பஞ்ச் டயலாக்

This entry is part [part not set] of 41 in the series 20071206_Issue

அப்துல் கையூம்


அன்னிக்கி நானும் என் நண்பர்களும் ஒண்ணா உக்காந்து இந்தியன் கிளப்புலே அரட்டை அடிச்சிக்கிட்டு இருந்தோம். (நமக்கு கை வந்த கலை அது ஒண்ணுதானுங்களே?) டிங்கி ஜுரத்துலே அடிப்பட்டு சொங்கியா உக்காந்திருந்த பாபுவை போட்டு சரவணன் கலாய்ச்சிக்கிட்டு இருந்தாரு.

“உடம்பை நல்லா கவனிச்சிக்குங்க. எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்க பாத்தீங்களா?”

“அருமையான பஞ்ச் டயலாக் சார்”. வழக்கப்படி கனி ஒத்து ஊத ஆரம்பிச்சாரு.

ஒரே வாரத்துலே ஓமக்குச்சியா உருமாறிப் போன பாபு இதக் கேட்டு இன்னும் கொஞ்சம் சோர்ந்து போயிட்டாரு பாவம். ஒருத்தரை போட்டு டிஸ்கரேஜ் பண்றதுக்கு நம்ம ஆளுங்களுக்கு சொல்லியா கொடுக்கணும்?

“சுவரை வச்சுத்தான் சித்திரம் எழுத முடியும். எதுக்கும் நீங்க கொஞ்ச நாளு ரெஸ்ட் எடுங்க பாபு. அப்புறமா கிளப்புக்கெல்லாம் வரலாம்” – இது பாண்டியோட அட்வஸு (இந்த அழகுலே சுகர் ‘கும்’முன்னு ஏறியிருக்கிற ஆசாமி இவரு)

பாண்டியனோட தர்பாருலே குத்தம் கண்டுபிடிச்சே பேரு வாங்குன புலவர் நக்கீரர் இருந்தாரே, அது மாதிரி எங்க நண்பர் குழாமிலே சுப்பிரமண்யம் இருந்தாரு.

“சுவருலேதான் சித்திரம் வரைவீங்களா? வரையுணும்னா வெத்து பேப்பருலே இல்லாட்டி கேன்வாஸ்லே வரையிறதுதானே?”

“சார் ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார்”

“அது என்ன ஒரு பேச்சுக்கு, ரெண்டு பேச்சுக்கு? உங்கள மாதிரி ஆளுங்க தெரு சுவத்தெ நாசம் பண்றாங்கன்னுதான் ‘சுவற்றில் எழுதாதே’ ‘STICK NO BILLS’ ன்னு ஊரு பூரா எழுதி வச்சிருக்கானுங்க”. – சான்ஸ் கெடச்சதுதான் போதும்னு மனுஷன் விளாசித் தள்ளிட்டாரு.

“ஆஹா! சரியான போட்டி” – இது பாபு

“ஆரம்பிச்சுட்டாரய்யா ! ஆரம்பிச்சுட்டாரய்யா !” (ராகத்தோடு படிக்கவும்) – இது சலீமோட பஞ்ச்.

“ரிப்பீட்டு” – இது பாண்டியன்

“இதுக்கு பேருதான் நெத்தியடி” – இது கனி

அன்னிக்கி ராத்திரி நித்திரை வராம பெட்டுலே புரளும்போது இவுங்க ஆளுக்காளு அடிச்ச பஞ்ச் டயலாக்குதான் என் மூளையிலே ரீல் ரீலா ஓடிக்கிட்டு இருந்துச்சு.

“பஞ்ச்”ன்னு சொன்னாலே அந்தக் காலத்துலே குத்துச்சண்டை வீரர் முகம்மது அலி, ஜோ பிரேஸியருக்கு ஒண்ணு விட்டாரே அதுதான் எனக்கு நெனவு வரும். ஒரு புலி நம்மளை அறைஞ்சா எவ்வளவு பலமா இருக்குமோ அந்த மாதிரி ஒரு வேகம் அவரு விடுற கும்மாங் குத்திலேஇருக்குமாம். அவரு விட்ட அந்த நாக்-அவுட் குத்துலே ‘ஜோ’வோட (‘ஜோ’ ன்னு சொன்னா ஜோதிகா இல்லீங்க) பல் எகிறிப் போய் விழுந்துடுச்சு. மறக்க முடியாத பஞ்ச் அது.

மறக்க முடியாத வசனங்களுக்கு ‘பஞ்ச் டயலாக்’ங்குற காரணப்பெயரை யாரு வச்சாங்கன்னு தெரியலே. சமீப காலமா இந்த பஞ்ச் டயலாக் மேனியா ஓவராவே போயிக்கிட்டு இருக்குதுங்க. இது ஆரோக்கியமானதா இல்லையான்னு அன்புமணி ராமதாஸ்தான் சொல்லணும். (ஏன்னா அவருதானே ஹெல்த் மினிஸ்டர்?)

இப்பல்லாம் நம்ம பங்காளி பாண்டி முன்னமாதிரி “வாங்க உக்காந்து பேசலாம்”ன்னு சொல்லுறதே இல்லே. “பழகலாம் வாங்க”ன்னு சாலமன் பாப்பையா ஸ்டைலிலேதான் விளிக்கிறாரு. இவரு ஒரு காலத்துலே பாப்பையாங்கிற பேரைகூட ‘பப்பாயா’ன்னுதான் உச்சரிப்பாரு. பப்பாயான்னு சொன்னா பழத்தோட பேருய்யா. அப்படி சொல்லக் கூடாதுன்னு அவரை திருத்துறதுக்குள்ளார எனக்கு தாவு கழன்டு போயிடுச்சு.

ஒருநாள் நண்பர் ஒருத்தரோட வீட்டுக்கு கேசுவல் விசிட் அடிச்சேன். யாராவது வரமாட்டாங்களான்னு காத்துக்கிட்டு இருந்தாருன்னு நெனக்கிறேன். போய் சோபாவிலே உக்காந்தேனோ இல்லையோ தன்னோட ரெண்டு வயசு கடைக்குட்டியை கூப்பிட்டு சவுண்ட் வுட்டாரு.

“எங்கே மாமாவுக்கு முன்னாடி அத பேசிக்காட்டு”ன்னாரு. பையன் லேசுலே படியிற மாதிரி இல்லே.

“நா சொல்ல மாட்டென் போ”ன்னு அடம்பிடிச்சிட்டு தண்ணிக் காட்ட ஆரம்பிச்சுட்டான். அப்பாக்காரரு விடற மாதிரி இல்லே. அவன் ஓட, இவரு ஓட அந்த வீடே சேப்பாக்கம் ஸ்டேடியமா மாறிடுச்சு.

“பரவாயில்லீங்க பையன் ரொம்ப கூச்சப்படுறான். உட்டுடுங்க”

ஊஹும். அவரு கேக்குற மாதிரி இல்லே. ஒரு முடிவோட இருந்தாரு. கடைசியா பி.டி.உஷா மாதிரி ஓடிப் போயி பையனை கோழியை அமுக்குற மாதிரி ஒரே அமுக்கா அமுக்கிட்டு வந்தாரு.

“எங்கே மாமாவுக்கு அத சொல்லிக்காட்டு”.

அவன் மறுபடியும் ஜல்லிக்கட்டுக் காளை மாதிரி முரண்டு புடிக்க,

“நீ சொன்னீன்னா மாமா உனக்கு இஸ்க்ரீம், சாக்லேட் எல்லாம் வாங்கித்தரும்”.

நம்மள அஃறினை ஆக்கியதோடு நிக்காம தண்டச்செலவுக்கு வேற வழி
வகுத்துடுவாரோன்னு ‘பக்’குன்னுச்சு மனசு. மனசை தேத்திக்கிட்டு புள்ளையாண்டான் ஏதோ சுலோகம் இல்லேன்னா திருக்குறள் சொல்லப் போறான்னு சஸ்பென்ஸா காத்திருந்தேன்.

பையன் ரிவர்ஸ் கியருலே கொஞ்சம் பின்னாடி போனான். முடியை ஸ்டைலா கோதிவிட்டுட்டு

“நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி”ன்னு பஞ்ச் டயலாக் உட்டான். அப்பாருக்கு வாயெல்லாம் பல்லு. பெருமை தாங்க முடியலே. எனக்கு அழுவுறதா சிரிக்கறதான்னு தெரியலே.

ஒரு தபா (மெட்ராஸ்காரரு கீர்த்தியோட பேசி பேசி நமக்கும் இந்த ‘தபா’ ஒட்டிக்கிச்சு) அந்த அஞ்சு வயசு பொண்ணு ரஸினாகிட்ட “ஒரு ரைம்ஸ் சொல்லு பாப்பா”ன்னு ரிக்வெஸ்ட் பண்ணுனதுக்கு “சொல்லுறேன். ஆனா நம்மள வச்சு காமடி கீமடி பண்ணுலேல்லே” ன்னு வடிவேலு ஸ்டைலிலே கேக்குறா.

இப்பல்லாம் வரவர இந்த பஞ்ச் டயலாக் லொள்ளு தாங்கவே முடியலீங்க. அன்னிக்கி பாருங்க குடும்ப நண்பர்களோட நான் உக்காந்து பேசிக்கிட்டு இருந்தப்போ என் நண்பரோட குண்டு பையன் சல்மான் உள்ளே வந்தான். எண்டர் ஆகும்போதே ‘டங் டங்’குன்னு சாணி மிதிக்கிற மாதிரி நடந்து வந்தான். ஏண்டா இப்படி நடக்கிறேன்னு கேட்டதுக்கு “சும்மா அதிருதில்லே” ன்னு பஞ்ச் டயலாக் பேசறான். என்னாத்தே சொல்லுறது?

‘என்னாத்தே’ன்னு சொன்னதும் இன்னொன்னு ஞாபகம் வருது. ‘என்னாத்தே’ கன்னையான்னு ஒரு நடிகர். ஒரு படத்துலே “என்னாத்தே பேசி, என்னாத்தே செஞ்சு” இப்படியே நெகடிவ்வா பேசிக்கிட்டே இருப்பாரு. அப்புறமா அந்த வார்த்தையே அவரோட பேருலே பெர்மனட்டா ஒட்டிக்கிச்சு. ‘படாபட்’ ஜெயலட்சுமி, ‘பக்கோடா’ காதர், ‘டணால்’ தங்கவேலு – இந்த காரணப்பெயர் எல்லாமே இவுங்க பேசுன பஞ்ச் டயலாக்கை வச்சு பேமஸ் ஆன பெயருங்கதான்.

இன்னொரு நண்பரோட பையன் பத்தாவதுலே கோட்டடிச்சுட்டான். “ஏண்டா பெயில் ஆனே?”ன்னு அப்பாரு கேட்டதுக்கு “லைஃப்லே இதெல்லாம் சகஜமப்பா”ன்னு பஞ்ச் டயலாக் பேசிட்டு அப்படியே ஹாய்யா போயிட்டான். இதுக்கு முன்னாடி ஒருமுறை ராத்திரி நேரத்துலே ஊரு சுத்திட்டு லேட்டா வீட்டுக்கு வந்திருக்கான். அடுத்த நாள் அப்பாரு கண்டிச்சிருக்காரு.

“நேத்து எத்தனை மணிக்குடா வீட்டுக்கு வந்தே?ன்னு கேட்டதுக்கு

“நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்குமே தெரியாது”ன்னு மிமிக்ரி பண்ணியிருக்கான். எங்கே போயி முட்டிக்கிறது?

ஒளவையாரு இருக்காங்களே அவுங்க மேலே எனக்கு ஒரு சின்ன மனசுவருத்தம். ‘அறம் செய விரும்பு’ ; ‘ஆறுவது சினம்’ – இப்படியெல்லாம் சூப்பரா அட்வைஸ் கொடுத்துட்டு கடைசியா “தையல் சொல் கேளேல்” ன்னு ஒரு பஞ்ச் டயலாக் அடிச்சிட்டு அக்கடான்னு போயிட்டாங்க.

இதிலே வேடிக்கை இன்னான்னா அவங்களே ஒரு பொம்பளையா இருந்துட்டு “பொம்பளை பேச்சை கேக்காதீங்க”ன்னு சொல்லுறாங்க. அப்டீன்னா இந்த அம்மாவோட அட்வைஸை யாருங்க கேப்பா?

எங்கேயோ பொறந்த ஷேக்ஸ்பியரு “யூ டூ புரூட்டஸ்”ன்னு சீசர் ஆண்டனியை பாத்து பேசுற மாதிரி எழுதுன டயலாக்கை இன்னிக்கும் நாம ஞாபகம் வச்சு பேசுறோம்.

சிலபேரு மேடையிலே பேசுறதுக்குன்னே புள்ளையார் சுழி மாதிரி ஒரு சில பஞ்ச் டயலாக் பிக்ஸ் பண்ணி வச்சிருப்பாங்க. “என் ரத்தத்தின் ரத்தமே”, “உடன்பிறப்புக்களே” அல்லது “என் இனிய தமிழ் மக்களே” ன்னு ஆரம்பிச்சாங்கன்னா அது யாரு சொன்னதுன்னு ஈஸியா யூகிச்சிடலாம்.

சிலபேரு முடிக்கும்போது பஞ்ச் டயலாக் சொல்லிட்டு மங்களம் பாடுவாங்க. சிவாஜிசாரு முடிக்கும்போது “ஜெய்ஹிந்த்”ன்னு சொல்லுவாரு. எனக்கு அவருக்கிட்டே ரொம்ப புடிச்ச அயிட்டமிது. இன்னொரு பிரமுகரு “அண்ணா வாழ்க”ன்னு சொல்லிட்டு பேச்சை முடிப்பாரு

சில டயலாக் காலத்தாலே அழியாத வசனமா அப்படியே நிலைச்சு நின்னுடுமுங்க.

“ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்”னு எப்பவோ கலைஞரு எழுதுன வசனம் இன்னிக்கும் பேசப்படுதுன்னு சொன்னா அதுலே ஒரு பஞ்ச் இருக்குதுன்னுதானே அர்த்தம்?

அந்த காலத்துலே, நாகூர்க்காரரு ரவீந்தர் “மணந்தால் மஹாதேவி இல்லையேல் மரணதேவி”ன்னு நாடோடி மன்னன் படத்துலே எழுதுன வசனம் அப்ப பரபரப்பா பேசப்பட்டுச்சு.

“சங்கே முழங்கு”ன்னு பாவேந்தரு சொன்ன ரெண்டே வார்த்தையிலே இன்னாமா ஒரு பஞ்ச் பாத்தீங்களா? “வெங்காயம்”ன்னு பெரியார் சொன்ன சிங்கிள் வார்த்தை பஞ்ச்தானே?

காலேஜ்லே படிக்கிற காலத்துலே பசங்க எல்லாருமே “ஆத்தா ஆடு வளத்தா. கோழி வளத்தான்னு சொல்லிட்டு ஏதோ புளுகிராஸ் மெம்பரு மாதிரி வசனம் பேசிக்கிட்டு அலைஞ்சானுங்க. பசங்க யாராவது போட்டுக் கொடுத்துட்டா “பத்த வச்சிட்டியே பறட்டை?” ன்னு டயலாக் அடிப்பானுங்க.

அடுத்த ரஜினி படம் வெளிவரப் போவுதுன்னா மொதல்லெ அதுக்கு என்ன பஞ்ச் டயலாக் வக்கிறதுன்னு ஒரு கோஷ்டியே கும்பளா உக்காந்து மூளையை போட்டு கசக்குது. அந்த அளவுக்கு இந்த பஞ்ச் டயலாக் மோகம் தமிழ்நாட்டு மக்களை சுனாமி மாதிரி போட்டு உலுக்குதுன்னுதானே அர்த்தம்?

பஞ்ச் டயலாக்கை படத்துலே ஹீரோதான் பேசுணும்னு இல்லீங்க. பாரதிராஜாவோட ஒரு படத்துலே செருப்பு தைக்கிற தொழிலாளியா வர்ற குணச்சித்திர கேரக்டரு “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி”ன்னு சொல்லுவாரு. பசக்குன்னு பெவிகால் மாதிரி நம்ம மனசுலே ஒட்டுற பஞ்ச் டயலாக் அது.

விவேக் நடிச்ச பாத்திரங்கள்ளே “பஞ்ச் பாலா”ங்குற ஒரு கேரக்டரு. அவருடைய கலைப் பாதையிலே அது ஒரு மைல்கல்லுன்னு வேணா சொல்லலாம் (இந்த காலத்துலே கிலோ மீட்டருலேதான் எழுதி வச்சிருக்காங்க)

“தூக்கு மேடை எனக்கு பஞ்சு மெத்தை”ன்னு கட்டபொம்மன் சொன்னது நம்ம மனசுலே ஆழமா பதிஞ்சிடுச்சு. நெசமாவே கட்டப்பொம்மன் இந்த வசனத்தை சாகுற நேரத்துலே சொல்லியிருப்பாருன்னு நெனக்கிறீங்களா?

Moral of the Story இதுதாங்க. யாரு வேணும்னாலும் பஞ்ச் டயலாக் பேசிட்டு போங்க. நோ ப்ராப்ளம். ஆனா எப்ப பேசணுமோ அப்ப மட்டும் பேசுங்க. அனாவசியமா தொண்டை தண்ணியை வேஸ்ட் பண்ணாதீங்க. பஞ்ச் டயலாக் பேசுறதுதான் வாழ்க்கையோட குறிக்கோளுன்னு மாத்திரம் நெனச்சுடாதீங்க.

கடைசியா முடிக்கும்போது ஒரு பஞ்ச் டயலாக்கோட மெஸேஜ் சொல்லலாம்னு பாத்தா இவ்வளவு நேரம் நான் அட்வைஸ் பண்ணுனதுக்கே அர்த்தமே இல்லாம போயிடுமோன்னு பயமா இருக்கு.

‘ஜெய் ஹிந்த்’.


vapuchi@hotmail.com

Series Navigation

அப்துல் கையூம்

அப்துல் கையூம்