யேன் செய்ததில்லை ?

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

பி.கே சிவகுமார்


வாசல்விளக்கைச் சுற்றிவந்து
விழுந்து மடியும் விட்டிலுக்கு
ஆயுள்காலம் அற்பம்தான்
ஆனாலும் ஏனொருமுறை
கூட விட்டிலைப் பார்த்தபின்னே
ஜன்னலை மூடாமல்
விளக்கணைக்க விரும்பியதில்லை

அந்தத் தெருநாய்
நண்பனுமில்லை
பகைவனுமில்லை
ஆனாலும்
பார்க்கும்போதெல்லாம்
பார்வையால் அங்கீகரிக்கும்
அலட்சியமாய் நான் நடக்க
வழிவிட்டு விலகிப் போகும்
பின்னிரவு வேளையில்
தனியாக வந்தபோதும்
தலைதூக்கிப் பார்த்ததன்றி
ஒருபோதும் உறுமியதில்லை
பின்வந்து பாய்ந்ததில்லை
ஏனதற்கு
வாங்கிப் போட்டதில்லை
வறண்டுபோன ரொட்டிகூட

தோட்ட மரக்கிளையில்
தாவிக் குதித்தோடும்
அணில் காட்டிச் சோறு
பகல்வேளையில் குழந்தைக்கு
எப்போதோ மாடியில்
காயப்போடும் கடலைக்கு
கண்வைத்து அதுவந்தால்
சத்தம்போட்டு விரட்டாமல்
சம்மதம் ஏன் சொன்னதில்லை

கொலைபழிகள் செய்யாமல்
தனிவரிசை அமைத்துப்போகும்
புத்தகத்தில் சேமிப்புக்குப்
எப்போதும் கதையாகும்
தப்பிதமாய் விழுந்துவிட்ட
சிறுதுளி பொறுக்கித் தின்று
கூடிவாழ சேதி சொல்லும்
ஆனாலும்
எறும்புப் புற்றை
கண்டவுடன் பதைபதைத்து
மஞ்சள்பொடி தூவாமல்
மண்ணெண்ணெய் ஊற்றாமல்
இருக்கட்டும் இதுவுமென்று
ஏனிங்கு இருந்ததில்லை
pksivakumar@att.net

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்