ஆத்மசாந்தி

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

ராமசந்திரன் உஷா


ஒரு சகாப்தம் முடிந்தது. ஒவ்வொன்றாக எல்லாரும் கிளம்பிக்கொண்டு இருந்தனர்.அம்மா எப்போதும் உட்காரும் மூலை ஈசிசேர் காலியாய் இருந்தது.

சாப்பிட்ட களைப்பு கண்ணை சுற்றியது.கிருஷ்ண,கிருஷ்ணா என்று சொல்லிக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார் என் மாமா.

சாஸ்திரிகள் தன் அஸிஸ்டண்டுகளுடன் விடை பெற்றுக்கொள்ள வந்தார்.வாய் வார்த்தை ஜாலங்களால் எங்கள் அண்ணாக்களை புகழ்ந்துக்கொண்டு இருந்தார்.சும்மாவா பின்ன,கோதானத்துக்கு பதிலாய் சுளையாய் ஐயாயிரம் ரூபாய், சுவர்ணதானத்துக்கு ஒரு பவுன். அமரிக்கா அண்ணா கொஞ்சமாவா செலவழித்தான்.டில்லி அண்ணாவும் கணக்கே பார்க்க கூடாதுன்னுட்டான்.

பெரிய சாஸ்திரிகள் இந்த மாதிரி பிள்ளைகளை பெற்ற புண்ணியவதி கட்டாயம்வைக்குண்ட பிராப்தி அடைவாள் என்றும்,மாதாந்திர காரியங்களும் சரிவர செய்யவேண்டும் அறிவுறுத்திவிட்டு கிளம்பினர்.

எல்லோரும் போனபிறகு,மாமா உனக்கு என்ன செலவு ஆயிற்று என்று கேட்டார்.

‘என்னை பர்ஸ் தெறக்கவே விடவில்லை இரண்டு பேரும்,என் சம்பளத்தில் இப்படி எல்லாம் செலவழிக்க முடியுமா!எப்படியோ அம்மாவின் காரியங்கள்

ஜாம்,ஜாம்ன்னு நடந்தது! ‘ என்னை அறியாமல் வார்த்தையில் தெறித்த சுருதிபேதம் மாமாவுக்கு புரிந்து விட்டது.

மாமா, ‘யார் ஆத்துல நடக்குல!வீட்டுக்கு வீடு வாசப்படி ‘ என்றார்.

‘யார் வீட்டுலையும் நடக்காத அதிசயம்தான் இங்கே நடந்தது.பெரிய அண்ணா

டில்லிகாரனும்,மன்னியும் அம்மாவோட பேசி பதினைந்து வருஷமாயிடுச்சு! மன்னிய அம்மா என்னவோ சொல்லிட்டாளாம்.புருஷனும், பொண்டாட்டியும் டூ விட்டுட்டா! பொண்டாட்டிய சொன்னதும் இவனுக்கு பொத்திண்டு வந்துடுச்சு! அம்மா மானி! அவனோட வீட்டு வாசப்படிய மிதிக்கமாட்டேனுட்டா!

இன்னொருத்தன் அமெரிக்காகாரன் அப்ப,அப்ப பிளையிங் விசிட் அடிப்பான்,வருவான் கொடுக்கிற காப்பிய குடிப்பான்,நா செளக்கியம்,நீ செளக்கியமான்னு கேட்டுட்டு போயிண்டேஇருப்பான். தன் பொண்டாட்டி, குழந்தைகள ஒட்டவே விடல!

ஏதோ என்னால முடிஞ்சத,இவ்வளவு நாளும் செஞ்சேன்.இவங்க கிட்ட தனக்குன்னு எதுக்கும் பைசா வாங்கக்கூடாதுன்னுட்டா அம்மா!

இப்ப ரெண்டு பேரும் என்னமா டிராமா போட்டா!ஏன் மாமா,சாகும்வர பதினஞ்சு வருஷமா பேசாதவன் கொள்ளி போட்டான்,இருந்தியா,செத்தியான்னுகூட கேக்காதவன் அந்த தானம்,இந்த தானம் செய்கிறான்.அம்மா ஆத்துமா சாந்தி

அடைஞ்சிருக்குமா ? சொல்லுங்கோ! ‘ஆற்றாமையில் என்னை அறியாமல் கண்ணில் நீர் தளும்பியது.

‘காக்காவுக்கு பிண்ட சாதம் வைக்கும்போது ஒரு காக்கா கூடவரலை,மழைவேற பெஞ்சிண்டு இருந்துதா,சாஸ்திரிகள் சால்சாப்பு சொல்லிட்டார்! நானும் விஷயத்த பெருசாக்க வேண்டாம்னு விட்டுட்டேன்.அம்மா மனசு சாந்தி அடையலையோன்னு தோணர்த்து ? ‘ என்றேன்

‘நாளைக்கு இதுக்கு பதில் சொல்கிறேன்.நா சொல்ற சாமான் எல்லாம் வாங்கிண்டு வாங்கோ! ‘என்றார்.

மறுநாள் காலையில் என் மாமனார் ஆலோசனைப் படி சாதம் கிளறி, தக்காளிசாதமும்,தயிர்சாதமும் அம்பது பொட்டலங்களாக கட்டப்பட்டன.

அவற்றை எடுத்துக்கொண்டு டி.நகர் ராகவேந்திரர் மடத்திற்கு சென்றோம்.

அங்கிருந்த பிச்சைகாரர்களுக்கு நானும்,என் மனைவியும்,என் குழந்தைகளூம்

கொண்டு வந்த சாதப்பொட்டலங்களைக் கொடுத்தோம்.

ஒரு தொழுநோய் பிச்சைகாரன் பொட்டலத்தை அவசரமாய் பிரித்தப்போது,

கை நழுவி கீழே விழுந்தது.அவ்வளவுதான்,அந்த நெருக்கடியான,ஜன நடமாட்டம் மிகுந்த தெருவில் சட,சட வென்று ஐம்பது காக்கைகள்,இருக்கும் கூடிவிட்டது.கீழே சிந்தி இருந்த சாதத்தை போட்டிபோட்டுக்கொண்டு தின்று விட்டு பறந்தோடி விட்டன.

மனம் நெகிழ ராயரை,அந்த கலியுகவரதனை கைகள் கும்பிட்டன.

—–Ramachandranusha—–

Ramachandranusha@rediffmail.com

Series Navigation

ராமசந்திரன் உஷா

ராமசந்திரன் உஷா