்களில் அந்த ஹோட்டலுக்குப் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஒரு நாள் ஏற்பட்டது இப்படித்தான் என்று சொல்ல வந்தது,. காசு வாங்கித் தான் சாப்பாடு போட்டாள் என்றாலும் பாட்டியின் ஆதங்கமும் அதில் ஒட்டிக்கொண்டு வந்துவிட்டது.

அந்த பாத்திரத் திருட்டு பற்றியே கொஞ்ச நாட்கள் அக்கம் பக்கத்துப் பெண்களிடையே பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. எனக்கு இது தெரிய வந்தது பாட்டியும், வீட்டில் குடியிருக்கும் அம்மாளும் அடிக்கடி இது பற்றிப் பேசுவது எங்கள் காதிலும் விழுந்தது. ‘என்னடிம்மா பண்றது, ஜாக்கிரதையா இரு. அவ்வளவு தான் சொல்லலாம், அப்புறம் பகவான் விட்ட வழி,” என்று பாட்டி முடிப்பாள் அந்தப் பேச்சை. நான் திண்ணையில் தான் படுத்துக் கொள்வேன். சில நாட்கள் பாட்டியின் பையனும் திண்ணையில் படுத்துக் கொள்வான். சில நாட்கள் தான். எப்போதும் இல்லை. பாட்டியின் தொணதொணப்பு தாங்கவில்லை யென்றால் படுக்கையைச் சுருட்டிக்கொண்டு திண்ணைக்கு வந்து விடுவான். திண்ணை வாசல் பக்கம் திறந்து தான் இருக்கும். இரவு நேரம் கழியக் கழிய, வெப்பம் குறைந்து கொஞ்சம் காற்றோட்டமும் சேர்ந்து கொண்டால், தூக்கம் சுகமாக இருக்கும்.

ஒரு நாள் பாதி ராத்திரி திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்த என்னை, பாட்டி வந்து எழுப்பினாள். “எழுந்திருடா. உள்ளே வந்து படுத்துக்கோ. யாராத்திலோ திருடன் வந்துட்டான். தெருவெல்லாம் ஒரே சத்தமா இருக்கு. உனக்கு காதிலே விழலயா. உள்ளே வந்து படுத்துக்கோ” என்றாள். சொல்லும்போதே அவள் குரலில் பீதி தெரிந்தது. “பயப்படாதேங்கோ பாட்டி. இங்கே திண்ணையிலே திருடனுக்கு என்ன கிடைக்கும்? ஒண்ணும் பயமில்லே. நீங்க வாசக்கதவை நன்னா தாப்பாப் போட்டுண்டு படுத்துக்குங்கோ”. பாட்டி கேட்பதாக இல்லை. என்னைப் பத்திரமா பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவள் மீது சுமந்திருப்பதாக நினைத்தாள். ஆனாலும் திண்ணையில் படுத்திருக்கும் சுகம் எனக்கல்லவா தெரியும். ஆனால் பாட்டியை புரிய வைப்பது கஷ்டமாகத்தான் இருந்தது. மனமின்றி தயக்கத்துடன் தான் பாட்டி உள்ளே போனாள். ஏதாவது ஒண்ணுக்கொண்ணு ஆயிடுத்துன்னா அப்பாவுக்கு பாட்டின்னா பதில் சொல்லியாகணும். ‘சின்ன வயசு. பயந்தெரியறதா பாரேன்!’ என்று அலுத்துக்கொண்டிருப்பாள்

பாட்டி வாசல் கதவை உட்புறமாகத் தாட்பாள் போட்டுக்கொண்டு உள்ளே போய்விட்டாள். பாட்டி எழுப்பி விட்டதால், தூக்கம் வரவில்லை. சும்மாவே படுத்திருந்தேன். கண்ணை மூடிக்கொண்டு படுத்திருந்தால் சிறிது நேரத்தில் தூக்கம் வந்து விடும். ஆனால், ஏனோ வரவில்லை. தூரத்தில் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரே கூச்சலாகத் தான் காதில் விழுந்து கொண்டிருந்தது. திருடனைப் பிடித்து விட்டார்களோ, இல்லை துரத்துகிறார்களோ, இல்லை தேடிகொண்டு ஒருவருக்கொருவர் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களோ, சரியாகத் தெரியவில்லை. எப்படியும் இருக்கலாம். கூச்சல் காதில் விழுந்து கொண்டே இருந்ததால், தூக்கம் வரவில்லை. ஒரு கட்டத்தில் கூச்சல் வெகு உரக்க, கிட்டத்திலிருந்து கேட்பது போல் இருந்தது. வெகு அருகாமையில் கேட்பது போலிருக்கவே, படுக்கையை விட்டு எழுந்து தெருவுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.

தெருவின் வடக்குக் கோடியில் ஒரு கூட்டம் கூடியிருந்தது. சலசலப்பு. திண்ணையில் நான் படுத்திருந்த ஜமக்காளத்தையும் தலையணையையும் தவிர வேறு ஒன்றுமில்லை. அது அப்படியே கிடக்கட்டும், அதை யார் எடுத்துக்கொண்டு போகப் போகிறார்கள் என்று, தெருவுக்கு வந்து கூட்டம் கூடியிருந்த இடத்துக்குப் போனேன். சுமார் இருபது பேர் இருப்பார்கள். ஒரு நாலைந்து பேர் ஒருவனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார்கள். நாலைந்து பேர் சூழ்ந்து கொண்டாலும் ஒன்றிரண்டு பேர் தான் அடிப்பார்கள். முதுகில் மொத்து விழும். தலை நிமிர்ந்தானானால், கன்னத்தில் அறை விழும். ‘அய்யா அடிக்காதீங்கய்யா, எனக்கு ஒண்ணும் தெரியாதையா?” என்று அடிபட்டவன் சத்தமிட்டுக்கொண்டிருந்தான். அடித்த ஒன்றிரண்டு பேர் ஆளுக்கு இரண்டு மொத்து மொத்தியபிறகு நின்று விடுவார்கள். “எவண்டா நான் திருடினேன்னு ஒப்புக்குவான்? என்று இன்னம் இரண்டு பேர் தம் முறை வந்தது என்று அவனைக் காலால் உதைப்பார்கள். முகத்தில் அறைவார்கள். அடித்தவர்கள் முகத்தில் தான் சீற்றமும், கைகளில் பதட்டமும் காணப்பட்டதே தவிர, அடிபட்டவன் அவ்வப்போது எழுந்து நிற்க முயற்சிப்பான். “சார், சார், நான் சொல்றதைக் கேளுங்க சார்….நான் பயந்துட்டு ஒடினேன் சார்…” என்று சொல்ல வந்தவனை சொல்ல விடவில்லை. “”அட நீங்க ஒண்ணு, அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டான், சார்., போட்டுத் தள்ளுங்க அவனை, அப்பத்தான் புத்தி வரும்” என்று தள்ளி நிற்பவர்கள் தள்ளி நின்றே தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு செட் களைத்த பிறகு, இன்னொரு செட் தன் முறை வந்து அடிக்கத் தொடங்குவது போல அங்கு சாத்துபடி நடந்து கொண்டிருந்தது. இதில் அடி வாங்கியும் , சளைக்காத, களைத்துப் போகாத ஆசாமியாக இருந்தான் அடி வாங்கிக் கொண்டிருந்தவன். சில சமயம் அவனால் அடிப்பவர்களையும் அடியையும் மீறி எழுந்து நிற்க முடிந்தது. அவன் இத்தனை பேரால் இவ்வளவு நேரம் அடி வாங்கியவன் போலவே தோன்றவில்லை. நல்ல திடகாத்திரமான, உடற்பயிற்சி செய்து விண்ணென்று தசை நரம்புகள் புடைக்க வளர்த்துக் காப்பாற்றிக் கொண்டு வரும் சரீரம் அது. அவனைச் சுற்றி இருந்தவர்கள் தான் இரண்டு மூன்று பேராக முறை வைத்து அடித்தார்களே தவிர அவன் எதிர்த்து நின்றால் அவர்கள் யாரும் அவனிடம் ஒரு அடி வாங்கி எழுந்து நிற்க முடியுமா என்பது சந்தேகம் என்று தான் எனக்குத் தோன்றிற்று. எனினும் அவன் ஏன் அடி வாங்கிக் கொண்டிருந்தான்? ஏன் ஒருவரைக் கூட ஒரு முறை கூட அவன் திருப்பி அடிக்கவில்லை? ஒரு வேளை குற்ற உணர்வு எதிர்த்து நிற்கும் தைரியத்தைக் கொடுக்கவில்லையோ! அல்லது சுற்றி வளைத்துக் கொண்டவர்கள் யாரையும் ஒரு அடி திருப்பி அடித்துவிட்டால், எல்லோரும் சேர்ந்து இன்னம் ஆக்கிரோஷத்தோடு அடிக்கத் தொடங்கிவிடுவார்கள் என்ற பயமோ? தெரியவில்லை.

“கொஞ்சம் சொலறதைக் கேளுங்க சார். நான் திருடனில்லை சார். சார் சார் அடிக்காதீங்க சார். நான் பாட்டுக்கு நடந்துட்டு இருந்தவனை கூச்சல் போட்டு துரத்த ஆரம்பிச்சா என்ன சார் பண்ணுவேன், சார், சார். ” அவன் சொல்வதை யார் கேட்டார்கள்? பத்து பேருக்கு ஒருத்தன் அகப்பட்டுக்கொண்டால், அடிப்பதில் ஒரு ருசி இருக்கும் போல. மறுபடியும் அவன் அடிகளைத் தாங்கிக்கொண்டு எழுந்து நின்றான். அடிக்க வீசும் கைகளைத் தடுத்தாலும் நாலுக்கு இரண்டு அடி விழத்தான் செய்தது. ஒரு சமயத்தில் கூட்டத்தில் யாரையோ பார்த்துத் திகைத்து, “இருங்க சார் அடிக்காதீங்க சார், இவன் எங்க ஊர்க்காரன் மாதிரி இருக்கு. இவன் எங்க ஊர்க்காரன் தான் சார். இவனைக் கேளுங்க சார். நான் திருடனான்னு. நல்ல வேளையா இவன் வந்து இங்கே நிக்கிறான்” என்று தள்ளி நிற்கும் ஒருவனைக் கைகாட்டினான். “டேய் சம்முகம் சொல்லுடா. என்னைப் போட்டு அடிக்கறதைப் பாத்துட்டே நிக்கிறயே” சார் இவன் எங்க ஊர்க்காரன் சார். ” என்று சொல்ல, கூட்டம் அவனைப் பார்த்து, “இவனைத் தெரியமா உனக்கு. உங்க ஊர்க்காரந்தானா இவன்?” என்று கேட்க, ” ஆமாங்க, எங்க ஊர் தான். அங்கியே அவன் கில்லாடி தாங்க. இங்கியும் அவன் வேலையைக் காட்டறான் போல,” என்று அந்த ஆளும் சொல்லவே, “பாத்துக்க, உங்க ஊர்க்காரன் என்ன சொல்றான்னு,” மறுபடியும் மண்டகப் படி தொடர்ந்தது. கில்லாடி என்று என்ன அர்த்தத்தில் சொன்னானோ அந்த ஆள், அது இந்த சந்தர்ப்பத்தில் கூட்டத்துக்கு சாதகமாகவே அர்த்தமாகியது.

இதற்குள் ஒரு போலீஸ்காரன் தலை தட்டுப் படவே, “அடிக்கறதை நிறுத்துங்கப்பா, போலீஸ் வருது, ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டு போகட்டும்.” என்று போலீஸ் வருகையைக் கண்ட ஒருவர் சொல்லவே, சிலர் அவர் சொன்ன திசையைப் பார்த்தனர். அப்படியும் அடி நிற்கவில்லை. இது வரை சான்ஸ் கிடைக்காது தள்ளி நின்ற ஓரிருவர் தம் பங்குக்கு மண்டகப்படி செய்தனர். கூட்டத்தில் இருட்டில் யார் அடித்தார் என்று என்ன தெரியப்போகிறது. தானும் இரண்டு சாத்து சாத்தின திருப்தி. “என்னய்யா, என்ன ரகளை இங்கே?” என்ன இவந்தானா? கொஞச நாள் முன்னே இங்கே திருட்டுப் போச்சே” என்று சொல்லிக்கொண்டே விலகி நின்றவர்களூடே புகுந்து அடிபட்டுக் கொண்டிருந்தவனைப் பார்த்து, “நடறா ஸ்டேஷனுக்கு, அங்கே உன்னை விசாரிக்கலாம்” என்று சொல்லிக்கொண்டே அவர் பங்குக்கு அதிகார தோரணையுடன் கன்னத்திலும் இரண்டு அறையும் முதுகில் இரண்டுகுத்தும் விழுந்தன.

போலீஸ்காரன் அவனைப் பிடித்து இழுத்துக்கொண்டே போக, ஏழெட்டுப் பேர் கொண்ட ஒரு சிறு கூட்டம் உடன் சென்றது. அதில் நானும் இருந்தேன். எனக்கும் என்னதான் பார்க்கலாமே என்று தோன்றிற்று. கேட்பதற்கு யார்? நான் யாருக்கு பதில் சொல்ல வேண்டும்? இந்த மாதிரி அனுபவம் என் வயதுப் பையன்கள் யாருக்குக் கிடைத்திருக்கும். இல்லை கிராமத்தில் யாருக்குக் கிடைத்திருக்கும்? இது சுவாரஸ்யமாகவே இருந்தது. நானும் அக்கூடத்தோடு சென்றேன். வழியெல்லாம் அகப்பட்டவனின் புலம்பல் தான் தொடர்ந்தது. “சார், என்னை விட்ருங்க சார். நான் வேலை செஞ்சு பிழைக்கவன் சார். என் பிழைப்பு போயிடும் சார்” என்று சொல்லிக் கொண்டே இருந்தான். அடி விழுவது தான் நின்றிருந்ததே தவிர அவன் சொல்வதை யாரும் கேட்பதாக இல்லை. போலீஸ் ஸ்டேஷன் அதிக தூரத்தில் இல்லை. அந்த ரோடோடேயே நேராகப் போனால், காமராஜ் கறிகாய் மார்க்கெட்டுக்குப் பக்கத்தில், சக்கரபாணி ஸ்வாமி தெப்பக்குளத்திற்கு எதிரே இருந்தது போலீஸ் ஸ்டேஷன்.

ஸ்டேஷன் வந்ததும், “யாருய்யா இந்த ஆளை முதல்லே பார்த்தது? அவங்க மாத்திரம் கூட வாங்க. மத்தவங்கள்ளாம் வெளீலே நில்லுங்க. ஸ்டேஷனுக்குள்ளே கூட்டம் போடக்கூடாது.” என்று மூணு நாலு பேரை மாத்திரம் சாட்சிகள் என்று அடையாளம் சொல்லிக் கொண்டவர்களை மாத்திரம் உள்ளே போனார்கள். என்னையும் சேர்த்து மற்றவர்கள் வெளியே நின்று கொண்டிருந்தோம்.

ஆளாளுக்கு அவரவர்க்குத் தெரிந்ததைக் கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். உள்ளே மறுபடியும் அலறல் சத்தம். அடி விழுகிறது போலும். ஒரு பெரிய சாகஸ காரியம் செய்துவிட்டதான தோரணை இருந்தது. நான் அதற்கு நேர்முக சாட்சி என்ற உற்சாகம் எனக்கு. ஒன்றிரண்டு பேர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் என்னதான் நடக்கிறது என்று பார்க்க நுழைந்தனர். கொஞ்சம் உள்ளே சென்று தள்ளி நின்றாலே என்ன நடக்கிறது என்று தெரியும். இப்படி சிலர் போவதும் பின்னர் அவர்கள் வெளியே வருவதும், இன்னம் சிலர் உள்ளே போவதுமாக இருந்தனர். நள்ளிரவானதால், யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் நான் வெளியே தான் நின்று கொண்டிருந்தேன்.

ஒரு மணி நேரம் ஆகியிருக்கும். உள்ளே சாட்சியாகப் போனவர்கள் வெளியே வந்தார்கள். “திருடன் இல்லை. ஆனா பய கில்லாடி தான். இதுக்குன்னு உடம்பை வளத்து வச்சிருக்கானே அதைச் சொல்லுங்க”

எல்லோருக்கும் திகைப்பாயிருந்தது. ஆனா கில்லாடின்னு சொன்னா, பய ஏதோ தப்பு பண்ணியிருக்கான் அது நிச்சியம்..

“திருடன் இல்லியா? என்னங்க சொல்றீங்க? பின்னே அதை இங்க வந்து சொல்வானேன், அங்கியே சொல்லியிருக்கலாமில்லியா? என்னத்துக்கு இவ்வளவு அடியும் உதையும் பட்டுக்கிட்டு….. ”

“அவனை யார் சொல்லவிட்டா. நம்ம தான் போட்டு துவைச்சிட்டிருந்தோமே. ஒத்தன் அடிச்சா பின்ன என்ன விஷயம்னு தெரியாம எல்லாரும்தான் போட்டு துவைச்சி எடுத்திட்டுருந்தோமே”

“சொன்னாலும் யார் அவனை நம்பறது? சுத்து வட்டாரத்திலே திருட்டுப் போயிருக்கு. இவனோ நடு ராத்திரிலே ஓடறான். சந்தேகம் வரத்தான் செய்யும்? பின் என்னத்துக்கு ஒடறான் பயந்துட்டு?”

அதுங்க… சமாச்சாரமே வேறே. பொம்பிளை சமாச்சாரமுங்க. ராஜா டாக்கீஸ் கிட்டே ஒரு பார்பர் ஷாப்லெ பய வேலைக்கிருக்கான். பய இளவட்டமா, பஸ்கி தண்டால் எடுத்து உடம்பை வளத்து வச்சிருக்கானா.. அது சும்மா இருக்க விடுமா? இதிலே வேடிக்கை என்னன்னா, முதலாளி பொண்டாட்டியே இவனக் கண்டு மயங்கிட்டா. இந்த சமாசாரம் ரொம்ப நாளா நடந்தூட்டு இருக்கு. முதலாளி சினிமா ரண்டாம் ஆட்டத்துக்கு போயிட்டது தெரிஞ்சதும் மைனர் ஜல்ஸா பண்றதுக்கு கிளம்பிட்டார்”.

“பய பெரிய கில்லாடிதான்”.

அது சரி. ஆனா, ஒரு நா ஆப்டுக்கிட்டா இந்த மாதிரி அடின்னா வாங்க வேண்டிருக்கு. சினிமா விட்டு சனங்க வர்ர சத்தம் கேட்டு இவன் படலைத் திறந்து அவசரம் அவசரமா வெளீலே வந்திருக்கான். ஒரு வாரமா திருடு போனதைப் பத்தியே பேச்சா இருந்திருக்கா. இவனை இந்த நேரத்திலே கொல்லைப் பக்கமா பாத்ததும், “திருட்டு ராஸ்கல் யார்ரா டேய், பிடிடா அவனை’ன்னு கத்திட்டு துரத்திருக்காங்க. இவனும் ஓட்டம் பிடிச்சிருக்கான். முதலாளி ஆளுங்க பாத்திருப்பாங்களோ, இல்லை வர்ர கூட்டத்திலே முதலாளி தானோ’ன்னு ஓடிருக்கான் பய. ஆப்டுக்கிட்டான். எவ்வளவு தூரம் ஓட முடியும்?

“ஸ்டேஷன்லே வேறே அவனுக்கு சாத்துப்படி நடந்திருக்கு. கக்கிட்டான் பய. சொல்லிடாதீங்க சார். வேளீலே தெரிஞ்சா என் வேலை போயிடும். நான் பிழைக்க வந்தவன்” ன்னு கெஞ்சினான்.

சரி போ. தொலைன்னு விட்ருவாங்க. இவனை ஸ்டேஷன்லே வச்சிட்டு என்ன செய்யறது? காலைலே எதுக்கும் ஒரு தடவை விசாரிச்சிட்டு விட்டுடுவாங்க” என்று அவர் கதையைச் சொல்லி முடித்தார். பாவமாகவும் இருந்தது. ஆனாலும் அவனுக்கு ஏதோ ஒரு வழியில் தண்டனையும் கடவுள் கொடுத்த மாதிரியும் இருந்தது. இவ்வளவு சுவாரஸ்யமான விஷயத்தை நாங்கள் கேட்பதோடு கதை முடியுமா என்ன? நாளைக்கு அவன் முதலாளிகிட்டே இதைச் சொல்வதில் இன்னும் நிறைய சுவாரஸ்யம் இருப்பதை யாராவது கண்டிருப்பார்கள்.

திரும்பி வந்து படுத்துக் கொண்டேன். மணி என்னவாயிருக்குமோ தெரியாது. விடிய இன்னும் அதிக நேரம் இருக்காது. அதற்குள் தூங்க முடிந்த நேரம் தூங்க வேண்டும். நான் திண்ணணை யில் இல்லாததை யாராவது பார்த்திருப்பார்களா? “எங்கேடா போனே? என்று பாட்டி காலையில் கேட்டால் என்ன சொல்வது?

வெங்கட் சாமிநாதன்/12.3.09

.

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்