உதவியும் உயிர்காக்கும் உளமும் சுனாமி தின்ற தேசங்களும்: சிறுகுறிப்பு

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ப.வி.ஸ்ரீரங்கன்


‘ யுத்தங்களினது விருத்தியானது ஊனமாக்கிய சிறார்களில் தனது தடத்தைப் பதித்தது

சுனாமியோ சும்மாகிடந்த கடலைச் சீறவைத்து பூமியினது அமைப்பையே மாற்றியது ‘

உலகந்தோறும் யுத்தங்கள். இயற்கைப்பேரழிவுகள். ஊனமிக்க எதிர்காலத்தை இந்த உலகு எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டபடி யுத்தங்கள் யாவும் முன்கூட்டியே தயார்ப்படுத்தப்பட்ட கருத்துக்களால் நியாயப்படுத்தப்பட்டு தொடர்கிறது! இந்த யுத்தங்களால் வாழ்விழந்து-வளமிழந்த சிறார்கள் கூடவே தமது பொற்றோர்களையும் இழந்த நிலையில் அநாதைகளாக மாற்றப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்ட பரிதாப நிலையில் சுனாமியோ தன்பங்குக்கு அவர்களை மட்டுமல்ல எல்லாவற்றையுமே துடைத்தழித்தபடி…

சிறார்கள்!

எவ்வளவு முக்கியமானவர்கள் இந்த உலகுக்கு.

நாளைய மனிதர்கள் இன்றைக்கு மன முடக்கத்துடன் எந்த நிறைவுமின்றி மாறாத வடுவைச் சுமந்து வதங்கும்போது நாம் கோவில் கட்டிக் கும்பிட்டென்ன குளம் அமைத்துப் பயிர்வளர்த்தென்ன ?

யுத்தம் இலங்கையிலும்தாம் நாமும் அதனது கோரத்தை அனுபவித்தே அகதி வாழ்வோடு நாளாந்தம் ஒன்றித்தபடி.இப்போது சுனாமி நிரந்தரமான நோவை நமது மண்களில் தூவிச்சென்றுவிட்டது!

தெருவோரம் புழுவிலும் கேவலமாக சிறார்கள் சில்லறைக்குச் செத்தபடி இயற்கைக் கொடுமைக்குச் செத்ததபடி.

என்னயிது ? உலகம் அழகானது அமைதியானது.இதுள் மானுடம் மட்டும் கோடான கோடி குழப்பங்களுக்கு வித்திட்டுத் தன்னைத்தானே அழித்தபடி. உழைப்பைச் சார்ந்து உயிர்திருக்கும் நிலைக்கு மானுடம் தள்ளப்பட்டது உலகத்தின் நியதிதாமா ? இன்றைய உழைப்பும் அதன் பங்கீடும் பணத்தால்-படியால் அளவிடுதல் பண்பாட்டுத்தளத்தில் பாரிய மாற்றத்தைக் கொணர்ந்து குவிப்புறுதி மனப் பாண்மையைக் கொண்டியங்கியதன் வாயிலாக மானுடர்களில் பலமானவர்களாகச் சிலரையும் பலரை அவர்களுக்கிரையாகவும் போட்டுவிட்ட இவ் சமூகச்சூழலை என்னவென்போம்!இலங்கையும் இதற்கு விதிவிலக்கல்ல எனினும் இந்த நாட் டில் இதுவரை நிகழ்ந்த கொடுமையானது மிகக்கேவலமானது!அரசியல் நோக்கங்களுக்காகப் மேற்கொள்ளப்பட்ட யுத்தமானது பாரபட்சம் பார்க்காது எல்லாத்தரப்பினரையும் பாதித்துள்ளது.இதுள் பரிதாபத்துக்குரிய நிலை இளஞ்சிறார் தம் வாழ்வுதாம்! யார் யாரோ இன்று அரசியல் செய்து பிழைத்துக்கொள்ள இந்த அப்பாவிக் குழந்தைகள் அனாதைவிடுதிகளில் ஒரு நேரக்கஞ்சிக்குக் கையேந்தியபடி .

இது நின்றபாடில்லை.இந்த ஊனத்தை கண்ட இயற்கையோ தன் பங்குக்குவேற உலகைச்சிதைத்தபடி!வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாத இவ்நிகழ்வை விரிவாக்கத் தேவையில்லை.

‘கடலே கிளிஞ்சல் பொறுக்கினோம் கூறுகட்டினாய் ‘என்ற போலிக் கத்துதலும் நமக்கு வேண்டியதில்லை.செத்த மழலைகளைச் சிறப்பாக ப் புதைக்காத தமிழகமே நீ. புதைகுழிகளுக்குள் தூக்கி விசப்பட்டது பிணங்கள ல்ல மானம். உலகெல்லாம் இதைக்கண்டு அதிர்ந்தது. அரிதாரம் பூசிய குரங்குகள் தாங்களும் பொதுச் சேவை செய்வதாக கமராக்களுக்கு முன் காவடி எடுக்கிறார்கள் இதுதாம் தமிழகமா-இந்தியாவா ?மானம் போன சினிமாக்கூட்டமே அப்பாவி மக்களின் அழிவில் அரசியில் நடாத்தாதே!முடிந்தால் அள்ளிக் கொடு இல்லையேல் தள்ளி நில்.

உலகம் பேரழிவுக்குட்பட்ட நாடுகளுக்காக கண்ணீர் விட்டபடி.இந்தக்கண்ணீர் உண்மiயானது உலகமக்ளெல்லோரும் மனமோடு அள்ளிக்கொடுக்கும் சில்லைறைகள் வெறும் காசுகளல்ல அவைதாம் தோழமை.ஆனால் நாடுகள் முன் வந்து பல மில்லியன் யூரோக்களை-டாலர்களை கொடுகின்றார்களே !இது உள்நோக்கங்கொண்டது.இங்கே இரு வகை நோக்கங்கள் நிலவுகின்றன. ‘ ‘Extrem Menschenlichere Bedarf ‘அதீத மனிதாயத் தேவை என்பது மூன்றாம் உலகம் பூராக நிறைவு செய்யப் படவில்லை இந்தநிலை சுனாமிக்குப் பின் இன்னுமதிகமாக இவ்நாடுகளுட்குத் தேவையாக இருக்கிறது இதன் விளைவால் உள்நாடுகளுக்குள் பிளவுண்ட மக்களினங்கள் அந்நாடுகளுக்கெதிராக ஒருமித்த திரட்சிகொள்ளவொரு அரசியல் காரணி உருவாக ‘சுனாமியின் கோரவிளைவு! ஏதுவானால் ?…கூடாது!

உணவு உடை உறையுள் கொடு!கூடவே ஒரு இனத்தின் பக்கம் மிகுதியாகவும் மற்றைய இனத்தை மாற்றான் தாய் போன்ற நிலையில் கவனித்துக்கொள் உன் ஆட்சி தொடர்ந்து நகரும்.இலங்கையில் இதைக் கச்சிதமாக உலக நாடுகள் செய்விக்கின்றனர்.இக்கட்டுரை எழுதும் போது ‘ குடத்தனை அகதிகள் முகாம் தீ வைப்பு ‘எனும் தொலைக்காட்சி செய்தி வேறு போதுமே நிரந்தராமாக பிளவுபடுத்தி மக்களை மேய்ப்பதற்கு.ஆட்சிகளை தக்கவைக்கும் காரியங்கள் கச்சிதமாக நடைபெறுகின்றன இதுதாமே உலக மூலதனத்திற்கு வேண்டும். முதலாவது நோக்கம் இப்போ இலகுவாக நிறைவேறுகிறது.

சரி இரண்டாவது நோக்கம் ?

அதுதாம் இலங்கைக்கு இன்றைய முன்னணி வருவாய்த்துறையாக இருக்கும் உல்லாசத்துறை. இஃது இலங்கைக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமான முக்கியமான வருவாய்துறையாகும். உலகம் பூராகவும் இத்துறையை நம்பி பற்பல பகாசூரக் கம்பனிகள் இயங்குகின்றன இவற்றினது மூல வளம் மாலதீவு இந்துநேசியா தாய்லாந்து இலங்கை போன்ற நாடுகளினது இயற்கை வளம் நிரம்பிய கடற்கரைகளே! இலங்கையின் முழு உல்லாச மையங்களும் தரைமட்டாமாகியுள்ளது அவ்வண்ணமே மற்றைய நாடுகளும்.

ஜேர்மனிய செய்தித் தொலைக்காட்சியான என்.ரே.பவ் ஒரு புள்ளி விபர அலசல் செய்தது:இன்றைய நிலவரப்படி தோமஸ் குக் மற்றும் ரி.யூ.அய்.என்றவிரு நிறுவனங்களும் மிகப் பெரும் தாக்கத்துக்குளாகிறது.சுனாமியின் தாக்கத்தால் எற்பட்ட அழிவுகளினால் இவ்விரு நிறுவனத்திலும் சுமார் 30.000.தொழிலாளிகள் வேலையிழக்கும் அபாயம் நிலவுகிறதாகவும் வருடமொன்றிக்கு 8.000.000.மில்லியன் உல்லாசப் பயணிகள் இவ் பாதிக்கப் பட்ட வலயங்களுக்குச் செல்வதாகவும் இஃது 2010 இல் 30.000.000.மில்லியனாகக் கணகிடப்பட்டு அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் போட்டதாகவும் கூறுகிறது.இந்தத்திட்டம் நிறைவேறாது போனால் அடுத்தாண்டளவில் ஐரோப்பாவில் மட்டும் 300.000.ஆயரம்(மூன்று இலட்சம்) தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை தவிர்க்க முடியாதெனக் கூறுகிறது. இது இரண்டாவது நோக்கம்.

தற்போது அமெரிக்கா 350மில்லியன் டொலரும் மற்றைய நாடுகளுமாக கிட்டத்தட்ட சுமார் 2.பில்லியன் டொலர்கள் பாதிக்கப் பட்ட வலயங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.இது முதற்கட்ட உதவி இவற்றை வைத்து இவ் நாடுகள் தங்கள் நாடுகளிலுள்ள உல்லாச வலயங்களை கட்டங் கட்டமாக மறுசீர் அமைக்க வேண்டும்.அதற்கு மேற்குலக தொழில் நுட்ப வல்லுனர்கள் ஒத்துழைப்பு இவ் நாடுகளுக்குக் கிடைக்க இருக்கிறது.

அது மட்டுமல்ல அச்சத்துக்குள்ளான மேற்குலக உல்லாசப் பயணிகளைக் தேற்றி -துணிந்து மீள இப் பிரதேசங்கள் நோக்கி நகர வைத்தலுக் குக் மிக மிக அவசியம் உயர் தொழில் நுட்பம்.உதாரணமாக: சுனாமி கண்காணிப்புக் கருவி.இதை இவ் நாடுகளுக்கமைப்பதற்கு மேற்குலகம் தயாராகிறது.இவற்றின் மூலமாகவேனும் தஙகள் மக்களை இத்துறை சார்ந்து சுண்டியிழுப்பதற்கு இந்த சுனாமி கண்காணிப்புக் கருவி அவசியமாகிறது.உடனடியாக இத் தேவைக்காக அவுஸ்ரேலிய அரசு இவ் வலயத்தைக் கண் காணித்து உதவி செய்வதாகவும் கூடவே அமெரிக்க உளவுச்செய்மதி இவ் வலயம் நோக்கித் திருப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்கே நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பு வெறும் மனிதாபிமானமாக மட்டுமல்ல பொருளாதார இலக்கே முக்கியமாக இருப்பதை நாம் மறுப்பதற்கில்லை.

எனவே நம் மீது மீளவும் புதிய விலங்கிடும் நோக்கத்தை மேற்குலகம் செய்வதற்கு இந்த ‘சுனாமி ‘காரியமாற்றியுள்ளளது.

மரணித்த மக்களினது ஆசை உரிமையுடன் கூடிய ஒரு குவளை சோறுதானே தவிர யுத்தமோ பொருள் குவிப்போ அல்ல.

வூப்பெற்றால் ஜேர்மனி 02.01.2005

ப.வி.ஸ்ரீரங்கன்

Series Navigation

ப.வி.ஸ்ரீரங்கன்

ப.வி.ஸ்ரீரங்கன்