வ.ந.கிரிதரன் கவிதைகள்!

This entry is part [part not set] of 34 in the series 20060113_Issue

வ.ந.கிரிதரன்


மீறிப் பார்!
உனது பரிமாணங்கள்தானெத்தனை சிறியவை.
அதற்குள் வளைய வந்து கொண்டா
இத்தனை ஆட்டமும், பாட்டமும் ?
முடிந்தால், மீறிட முடிந்தால்
முயன்று பார்!
மீறுதலென்பது அவ்வளவு தப்பான
காரியமல்லவென்பதை மட்டுமல்ல
மீறுதலென்பது வளர்ச்சியினொரு
படிதானென்பதை மட்டுமல்ல
ஏன்
மீறுதலென்பதவ்வளவு
இலகுவானதல்லவென்பதையும் கூட
மேலும் நீ புரிந்து கொள்ளலாம்.
அதற்காகவாவது
மீறிப் பார்!
விட்டு விடுதலையாக….
விட்டு விடுதலையாகி நிற்குமிந்தச்
சிட்டுக் குருவியின் வாழ்வு கண்டு
பொறாமைப்படுகின்றாய்!
அதுவாகவேயாகிக் கட்டுக்களை மீறி
எட்டுத் திசைகளும்
பறத்தல் பற்றிய கனவுகளில்
ஆழ்ந்து விடுகின்றாய்! ஆயின்
பொழுதும், கணமும்,
துரத்தும் பெரும் பட்சிகள் தவிர்த்துப்
போராடுதலை, தப்பிப் பிழைத்தலையே
வாழ்வெனக் கொண்டவதனிருப்புப்பற்றி
எப்பொழுதுதாவது நீ
எண்ணியதுண்டா ?
விட்டு விடுதலையாகச் சிறகடிக்குமிந்த
சிட்டுக் குருவியெனச் சிறகடிக்க
நீ சிந்தித்ததுண்டா ?
ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்