அலைதலின் பின்னான குற்றச்சாட்டு

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

நடராஜா முரளிதரன்(கனடா)



எனது இருப்புக்கான
ஒரு கூடு தேடி
அலைதலில்
எத்தனை புனைவுகளை
இழிபேச்சுக்களை
ஒப்புதல் வாக்குமூலங்களை
கழுத்தை நெரித்த
மாலைசூடல்களை
இன்னும் என்னென்னவோ
எல்லாவற்றையும்
நான் காவிச் செல்லுகின்றேன்

நீயோ
எனைப் பார்த்து
எக்காளமிட்டுச் சிரிக்கின்றாய்
ஏனெனில்
மாட்சிமை தங்கிய
மகாராணிக்குப்
பிரியமானதைப்
படைத்துவிட்ட
குதூகலிப்பு உனக்கு

நான் அன்று
விட்டுப் புறப்பட்ட
கூடு
இன்றும்
சிறைப்பட்டே
சிதைந்து
போய்க் கிடக்கின்றது

இறக்கைகளை விரித்து
ஏகாந்தத்தைக் கிழித்து
மேலெழும்
என் அவா
என் நண்பர்களாலேயே
கேள்விக்கு
உட்படுத்தப்படுகின்றது

கோசங்களை ஓங்கியுரைத்து
உணர்ச்சிகளுக்குள்
உட்புகுந்து மறைவதில்தான்
எனது மக்கள்
எவ்வளவு
பிரியமாயிருக்கின்றார்கள்

இவற்றையெல்லாம்
போட்டுடைத்துப்
புதியவைகளை
நான் கூறப்
புறப்படுகையில்
காதுகளை அவர்கள்
அறைந்து மூடுகிறார்கள்

நான்
உரையாற்றுவதற்கெனத்
தயார்படுத்தப்பட்ட
மேடை குப்புறக்
கவிழ்க்கப்படுகின்றது
ஒலிவாங்கிகள்
பறித்தெடுக்கப்படுகின்றது
காற்று
எனது கருத்துக்களை
பறித்துச் செல்கிறது

முதுகுப் பின்னால்
இருந்து இன்னுமொருவர்
நீயும்
முன்னொரு காலத்திலே
இத்தகைய அடாவடித்தனங்களில்
ஈடுபட்டதாகக்
குற்றச்சாட்டு உள்ளதே
என்று குசுகுசுக்கின்றார்

Series Navigation

நடராஜா முரளிதரன் (கனடா)

நடராஜா முரளிதரன் (கனடா)